ஹை ஜாலி கலாட்டா

>> Thursday, September 4, 2008

விவேக், வடிவேல், பார்த்திபன் போன்ற அன்பர்கள் அடிக்கடி சின்னத் திரையில் எட்டிப்பார்க்கும் பெரிய நட்சத்திரங்களைப் போல இணையத்திலும் எட்டிப் பார்த்ததால் பிரச்சினை உருவாகின்றது. கோலிவுட் காமெடி டிராக்கை வலைப்பூக்களின் காமெடி சூப்பராக இருப்பதால் கிர்ரடித்துப் போகின்றது கோடம்பாக்கம். ஒன்று காமெடி வலைப்பதிவர்களை கடத்துவது, இல்லாவிடில் கவிழ்ப்பது போன்ற அஜெண்டாவுடன் நீலாங்கரை பங்களா ஒன்றில் ரகஸியா ஸாரி ரகஸிய கூட்டம் கூடுகின்றது. மேற்கொண்டு:

கவுண்டமணி நாம்பாட்டுக்கு ஏதோ போண்டாத்தலையா, பன்னித்தலையா, ஈஸ்வரன் கோயில் எண்ணெச்சட்டி'ன்னு கலக்கல் காமெடி பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்ப என்னடான்னா 'ஏர்போர்ட் தலையன்'ன்னு டெக்னிகலா ப்ளாக்ல எழுதுறானுங்களாம். இனிமே நம்ம மார்க்கெட்டு அவுட்டா?
விவேக் நேத்திக்கு இணைய அரங்கம் மீட்டிங்கிக்குப் போனேண்டா. இலவசக்கொத்தனாராம். ஏம்ப்பா வாஸ்துபடி இலவசமா கட்டித் தருவியான்னு கேக்கலாமுன்னு தோணிச்சி. அவிங்கெல்லாம் அமெரிக்கா மாதிரி ஸ்பீடா போறானுங்கப்பா
வடிவேலு அந்தக்கதய ஏன் கேக்குற? வருத்தப்படாத வாலிப சங்கம்ன்னு வைச்சிக்கிட்டு இவனுங்க பண்ர அலப்பர தாங்க முடியலீப்பா. யாரோ கைப்புள்ளையாம். நமக்கே பாடம் சொல்லித் தரானுங்கப்பா
விவேக் திராவிடத்தையும் விடாம சங்கம் வைச்சு சங்க அறுக்குறானுங்க. சீரியஸா காமெடி பண்றாங்கப்பா. ஆ வூன்னா அப்யூஸ்னு அவங்க விடற அலறலக் கேட்டாக்கா நரசிம்மராவ் ஆவி கூட வாய் தொறந்து நல்லா சிரிக்கும்ப்பா
கருணாதாஸ் ஜொள்ளுப்பாண்டின்னு ஒரு கேரக்டர் இருக்குதாம் பாஸ். "கட்டை"ங்ற டைட்டிலுலக் கூட பட்டையக் கெளப்புது பாஸ். அந்தாளோட அக்ரீமெண்ட் போட்டாலே பல படத்துக்கு பஞ்சர் டயலாக் எழுதலாம் பாஸ்
கவுண்டமணி இங்லீஷ் படத்துல அடிச்ச காப்பி எல்லாம் பத்தாதுன்னு இப்போ இண்டெர்நெட்டையும் இந்த நாயி உட மாட்டேங்குது பாரு. கருணா கம்முன்னு கெடக்கவே மாட்டியா
கருணாதாஸ் பாஸ் உன்னால பீட் பண்ண முடியலேன்னா ஜாயின் பண்ணிக்கோ
கவுண்டமணி இங்லீஷ் பழமொழி இன்னொரு தடவை சொன்னா பல்லைப் பேத்துப்புடுவேன்.
எஸ்ஜே சூர்யா டபுள் மீனிங்ல நான் டயலாக் பேசுறேன். ஆனா நெட்டுலே பாட்டையே பிட்டுப் பாட்டாப் போட்டு கில்மா கெளப்புறாங்கலாமே. இந்த ரேஞ்சுல போனா என்னோட பாபுலாரிட்டி என்னாவது?
செந்தில் ஓ போலி சிவஞானம்ஜி பிளாக்கச் சொல்றீங்களா?
கவுண்டமணிடேய் என்னடா இங்லீஷ்ல என்னென்னமோ கெட்ட கெட்ட வார்த்தையா சொல்ற... ஒண்ணுமே புரியலியேடா...
செந்தில் இப்பெல்லாம் ஒரிஜினல் ஆளுங்களுக்கு மேல போலிங்களுக்குத்தான் கிராக்கி ஜாஸ்திண்ணே! உதாரணமா போலி டோண்டுவை எடுத்துக்கங்க...
எஸ்ஜே அடப்பாவிங்களா அதையும் அதுக்குள்ள படிச்சிட்டீங்களா? என்னோட அடுத்த படத்துக்கு அங்கேருந்துதான் அஸ்திவாரம் போடலாமுன்னு இருந்தேன். அந்த ஐடியாவ ஆட்டங் காண வைச்சிடாதீங்கப்பா...
வடிவேலு ஓஹோ அதான் திருமகன்லேயே "பானை" ஒடைக்கிற வசனம் வந்துச்சா?
எச்ஜே சூர்யா அதுசரி ஒரு போலிப் பதிவைக் கூட உட்டு வெக்கலன்னு சொல்லு
கவுண்டமணி ஒரிஜினல் டூப்ளிகேட்டுன்னு டாஸ்மாக் சரக்குலதான் கேள்விப்பட்டு இருக்கேன். இப்போ இண்டெர்நெட் சரக்குலேயுமா?
செந்தில் என்னண்ணே நீங்க இன்னும் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கே இன்னும் வராம இருக்கீங்க. பதிவுல மட்டுமில்ல கமெண்டுப் பொட்டியிலேயும் காமெடி பண்றாய்ங்க
விவேக் என்னாது கமெண்ட்டுப் பொட்டியிலேயுமா? (ஆச்சர்யப்படுகின்றார்)
செந்தில் போங்க விவேக். ப்ரோபைல்ல கூட போலியிருக்குது
விவேக் என்னாது ப்ரோபைல்ல கூட போலியா? (மீண்டும் ஆச்சர்யப்படுகின்றார்)
செந்தில் நீங்க வெறும் காமெடியைத்தான் பாக்குறீங்க. ஆனாப் பாருங்க சீரியஸ் படத்தையே நெட்டுலேர்ந்து சுடலாம். இப்போ விஜயகாந்த வைச்சி "கச்சத்தீவு ராசா"ன்னு படமெடுத்தீங்கன்னு வைங்க. வில்லனா நெப்போலியனப் போட்டுட்டு "ஏண்டா இந்திய மீனவனை இலங்கை கப்பல் சுடும்போது இண்டியா நேவி என்னா மசுரு புடுங்கிக்கிட்டு இருந்துச்சா?"ன்னு கேப்பாரு. உடனே விஜயகாந்த் பொங்கிப் போயி "இந்திய இலங்கை கடலெல்லை தெரியுமா உனக்கு? ஏழு கடல்மைல்ல எட்டிப் பாக்கலாம் இலங்கையை. இங்க இருக்குற டிராலர் எண்ணிக்கை 3,036. மீனவர்கள் என்ணிக்கை 30,000. எழுபதிலேர்ந்து சுட்டதுல செத்தது 113 பேர். படுகாயமடைஞ்சது 1,005. ரெண்டு திராவிடக் கழகங்களும் கஜானாவை காலி செய்யிறதுலதான் இருந்துச்சு" இப்பிடியெல்லா விஷயத்தையும் நெட்டுல கொட்டியிருக்கானுங்க.
கவுண்டமணி இதையெல்லாம் எழுதுறானுங்களா? அவனுங்க என்ன வேலை வெட்டி இல்லாதவனுங்களா?
செந்தில் இதுல குசும்பு பண்றவனுங்களுக்கும் பஞ்சமே இல்ல. கார்த்திக் ரமாஸ்ன்னு ஒருத்தர் இதையே காமெடி பண்ணி "விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தா மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கே செல்ல வேண்டாம். நாங்களே மீன்களைப் பிடித்து வீட்டுக்கு வீடு அளிப்போம்"ன்னு சொல்வாரா அப்பிடின்னு கோக்குமாக்கு கேள்வி கேப்பாரு.
செந்தில்படத்துக்கு கோக்குமாக்கா டைட்டில் வைக்கணுமின்னா லக்கிலுக்கு'ன்னு ஒருத்தர் இருக்காரு. சாதிவெறியன்னு பிட்டப் போட்டு பின்னியெடுப்பாரு. அப்பிடியே தூய தமிழ்ல பேரு வைக்கணுமின்னா இராமகி இருக்காரு. திருட்டு திகிரியை ஒழிக்க வேண்டுமென்றால்...
கவுண்டமணி என்னாது திருட்டு திகிரியா?
செந்தில் அட ஆமாங்க திகிரின்னா இராமகி பாஷையில 'சிடி'ங்க
கவுண்டமணி அடங்கொக்காமக்கா இப்பிடியெல்லாம் கூட மேட்டரு நெட்டுல நடக்குதா?
வடிவேலு பெரியார் படத்தையே நெட்லேர்ந்து ஐடியாவப் பிக்கப் பண்ற அளவுக்கு மேட்டரு கொட்டிக் கெடக்குதாமே? மெய்யாலுமாவே? இப்பிடியெல்லாம் கூட மூலையில உக்காந்து சிந்திப்பாய்ங்களோ?
செந்தில்அண்ணே இப்ப எடுக்கிறாங்களே தசாவதாரம் அந்த ஐடியா கூட நெட்டுலதான் கெடைச்சதாம். உபயம் ஏதோ பெயரிலின்னு சொல்றாங்க...அவரு அத்தினி வேஷம் கட்டி அடிக்கிறவராம்
கவுண்டமணி ஆன்ன்ங் அந்தக் கதய இங்க உடாத அப்பனே... நவராத்திரி படம் வந்தப்ப உங்க நெட்டு இருந்துச்சாம் காட்டியும். அப்பாவியா வாயத் தொறந்தா கொசு வலம் வந்துட்டுப் போயிடுவீங்களே
செந்தில் அண்ணே கொசுன்ன உடனே ஞாபகம் வந்துடுச்சி. கொசு புடுங்கின்னு ஒரு ஆளு இருக்காரு. வண்டை வண்டையா திட்டறதுக்கு ஐடியா வேணுமின்னா அங்க போங்க.
கவுண்டமணிஎன்னாது கொசு புடுங்கியா? பேரு சூப்பரா இருக்கே
விவேக்இப்ப ஒண்ணு எனக்குப் புரியுது. காமெடியோ, டிராஜெடியோ நெட்டுல உள்ளவங்கள அடிச்சுக்க முடியாது. அதுனால கூட்டணியைப் போடு. நான் திராவிடம், தமிழ், இலவசம் மாதிரி ஆளுங்கள கவர் பண்றேன். மகளிர் அணியை கோவை சரளா பாத்துக்கட்டும். கொசுபுடுங்கி, லக்கிலுக் மாதிரி வெவகாரமான ஆளுங்கள கவனிக்கட்டும். வடிவேலு கைப்புள்ளைய கணக்கு பண்ணட்டும். குசும்பு புடிச்சவங்களை கருணாஸ் கவனிக்கட்டும்.
எஸ்ஜே சூர்யாஅப்ப நானு என்னா செய்யட்டும்?
விவேக் ஹஹ்ஹஹ்ஹா உங்களுக்குத்தான் ஏகப்பட்ட போலிகளைக் கவனிக்க வேண்டியதிருக்கே. கெட் செட் கோ...

(ஆளு புடிக்க சினிமாக்காரங்க வாராஹப்பு. நான் சைலண்டாய் எஸ்கேப் :-)
Posted by குசும்பன் at 11:43 PM 5 comments Links to this post
Labels: அராத்து, சினிமா, ஜோக், வம்பு
Tuesday, March 13, 2007
இணைய அரங்கம்
இப்போ சன் டிவியில அரட்டை அரங்கத்தை விஜய.டி.ராஜேந்தர் நடத்த, அவரை கம்மென்று கவிழ்க்க இணைய அரங்கத்திற்கு அழைத்து வந்துவிட்டோம். அவரே உச்சபட்ச காமெடி என்பதால் கூட சைடு கிக்குகள் இல்லையென்றாலும் விவேக் அவ்வப்போது தோன்றுவாரென்று வாசகர்களை எச்சரிக்கின்றோம்.

ராஜேந்தர்:
இண்டெர் நெட்டுங்றது மாயவலை
இங்கன எழுதுறது தனிகலை
அவனவன் வைப்பான் அணுஉலை
பீச்சிலேயும் எடுப்பான் சூப்பர்சிலை

ஏ திந்தானக்கடி ஏ திந்தானக்கடி

என்று பாட ஸ்டேடியமே திகிலடிக்கின்றது.

ராஜேந்தர்: வாங்க வாங்க வந்த எல்லோருக்கும் வணக்கம். இப்ப லேட்டஸ்ட் ட்ரெண்டே இண்டர் நெட்டு தான். எவனாலயும் ஈகோ டிரிப் அடிக்காம இருக்கவே முடியாது. இங்க ட்ரிப் போயி ட்ரிப்ஸ் ஏத்துற நெலமைக்கு வந்தவங்களும் இருக்காங்க. எட்டிப் பாத்துட்டு செட்டிலானவங்களும் இருக்காங்க. சுத்தி சுளுக்கெடுத்தவங்களும் இருக்காங்க. சும்மா இருக்கறவங்களும் இருக்காங்க. இதோ நானும் இருக்கேன். ப்ளாக், வலைப்பதிவு, வலைப்பூ அவசியமா? அத்தியாவசியமா? இல்லை அல்லக்கைகள் போடும் அலப்பற ஆட்டமா? இணையத்துலயும் இலக்கியம் வருமா? இப்பிடி பல டாபிக்ல பேச மக்கள்ஸ் ஆர்வமா இருக்காங்க. நானே பேசிட்டு இருந்தா நல்லா இருக்காது. வாங்க மாலன் சார். நீங்கதான் மொதோ போணி...
மாலன்: நெட்டுலேயும் நாந்தாங்க மொதோ போணி. ஆனா போ"நீ" பண்ணிட்டாங்க. என்னோட பொன்னான 180 நிமிடங்களை ஸ்பெண்ட் பண்ணி எவ்வளவோ டிரை பண்ணி பாத்துட்டேன். என்னைய ப்ரை பண்ணிட்டாங்க. இதுக்கு மேல என்னால முடியல அதுனால வேதனையுடன் விடை பெறுகின்றேன்.
(கூட்டத்தோடு ராஜேந்தரும் கண் கலங்குறார்)
ராஜேந்தர்: இப்போ நீங்க உங்களோட சோதனையை, வேதனையை வெளிப்படுத்தீட்டீங்க. எனக்கென்னமோ கொஞ்சம் சப்டெக்ஸ்ட் என்னான்னு புரியல...
மாலன்: நீங்க வேற வலைப்பூக்கள் எல்லாம் ப்ரீ-டெக்ஸ்ட்ல ஓடுது. இப்பிடித்தான் ஒரு சூழல் 1970'களில் சிற்றிலக்கியத்தில் நிலவியது
விவேக்: ஆஹா ஹிஸ்டிரிய அவுத்து வுட்டு ஹிஸ்டீரியா ஆக்குறாரே
ராஜேந்தர்: அப்ப இண்டெர்நெட்டு சீக்கிரம் முற்றும் சிற்றிலக்கிய சூழலுக்கு வந்துடும்னு சொல்றீங்களா?
மாலன்: (முனகுகின்றார்) ஹூம் இப்ப மட்டும் என்ன வாழுதாம்? தீப்பெட்டி படம் மாதிரி சினிமா ஸ்டில்களை சேக்குற விசிலடிச்சான் குஞ்சுகளா இருக்காங்க. ஏன்னு கேட்டா பிச்சைப்பாத்திரத்தால மொத்துறாங்க. இதெல்லாம் எனக்குத் தேவையா?
மனுஷ்யபுத்திரன்: இவர் நெலமை கொஞ்சமாவது தேவலாம். என்னை அனாமதேய புழுக்களெல்லாம் அனாயாசமா போட்டுத் தாக்கிடுச்சி. செங்கிஸ்கான் படை மாதிரி செட்டிலாக வுடாம செம்மிறாய்ங்க. ஆறுமுகத்தை நாவலராக்கி அழகு பாத்தோம்னு மாலன் சமாதானப் புறாவை அனுப்பினா சிக்கன்-65 மசாலா தடவி சுக்காவாக்குறாங்க. என்ன பண்றதுன்னே தெரியல... (கண்ணைக் கசக்குகின்றார்)
குசும்பன்: ஐய்யா நான் இணையக் குசும்பனுங்க
ராஜேந்தர்: (கிலியாகின்றார்) பேரே சரியில்லியே? ஏதோ வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குறோமோ?
குசும்பன்: வலைப்பூக்கள் உலகம்ங்றது ஒரு தனித்துவமானது. ஜூனியர் விகடன் மாதிரி ஜுகல்பந்தி இருக்கும். குமுதம் மாதிரி கவர்ச்சி; கல்கி மாதிரி "நடுநிலைமை"; ரிப்போர்ட்டர் மாதிரி கட்&பேஸ்ட்; நக்கீரன் மாதிரி மஞ்சள் மசாலா; கணையாழி மாதிரி கத்திக்குத்து; காலச்சுவடு மாதிரி காண்டு; இப்பிடி வெகுஜன ஊடகம் மாதிரி எல்லாமே உண்டு. ஞானவெட்டியான்-ஞாபீடம்; இளவஞ்சி-இணைய குசும்பன்; பெயரிலி-பெடிச்சி; சின்னவன்-சிறில் அலெக்ஸ்; பிகேஎஸ்-பிரேமலதா இப்பிடி கலக்கல் காம்பினேஷன் இருக்குற இடமய்யா இது. 25 வருஷமா ஜூவியை நாந்தான் தூக்கி நிறுத்தினேன்னு ஒருத்தரு சொன்னாருன்னு வைங்க நெட்டுல ப்ரூப் கேட்டு ஒடனே பிட்டப் போடுவாய்ங்க. அடுத்த இஷ்யூ வர வரைக்கும் காத்திருக்க வேண்டாம். கட்டை வெரல்ல பவர் இருக்குற மாதிரி பதிவைத் தட்டி பரபரப்பு கெளப்பிடுவாய்ங்க.
ராஜேந்தர்: இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க?
குசும்பன்: அது தெரிஞ்சா நான் ஏன் நெட்டுல குப்பை கொட்டப் போறேன்?
ராஜேந்தர்: பேருக்கு ஏத்தாப்புல பெஸ்டாத்தாம்ப்பா பேசுற...
பாரா: (பாக்கை மென்றபடி) நான் அப்பவே சொன்னேன். யாருமே கேக்கலை. தமிழோவியத்த தல முழுகுன பின்னாடிதான் நான் நிம்மதியா இருக்கேன். நெட்டுல ஒன்பது கட்டளைகள்ன்னு தாம்ப்பா சொன்னேன். என்னை மனத்துக்கண்ணையே மறக்கடிச்சுட்டானுங்க. (தேம்புகின்றார்)
நாமக்கல் ராஜா: பின்னே வலைப்பூக்கள்ள என்ன வேணுமின்னாலும் எழுது அப்பிடின்னு சொல்லி முடிச்சி பதிவு பப்ளிஷ் ஆறதுக்குள்ள கொஞ்ச நாளைக்கு பதிவு போடலேன்னா குடி முழுகிப் போயிடாதுன்னு கட்டளை போட்டா எவந்தான் சும்மாயிருப்பான்? தூர வெலகுனாலே துள்ளி வந்து சண்டை போடறவனுக்கு, வெத்திலை தாம்பூலம் வெச்சி வெவரம் சொன்னா பெண்டக் கயட்டாமலா வுடுவான்?
வெங்கடேஷ்: (ஓவென்று கதறுகின்றார்)
ராஜேந்தர்: ரொம்ப நொந்து போயிருக்கார் போல. ஸார் சொன்னா நாங்களும் கூட அழுவோம்ல. நம்ம ப்ரொட்யூசரும் அழுறதுக்குத்தான் சான்ஸ் பாத்துக்கிட்டு இருக்கார்
வெங்கடேஷ்: (திக்கியபடி) சுனாமிக்கு நன்றி'ன்னு சொன்னவுடனேயே சுகுற்றா என்னைய சுத்தி சுத்தி அடிச்சானுங்க. இதையே இலங்கையிலேர்ந்து ஒரு அம்மா சொன்னா உச்சுக் கொட்டி ஆறுதல் சொல்றாங்க அதே ஆளுங்க. புரியில ஒண்ணுமே புரியல
சொக்கன்: இந்த தில்லாலங்கடி தெரியாமத்தான் நான் நெட்டுல மறந்து கூட ஒதுங்றதில்ல. சும்மா இருந்தாலும் சுலபமா வுடாம நாந்தான் நேசக்குமார்'ன்னு இப்போ சுருதியக் கெளப்புறானுங்க. நான் "தினம் ஒரு விளக்கம்" ரேஞ்சுல பவுன்சருக்கு பம்ம வேண்டியதாயிருக்கு. (மூக்கை உறிஞ்சுகின்றார்)
ராஜ்குமார்: பெரிய எழுத்தாளர்களுக்கே இணையம் ஒத்து வராது போலருக்கே?
தமிழினி: ஐய்யய்யோ அப்ப இணையத்துல எழுதி பெரிய எழுத்தாளரா வர முடியாதா? பொட்டி கட்டி சென்னைக்கு வந்தது வீணாப்போச்சா?
ராஜ்குமார்: ஹலோ நான் பெரிய எழுத்தாளர்கள் வலைப்பூவிற்கு வருவதைச் சொல்கிறேன்
தமிழினி: ஹப்பாடி இப்பத்தான் நிம்மதி. முத்துக் குமரன் நீங்களும் கவலையை விடுங்கள்
ராஜேந்தர்: இதென்ன சைடு டிராக்கு? அப்ப நீங்க எல்லாரும் நெட்டுல பிட்டு அவசியங்றீங்க... ஆனா பெரிய எழுத்தாளர்களுக்கு அனாவசியம் அப்பிடீங்றீங்க?
பெயரிலி: இங்க பல ஆடியன்ஸ் இருக்காங்க. அதுனால பல கோஷ்டிகள் எடுத்துக்காட்டா ஈழத் தமிழன் - இலங்கைத் தமிழன் ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியுமா?
ராஜேந்தர்: என்னப்பா என்ன வித்தியாசம்?
பெயரிலி: !@#$%^&*()<> {}|_+.,? (கூட்டம் கலவரமாகின்றது)
மனுஷ்யபுத்திரன்: இப்பிடித்தான் இப்பிடித்தான் என்னையும் சொன்னாங்க (மாலன் அவருக்கு ஆறுதல் கூறுகின்றார்)
ராஜேந்தர்: என்னப்பா இது வித்தியாசத்த விளக்குமாறு கேட்டா வெளக்குமாறு தூக்குறியே?
ஈழநாதன்: நீங்கள் காகிதக்கத்தி வீசி, வீசும் காற்றின் திசையில் காலைத் தூக்குகின்றீர்கள் என்பதைத்தான் பெயரிலி அண்ணை கூறினார்கள்
ராஜேந்தர்: (பேஸ்தடிக்கின்றார்) அய்யய்யோ கூட்டம் சேருதே? குமுறிடுவானுங்களோ?
மனுஷ்யபுத்திரன்: இப்பிடித்தான் இப்பிடித்தான் என்னையும்...
ராஜேந்தர்: ஆஹா மனுஷனே போட்டுக் குடுத்துடுவாரு போலருக்கே
பிகேஎஸ்: தம்பி ஈழநாதா...இப்பிடித்தான் 2002'ல் நீங்கள் சிங்கை பிரௌசிங் செண்டரிலிருந்து வேறொரு பெயரில் பதிவிட்டிருப்பதை சொந்தப் பெயரில் சொல்லிக் கொள்கின்றேன். அதனுடைய ஐபி அட்ரஸ் இதோ...
ராஜேந்தர்: என்னது ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஐபி அட்ரஸா? எழவு என்னாங்கடா இது?
பாரா: இப்பிடித்தான் இப்பிடித்தான் என்னையவும் ஐபியால அடிச்சானுங்க
விவேக்: அம்மா அடி ஆடிட்டர் மூலமா கேட்டிருக்கேன். இதென்னடா புதுசா ஐபி அடி...? வெவரமாச் சொல்லுன்னா வெளக்குமாறு வேற தூக்குவானுங்களே
இரா. முருகன்: இவிடத்தே இண்டெர்நெட்டுலே ஜீவிதம் படு கஷ்டம் ஸாரே. நாய் நக்கியெண்டு அறியுமோ?
விவேக்: அடப்பாவிங்களா... ஏதோ பொழுது போக்கா எழுதிப் போடுவானுங்க ப்ளாக்குலன்னு பாத்தா சீரியஸா சிலம்பம் சுத்துவானுங்க போலருக்கே. பாட்டியாலா ட்ரிங்கடிச்சாலும் பத்தாது போலருக்கே...
தமிழ்பார்டெண்டர்: வாங்க விவேக் லாங்ஐலண்ட் ஐஸ் டீயை ஸ்குரூ டிரைவரோடு மிக்ஸ் பண்ணி கல்ப்படிச்சு ஈசிஆர்'ல கில்மாவா இருக்கலாம்
விவேக்: என்னது பார்டெண்டரா? அடப்பாவிங்களா என்னமோ பாலோடு நரசுஸ் டிகாஷன் கலக்குறது மாதிரி சர்வ சாதாரணமா சொல்றானே? லாங்ஐலண்ட் ஐஸ் டீயை என்னமோ டாட்டா சக்ரா டீ மாதிரி பாவிக்கிறானே. எஸ்ஸாயிடுவோமா?
ஜொள்ளுப்பாண்டி: பாரண்ணே... வித்யா எப்பிடி இருக்காக?
விவேக்: என்னது ஜொள்ளுப்பாண்டியா? ஏம்ப்பா நீங்கெல்லாம் நெட்டுல என்னாப்பா பண்றீங்க?
ராஜேந்தர்: இதென்ன இலவசக் கொத்தனார், மீட்டர் முருகேசன், இரவுக்கழுகார் இப்பிடி ஒரிஜினல், போலின்னு பல பேரு இருக்காங்களாம். கண்ணக் கட்டல?
ஜெயமோகன்: இந்த லட்சணத்துல இணையத்துல இலக்கியமாம்... எங்கே உருப்படும்?
விவேக்: ஆஹா வந்துட்டாருய்யா பழைய கம்பெடுத்து புதுக்கூழு காச்சிறவரு? சுரா'வுக்கு சிம்பிளா 350 பக்க கடுதாசி போட்டவரு இவருதானா? சோத்துக்கு அலைஞ்சா சுண்டக்கஞ்சி வேணுமாங்றாரே?
நாஞ்சில் நாடன்: குசு, பீ, மூத்திரம் என்று இணையத்திலேயும் இலக்கியம் வளருகின்றது
விவேக்: அடப்பாவிங்களா? இதுதான் இலகியமாடா? மேத்தா ஸார் சொன்னத கேக்க மாட்டீங்களா? பெண்ணியத்துல கூட கண்ணியம் வேணும்னு சொன்னாரேடா?
பிரேமலதா: மிஸ்டர் விவேக் நீங்க என்ன MCP'யா?
விவேக்: எனக்கு MC கோல்டு, RC, ராயல் ஸ்டாக் ஏன் OM, OC எல்லாம் தெரியும். MCP என்ன புது ப்ராண்டா?
(பெண்ணியவாதிகள் விவேக்கைப் பின்னியெடுக்க ஆரம்பிக்கின்றார்கள். விஜய.டி.ராஜேந்தரையும் விட்டு வைக்கவில்லை. யார் யாரை அடிக்கின்றார்கள் என்பதே புரியாமல் போகின்றது.)

இந்நிலையில் "தாயே உன் பெயர் சொல்லும்போதே இணையத்தில் இருட்டடி கிடைக்குதே; தாய்மண்ணே சலாம்; ஆள விடு சலாம்;" என்ற பாடலோடு கூட்டம் முடிவடைகின்றது.

முடிவு? அடுத்தவட்டி மீட்டிங்குல பாத்துக்குவோம்.
Posted by குசும்பன் at 11:44 PM 13 comments Links to this post
இண்டெர்நெட் இருட்டுக்கடை
"குதடா குதடா குதடா ஷாக்கடிக்குதடா" என்று திருமகன் பாட்டு ஸ்பீக்கரில் எகிறிக் கொண்டிருக்கின்றது.

கொலைவெறியோடு குலவை போட்டுக் கொண்டிருந்த வலைப்பதிவாளர்கள், கத்தியின்றி ரத்தமின்றி தற்சமயம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பதிவு போட்டாலே பத்திக் கொள்ளும் நிலையில் இருந்தது மாறி, ஒயிட் பாஸ்பரஸ் தூவினாலும் ஒதுங்கிப் போகும் மக்களைக் குறித்து விசனப்பட்டு வெந்து நொந்து போன சில வலைப்பதிவர்கள் ஒன்று கூடினார்கள். நாயகனாய் நமது கன்னட பிரசாத் ஐடியாக்களை அள்ளித் தர வந்தால் அவர்களுக்குக் கசக்கவா செய்யும்? இதோ இண்டெர்நெட் இருட்டுக்கடை ஆரம்பம்...

பிகேஎஸ்: இதென்ன கூட்டம் இவ்வளவு கம்மியாயிருக்கு? விளக்கு விருது வழங்கும் விழாவுக்குக் கூட ஆளுங்க அதிகமா இருந்துச்சு போலருக்கே?
முகமூடி: (முனகுகின்றார்) க்கும் நீங்க வர்றீங்கன்னு முன்கூட்டியே நியூஸ் கசிஞ்சுடுச்சி போலருக்கு
பெயரிலி: என்னங்க பிகேஎஸ்ஸு குளோபல் டெலிவரி டயத்துல பதிவு போட்டு அடிச்சுக்குவோமே அதெல்லாம் பழங்கனவாகிடுமோ? அமைதிப்படையிலிருந்து, அட்லாண்டிக்கு அப்பால் வரை அடிச்சிக்கிட்டு நாறினதெல்லாம் "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே"
முகமூடி: அட ஆமாம் உபிச! உங்க பதிவு வர்றதுக்கு முன்னாடியே கமெண்ட்டுப் போட்டுக் கலக்கும் கார்த்திக் ரமாஸ், அப்பிடி இப்பிடின்னு பின்னூட்டப் பெட்டியிலேயும் பின்னி பெடலெடுப்போமே... இப்ப வர்றவனுங்கெல்லாம் சப்பிப் போட்ட மாங்கொட்டைக் கணக்கா சவசவன்னு இருக்கானுங்களே...வெசனமாயிருக்கு...ஏதாச்சும் பண்ணணுமே?
பெயரிலி: அட மூதித்தம்பி... நீயும் அருக்காணி, குந்தானின்னு பதிவைப் போட்டு கலக்கிக்கிட்டு இருந்தே. கண்ணுப்பட்ட மாதிரி உன்னை இண்டிபிளாக்கீஸ்ஸுக்கு ஜட்ஜாப் போட்டு இண்டலக்ச்சுவல் ரேஞ்சுக்கு ஒசத்தி நாஸ்திப் பண்ணிட்டானுங்க. கலி முத்திடுச்சிபா
குசும்பன்: பெயரிலி அண்ணாச்சி...கன்னட பிரசாத்துக்கு எத்தினி பொண்டாட்டின்னு கூட என்ணி கண்டுபிடிச்சுடலாம்... ஆனா நீங்க எத்தினி பதிவுகள் மெயின்டெயின் பண்றீங்கன்னு கண்டுபிடிக்கவே முடியாதுங்ற ரேஞ்சுக்கு கலக்குனியே ராசா... இப்போ என்னாச்சு பாரு... நம்மள எல்லாத்தையும் கௌதம் மேனன் பட வில்லனுங்க பண்ற காமெடி ரேஞ்சுக்கு இப்ப நெட்டுல ட்ரீட் பண்றானுங்க...
தமிழ்பார்: ஏதோ நான் பாட்டுக்கு பீரு, பீட்டரு திவ்யான்னு கத வுட்டு கலாய்ச்சிட்டு இருந்தேன். அதுக்கும் ஆப்படிச்சு ஆக்கர் வேற குத்திட்டானுங்க. பரபரப்பா ஏதாச்சும் செய்யணும். பிரசாத் அண்ணே ஐடியா கொடுங்கண்ணே.
குசும்பன்: ஏம்ப்பா காவேரிக்கு அவனவன் அடிச்சிக்கிறானுங்க. ஆனா கன்னடக்காரங்கிட்டே போயி ஒரு வலைத்தமிளன் ஐடியா கேக்கலாமா?
பிரசாத்: என்னது காவேரிக்கு அடிச்சிக்கிறானுங்களா? என்கிட்ட சொல்லவே இல்லியே? இதோ இப்பவே போனப் போடுறேன் (செல்போனை எடுக்கின்றார்)
குசும்பன்: அட கசுமாலம் அது நடிகை காவேரி இல்லப்பா...காவேரி ரிவர்பா
பிரசாத்: அடச்சே அந்த மாதிரி தம்மாத்தூண்டு மேட்டருல நான் கைய வைக்கிறதேயில்ல. இருந்தாலும் காவேரி எனக்கு பேக்கு.
குசும்பன்: ஆமாம்ப்பா உனக்கு காவேரி பேக்கு. நெட்டுல எல்லாருக்கும் தமிழ் பேக்கு. எனக்கு நீ மட்டும் பேடா...
இளவஞ்சி: அண்ணாத்தே... இப்பிடி டா போட்டுப் பேசாத. ஏதோ ஒரு காலத்துல நாமெல்லாம் அடிச்சிக்கிட்டு ஆட்டம் போட்டு சந்தோஷமா இருந்தோங்றத மறந்துடாதப்பா குசும்பா. இப்போ பரபரப்பா பத்திக்கிற மாதிரி ஏதாவது செய்யணும். அதுக்கு ஐடியா சொல்லு
டோண்டு: அதுக்குத்தான் இந்த இருபது வயது இளைஞன் இருக்கேன்ல. நேத்திக்கு ICICI டெலிமார்க்கெட்டிங் பிகர் ஒண்ணு...
பிரசாத்: பிகரா எங்கே எங்கே? எங்கே? போன் நம்பர் கொடுங்க...
போலி: அட எழவெடுத்தவனுங்களா...போன் நம்பர்லேயே குறியா இருக்குறானுங்களே...
ரோஸாவசந்த்: என்னது குறியா? அத அறுத்தா சரியாடும்ல. ஸ்வீட் கொடுத்து கரெக்ட் பண்ணுப்பா. சேச்சே பொது வாழ்வுக்கு போனதுலேர்ந்து எனக்கும் நிம்மதியே போயிடுச்சி...நெட்டுல சண்டியரா சலம்பம் பண்ணிட்டு இருந்தவன இப்பிடி குந்தானி மேல குந்த வைச்சிட்டானுங்களே
பொட்டீக்கடை: கடை விரித்தேன் கொல்வாரில்லை. அம்பறாத்துணியை அவுத்துவுட்டு வாடா சண்டைக்குன்னு கூப்டாலும் கூலா டீ அடிச்சிட்டு போய்க்கினே இருக்கானுங்கப்பா. கிரி பட வடிவேலு மாதிரி எல்லாரும் நெட்டுல எல்லாரும் நல்லவனா மாறிட்டானுங்களா?
முகமூடி: டம்ஸ், வாழைப்பழம்னு பேதிக்கு வழி சொன்னப்பவே பேஸ்தியாக்கி நாஸ்தி பண்ணின நல்லவங்களேல்லாம் இப்போ எங்கேப்பா இருக்கீங்க? வாங்கப்பா ஏதாவது செய்ங்க. "பத்திக்கிச்சு பத்திக்கிச்சுடா கண்ணாளா கண்டபடி பத்திக்கிச்சுடா" அப்பிடின்னு பதிவைப் போட்டாலும் "போங்கண்ணே கிச்சுகிச்சு காட்டாதீங்க"ன்னு பம்முறானுங்களே... இப்பிடியே காந்திகிரி போச்சுன்னா எப்பிடி நாமெல்லாம் காலம் தள்ள முடியும்?
தமிழ்பார்: எல்லோரும் வண்டியை எடுங்க. இசிஆர் போவோம்...
குசும்பன்: ஆஹா கெளம்பிட்டானுங்கடா...இந்தாளு நம்மள ஐசியூ'வுல அட்மிட் பண்ணாம ஓயமாட்டான் போலருக்கே
பிகேஎஸ்: தமிழ்பார்தான் தமிழ்சசி என்று வந்தியத்தேவன் அடையாளம் கண்டு ப்ரூப் காட்டிய பின்னும்...
பெயரிலி: யோவ் நெட்டு கெட்டுப் போனதுக்கு மொதோ காரணமே நீதான். "பத்து மைல் டிஸ்ரென்ஸ்" பதிவைப் போட்டு முகமூடியும், குசும்பனும் ஒண்ணே அப்பிடின்னு நானொரு பிட்டைப் போட்டேன். அதுமாதிரி அறிவியல் பூர்வமா ஐடெண்டிபிகேஷன் இல்லாம வெறும் ஐபி அட்ரெஸ் கொடுத்தால் என்ன கிட்டும்? சூச்சூன்னு அந்தாண்ட போங்க. அடையாளம் காட்டறேன்னு ஆளுங்கள அம்பேல் பண்ணதுலேர்ந்து நெட்டுல சுவாரஸியமே இல்லாமப் போச்சி
குசும்பன்: அண்ணாத்தே ரிலாக்ஸ் ப்ளீஸ். மோப்ப பல்லாவை மாத்து எண்டு ரிக்வெஸ்ட் செஞ்சும் ஐடெண்ட்டிடி தெப்ட் போல அடுத்தவா ஐபி போட்டு என்னைய கொச்சைப் படுத்தியதை நான் மறக்கலை காணும் ஓய்
குழலி: ஐய்யா பத்திக்கிச்சு பத்திக்கிச்சு. திராவிடன் இதை மறக்க மாட்டான்.
குசும்பன்: மரம் சம்பந்தபடாத விஷயத்துலயும் வெட்டுறதுக்கு குழலி ஐய்யா கோடாலியோட வராருப்பா. இந்த டாபிக்க பிக்கப் பண்ணி டகால்டியா டக்கர் பண்ணலாமா? என்ன சொல்றேள்?
பிரசாத்: ஐய்யய்யோ இவனுங்கள விட போலீஸ் டார்ச்சரே பெட்டரா இருக்கே...குஷூம் அன்பே குஷூம் (அழ ஆரம்பிக்கின்றார்)
குழலி: குசும்பன் குஷூம் ரெண்டுமே "கு"வுல ஆரம்பிக்குது. அப்பிடின்னா...
குசும்பன்: ஏன் குழலில கூட "கு" இருக்கு. இவ்வளவு ஏன் "கு"வுல பலது ஆரம்பிக்குது. அப்பிடின்னா..(தொடர்கின்றார்)
உஷா: (பி.டி. உஷா ரேஞ்சில் ஓடிவந்தபடி) போதும் அப்பிடியே நிறுத்துங்க. அன்னியன் அம்பி ஸ்டைல்ல தல சுத்துது.
குழலி: சூப்பர். இந்த டாபிக்க தொடரலாமே...அம்பி விஷயம்னு சொன்னோமின்னா கூடி கொட்டமடிக்க ஒரு கூட்டமே இருக்கு. என்ன சொல்றீங்க?
பத்ரி: "சுட்டாச்சு சுட்டாச்சு"
முகில்: அண்ணே அப்பிடி சத்தமா கத்தாதீங்க தப்பாயிரப்போவுது
குமார்: ஸ்வீட்டாச் சொல்றேன். அதான் சுட்டுட்டீங்களே. அப்புறமென்ன? என்ஞாய் மாடி. ஆமாம் பிரசாத் நீங்க நல்லவரா கெட்டவரா?
பிரசாத்: (நாயகன் ஸ்டைலில்) நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எதுவுமே தப்பில்லே.
(டோண்டு மேசையைத் தட்டுகின்றார்) என்னது நாலு பேருக்கு நல்லதா? எங்கிட்ட சொல்லவேயில்லியே? நெட்டுல நாந்தான் போலியப் பத்தி எடுத்துச் சொல்லி நாலு பேருக்கு நல்லது செஞ்சேன்
போலி: (அடுத்த பதிவுக்கு அச்சாரம் போட்டு நாலு பேரை வைத்து "கதை"யை படபட வென்று டைப்புகின்றார்)
குசும்பன்: சே முன்னாடியாவது போலியைத் திட்டு, அனானிகளைத் திட்டு பின்னர் ஏன் டோண்டுவையே திட்டு என்று பதிவுகள் பல போட்டு எல்லாரும் வாழ்ந்தாங்க. இப்ப என்னடான்னா போலி வசனத்தையே மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிற ரேஞ்ச்சுக்கு மரத்துப் போயிட்டாங்களா?
குழலி: அட சங்கம் வைச்சுக் கூட பாத்துட்டோங்க. சீரியஸான சங்கத்தையே அங்கதமா ட்ரீட் பண்றாங்க. இப்போ என்னா பண்றதுன்னு தெரியலியே?
பிரசாத்: பேசாம நீங்க எல்லாரும் என்னோட நீலாங்கரை பங்களாவுக்கு வாங்க. பார்ட்டியோட பார்ட்டியா டிஸ்கஷன வைச்சிக்கலாம்.
குசும்பன்: இந்தாளு எப்பவுமே கோக்குமாக்காவே பேசுறானே... பார்ட்டிங்கறான் வைச்சிக்குவோம்ங்றான் டிஸ்கஷன்ங்றான்
குழலி: ஆமாம் எல்லாமே ஒரே டிஸ்கஷன்தான். சினிமாவுல கூட டிஸ்கஷன தடை பண்ண ஒரு சட்டம் போடணும்
ஹரிஹரன்: இதுக்கெல்லாம் சட்டமா? முருகா...
இரவுக்கழுகார்: முருகனப் பத்தி நீங்க பேசுனத ஸ்கீரீன் ஷாட் போட்டுருக்கேன். உஷாராயிடுங்க
ஹரிஹரன்: வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. ஆனால் முருகன் வேறு. முத்துக்குமரன் வேறு.
பிரசாத்: மயிலா எங்கே எங்கே?
குசும்பன்: சே முருகன் மேட்டரும் முடிஞ்சி போச்சே. அரோகரா கோவிந்தா கோவிந்தா
பெயரிலி: நாமெல்லாம் இன்னமும் சேவாக் மாதிரி ரொம்ப நாளா பார்முக்கு வராமலே இருக்கோம். இந்த ரேஞ்சிலேயே போனா அப்புறம் அனாதையா ஆக்கிடுவானுங்க
சின்னவன்: பாருங்க நம்ம ஞானபீடம் மாதிரி ஆளுங்களெல்லாம் திருப்பி அழைச்சி எழுதச் சொல்லணும்
பெயரிலி: அப்ப நீங்க ஞானபீடம் இல்லியா?
சின்னவன்: நான் குசும்பந்தான்னுல நெனச்சிட்டு இருந்தேன்
குசும்பன்: அப்ப குசும்பன் நானில்லையா? என்னையா கதையா இருக்கு? ஊருல உள்ளவனெல்லாம் நான்னா அப்ப நான் யாரு?
பிகேஎஸ்: இப்பிடியே பேசிட்டு இருந்தா கதைக்கு உதவாது. யாராவது ஒரு ஐடியாவ சட்டு புட்டுன்னு அவுத்து வுடுங்க.
குசும்பன்: ஆங் ஐடியா. நாம புதுசா ஒரு இழைய ஆரம்பிப்போம். மொதல்ல நான் ஒருத்தர திட்டி பதிவைப் போட்டு, அவரையே கையைக் காட்டி ரெண்டு பேரத் திட்டச் சொல்வேன். அவரும் திட்டி இன்னொருத்தரு கிட்ட சேர்ப்பிப்பார். இப்பிடியே தொடர்ந்தா நெட்டே பத்தி எரியும். நாமெல்லாம் என்னிக்கோ முன்னூறு அடிச்ச சேவாக் மாதிரி சந்தோஷமா இருக்கலாம். என்ன சரியா?
முகமூடி: ஆமாம் ஏதோ ஒலிம்பிக் ஜோதிய கைமாத்தி எடுத்துட்டுப் போற ஆளுங்க மாதிரி என்னமா சந்தோஷப் படுறாங்கப்பா? சரி சரி மொதல்ல யாரைத் திட்டி ஜோதிய கொளுத்தப் போறீங்க?
(அனைவரும் மொதல்ல என்னையத் திட்டுங்க என்று ஒரே நேரத்தில் கத்த அமளி துமளியாகின்றது. அப்போது முரளி மனோகரைப் பிடித்து விட்டேன் என்று ஒரு குரல் வருகின்றது. உடனே "தர்மயுத்தம்" என்று மறு குரல் ஒலிக்க கடமையே கண்ணாய் வலைப்பதிவாளர்கள் இன்னொருகுத்தாட்டத்தை ஆரம்பிக்கின்றார்கள். ஐடியா கொடுக்க வந்த பிரசாத் தனது கதைக்கு I-Cash கிடைக்குமா என்று ஒருவரிடம் வினவிக் கொண்டிருந்ததுதான் வேதனை.)
Posted by குசும்பன் at 2:20 AM 10 comments Links to this post
Labels: இருட்டுக் கடை, ஜோக்கிரி, பிரசாத்
Wednesday, February 07, 2007
இவர்கள் சந்தித்தால்
பாபா-கலீஞர், அனர்ந்தமயி-கலீஞர்'ன்னு எதிரெதிர் துருவங்களின் சந்திப்பு அரசியல் வானில் அரங்கேற நமது சக வலைப்பதிவர்கள் மட்டும் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கையா பார்ப்பார்கள். இதோ நமது இணைய உலகில் "ஒத்துப்போகாத ஜோடி நம்பர்-1" என்ற போட்டி "கலங்கப் போவது யாரு?" என்ற டைட்டிலில் நடத்தப்படுகின்றது. நடுவர்களாய் வழக்கம் போல் நமது பார்த்திபனும், வடிவேலுவும்:

வ: அண்ணே நம்மள இணையத்துல கூப்பிட்டு கௌரதி பன்ணி எவ்வளவு நாளாச்சு? உங்களக் கூட "முன்னாள் பெப்ஸி இந்நாள் உமா" கூடப் சன் டிவியில பாத்தேனே? என்ன உங்களுக்கும் மார்க்கெட் டவுனா?
பார்த்திபன்: இந்த குசும்பு தானே வேணாங்றது "நான் கடவுள்"
வ: என்னாது நீங்க கடவுளா?
பார்த்திபன்: அட "நான் கடவுள்" ஆர்யா கூட உமாவோட ப்ரோக்கிராம் கொடுத்தாரு. அப்ப அவரு மார்க்கெட் டவுனா? சிங்கத்துக்கு காச்சலடிச்சா நாய் பக்கத்துல வந்து நக்கி உட்டுப் போகுமாம்.
வ: இந்தா இந்த சிங்கம், நாய் கதய வுட்டு இணையத்துல இலக்கிய சண்டையை உருவாக்கிறாத. சொல்லிப்புட்டேன் ஆமாம். சட்டு புட்டுன்னு நிகழ்ச்சிக்குப் போவோம். சோடிங்க காத்துக்கிட்டு இருக்கு. மொதோ ஜோடி வாங்கப்பா.

(தெலுங்கு பட நடிகர் பாலகிருஷ்ணா போல் 20 வயது இளைஞன் உடையில் டோண்டுவும், குறுந்தாடி மேலைநாட்டு ஸ்டைலில் இணைய நாடோடியும் வருகின்றார்கள். ஸ்டேஜ் களை கட்டுகின்றது)
டோ: வாங்க வாங்க. உங்களோட தனிப்பட்ட நட்பு என்னான்னு இந்த இணையத்துக்கு தெரியாது.
நாடோடி: அட ஆமாங்க திரு. டோண்டு ராகவ ஐயங்கார் அவர்களே
டோ: ஏங்க உங்க வீட்டுக்கு ஒரு ஐயர், ஐயங்கார் வந்தா ஆகாதா? வந்தா அப்பிடி என்னதான் நடக்கும்?
நா: அய்யோ அய்யய்யோ ஒரு ஐயரும், ஐயங்காரும் ஒண்ணா வந்தா எனக்கு "பட்டை நாமாம்" சாத்திடுவாளே
வடி (பார்த்திபனைப் பார்த்து): ஆஹா நம்மள விட சூப்பர் ஜோடி இதுதான் போலருக்கு. குண்டக்க மண்டக்க பேசுறாங்களே
பார்த்திபன்: இணைய நாடோடி பட்டையும், நாமமும் சொன்னீங்க ஆனா இன்னும் சில விஷயங்கள் இருக்கே: பூணூல் ணூல் ல்
வடி (முணுமுணுக்கிறார்): வார்த்தையைப் பிரிச்சுப் போட்டே கொல்றானே
டோ: எங்காளுங்க வந்தா பட்டை நாமமா. நாங்க இதுக்கெல்லாம் அசரமாட்டோம். போடா ஜடாயு ஸாரி... ஜாட்டான்னு போயிக்கிட்டே இருப்போம்
நா: சரிங்க. உங்கள ஐயங்கார் என்றே விளிக்கலாமா? டோண்டு டோண்ட்-டூ
டோ: சரி ஹிப் ஹிப் ஹிப் (விக்கலெடுக்க பார்த்திபன் தண்ணீர் கொடுக்கின்றார்) ஹிப்போகிரிட் அவர்களே டோண்டு வில்-டூ
வடி: ரெண்டு பேருமே மாத்தி மாத்தி டூ விடுறானுங்களே எப்பிடி அவிய்ங்களுக்குள்ள தனிப்பட்ட நட்பு இருக்கும்?
பார்த்திபன்: அதாண்டா நெட்-தமிழன்
வடி: அதென்ன புது சேனலா?
பார்த்திபன்: டேய் நீ டிவி ஊடகத்த வுட்டுட்டு வெளியில வா! இணையத்துல இணை! பொன்னான 180 நிமிடங்களை செலவு பண்ணு. விவரம் புரியும். சரி சரி இந்த ஜோடி எந்த பாட்டிற்கு ஆடப் போகின்றது?
(வாராய் நீ வாராய்... போகுமிடம் வெகு தூரமில்லை நி வாராய் என்ற பாடலுக்கு யார் யாரைப் பிடித்து தள்ளப் போகின்ரார்கள் என்ற சஸ்பென்ஸுடன் டோண்டுவும், நாடோடியும் ஆட அரங்கமே அதிர்கின்றது)

வடி: என்னாணே அடுத்த ஜோடியோட கெட்டப்பே பயமா இருக்கு. ஒருத்தன் முகமூடி போட்டுருக்கான். இன்னோரு ஆளு பாக்க காட்டான் மாதிரி இருக்கான்.
பார்த்திபன்: டேய் ச்சுப்-கரோ
வ: அப்பிடின்னா?
பார்த்திபன்: டெல்லித் தமிழ்ல கம்னு கெட'ன்னு அர்த்தம். அடுத்த ஜோடி வாங்க. கலங்க அடிங்க.
(முகமூடியும், குழலியும் மேடையில் தோன்றுகின்றார்கள்)
முகமூடி: என்ன குழலி என்னையப் பாத்தவுடனே டென்ஷனாறீங்க?
குழலி: உங்கள எங்க பாக்க முடியுது? அதான் முகமூடி போட்டு இருக்கீங்களே?
மு: சரி முகமூடியைக் கழட்டிடுறேன். (முகமூடியைக் கழட்டுகின்றார்)
கு: சரி நீங்கதான் முகமூடின்னு எப்பிடி நம்புறது? நீங்களே ஏன் குசும்பனாவோ, சின்னவனாவோ இருக்க முடியாது?
மு: அடப்பாவிங்களா! இதுக்குப் போயி தாசில்தார், RDO, VAO சர்ட்டிபிகேட்டா வாங்கிட்டு வர முடியும்? நாந்தான் சத்தியமா முகமூடி... நம்புங்க
கு: சதி நடக்கின்றது. வருடி வருடி காய்த்துப் போன கரங்கள் இல்லாமல் என்னை அப்யூஸ் செய்யிறாங்க
மு: என்னாது அப்யூஸா? எனக்குத் தெரிந்தவரை சைல்ட் அப்யூஸ், டிரக் அப்யூஸ் கேட்டுருக்கேன். ஆனா உங்கள எப்பிடி அப்யூஸ் செஞ்சாங்க?
கு: திராவிடர்களே எழுமின், விழுமின். நீ அடிமைப்பட்டுக் கிடந்தது போதும். இனிமேலும் உன்னை அப்யூஸ் செய்ய முடியாது. நீங்கள் என்னை அப்யூஸ் செய்தால் அது என் முடிக்கு சமானம் என்று சொல்ல மாட்டேன். ஏன்னா நான் அதை கிரீம் போட்டு சீவி வளர்த்து வெட்டி விடுகின்றேன்
மு: ஏங்க உங்களுக்கு வெட்டுறத தவிர வேறெதுவுமே தெரியாதா? நாட்டுல பிரச்சினைன்னா மரம் வெட்டுவீங்க... வீட்டுல பிரச்சினைன்னா முடியை வெட்டுறீங்க
கு: நாங்க என்ன தலையவா வெட்டுனோம்? கேவலம் முடியை வெட்டக் கூடாதா? அய்யய்யோ என்னைய அப்யூஸ் பண்றாங்களே
வடி (முடியைப் பிய்த்துக் கொள்கின்றார்): இந்த ரேஞ்சுல இவனுங்க போனானுங்கன்னா நான் வெட்டுறதுக்கு முடியே இருக்காது போலருக்கே...ஜூட் சீக்கிரம் ஏதாவது பாட்டுக்கு ஆடுங்கப்பா...
கு: நம்மள ஜட்ஜ் பண்ண இவனுங்களுக்கு என்னா தகுதி இருக்கு? எனக்கு ஜீரி மேலேயே சந்தேகமா இருக்கு
மு: அது ஜீரி இல்லீங்க ஜூரி
கு: ஸாரி நான் செந்தமிள் திராவிடன். தேவபாஷை எனக்கு வீக். டீக்-ஹே?

(தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் "என்னம்மா கண்ணு சவுக்கியமா" என்ற பாட்டுக்கு முகமூடி ஆட ஆரம்பிக்க, ரஜினியின் மிஸ்டர் பாரத் படமென்று நினைத்த குழலி படப்பெட்டி கடத்தும் பழக்க தோஷத்தில் பாட்டு டிவிடி'யை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கின்றார். அரங்கத்தில் குழப்பமான கைத்தட்டல்)

பார்த்திபன்: (வியர்வையை வழித்து விட்டபடி) ஏண்டா இந்தப் போட்டிக்கு வந்தோம்னு கண்ணைக் கட்டுதே
வடி: எங்கூருல இதைத்தான் கூப்பிட்டுக் குத்து'ம்பாய்ங்க. சும்மா கெடந்த சுருக்குக் கயித்தை மாலைன்னு கழுத்துல மாட்டிக்கிட்டானாம் ஒருத்தன்
பார்த்திபன்: டேய் எனக்கும் பழமொழி தெரியும். அடங்கு. எவனாவது பழமொழி for Dummies'ன்னு பதிவு போட்டுடப் போறான். நெக்ஸ்ட் நெட் ஜோடி வாங்க ப்ளீஸ்

(வரமாட்டேன் வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தபடி பத்ரியும், அவர் கையை வித்யாவின் கையாய் நினைத்தபடி இஅழுத்துக் கொண்டு கையில் லேப்டாப்புடன் நுழைகின்றார் தமிழ் பார்டெண்டர்)
பத்ரி: ......
வடி: ஹலோ பத்ரி இப்போ நீங்க என்ன சொன்னீங்க? ஒண்ணுமே கேக்கலியே?
பார்த்திபன்: அவர் ஒண்ணும் சொல்லலியா? எனக்குக் கேட்டுதே?
வடி: ஏம்ப்பா நானும் பக்கத்துலதானனே இருந்தேன். ஒண்ணும் கேக்கலியே?
பார்த்திபன்: ஹூம் அவரு பேசாம இருந்தாலே நூறு தடவை பேசின மாதிரி
(காண்டாகின்றார் வடிவேலு)
தமிழ்: வலைபதிவர் சந்திப்புன்னா ஆரஞ்சு ஜூஸையே சிந்திக் குடிக்கிற உங்களுக்கும், ஸ்கூரூ டிரவரையே ராவுல ராவா அடிக்கிற எனக்கும் ஒன்பது வித்தியாசம் இர்க்கு நைனா. வேணா பான்பராக் காராவையோ, குஜினி கும்கியையோ கேளெங்க கத்ரி ஸார்
வடி: ஆஹா கெளம்பிட்டாய்ங்கடா. ஆமாம் பார்காரரு ஆரு கிட்ட பேசுறாரு?
பார்: கம்னு கெட இல்லேன்னா உன்னைய "குடிவேலு" ஆக்கிப்புடுவாரு அக்காங்
பத்ரி: .........
வடி (பார்த்திபனை கம்மென்று இருக்குமாறு சைகை செய்தபடி) எங்களுக்கும் வெளங்கும். இப்போ இவரு பேசுனது எனக்கும் புரிஞ்சிச்சுல்ல
பார்: அவரு எங்கடா பேசுனாரு? நரசிம்ம ராவு கூட ஏப்பம் வுட வாயைத் தொறப்பாரு. இவரு என்னடான்னா பெவிக்காலு ஒட்டுன டைட்டு லிப்பால்ல இருக்காரு
வடி: அப்ப முன்னாடி ஒரு பஞ்சு டயலாக்கு உட்ட
பார்: பஞ்சு டயலாக்கு சொன்னா அனுபவிக்கணும். அர்த்தம் கேக்கப்படாது
தமிழ்: மேற்கு பதிப்பகத்துல MP3 புக்கு போட்டா பெரிய ஆளா? ஸ்டேஷன் பெஞ்சுல டீ ஆத்துறவனெல்லாம் கொரலு கொடுக்கிறானாமில்ல.
வடி: அடப்பாவி சூப்பர் ஆக்ட் கொடுக்கிறார்பா. லேப்டாப் பதிவுல MP3 புக் சூப்பர்ன்னு சொன்ன மாதிரில்ல தெரிஞ்சுது
பார்: டேய் இவ்வளவு அப்பாவியாய் இருக்குற. அதான் போறவன் வர்றவனெல்லாம் உன்னைய மிதிக்கிறான்
பத்ரி: ............
வடி (கண்களைக் கசக்கியபடி): அய்யோ என்னைய விட நல்லவரா இருக்கிறாரே இந்த பத்ரி
பார்: சரி சரி சட்டு புட்டுன்னு ஆடுங்க

(காதல் கொண்டேன் படத்தில் ஹீரோவாய் அடிபட்டு தரையில் கிடக்கின்றார். அவரைச் சுற்றி வந்தபடி தனுஷ் மாதிரி வெறியுடன் "திவ்யா திவ்யா" என்று ஆடுகின்றார் தமிழ்பார் டெண்டர். அரங்கமே அதிர்ச்சியுடன் பார்க்கின்றது)

வடி: என்னாபா ஒரே ரவுசு பார்ட்டிங்களா இருக்கு... ஒரு இலக்கிய ஜோடியே இணையத்துல கிடையாதா?

(உடனே தோம் தோம் வந்தோம் என்று ஒரு ஜோடி குதிக்கின்றது. ஸாரி கொதிக்கின்றது. அருகருகே இருந்தாலும் அக்னி நட்சத்திரமாய் தகிக்கின்றது. ஆஹா புரிந்து கொண்டீர்களா? பிகேஎஸ்+சுமூ தான் அந்த ஜோடி)
பிகேஎஸ்: வாங்க குடியாத்தம் முனிரத்னம் சுந்தரமூர்த்தி அவர்களே! வணக்கம் என்பதை நான் சொந்தப் பெயரில் சொல்லிக் கொண்டு ஆரம்பிக்கின்றேன்.
சுமூ: அப்ப நான் என்ன அடுத்தவன் பெயருலயா எழுதறேன். என்னோட முழுப்பேர்லதான் நானும் எழுதறேன். சுருக்கமா சுமூ. அதுவும் என் பெயர்தான். வலிக்கிற இடத்துல அடிக்கணும்.
பி: வாய்யா என் தெலுங்குப் பட வில்லனே... எத்தனை சுட்டிகள் என்னைத் திட்டிப் போட்டிருப்பீர்கள்? இதையும் நான் சொந்தப் பெயரில் தான் கேட்கின்றேன். விளக்கு'ங்கள்
சு: விளக்கு என்பது வாங்கவோ விற்கவோ வந்த ஸ்தாபனமல்ல...
(கூட்டத்திலிருந்து ஒருவர் "ஆஹா விளக்கு பற்றி அருமையாக விளக்குகின்றார். சொல்லி கில்லி மாதிரி அடிக்கின்றார் என்று கத்த கடுப்பகின்றார் பிகேஎஸ்)
வடி: அண்ணே அடிக்கடி "சொந்தப் பெயரில் கேட்கிறேன்னு சவுண்டு வுடறாரே ஏண்ணே?"
பார்த்திபன்: அதுவா அவரு வேற பேருல எழுத முடியலேன்னு கடுப்புதான்
வடி: அப்ப சொந்தப் பேருல இல்லாம வேற பேருல வேற எழுதுவானுங்களா?
பார்த்திபன்: ஆமாண்டா சொந்தப் பேருல படிக்கிற ஆளில்லேன்னு வையி...வேற பேருல எழுதுவானுங்க
வடி: அப்ப பிகேஎஸ் ஏன் வேற பேருல எழுதுல?
பார்த்திபன்: ஏண்டா எனக்கு ஆப்பு வைக்கப் பாக்குறியா? இத நான் என் சொந்தப் பேருலதான் கேக்குறேன்
சுமூ: என்னைக் குறி வைத்து வெறி வந்தது போல் நீங்கள் பல இடங்களில் எழுதி வந்துள்ளீர்கள் என்பதை மக்களுக்கு இந்த சுட்டிகள் மூலம் தெரியப்படுத்திக் கொள்கின்றேன். அதனால் இவரைப் புறக்கணியுங்கள். புத்தகங்கள் வாங்காதீர்கள்
வடி: ஏண்ணே இந்த சுட்டிகள் என்றால் என்னண்ணே?
பார்த்திபன்: அட பொறம்போக்கு... கண்டபடி சுட்டுறதுதான் சுட்டி. எவன் அதிகமா சுட்டுறானோ அவந்தான் ஜெயிச்சதா அர்த்தம்
பி: உங்களைப் போல் எனக்கும் சுட்டத் தெரியும். அதையும் ....
வடி: என்னா சொந்தப் பேருலேயே சொல்றீங்களா? அடங்குங்கப்பு.
பி: உங்களுக்குத் தெரியாது வடிவேலு. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும். கொஞ்சம் அசந்தா சூச்சூன்னு டிரெயினு வுட்டுடுவானுங்க. இல்லே வீரமணி இவந்தான்னு கற்பூரமணைச்சு சத்தியம் பண்ணுவானுங்க. சுதாகரிப்பா இல்லைன்னு வைங்க உங்களையே சுத்திகரிப்பு பண்ணிடுவானுங்க. இந்த செஸ்னாவுல...
சுமூ: அய்யய்யோ அதுல நான் அடிப்படை உறுப்பினர் கூடக் கெடையாது. வருஷாவருஷம் பொங்கல் சாப்பிடத்தான் போவேன். செஸ்னா என்னா எனக்கு டயோட்டா சியானாக் கூடத் தெரியாது. பிரண்டுதான் காட்டுனாரு. நான் தமிழனே கெடையாது. எனக்கு கன்னடம், தெலுங்கு, கியூனிபார்ம் மொழிகள் கூடத் தெரியும் (மூச்சு இளைக்கிறது)

(ஏ சிங்கம் போல நடந்து வரான் எங்க பேராண்டி என்ற பாடலுக்கு பிகேஎஸ் குத்தாட்டம் போட, சிங்கம் என்ற வார்த்தையில் ஆட்சேபம் தெரிவித்து வெளி நடப்பு செய்கின்றார் சுமூ)

வடி: ஸ்ஸப்பா நாலு ஜோடியிலேயே கண்ணைக் கட்டுதே
பார்த்திபன்: இதுக்கே அசந்தா எப்பிடி... உச்சக்கட்டமே இனிமேத்தான் இருக்கு
வடி: என்னாது உச்சக்கட்டமா?
(பிப்பிரி பிப்பிரி'ப்பேன்னு விசில் ஊதியபடி பபூன் டிரஸ்ஸில் லெப்ட்-ரைட் போட்டபடி இணைய குசும்பனும், டிங்கிரி டிய்யாலே என்று இருக்கும் முடியைக் கோதியபடி இளவஞ்சியும் அரங்கத்திற்குள் நுழைகின்றார்கள். அரங்கத்தில் விசில் சப்தம் காதைப் பிளக்கின்றது)
இவ: @@@###$$$
இகு: !!!%%%&&&
இவ: ***&&&^^^
இகு: +++|||???
வடி: இவய்ங்க என்னா பேசிக்கிறாய்ங்க... சகிக்கலியே?
பார்: இனிமே உனக்கு கண்ணை மட்டும் கட்டாது. எல்லாமே கட்டும் பாரு
இவ: \\\---///
இகு: <<<===>>>
வடி: அடேய் சட்டுபுட்டுன்னு ஆடித் தொலைங்கடா
பார்: இப்ப மட்டும் என்னா பண்றாங்க? இன்னும் வேற ஆடணுமா?
(திருடா திருடி படத்தில் "மன்மத ராசா" பாடல் ஸ்பீக்கரில் எகிறுகின்றது. ஒரே புழுதிமயத்தில் என்ன நடக்கின்ரதென்றே யாருக்கும் தெரியவில்லை. ஆடியன்ஸும் கூட ஆடுகின்றனர்)
வடி: மத்தவன் பேசுனது கூட கொஞ்சமாவது வெளங்குச்சி. ஆனா இந்த ஜோடிதான் சூப்பர் டோய்
பார்: இந்தாங்க மொதோ ரவுண்டுல வின்னர்ஸ் நீங்கதான். கொஞ்ச நேரத்துல கதி கலங்க அடிச்சுட்டீங்க. புடிங்க பரிசை

குழலி: ஆஹா தகுதி இல்லாதவனுங்கள ஜீரியில போடாதீங்கன்னு அப்பவே சொன்னேனடா. இப்பப் பாத்தியா ரிஸல்ட்டை. இதுக்குத்தான் நான் போட்டியிலேயே கலந்துக்குறதில்ல. போன போட்டியில நான் விட்ட பின்னூட்ட சுட்டி
வடி: இனிமே எவனாவது சுட்டி கொடுத்தீங்க சுண்டு விரல கடிச்சிப்பிடுவேன்
பிகேஎஸ்: அதையும் நீங்கள்...
வடி: ஆமாம்ப்பா சொந்தப் பேருலேயே சொல்லிக்கிறேன். இல்லேன்னா குடிவேலுன்னு சொல்லிப்புடுவாய்ங்க
தமிழ்பார்: ஏய்ய்ய்ய் திவ்யா எங்கடா? பைக்கை எடுங்க இசிஆர் போகணும்
வடி: குடிச்சிப்பிட்டு ஓட்டாதீங்கடா எபைஆர் போட்டுடப் போறாங்க
பத்ரி: .....
வடி: அய்யா இப்பவாவது ஏதாவது சொல்லுங்கய்யா...
பத்ரி: .....

(வெறுத்துப் போய் வடிவேலுவும், பார்த்திபனும் நடையைக் கட்டுகின்றார்கள். இரண்டாவது ஸீஸனுக்கு பல ஜோடிகள் தயாராவதாய் தகவல் இரவுக் கழுகாருக்கு குட்டிக் கழுகு எஸெமெஸ் அனுப்புகின்றது)
Posted by குசும்பன் at 5:06 AM 6 comments Links to this post
Friday, February 02, 2007
இணையக(கா)தை for Dummies
ஏதாவது ஒரு பதிவு போட்டு திரட்டியில் சேர்த்து விரட்டிப் பிடித்து, பின்னூட்டம்/விவாதக் குத்துகளில் மூழ்காவிட்டால் உறக்கம் வருவதில்லை என்று செந்தழல் கண்களுடன் கொலைவெறியுடன் அலைபவரா நீங்கள்? கவலைபடாதீர்கள். இணையத்தில் நீங்கள் தனியரல்லர். வெறும் பதிவு போட்டு அவ்வாறு அலைவதை விட தத்துவார்த்தமான கதை, கவிதை, கட்டுரை எழுதிப்பாருங்கள். இணையத்தில் இலக்கியமில்லை என்று சொன்ன ஜெயமோகனே தன்னைத் திருத்திக் கொள்வார். நிற்க! எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? மண்டபத்தில் எழுதிக் கொடுப்பவரெல்லாம் இப்போது கிடையாது. ஏதோ என்னாலான கதை விடச் சில உதவிக் குறிப்புகள்:

1. கதை எழுதுவதற்கு முன் ஒரு குருவை மானசீகமாக செலக்ட் செய்யவும். சுஜாதா என்று ஓப்பனான பெயரை விட கநாசு, சிசுசெ, சுரா, பாரா, நபி, வெசா, இபா என்று இனிஷியல்களை அள்ளிப் போட்டால் பார்க்க பாந்தமாய் இருக்கும்.

2. கதை எழுத உதவும் உத்திகளை விவரிக்கும் பொழுது பிக் பேங்ஸ், ஸ்டிரிங் தியரி, வார்ம் ஹோல், பிளாக் ஹோல், *** ஹோல் என்று கரடு முரடாக கோர்க்க வேண்டும். படிப்பவர் இதில் நீங்கள் எந்த யுக்தியையோ குயுக்தியாக பயன்படுத்தியது தெரியாமல் திக்கித் திணறி இறுதியில் "வாவ்" என்ற பாராட்டையோ "ஓவ்/உவ்வேக்" வாந்தியையோ பின்னூட்டுவார்கள்.

3. கேரக்டர்களுக்கு பெயர் வைப்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சுஜாதா சொல்வது போல "கேரக்டருக்கு உறவினர்/நண்பர் பெயரை வைக்கலாம் தப்பில்லை. ஆனால் அதுவே அச்சானால், படமாக வந்தால் அவர்களுடனான உங்கள் உறவு எவ்வாறு இருக்கும் என்று காரண்டி கிடையாது". கதையின் உயிரான கேரக்டரென்றால் "அ, ஆ, இ" என்று பெயர் வைக்கலாம். மெய்யான கேரக்டரென்றால் "க், ங், ச்..." என்று சேப்'ஆக விளையாடலாம். இடைப்பட்ட கேரக்டர்களுக்கே இருநூத்திப் பதினாறு ஆப்ஷன்ஸ் "க, ங, ச..." என்று இருக்கின்றது. ஆரிய கேரக்டர்களுக்கு "ஹ, ஹ், ஹா, ஷ, ஜ, ஸ்ரீ" இப்படி அழைக்கலாம். கணக்கு பண்ணுவோருக்கு இருக்கவே இருக்கு "1, 2, 3, ..." செந்தமிழில் கணக்குப் பண்ண "க, ச....". என்னை மாதிரி குசும்பு புடிச்ச காரெக்டரா இருந்தா "ஃ" என்று பெயரிடலாம். இப்படி வைத்தால் தேவையில்லா காண்ட்ரோவெர்ஸிகளைத் தவிர்க்கலாம். இருப்பினும் "ஒண்ணும் ஒண்ணும் இரண்டு" என்று ஒருவர் வலைப்பதிவு வைத்திருக்கின்றார் என்பதறியவும். அவர் சண்டைக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

4. அதெல்லாம் முடியாது நான் பேரு வைச்சே தீருவேன்னு அடம் பிடிப்பவரா நீங்கள்? தப்பித் தவறி கூட இணையத்திலிருப்பவரை காயப்படுத்தாதபடி OPML கோப்பை தி/விரட்டிகளிலிருந்து டௌன்லோடு செய்து, கண்ணில் வெளக்கெண்ணெய் விட்டு அங்கிருக்கும் வலைப்பதிவர்களின் பெயர்களை கவனமாகத் தவிர்க்கலாம்.

5. இனிஷியல்களால் செல்லமாக பெயர்கள்/நபர்கள் அழைக்கப்படலாம்/டுவார்கள் என்பதறிக. உதாரணமாக "குருவி கடிச்ச கொய்யாப்பழம்" என்று நீங்கள் எழுதினால் "என்னோட பெயர் குரு.வித்யா; செல்லமாக என்னை குருவி என்று அழைப்பார்கள். சிறிய வயதில் நான் கொய்யாப்பழம் திருடி அடி வாங்கியதை ஒருமுறை பதிவில் எழுதியிருந்தேன்; அதையே குறிப்பிட்டு என்னைக் கதையில் கிண்டலடிக்கின்றார் கதாசிரியர்" என்று யாராவது உங்கள் மீது பாயலாம். எச்சரிக்கை அவசியம்.

6. குழூஉக்குறி, தற்குறிப்பேற்றுதல், வழக்குச் சொற்கள், இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் போன்றவற்றை முடிந்தால் தவிர்த்து விடவும். கூகுளேஸ்வரன் உதவியோடு அவைகள் எங்காவது எகிடுதகிடாக வலைப்பதிவில் வந்திருக்கின்றதா என்று பார்ப்பது அவசியம். இல்லாவிட்டால் நீங்கள் "சிக்கல் சண்முகசுந்தரமாகி" நலந்தானா என்று மற்றவரை பாட வைத்து விடும் அளவிற்கு அடிபடுவீர்கள். உங்களைச் சுற்றி அழகாக டான்ஸ் ஆடப்போவது பத்மினி இல்லையென்றும் உணர்க.

7. நீங்கள் பார்த்தது, கேட்டது, படித்தது "பாகேப" எழுத ஒன்றும் வாரமலர் டீகப் முக அந்துமணியல்ல. கற்றதும், பெற்றதும் எழுத சுஜாதாவும் அல்ல. கடமைகள், காயங்கள் எழுத லட்சுமி நாராயணன் அல்ல. அவர்களையும் தாண்டி புனிதமானவர்கள். அதாவது "வலைப்பதிவர்கள்". ஆகையால் உங்கள் சொந்த சம்பவங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவையல்ல. "ஞாயிற்றுக் கிழமை பத்து மணிக்கு எழுந்து ஊத்தை வாயுடன் காப்பி குடித்தான்" என்று எழுதினால் "மவனே நானே என்னைத்தான் குசும்பு பண்றேன்னு உன்னைச் சம்மிப் புடுவேன்". கருத்துச் சுதந்திரமெல்லாம் படிக்கிறவாளுக்குத்தான். எழுதுறவாக்குக் கெடையாது என்று அறிதல் நலம் பயக்கும்.

8. சம்பவமே இல்லாமல் கதை எழுத எப்பிடி முடியும் என்று புத்திசாலித்தனமாக நீங்கள் கேட்கலாம். இப்ப வரும் கதைகள் ஆழமான சம்வம் சம்பந்தப்பட்டவை என்று நீங்கள் நம்பினால் எப்படி இணையத்தில் காலம் தள்ளப் போகின்றீர்களோ என்ற கவலைதான் வருகின்றது. கமர்ஷியல் படமெடுக்கச் சொன்னால் ஆவணப்படமெடுத்து சொந்தமாய் ஆப்படித்துக் கொள்வதற்கு ஒப்பான பாவகாரியமிது.

9. எத்தனையோ இசங்களும், இயங்களும் இருக்கும் போது எல்லோரும் புரிந்து கொண்ட மாதிரி புருடா பாவனையில் பாவிக்கும் "பெண்ணியம்" என்றெல்லாம் எழுதி உடம்பை புண்ணாக்கிக் கொள்ளாமலிருப்பது புண்ணியம். இல்லை ஏதாவது இயத்தை யூஸ் பண்ணியே தீர வேண்டுமென்றால் காரீயம், காரியம், ஈயம் என்று எழுதி உங்களது இலக்கிய அரிப்பை சொறிந்து கொள்ளலாம்.

10. சரி மேற்கொண்ட புல்லட் பாயிண்ட்டுகளைக் கொண்டு ஒரு வழியாக கதை எழுதி விட்டீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். தலைப்பு என்ன வைப்பது என்று தலையப் பிய்த்துக் கொள்கின்றீர்களா? பழமொழி, கிழமொழியெல்லாம் வைத்து அதிரடியாக ஆட்டம் போடாதீர்கள். "கூடையும் இரண்டு காடைகளும்", "பாயும் தலையணை வாத்துகளும்", "பாயாவும் மூன்று பரோட்டாக்களும்" போன்ற தலைப்புகள் பொதுவாக எந்தப் பிரச்சினைகளையும் தராதவை. இருப்பினும் டோட்டல் சேப்டி சிங்காரம் நீங்களென்றால் "!, @, #, $, %, ^, &, *, (, ), :-), ;-),..." போன்ற சிம்பல்களையே சிம்பாலிக்காக போட்டு விட்டால் குற்றமொன்றுமில்லை கொற்றவனே!

கதை எழுதி உதை வாங்காமலிருக்க வாழ்த்துக்கள் !!!

பிகு: இப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு கத எளுதத்தான் வேணுமான்னு கேட்டா அது "உங்கள் சாய்ஸ்". அட இது கூட நல்ல தலைப்பாக உங்களுகுத் தோன்றினால் "அட கஷ்டகாலமே" என்று என்னால் ஆதங்கப்படத்தான் முடியும். வர்ட்டா? ;-)
Posted by குசும்பன்

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP