நெல்லை கண்ணனின் சூப்பர் கேள்விகள்...
>> Wednesday, September 3, 2008
ஒகேனக்கல் தமிழகத்தின் பகுதி. அதற்குள்ளே தண்ணீர் வந்து விட்ட பிறகு எதற்கு கர்நாடகத்தின் அனுமதி வேண்டும். அங்கே காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தலில் இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது என்று நமது முதல்வர் கூட்டணி தர்மத்திற்காகச் செய்த வேலை இது.
எல்லாவற்றிலும் மத உணர்வுகளை மொழி உணர்வுகளைத் தூண்டியது நாம் தானே. அதன் பின்னர்தான் மற்றவர்கள் ஆரம்பித்தார்கள்.
மதுரை முத்து ' தமிழர் படை' துவக்கிய பின்னர்தான் மராட்டியத்தில் சிவசேனை, கர்நாடகத்தில் வட்டாள் நாகராஜின் இயக்கம் போன்றவை தோன்றின.
இயற்கையை அழிக்கின்ற அதில் பணம் சம்பாதிக்கின்ற ஒழுங்கீனத்தைக் கற்றுத் தந்தது யார்?
அரசியல் காரணங்களுக்காகத்தான் தமிழ்மொழி செம்மொழியென்று அறிவிக்கப்பட்டதென்று சொன்னபோது கோபப்பட்டவர்கள் இன்று உணர்வார்கள் கன்னடமும் தெலுங்கும் செம்மொழியாகப் போகின்ற காரணத்தை.
மனிதர்கள் மனிதப் பண்பினை இழந்ததனாலேயும், பணம் ஒன்றே குறிக்கோளாக நமது தலைவர்கள் கோடிகளிலே புரள்வதனாலேயும் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையினை ஒழுங்கீனமான வாழ்க்கையினால் நமது மக்கள் பிரதிநிதிகள் பலர் காட்டியதனாலேயும் காடுகளை அழித்தேனும் பணம் சம்பாதிக்க சிலர் முற்பட்டதனாலேயும் உண்மையும் ஒழுக்கமும் போயிற்று; மழையும் போயிற்று.
மின் வெட்டு என்று சொன்னால் உடனே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதைச் சொல்லத் தகுதியற்றவர் என்பதுவும் அவர் ஆட்சியிலே மின் வெட்டு அதிகம் என்பதுவும் எப்படி சரியான பதிலாகும். அதனால்தானே அவரை நீக்கி விட்டு உங்களை ஆட்சியில் அமர்த்தினார்கள்.
இதாவது பரவாயில்லை. இன்னொரு கூத்து வேறு மாநிலங்களைச் சுட்டிக்காட்டுவது. குஜராத்தில் இருக்கின்றதா உ.பி.யில் இருக்கின்றதா என்பது. எனக்குப் புத்தகங்கள் வேண்டும் என்று குழந்தைகள் தங்கள் தந்தையிடம் கேட்டால் எதிர்த்த வீட்டுக்காரர் அவர் பிள்ளைகளுக்கு வாங்கித் தந்திருக்கின்றாரா என்று ஒரு தந்தை கேட்பதுபோல் இல்லையா.
காங்கிரûஸ எதிர்த்து 1967-ல் தேர்தலில் இன்றைய முதல்வர் பேசியதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கின்றனர்.
காமராசரை அவர் கேட்காத கேள்விகளா?
ஆனால் இன்று அவரை நோக்கிக் கேள்விகளை வைத்தால் "என் வயதென்ன... என் அனுபவமென்ன... என்னைக் கேட்கின்ற தகுதி இல்லாதவர்களெல்லாம் கேட்கின்றார்கள்' என்கின்றார்.
ஆனால் பெரியவர் இராஜாஜியையும் பெருந்தலைவர் காமராஜையும் இவர் கேட்ட போது இவர் வயசென்ன என்று அவர்கள் கேட்டதில்லை.
மக்களாட்சியைக் கொண்டு வரப் பாடுபட்ட அந்தத் தலைவர்களுக்கு அதன் மகத்துவம் புரிந்திருக்கிறது.
பண்டித நேருவின் மருமகன்தான் முந்த்ரா ஊழலை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். தனது நல்ல நண்பர் என்று பார்க்காமல் டி.டி.கே.யை பதவி நீக்கம் செய்தார் நேரு.
சொந்த ஜாதியில் ஒருவர் இருக்கின்றார் என்று சிபாரிசு வந்தபோதும் நெ.து. சுந்தரவடிவேலுவைத்தான் கல்வித்துறை இயக்குநராகக் காமராஜ் நியமித்தார்.
உறவினர்கள் தம்மை வந்து பார்ப்பதைக் கூட காமராஜும், ராஜாஜி போன்றோரும் அனுமதித்ததில்லை.
உடுத்திய வேட்டிக்கு மாற்று வேட்டி இல்லாமல் உழவர்களுக்கும் ஏழைகளுக்கும் பாடுபட்டார் ஜீவா.
அரசியல் என்பது சேவை என்று வாழ்ந்தவர்கள் அவர்கள்.
ஆனால் அவர்களால் கிடைத்த இந்த வாழ்வில் ஒரு ஆட்சியைக் காப்பாற்ற நடந்த கூத்துகளை மொத்த நாடும் பார்த்து வெதும்பியது.
அரசியல் கூத்துகளுக்கென்று ஒரு பதக்கம் மட்டும் இருக்குமென்றால் அபிநவ் பிந்த்ரா பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பார்.
*********************
இப்போதான்யா தெரியுது மேற்படி கட்டுரையாசிரியர் நெல்லை கண்ணன் மேல ஏன் சில பேரு காண்டுல இருக்காங்கன்னு! இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியலன்னா இருக்கவே இருக்கு எப்.சி. அது இதுன்னு சொல்லி திட்டுறது. அதுக்கு தான் முன் உதாரணம் நம்ம மஞ்ச துண்டு இருக்குதே!
நன்றி....தினமணி, மாயவரத்தான்
0 comments:
Post a Comment