`நான் தமிழன்'

>> Sunday, December 28, 2008


`நான் தமிழன்' சாதிகளைப் பற்றியது அல்ல! நம் முன்னோர்களின் கலாசாரங்கள், பண்பாடுகள், வாழ்க்கை முறைகள் பற்றி அடுத்த தலைமுறைகள் தெரிந்துகொள்வதற்கான தேடல். அவர்களின் வீரத்தையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் அடுத்த தலைமுறைக்கு உணர்த்தும் ஒரு வாய்ப்பு. ஒரு உண்மையான வரலாற்றை மறந்து விடாமலும் மறக்கடிக்கப்படாமலும் காக்க வைக்கும் முயற்சி.

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அடக்கு முறை அது. உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும். அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது. செருப்புப் போடக் கூடாது. தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது. மாடி வைத்து வீடு கட்டக் கூடாது. பசுக்களை வளர்க்கலாம். ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்கவேண்டும்.

இப்படி நாளுக்கு நாள் அவர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகமாகிக்கொண்டே போனதன் விளைவு? பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட அந்த சமூகம் வீறுகொண்டு எழுந்தது. தங்களை அடக்கியவர்களையும் ஒடுக்கி வைத்திருந்தவர்களையும் எதிர்த்து அவர்கள் போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. வரலாறு காணாத அந்தப் புரட்சியை செய்தவர்கள் நாடார் சமூக மக்கள்.

திருநெல்வேலி, இராமநாதபுரத்து மண்ணின் மைந்தர்கள் இவர்கள். மதுரை, கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை என்று அவர்கள் பரந்து கிடக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நாடார்களே.

சான்றார், சான்றோர், நாடாள்வார் என்றழைக்கப்படும் நாடார்களிடையே கற்றறிந்தோரும், போர் வீரர்களும், வர்த்தகரும், பதனீர் இறக்குவோரும் இருந்தனர்.

மதுரையை ஆண்ட பாண்டியர்கள், இவர்களுள் ஒரு உட்பிரிவினர் எனப் பரவலாக நம்பப்படுகிறது. மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் சேர அரசில் பணிபுரிந்தவர்களின் பல பெயர்களும் நாடார்கள் போர்வீரர்கள் என்பதை உறுதி செய்கின்றன.

நாயக்கர்களின் படையெடுப்பால் அதிக இன்னல்களுக்கு ஆளான நாடார்கள், தங்கள் பூர்வீக பூமிகளான சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி திருச்செந்தூர் போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை.
பதனீர் இறக்கி வாழ்ந்த காலம் இவர்களின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. எனினும் பனைமரம் நாடார்களின் புனித மரமாக எண்ணப்படுகிறது. பனைமரத்தை நுனி முதல் வேர் வரை பயனுள்ளதாக்கிக் காட்டியவர்கள்.

தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் இடையே பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களே நாடார்கள் என்றும் சொல்லப்படுகிறது. `பத்திரகாளியின் மைந்தர்கள்' என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

தங்களை உயர்ந்த எண்ணம் உள்ளவர்களாக நாடார்கள் போற்றிக் கொண்டாலும் கோயில்களுக்குள் சென்று சாமி கும்பிட உரிமை, அன்று மறுக்கப்பட்டது. அடக்குமுறை மண்டிய இந்த இருண்ட காலத்தில்தான் நாடார்களிடம் இந்த சமூகக் கொடுங்கோன்மையை எதிர்க்கும் எண்ணம் உதயமாயிற்று. சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஆனால் அங்கேயும் மேலாடை மறுக்கப்பட்டது கண்டு மக்கள் கொதித்து எழுந்தனர். அதனால், 1820_ல் அது சமூக விடுதலைக்கான போராட்டமாக வெடித்தது.

பெண்களை மேலாடை அணிய வைத்து பொது இடங்களில் நடமாடச் செய்தனர்.இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர்கள், 1882 மே மாதம் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் ஆண்கள் கட்டி வைத்து அடிக்கப்பட்டனர். கொலையும் செய்யப்பட்டனர். சம்பளம் இல்லாமல் வேலை செய்ய மறுத்த ஆண்களை கொடுமைப்படுத்தினர். கோயில்களையும் பள்ளிகளையும் தீயிட்டனர். நெய்யாற்றின் கரை, எரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழும் பல இடங்களில் சிறுசிறு கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.

இதுபோதாது என்று, திருவாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815_1829) ``நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது'' என்று பிரகடனம் செய்தார்.

இப்பிரகடனம்தான் நாடார் குலமக்களின் கோபத்தீயை வானளாவில் வளர்த்துவிட்டது. இனியும் பொறுக்க முடியாது என்று நாடார் சமூக மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். எதிரிகளை நோக்கிப் புறப்பட்டார்கள்..

(அது அடுத்த வாரம்)
படங்கள் : ஆர்.சண்முகம்,
அரண்மனை சுப்பு

`உழைத்தால் உயரலாம்' என்பதற்கு முன் உதாரணம் நாடார் சமூகம்தான். நாடார் மக்களிடையே பெரும் சாதனை படைத்தவர்கள் மிகப் பலர்.

அய்யா வைகுண்டசுவாமி: எளிய நாடார் குடும்பத்தில் முத்துக்குட்டி என்ற பெயரில் பிறந்தவர். திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தவர். நாடார் உள்ளிட்ட சமூக மக்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்ற அடக்குமுறைக்கு எதிராக எல்லோரையும் தலைப்பாகை கட்ட வைத்து சாதி வெறியை எதிர்த்துப் போராடியவர்.

மார்ஷல் நேசமணி: குமரித் தந்தை, குமரி மாவட்டத்தின் சிற்பி. 1956ல் நாஞ்சில் நாட்டை கேரளாவோடு இணைக்க வேண்டும் என்று முயற்சித்த போது `நாங்கள் தமிழர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். தமிழ் மரபுக்கு சொந்தக்காரர்கள்' என்று மார் தட்டியதோடு, தமிழ் மரபு சீர் குலைந்துவிடக் கூடாது என்று போராடி நாஞ்சில் நாட்டைத் தமிழகத்தோடு இணைத்த தீரர்.

காமராஜர்: தமிழ் இனத்தில் ஒரு சாதாரண நாடார் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் `கிங்மேக்கரான' மாமனிதர்; பச்சைத் தமிழர். அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் ஏழைகளுக்கு `கல்விக்கண்' திறக்கப்பட்டது. சத்துணவு கிடைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர். எல்லா சமூகத்தாருக்காகவும் உழைத்த கர்ம வீரர். `நாம் பெற்ற செல்வம்' என்று ஒவ்வொரு நாடாரையும் பெருமை கொள்ளச் செய்தவர். நாடார் இனத்துக்கே பெருமை சேர்த்தவர்.

கே.டி.கோசல்ராம்: பாலைவனம் போல் வறண்டு கிடந்த பூமி. கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லை. இருண்ட வாழ்வோடு மக்கள் சுருண்டு வாழத் தொடங்கிய போது மழை மேகமாய் வந்து, மணிமுத்தாறு அணையை, தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்து வசூலித்து கட்ட வைத்த கடமை வீரர். சுதந்திரப் போராட்ட தியாகி.

பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன்:மற்ற இனத்தவருக்கு இருப்பது போல் நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர். பேருந்துகளில் காலி இருக்கைகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் அமரக் கூடாது என்று இருந்த நிலையை உடைத்தெறிந்து அவர்களை சரிசமமாக உட்கார வைத்தவர். சென்னையில் உள்ள பாண்டிபஜார் இவரது பெயரில் உருவானதே.

(பட்டியல் தொடரும்)

Read more...

சின்னகுத்தூசி - பெரிய கோணூசி

>> Monday, December 22, 2008

முரசொலி கட்டுரை மற்றும் தினமணி கட்டுரை இந்த பதிவில்...


முரசொலி கட்டுரை
‘கல்கி’ போன்ற பார்ப்பன ஏடுகளுக்கு வாரம் தவறாது முதல்வர் கலைஞரை கேலி செய்து, கண்டித்து, தாக்கி எழுதாவிட்டால் பொழுதுபோகாது. ஜென்மம் சாபல்யம் அடையாது.

கலைஞர் சரியில்லை; அவரது ஆட்சி சரியில்லை என்று அலுக்காமல் சலிக்காமல்
கை சளைக்காமல் எழுதுவார்கள்.

சரி; அப்படியானால் வேறு யார் ஆட்சி வந்தால்- யார் முதல்வரானால் எல்லாம் சரியாகிவிடும்? நல்லாட்சி மலர்ந்து விடும் என்று கேள்வியெழுப்பினால்

- ஜி.கே. வாசன்

- ப. சிதம்பரம்

- ஆர். நல்லக்கண்ணு

- என். வரதராஜன்

- தொல். திருமாவளவன்

- டாக்டர் ராமதாஸ்

- வைகோ

ஆகியோரது கட்சிகள் - ஆட்சிக்கு வந்தால் இவர்கள் முதல்வர் ஆனால் நல்லாட்சி மலரும் - எல்லாம் சரியாகிவிடும் - என்று ஒருபோதும் - மறந்தும்கூட எழுதிவிடமாட்டார்கள்.

ஜெயலலிதாதான் அவர்களது இஷ்ட தெய்வம்; ஜெயலலிதா முதல்வராகிவிட்டால் - 1991 - 1996 போல 2001 - 2006 போல ஒரு ‘நல்லாட்சி’(!) மலர்ந்து விடும் - எல்லாமே சரியாகிவிடும் என்றுதான் நினைப்பார்கள்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிவிட வேண்டும் என்பதற்காகவே - கலைஞர் சரியில்லை; அவரது ஆட்சி சரியில்லை என்று குறை கூறியபடியே இருப்பார்கள்; குற்றங் கண்டுபிடித்தபடியே இருப்பார்கள்!

இதோ இந்த வாரம் ஞாயிறன்று கடைகளுக்கு வந்த ‘கல்கி’யிலிருந்து ஒரு கேள்வி - பதில்:

கேள்வி :- ‘மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்த பிராமணர்கள் பூணூல் அணியக் கூடாது. பொட்டு வைக்கக்கூடாது’ என கருணாநிதி கூறியிருப்பது?

இது கேள்வி.

இந்தக் கேள்விக்கு ‘கல்கி’ அளித்துள்ள பதிலைப் பாருங்கள்:-

"நமது அரசியல் சாசனத்தை மதிப்பவராகில் அவ்வாறு கூறும் உரிமையே அவருக்குக் கிடையாது!

இது ஒருபுறமிருக்க - புறச்சின்னங்கள் - அடையாளங்கள் எல்லா ஜாதியினருக்கும் உண்டு. பிராமணர்களை மட்டுமே குறி வைப்பது கருணாநிதி போன்றோரின் பொழுதுபோக்கு - அரசியல் ஆயுதம்.

புறச்சின்னங்கள் களையப்படுவதாலேயே சமத்துவ உணர்வு ஏற்படும் என்கிற அனுமானமும் அபத்தமானது" - என்று கல்கி - வியாக்யானம் செய்துள்ளது.

‘கல்கி’யின் இந்த வெண்டைக்காயால் விளக்கெண்ணையில் தோய்த்து எழுதப்பட்ட இந்த வியாக்யானம் எவ்வளவு அபத்தமானது என்பதை விளக்க - வேறு எங்கும் ஆதாரங்களைத் தேடி அலையவேண்டிய அவசியமில்லை.

கல்கியின் அபிமான மதகுரு சுயசாதித் தலைவர் - ‘கல்கி’ இன்னமும் வாரா வாரம் தவறாது ‘அருள்வாக்கு’ என்ற பெயரில் ஒரு பக்கக் கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறதே; ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் உபதேசங்களை - அந்த சங்கராச்சாரியாரே - அவாள் பாஷையில் சொல்வதானால் ‘மகாப் பெரியவாள்’ - அவரது கட்டுரைகளின் தொகுப்பான - ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகத்திலேயே -

பிராமண ஜாதி பிராமண ஜாதியாகவே நீடித்து - மற்ற ஜாதியினருக்கெல்லாம் வழிகாட்டும் ஜாதியாக நீடிக்க - பிராமண ஜாதியின் ஆதிக்கத்தில் மற்ற ஜாதியினர் எல்லாம் அடங்கி - ஒடுங்கி அடிமைகளாக தொடர்ந்து அதல பாதாளத்திலே அமுந்திக்கிடக்க பிராமணன் என்ன செய்யவேண்டும் - என்ன செய்யத் தவறிவிட்டான் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்.

மகாப் பெரியவாள் - வர்ணாஸ்ரம தர்மத்தின் பாதுகாவலர்; பிராமணன் பிராமணனாகவே - உயர் சாதிக்காரனாகவே நீடிக்கவேண்டும்.

100க்கு 97 சதவீதத்தினரான பார்ப்பனரல்லாத சமுதாயம் அப்படியே சூத்திரர்களாகவே நீடிக்கவேண்டும்.

பிராமண ஜாதியின் மேலாதிக்கம் பட்டொளி வீசிப் பறந்த காலமே ‘இந்து’க்களின் பொற்காலம்! என்பதை நிலைநாட்ட தமது வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டவர் அவர்!

1. அவர் - உச்சிக்குடுமியும் பூணூலும் - பஞ்சக்கச்சமும் வேதபாராயணமும் நெற்றிச் சின்னங்களும் பிராமணனிடம் இருந்தபோது பிராமண ஆதிக்கம் மேலோங்கி நின்றது.

2. இப்போது பிராமணன் அவைகளை கைவிட்டு விட்டதால்தான், மற்ற ஜாதியினர் அவனை முன்பு போல மதிப்பதில்லை

- என்று ஆதங்கத்தோடும் - அழுத்தம் திருத்தமாகவும் ஓங்கியடித்துக் கூறியிருக்கிறார். அவரது - (தெய்வத்தின்) குரல் - முதல் பாகத்தில் 186ம் பக்கத்தில் அவர் அளித்துள்ள அருள்வாக்கை அப்படியே வரி பிறழாமல் கீழே தருகிறோம்.

‘ஜாதி என்றாலே மகா அநாகரிகமான ஏற்பாடு என்று இப்போது அரசியல் கட்சிக்காரர்கள், படித்தவர்கள் எல்லோரும் கரித்துக் கொட்டும்படியாகியிருப்பதற்கு யார் காரணம்? ஒரு நல்ல அமைப்பு சீர்குலைந்து விழுவதற்கு யார் பொறுப்பாளி?’ என்று ஒரு கேள்வியை எழுப்பினேன் அல்லவா?

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். வர்ணதர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராம்மணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச ஷேமமும், லோக ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி.

பிராம்மணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மானுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமத்தை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான்.

கிராப் வைத்துக் கொண்டான், ஃபுல்ஸூட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப் படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில் போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான்.

வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன் வரை ரட்சித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும் புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்துவிட்டான்.

சாஸ்திரங்கள் இவனுக்குப் பணத்தாசையே கூடாது; இவன் சொத்தே சேர்க்கக்கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே இவன் வாழ்க்கை நடத்தி, வேத சப்தத்தாலும் யக்ஞங்களாலும் லோகnக்ஷமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த வரையில் இவனிடம் மற்ற எல்லா ஜாதியாரும் குறைவில்லாத அன்பும், மரியாதையும் காட்டி வந்தனர். இவனையே உதாரணமாக, வழிகாட்டியாக, முன் மாதிரியாக (நஒயஅயீடந, பரனைந. அடினநட) வைத்துக் கொண்டார்கள்.

இப்போது தொழிலை விட்டுவிட்டு, கிராமத்தைவிட்டு, பட்டணத்துக்கு இவன் வந்து, இங்கிலீஷ்காரன் தந்த படிப்பு, அவன் கொடுக்கிற உத்தியோகம், அவனுடைய வாழ்க்கை முறை இதை எல்லாம் எடுத்துக் கொண்டு, இதனால் தானே ஏதோ ரொம்பவும் நாகரிகத்தில் உயர்ந்து விட்டதுபோல் ‘தாட் பூட்’ என்று பண்ணியதை மற்ற ஜாதியினர் பார்த்தார்கள். இதுவரை நல்லதற்கெல்லாம் இவனை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டிருந்த அவர்கள் இப்போது ஒழுங்கு தப்பிப் போவதிலும் இவனையே பின்பற்ற ஆரம்பித்தார்கள். தாங்கள் பாட்டுக்குத் திருப்தியோடு செய்து வந்த தொழிலை விட்டுவிட்டு, கிராமத்தையும் விட்டு, நகரவாசம் (வடிறn டகைந), இங்கிலீஷ் படிப்பு, வெள்ளைக்கார அரசாங்க உத்தியோகம் இவற்றுக்கு மற்றவர்களும் ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.

பிராம்மணனே புத்தியால் ஆகிற காரியங்களை ஆயிரம் பதினாயிரம் வருஷங்களாகச் செய்து வந்திருக்கிறான் அல்லவா? ஆதியிலெல்லாம் இவனுடைய புத்தி கொஞ்சம் கூடத் தன்னலனுக்குப் பிரயோஜனமாகாமல் சமூக nக்ஷமத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்டு வந்தது. இந்தத் தியாக விசேத்தாலேயே அது பிரகாசமாக சாணை தீட்டிய கத்தி மாதிரி கூர்மையாக இருந்தது. இப்போது இவனுக்கு சமூக nக்ஷம நோக்கம் போய், தன்னலமான லௌகிக ஆசைகள் எல்லாம் வந்தபின் அந்த புத்திப் பிரகாசம் மழுங்க வேண்டியதுதான். இவனுக்கென்று ஏற்பட்ட கடமையைச் செய்யவே முன்பு இவனுக்கு புத்தி வன்மையும் பகவத் பிரசாதமாகக் கிடைத்திருந்தது. கடமையை விட்டபின், அந்த புத்திக்கூர்மை மழுங்க வேண்டியதுதான்.

ஆனாலும் - சைக்கிளில் காலால் பெடல் பண்ணுவதை நிறுத்திய பிற்பாடுகூட, ஏற்கெனவே உந்தின வேகத்தின் சேஷத்தால், கொஞ்சம் தூரம் அது பெடல் பண்ணாமலே ஓடுகிறது அல்லவா? அந்த மாதிரி, பிராம்மணன் ஆத்மிக வித்தைகளைவிட்டு லௌகிக வித்தைகளில் போய் விழுந்த பின்னும், ஏற்கெனவே தலைமுறை தலைமுறையாக இவனுடைய பூர்விகர்கள் பெடல் பண்ணியிருந்த பலம் இவனுக்குக் கொஞ்சம் மிஞ்சியிருந்தது. இவனாகப் பெடல் பண்ணா விட்டாலும் அவர்கள் சேமித்து வைத்த புத்திப் பிரகாசம் இவனுக்குள் இன்னமும் பாரம்பரியம்மாகக் கொஞ்சம் வந்தது. இந்த மூளைப் பலத்தினால்தான் இங்கிலீஸ்காரனின் படிப்பு முறையில் ஆச்சரியப்படும்படியாகத் தேர்ச்சி பெற்றான். அவர்களுடைய உத்தியோகம், சட்டம், தொழில் முறைகள் ஆகியவற்றை நுணுக்கமாகத் தெரிந்து கொண்டு இவற்றில் அவர்களுக்கே தெரியாத தந்திரங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிற அளவுக்குச் சதுரனாகிவிட்டான் - என்பது மகாப் பெரியவாளின் அருள்வாக்கு "ஹிந்து சமூகம் பாழானதிற்கு பிராம்மணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம்" - என்கிறார் அவர். ஆனால் - அவரது சீடகோடியான ‘கல்கி’யோ - பிராமணன் அதைக் கைவிடவேண்டும், இதைக் கைவிடவேண்டும் என்று கருணாநிதி சொல்வது அபத்தம் என்று புலம்புகிறது!

பிராமணன் பிராமணனாக இருக்கத் தகுதியான உச்சிக்குடுமி - பூணூல் - பஞ்சக் கச்சம் ஆகியவற்றை அவன் கைவிட்டதுதான் பிராமண ஜாதி மதிப்பிழந்து போனதற்குக் காரணம் என்று மகாப் பெரியவாள் சொன்னால் அது தெய்வத்தின் குரல்.

சமத்துவம் ஏற்பட - பிராமணர்கள் பூணூல் அணியக்கூடாது; நெற்றியில் பொட்டு வைக்கக்கூடாது என்று தலைவர் கலைஞர் ஏன் கருதுகிறார்?

மகாப் பெரியவாளின் தெய்வத்தின் குரலை ஊன்றிப் படித்து உண்மையைத் தெரிந்து கொண்டதால்தான் கூறுகிறார்.

ஜாதிகள் நீடிக்கவேண்டும்; பிராமணன் உயர்ஜாதிக்காரனாகவே ஆதிக்கம் செலுத்தவேண்டும். சமத்துவ சமூகம் - ஜாதி பேதமற்ற சமுதாயம் அமையாமல் தடுக்க அவன் பூணூல் அணியவேண்டும் - உச்சிக்குடுமி வைத்துக் கொள்ளவேண்டும் - நெற்றிப் பொட்டு இட்டுக் கொள்ளவேண்டும் - என்று - சமத்துவத்துக்கு எதிராக மகாப் பெரியவாள் குரல் கொடுத்தால் அது அருள்வாக்கு தெய்வத்தின் குரல்.

பிராமண ஜாதி என்று ஒன்று இருக்கும் வரையில் - அவன் பூணூல் அணிவதை நிறுத்தாத வரையில் - பொட்டு வைத்துக் கொள்வதைக் கைவிடாத வரையில் சமத்துவம் ஏற்பட இவையெல்லாம் தடையாகவே இருக்கும் என்று கலைஞர் சொன்னால் அது அபத்தம்!

அருள்வாக்கு என்பதற்கும் அபத்தம் என்பதற்கும் அவாளின் அகராதியில் அர்த்தமே வேறுதான்!

- சின்னகுத்தூசி
( நன்றி: முரசொலி )





--------------------------------------------------------------------------------


தினமணி கட்டுரை

அண்மையில் முன்அனுபவமே இல்லாத தகுதியற்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அலைவரிசைத் தொகுப்பினை மத்திய அமைச்சர் ஆ. ராசா ஒதுக்கீடு செய்ததில் ஏறத்தாழ ரூ. 60,000 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பணத்தைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ அரசு இலவச மருத்துவமனைகளைத் தோற்றுவித்திருக்கலாம்.

பேறுகாலப் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாமல், தரையில் கோரைப் பாயில் ஈனுவதும், வரிசையில் நிற்கும் மற்ற பெண்களுக்கு அந்தக் கோரைப் பாயை வழங்குவதற்காக, மறுநாளே அந்தப் பச்சை மண்ணை துணியில் சுற்றிக்கொண்டு வெளியேறுமாறு அரசு மருத்துவமனைகளில் கட்டாயப்படுத்தப்படுவதும், இத்தகைய பெண்களில் குறிப்பிட்ட அளவினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே என்பதும், ஓய்வெடுப்பதற்கே அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசுச் செலவில் செல்லும் முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாது!

இந்த அறுபதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஓர் "அரசு அப்பல்லோவையே' தோற்றுவிக்கலாம்!

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி என்பதையே மாற்றி ஒவ்வொரு கிலோ அரிசியும் இலவசம் என்று அறிவிக்கலாம்! ரூ. 58 விலையுள்ள நான்கு நாள்களுக்கும் கூடப் போகாத மளிகைச் சாமான் பொட்டலத்தை எட்டு ரூபாய் சலுகையில் ரூ. 50-க்கு விற்பதற்குப் பதிலாக, ரூ. 1,000 மதிப்புள்ள மளிகைச் சாமான் பொட்டலத்தை, நாற்பது விழுக்காடு ஏழைகளுக்கு, அவர்களின் தேவையை ஓரளவு நிறைவு செய்யும் வண்ணம், முற்றிலும் இலவசமாகவே வழங்கலாம் அல்லது அமைச்சர் ஆ. ராசா "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முற்பட்டதன்' பயன் எந்த அளவினதாயினும், அதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட வகுப்பினனுக்கும் தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் பங்கிட்டுக் கொடுத்திருந்தால், அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு இரண்டு மாதத்திற்காவது வழி பிறந்திருக்கும்!

அலைவரிசைக் கற்றையினை "முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவதற்கு'

இதென்ன கோயில் பிரசாதமா?

அதை வாங்கிய இருவரும் மறுநாளே பல்லாயிரம் கோடி பார்த்து விட்டார்கள் என்றால், அதற்கு பின்னணியில் ஒரு மாபெரும் ஊழல் நடந்திருக்க வேண்டும் என்று மக்களால் உய்த்துணர முடியாதா?

கற்பழிப்பவன் சாட்சி வைத்துக் கொண்டா கற்பழிக்கிறான்? ஆனால் கற்பழிப்புகள் கண்டுபிடிக்கப்படாமலா போய்விடுகின்றன? லஞ்ச ஊழலும் அத்தகையதுதான்!

"முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவது' முறையற்றது. ஆகவே போட்டிகள் மூலம் மட்டுமே அரசு ஒப்பந்தங்கள் அமைய வேண்டும் என்று தெளிவாக உயர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன பிறகும், பழைய முறையே பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி தாங்கிச் சொல்வதில் என்ன பொருளிருக்க முடியும்?

ஆ. ராசாவுக்கு முன்பிருந்த தயாநிதிமாறன் பின்பற்றிய முறையைத்தான் இவரும் பின்பற்றினார் என்று முதல்வர் கருணாநிதி சொல்கிறார். தயாநிதிமாறன் கருணாநிதியின் பேரன்தானே? அவரென்ன கரம்சந்த் மோகன்தாஸ் காந்தியா?

அவருக்கு முன்பும் இதே முறைதான் பின்பற்றப்பட்டதாம்? ஒரேயடியாக வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோதே இந்தமுறைதான் பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி சொல்லியிருந்தால், சிரிப்பவர்கள் வாய்விட்டுச் சிரிக்க வசதியாக இருந்திருக்குமே!

பாரதீய ஜனதா அருண்சௌரியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் கருணாநிதி. அப்படி ஒருவேளை அருண்சௌரி பிழை செய்திருந்தால் அதை ஏதுக்களோடு எடுத்துக்காட்டி, அதே பிழையை நாங்கள் செய்யாததால், பல்லாயிரம் கோடி அரசுக்கு வருவாய் என்று மார்தட்டி இருந்தால் அது பெருமை!

அருண்சௌரி காலத்தில் இந்த அலைவரிசைத் தொகுப்பின் பயனாளிகள் வெறும் முப்பத்தைந்து லட்சம் பேர்; இன்று அந்தப் பயனாளிகள் முப்பந்தைந்து கோடிப் பேர்; ஆண்டுக்கு ஒரு கோடிப் பேர் வேறு பெருகுகின்றனர். இதிலென்ன முன்னோர் முறை?

பயனாளிகளின் எண்ணிக்கை நூறு மடங்கு கூடியிருக்கும்போது, அரசின் வருவாயும் அதற்குத் தகக் கூட வேண்டும் என்பது எந்தக் குறைந்த அறிவுள்ளவனுக்கும் புலப்படுமே! பகுத்தறிவு பேசும் முதலமைச்சருக்குப் புலப்படாதா?

இரண்டு நாள்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுஞ்சாலையில், தொடர்வண்டி கடந்து செல்வதற்காக, ரயில்வே கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் நான் அங்கு சற்று நேரம் நிற்க வேண்டியதாயிருந்தது.

இரண்டு பெண்கள் பனங்கிழங்குக் கட்டுகளோடு ஓடிவந்தார்கள். ஒருத்தி சிறுபெண், வெளிறிய பாவாடை, சட்டை. எண்ணெய் அறியாத சிக்குப் பிடித்த தலைமுடி. அவன் பின்னால் இன்னொருத்தி ஓடி வந்தாள். அவள் சற்றே பெரிய பெண். ஆனால் அதே ஏழ்மைக் கோலம்!

வேகமாக முந்தி வந்த சிறியவள் பனங்கிழங்குக் கட்டை முதலில் வண்டியில் நீட்டினாள். " என்ன விலை? என்று கேட்டேன். "கட்டு அஞ்சு ரூபாய்' என்றாள். அதற்குள் இன்னொரு பெண்ணும் மூச்சிறைக்க ஓடி வந்து. "ஐயா அதைவிடப் பெரிய கிழங்கு இதை வாங்கிக்கங்க' என்றாள்.

"முதலில் வந்தவளுக்கே முதல் உரிமை' என்னும் ஆ. ராசாவின் கொள்கைப்படி' "முதலில் அவள்தானே வந்தாள், அவளிடமே வாங்கிக் கொள்கிறேன்' என்றேன்.

"அவ வச்சிருக்குற கிழங்கு சூம்பிப் போனது; என் கிழங்கு நல்லா விளைந்த கிழங்கு; கிழங்கைப் பார்த்து வாங்க மாட்டீங்களா?

பிறகுதான் கிழங்குகளின் தரவேறுபாடு தெரிந்தது. "இரண்டு பேரும் ஒரே கிராமமா? என்று கேட்டேன்." அவ எனக்குச் சின்னம்மா மகள்தான்' என்று சொன்னாள். இரண்டு பேருமே தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் என்றும், இரண்டு பேரும் ஐந்து வகுப்பு வரை படித்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

"அவ உனக்குச் சொந்தந்தானே! அவளோட ஏன் போட்டி போடுறாய்?

"வியாபாரமின்னு வந்திட்டா, சொந்தமெல்லாம் பார்க்க முடியுமா? அவ வீட்டு உலை வேற; என் வீட்டு உலை வேற;

"முதலில் வந்தவளுக்கு முதல் உரிமை' என்ற ஆ. ராசாவின் கொள்கையைப் பின்பற்றப்போய், வாங்கிய சவுக்கடி போதும் என்று முடிவுக்கு வந்த நான், "உன்னுடைய கிழங்கு கட்டு என்ன விலை?' என்று கேட்டேன்.

"இருபத்தைஞ்சு ரூபாய்' என்றாள்.

"அவள் ஐந்து ரூபாய்' என்கிறாள். நீ "இருபத்தைந்து ரூபாய்' என்கிறாயே என்றேன்.

""அவ அஞ்சு கிழங்கைக் கட்டி வச்சுக்கினு, அஞ்சு ரூபாய்ங்கறா; எங் கட்டிலே இருபத்தைந்து கிழங்கு இருக்கு; கிழங்கு கூடுதலா இருந்தா, ரூபாயும் கூடுதலா இருக்குமிங்கிறதுகூட உங்களுக்குத் தெரியாதா ஐயா? என்று பெரிய பெண் கேட்டாள்.

இரண்டாவது சவுக்கடி இன்னும் பலமாக விழுந்ததை உணர்ந்தேன்; மிரண்டு போனேன்!

இருபத்தைந்து ரூபாயைக் கொடுத்து அந்தப் பெரிய கட்டை வாங்கிக் கொண்டு, "பேசாமல் ஆ. ராசாவுக்குப் பதிலாக அதே சமூகத்தைச் சேர்ந்த உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொல்ல, என்ன சொல்கிறேன் என்று புரியாவிட்டாலும் "உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொன்னதைக் கேட்டு அந்தப் பெண் வெட்கப்பட, ரயில்வே கதவுகள் திறந்து விட்டபடியால் நான் புறப்பட்டு விட்டேன்.

சிறிய கட்டுக்கும், பெரிய கட்டுக்கும் ஒரே விலை இருக்க முடியாது என்று பனங்கிழங்கு விற்கும் எளிய பெண்ணுக்குத் தெரிந்த உண்மை, மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்குத் தெரியா விட்டால் குற்றமில்லை. தமிழர்களின் தலைவர் என்று இடையிடையே அறிவிப்பு வெளியிட்டுக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாவிட்டால், ஹரியானாவில் உள்ளவன் தமிழர்களின் அறிவு குறித்து ஐயப்பட மாட்டானா?

இந்த அலைக்கற்றைத் தொகுப்பு உரிமம் வழங்கியது குறித்து, மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை தன்னுடைய அதிருப்தியைக் கடுமையான முறையில் வெளியிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங்கிற்கு அடுத்ததாக உள்ள அந்தக் கட்சியின் தலைவர் அமர்சிங், "இந்த அலைக்கற்றைத் தொகுப்பு ஒதுக்கீடு குறிந்த உண்மைகளையோ, ஊழல்களையோ வெளிக் கொணராமல் இருப்பதற்காக, அதற்குத் தொடர்புடைய நிறுவனங்கள் பெருந்தொகை ஒன்றை அவருக்கு இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், அதை வாங்க மறுத்து, எல்லா உண்மைகளையும் தலைமை அமைச்சரிடம் சொல்லிவிட்டதாகவும், அதற்குப் பிறகும் நடவடிக்கை இல்லையே, என்று கண்டித்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த நிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் பூசாரிகளின் நிலை வேறு; தொடைக்கறி பெரிய பூசாரிக்கு என்றால், ஆட்டை வெட்டிய சின்னப் பூசாரிக்கு சந்துக்கறி, தலை, குடல், எலும்பு போன்ற எல்லாம் கிடைக்கும்!

தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலம்தான் நன்மை பெற முடியும் என்னும் அடிப்படையிலேயே தொகுதிகள் தனித்து ஒதுக்கப்பட்டன. அந்த வகையில்தான் ஆ. ராசா அமைச்சரானார். ஆனால் அறுபது ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்பது கொஞ்சமா நஞ்சமா?

தாழ்த்தப்பட்ட மக்களில் தூய்மையே வடிவான கக்கன் போன்ற பெருமக்கள் இன்னும் இருக்கிறார்கள்; என்றும் இருப்பார்கள்! ஆனால் இன்னொரு கக்கனைத் தேர்வு செய்யக் கருணாநிதி ஒன்றும் காமராஜ் இல்லையே!

தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்யப் பதவியும் ஒரு தடை என்றவுடன், அதையும் கூடத் தூக்கி எறிந்து விட்டார் அம்பேத்கர்.

இவற்றையெல்லாம் விட மிகப் பெரிய கொடுமை, ஆ. ராசாவுக்குத் திரண்டு வந்த எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, தாங்கிப் பிடிக்க முடியாத கருணாநிதி, சாதி இசைத் தட்டைப் புரட்டிப் போட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான ஆ. ராசா, அவ்வளவு பெரிய இடத்தை அடைந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவர்மீது பாய்கிறார்கள் என்றார். எதுவும் நடக்காதென்றால், கடைசியாகச் சாதியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதுதான் கருணாநிதியிடம் தொட்டில் தொட்டு இருந்து வரும் பழக்கம்!

ஏதோ தாழ்த்தப்பட்டவர்களிலேயே ஆ. ராசாதான் முதன்முதலாக மந்திரி ஆனவரா? இதற்கு முன்னே இந்த வகுப்பு மந்திரிகளை பாராட்டியவர்களெல்லாம், இப்போது ஏன் பொறுக்க முடியாதவர்களாகி விட்டனர் என்று மாற்றிச் சிந்தித்துப் பார்த்தால் உண்மையும் விளங்கும், தன்னுடைய சாதிச் சிந்தனையில் உள்ள கேடுபாடுகளும் தெரிய வரும் ஆ. ராசா எந்த வகுப்பினாரால் என்ன? குற்றம் செய்தவர்கள் குற்ற வகுப்பினர்; அவ்வளவுதானே!

பார்ப்பனர்கள் குற்ற நடத்தையில் ஈடுபட்டால், குறைவான தண்டனைதான் கொடுக்க வேண்டும் என்று மனுநீதி சொன்னது!

கடந்த காலங்களில் அதற்கெதிராக ஒரு கொதிப்பு ஏற்பட்டது. " ஒரு குலத்திற்கு ஒரு நீதியா?' என்ற கேள்வி எழுந்தது!

தவறு செய்கின்றவன் தன் கட்சியினனால், அவனைக் காப்பாற்ற அவனுடைய முழுச் சாதியையும் இழுத்துக் கொள்வார் கருணாநிதி.

தமிழ்நாட்டில் பதவியில் இருப்பவனுக்கு எவனுக்குச் சாதியில்லை? எந்தச் சாதிக்குச் சங்கமில்லை?

எவன் தப்புச் செய்தாலும், அவனைத் தண்டிப்பது ஒட்டு மொத்த சாதியைத் தண்டிப்பதாகும் என்பது போல் கருணாநிதி பம்மாத்துச் செய்வது அவருடைய அழுகிய சிந்தனையின் விளைவே!

பழைய மனுநீதியை மனு எழுதினார்; புதிய மனுநீதியைக் கருணாநிதி எழுதிக் கொண்டிருக்கிறார்!


( நன்றி: தினமணி )

இந்த தினமணி கட்டுரை முரசொலி கண்ணில் படவில்லை என்று நினைக்கிறேன். கேள்வி பதிலுக்கே சின்னகுத்தூசி என்றால், கட்டுரைக்கு பெரிய கோணூசி எழுதியிருப்பார்

Read more...

தீபாவளியன்று ரூ.100 கோடி சரக்கு விற்பனை: 'டாஸ்மாக்' சாதனை

>> Tuesday, November 4, 2008

தமிழக டாஸ்மாக் கடைகளில் தீபாவளியன்று சரக்கு விற்பனை இரு மடங்கு
அதிகரித்தது. தீபாவளி தினத்தன்று மட்டும் "டாஸ்மாக்'கில் மது
விற்பனை 100 கோடி ரூபாய்க்கு எகிறியுள்ளது. முந்தைய நாளான
ஞாயிற்றுக்கிழமையும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை எட்டியதால்,
மது விற்பனை வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 6,700 டாஸ்மாக் கடைகளில் அயல்நாட்டு
மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் "சரக்கு'
விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் விற்பனை ஆண்டுக்காண்டு
அதிகரித்து வருகிறது.இதன் மூலம், அரசுக்கு கிடைக்கும் வருமானம்
10 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.



அரசு தீவிர முயற்சி: சாதாரண நாட்களை விட பொங்கல், புத்தாண்டு,
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் விற்பனை இரு மடங்கு
அதிகரித்து வந்துள்ளது. விழாக்களில் புத்தாடை, பலகாரம்
போன்றவையோடு மதுபான விருந்தையும் சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு
நிலைமை மாறியிருப்பதே இதற்கு காரணம்."டாஸ்மாக்' மூலம் கிடைக்கும்
கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தைக் கொண்டே அரசின் பல்வேறு
நலத்திட்ட உதவிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்
காரணமாக "டாஸ்மாக்' விற்பனையை அதிகரிக்க, அரசு தீவிர முயற்சிகளை
எடுத்து வருகிறது. மாவட்ட வாரியாக சரக்கு விற்பனைக்கு இலக்கு
நிர்ணயித்து, மாதந்தோறும் விற்பனையை பெருக்கி வருகிறது.கடந்த
ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, சாதனை அளவாக, ஒரே நாளில் 60 கோடி
ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்தது.



"டாஸ்மாக்' நிர்வாகம் முழுமூச்சில் : சாதாரண நாட்களில் விற்பனை
செய்யப்படும் மது வகைகளை விட, இரு மடங்கு மதுபான வகைகளும்,
மூன்று மடங்கு பீர் வகைகளும் விற்பனையாகின. சென்னையில் மட்டும்
நான்கு கோடி ரூபாய்க்கு விற்பனையானது.இந்த ஆண்டு தீபாவளியை
ஒட்டி, குடிமகன்களுக்கு தட்டுப்பாடின்றி சரக்கு கிடைக்க
"டாஸ்மாக்' நிர்வாகம் முழுமூச்சில் இறங்கியது. மாநிலம் முழுவதும்
உள்ள அனைத்து கடைகளிலும் கூடுதலாக சரக்குகள் டெலிவரி
செய்யப்பட்டன. தீபாவளிக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையிலும்
டாஸ்மாக் கிடங்குகள் திறந்து வைக்கப்பட்டு, சரக்கு டெலிவரி
செய்யப்பட்டது.



ரம், பிராந்தி, விஸ்கி, வோட்கா, ஒயின் : தீபாவளியன்றும் அனைத்து
அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் முழுவீச்சில் பணியில்
ஈடுபட்டனர். தீபாவளிக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (26ம்
தேதி) முதலே டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம்
அலைமோதியது. விடுமுறை நாளையொட்டி தீபாவளி வந்ததால், இரு
நாட்களிலும் விற்பனை களை கட்டியது.சாதாரண நாட்களில் ரம்,
பிராந்தி, விஸ்கி, வோட்கா, ஒயின் உள்ளிட்ட அயல்நாட்டு மது
வகைகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெட்டிகள் முதல் ஒரு லட்சத்து 30
ஆயிரம் பெட்டிகள் வரை நாள் ஒன்றுக்கு விற்பனையாகி வந்தது.
தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (26ம்
தேதி) ஆகிய இரு நாட்களிலுமே இந்த விற்பனை இரு மடங்கானது



இதன்படி, இரு நாட்களிலும் சேர்த்து நான்கு லட்சம் பெட்டிகள்
அயல்நாட்டு மது விற்பனையாகி, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக
டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சராசரியாக நாள்
ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை டாஸ்மாக்
மூலம் விற்பனை நடந்து வருகிறது. இது, தீபாவளியன்றும், முந்தைய
தினமான ஞாயிற்றுக்கிழமையும் தலா 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை
படைத்துள்ளது.சென்னையில் மட்டும் ஏழு கோடி ரூபாய்க்கு மேல்
டாஸ்மாக் விற்பனை நடந்துள்ளது. சேலத்தில் இரண்டு நாட்களிலும்
எட்டு கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.சாதாரண நாட்களில்
மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனை நடந்து
வந்தது. இது தீபாவளியன்று மூன்று மடங்கு அதிகரித்து ஒரு லட்சத்து
90 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளது.



சரக்குகள் விலை அதிகரிப்பு: கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி
மதுபானங்கள் விலை ஏற்றப்பட்டது. அப்போது குவாட்டருக்கு நான்கு
ரூபாய் என்ற அடிப்படையில் அதிகரிக்கப்பட்டது. விலையேற்றம்
செய்யப்பட்டு 10 மாதங்கள் கூட ஆகாத நிலையில், மீண்டும் மறைமுகமாக
விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதால் குடிமகன்கள்
திர்ச்சியடைந்துள்ளனர்.வழக்கமாக விற்பனையாகும் சரக்குகளின்
பெயரில் கூடுதலாக "டீலக்ஸ்' என்ற லேபிள் சேர்க்கப்பட்டு, விலை
ஏற்றப்பட்டுள்ளது. பழைய பெயரில் உள்ள சரக்குகள் "சப்ளை'
நிறுத்தப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்ட மது வகைகள் மட்டுமே
"டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.



குடிமகன்கள் அதிருப்தி : உதாரணமாக, "சிவாஸ் டிஸ்டல்லரீஸ்'
தயாரிப்பு மதுவகையான மானிட்டர் பிராந்தி ஒரு குவாட்டர் விலை 57
ரூபாயாக இருந்தது. தற்போது "டீலக்ஸ் மானிட்டர்' என பெயர் மாற்றம்
செய்யப்பட்டு, 59 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே போல்,
115 ரூபாய்க்கு விற்று வந்த மானிட்டர் "ஆப்' தற்போது டீலக்ஸ்
என்ற பெயரில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
"மானிட்டர் விஸ்கி' ரகமும் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற
கம்பெனிகளும் பழைய மது ரகங்களின் சப்ளையை படிப்படியாக நிறுத்தி
வருகின்றன.இவ்வாறு பழைய மது ரகங்களை நிறுத்திவிட்டு, பழைய
பெயருடன் "டீலக்ஸ்' என்று சேர்த்து, விலையை அதிகரித்து விற்கும்
தந்திரத்தை செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு,
குவாட்டருக்கு இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை திடீர் என
விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.



மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி, மது வகை விலையை
அதிகரிக்க வேண்டும் என மதுபான உற்பத்தியாளர்கள் கோரிக்கை
விடுத்ததாகவும், அரசு அனுமதிக்காததால் இந்தப் பெயர் மாற்றத்
தந்திரம் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது."டாஸ்மாக்'
நிர்வாகம் இப்படி நூதனமாக விலையை உயர்த்தியுள்ளதால் குடிமகன்கள்
அதிருப்தி அடைந்துள்ளனர்.

Read more...

மத முலாம் பூசாதீர்கள்!_தினமணி

மன்மோகன் சிங் அரசு பதவி ஏற்றதன் பிறகு எப்போதாவது எங்கோ ஓரிடத்தில் நடந்து வந்த குண்டுவெடிப்புச் சம்பவம், அவ்வப்போது அங்கிங்கெனாதபடி எல்லா இடத்திலும் உயிர்ப்பலிகளை ஏற்படுத்தத் தொடங்கி இருக்கிறது என்பதை ஊரறியும்.

கடந்த வாரத்தில் அசாம் மாநிலத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் பல உயிர்களைப் பலி வாங்கி இருப்பதுடன் நூற்றுக்கணக்கானவர்களைப் படுகாயப்படுத்தி இருக்கின்றன. இதுவரை இதுபோன்ற குண்டுவெடிப்புகள் மாநிலத் தலைநகரங்களில்தான் நடந்தன. இப்போது, அசாம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே வெடித்து புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. எந்த அளவுக்கு நமது பாதுகாப்புத் துறை எச்சரிக்கையாக இருக்கிறது என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு!

இந்தப் பயங்கரவாதச் செயலுக்குக் காரணம் ஹர்கத் - உல் - ஜிஹாத் - இ - இஸ்லாமி என்கிற தீவிரவாத அமைப்புதான் என்று கூறப்படுகிறது. இந்தியாவிலும், வங்க தேசத்திலும் இதுபோன்ற பல பயங்கரவாதச் செயல்களில் இந்த அமைப்பு கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருவதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கும் இந்த அமைப்புதான் காரணம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.

இந்த நேரத்தில் நாம் சில கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்கக்கூடாது. இந்திய அரசு அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டது முதல், இதுபோன்ற பயங்கரவாதச் செயல்கள் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியது என்பதுதான் அந்த உண்மை. அமெரிக்காவின் மீதான தங்களது கோபத்தைக் காட்ட முடியாத பயங்கரவாத அமைப்புகள், அந்த நாட்டிடம் நட்புறவு நாடும் இந்தியாவின் மீது காட்டித் தணித்துக் கொள்கின்றனவோ என்று சந்தேகிக்க இடம் இருக்கிறது.

அது போகட்டும். நாங்கள் பயங்கரவாதத்தைச் சகித்துக்கொள்ள மாட்டோம், தக்க நடவடிக்கை எடுப்போம் என்று வாய்ப்பந்தலிடும் மத்திய அரசு, இதுவரை பாதுகாப்பை அதிகரிக்கவும், உளவுத் துறையை முடுக்கிவிடவும், கடுமையான சட்டங்களை இயற்றி காவல்துறையைப் பலப்படுத்தவும் என்ன செய்திருக்கிறது? பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களையும், ஈடுபட்டவர்களையும் தண்டித்தால் தனது வாக்கு வங்கிக்குச் சேதம் ஏற்பட்டு விடுமோ என்று பயப்படும் அரசு இது என்பதுதானே நிஜம்?

பயங்கரவாதச் செயல்களை எந்தவொரு மதமும் அங்கீகரிப்பதில்லை. இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதால் ஒரு மதத்தினரின் மனம் புண்படும் என்று இந்த அரசு நினைக்குமேயானால், அது அந்த மதத்தினரையே கேவலப்படுத்துகிறது என்றுதான் அர்த்தம். பயங்கரவாதிகளுக்கு ஜாதி மற்றும் மத முலாம் பூச முற்படுவது இந்த அரசின் மிகப்பெரிய அரசியல் மோசடி!

அசாமில் நூற்றுக்கணக்கில் தொடங்கி அது ஆயிரம், லட்சம் என்று நாளும் பொழுதும் அகதிகளின் ஊடுருவல் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. இதுவரை சுமார் 5 கோடி பேர் இந்தியாவுக்குள் நுழைந்திருப்பார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. நமது மேற்கு எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலைக் கண்காணித்ததுபோல நாம் கிழக்கு எல்லையில் கடந்த 30 ஆண்டுகளாக வங்கதேச அகதிகளைத் தடுக்காமல் இருக்கிறோமே, ஏன்?

அசாமில் இந்த அகதிகளை இந்தியப் பிரஜைகளாக்குகிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறார் முதல்வர் தருண் கோகோய். அகதிகளுக்குக் குடியுரிமை அளிக்கும் அதிகாரத்தை முதல்வர்களுக்கு அளித்தது யார்? சுமார் 35 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முடிவை நிர்ணயிக்கும் வங்கதேச அகதிகள் அசாமில் இருப்பதால், அந்த மாநிலத்தின் தலையெழுத்தே அன்னிய நாட்டு அகதிகள் கையில் இருப்பதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படுவதில்லை என்பதுதானே உண்மை?

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள், அருகில் இருக்கும் காவல் நிலையங்களில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுத்தால், வீட்டு உடைமையாளிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்தியா முழுவதும், எந்தவொரு மாநிலமும் விதிவிலக்கில்லாமல், இப்போது வங்கதேச அகதிகள் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்கள் மூலம், பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.யும் இந்தியாவின் ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் சீர்குலைக்க எண்ணும் அன்னிய சக்திகளும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றன. வங்கதேச அகதிகளை உடனடியாகக் கணக்கெடுத்து, களையெடுக்கத் தவறினால், அதன் விளைவுகள் மாவட்டம்தோறும் வெடிகுண்டுகளாக வெடித்துச் சிதறும் என்று மன்மோகன் சிங் அரசுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக எத்தனையோ எச்சரிக்கைகள் செய்யப்பட்டும், அரசு அசைந்து கொடுக்கவில்லையே, ஏன்?

பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் சக்தி இல்லாவிட்டால்கூடத் தவறில்லை. இந்த அரசுக்கு அதற்கான மனத்துணிவுகூட இல்லை. இதையும் அமெரிக்காவும், உலக வங்கியும் பார்த்துக் கொள்ள ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தலாம் என்று பிரதமர் நினைக்கிறாரோ என்னவோ?

Read more...

ஜெயலலிதா என்றொரு பாப்பாத்தி - முரசொலி

விகடன் கட்டுரை
தி.மு.க-வின் மெகா 10 தவறுகள்! - ப.திருமாவேலன்

கடந்த 40 ஆண்டு கால தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைப்புச் செய்தி! அவரை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோதான் அரசியல் நடந்தவேண்டிய நிர்ப்பந்தம் அனைத்துக் கட்சிகளுக்கும். 'வாழ்த்தினாலும் வசை பாடினாலும் அவர்கள் கருணாநிதி என்ற பெயரைச் சொல்லித்தானே ஆக வேண்டும்' என்று அவரே சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வார். உண்மையும் அதுதான்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறார் கருணாநிதி. அதோடு சட்ட மன்றத்துக்கும் தேர்தல் வருமாமே என்ற கேள்வியையும் அவர் உதாசீனப்படுத்தவில்லை. 'தி.மு.க. செயற்குழு கூடித் தீர்மானிக்கும்' என்று மையமாகப் பதிலளித்தார். 'அதுக்கென்ன அவசரம்?' என்று எதிர்க் கேள்வி போடவில்லை. எனவே, தனது தலைவிதியைத் தீர்மானிக்கப் போகும் இரண்டு தேர்தலுக்காகவும் காத்திருக்கிறார் கருணாநிதி.

கடந்த இரண்டு தேர்தலையும் யாரைத் தனது பங்காளிகளாக வைத்துக்கொண்டு கருணாநிதி எதிர்கொண்டாரோ அவர்கள் இப்போது இல்லை. ஜெயலலிதாவைப் பலப்படுத்த அவர்கள் பயன்படலாம். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்று யாரும் இல்லை என்ற நிலைமை மாறி, இப்போது விஜயகாந்த் அப்படியரு அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், தி.மு.கவின் நிலைப்பாடுகள், பலவீனங்கள் கட்சியின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் பூதாகாரமான விஷயங்களாக ஆகிக்கொண்டு இருக்கின்றன.

கருணாநிதியின் அபாரமான உழைப்பும் பிரசாரமும் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கத்தில் சறுக்கல்களும் அதிகமாகிக்கொண்டு வருகின்றன.

அவை இவை...

1. ஸ்டாலினா... அழகிரியா?

தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டன் முதல் தினமும் அடிக்கடி தலைமைக் கழகம்வந்துபோகும் அமைச்சர்கள் வரை அத்தனை பேருக்கும் உள்ள சந்தேகம், 'யார் தங்களுக்குத் தலைமை தாங்கப் போகும் அடுத்த தலைவர்' என்பதுதான். ஸ்டாலின் ஆட்களும் அழகிரி ஆதரவாளர்களும் தங்கள் அணியைப் பலப்படுத்தி வருவது ஒரு பக்கம் இருக்கட்டும், கருணாநிதியும் ஒருவகையில் இதற்கொரு காரணியாக இருப்பதுதான் தொண்டனின் மெகா குழப்பத்துக்கு முதல் காரணம்.

'சாதாரண தொண்டனாக இருந்து இளைஞரணிச் செயலாளராக மாறி, இன்று அமைச்சராகி உங்கள் ஆசீர்வாதத்தால் இன்னும் என்னென்னவோ ஆகப்போகின்ற...'' என்று ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டு உச்சி முகர்வார் தலைவர். அப்படிப்பட்ட ஸ்டாலின் மதுரைக்குப் போனால், அங்கிருக்கும் அழகிரி ஆதரவுப் பிரமுகர்கள் அந்தப் பக்கமாக எட்டியே பார்க்காததைத் ஒரு கட்சித் தலைவராகத் தட்டிக் கேட்க மாட்டார். தூத்துக்குடியில் ஸ்டாலின் கலந்துகொண்ட விழாவில் அவரைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, அப்படியே மதுரை கிளம்பி வந்து அழகிரிக்குத் தலைவர் ஆராதனை செய்வதைப் பார்த்து திக்குத் தெரியாமல் தவிக்கிறான் தொண்டன். அமைச்சர்களும் யார் பேச்சுக்கு கருணாநிதியிடம் மதிப்பு என்று தெரியாமல் தவிக்கிறார்கள். மதுரையில் அழகிரியின் ஆதிக்கத்தை எதிர்த்து ஸ்டாலின் பக்கமாகக் கம்பி நீட்டிய பிரமுகர் - திருமங்கலம் முத்துராமலிங்கம். ஸ்டாலினும் அழகிரியும் ஒரே ஒரு மாதம் ஒன்று சேர்ந்ததால், என்ன செய்வதென்று புரியாமல் வேறு கட்சிப் பக்கமே தாவிவிட்டார்! அப்படியரு தடுமாற்றத்-துக்கு மொத்த தொண்டனையும் அழைத்துப் போவ-தாக இருக்கிறது கருணாநிதியின் நடவடிக்கைகள்.

தி.மு.க-வுக்கு அடுத்த தலைவராக ஸ்டாலின், அழகிரி யார் வேண்டுமானாலும் வரட்டும். அதற்கான குழப்பம் நிர்வாக மட்டத்தில் எதிரொலித்து பல்வேறு குழப்பங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. அமைச்சர்கள், அதிகாரிகள், போலீஸ் வட்டாரம், மாவட்டச் செயலாளர்கள் வரை கருணாநிதி காட்டி வரும் 'ரஜினி ஸ்டைல் குழப்பம்' பல்வேறு விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் திண்டாடவைக்கிறது.

2. தயாநிதி மாறன் விவகாரம்

தி.மு.க-வில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டது தயாநிதி மாறன் குடும்பப் பத்திரிகை. இது கட்சிக்குள் 'குட்டிக் கலாட்டா' ஏற்படுத்த... தயாநிதி தனது மந்திரி பதவியைத் துறக்க வேண்டி வந்தது. இப்படியரு கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் கோபப்பட்ட அழகிரியின் ஆதரவாளர்கள், அந்த பத்திரிகை அலுவலகத்தை அடித்து கொளுத்தியதில் அப்பாவி இளைஞர்கள் மூன்று பேர் அநியாயமாக இறந்துபோனார்கள். தி.மு.க. அரசாங்கத்தின் சட்டம்--ஒழுங்கு பராமரிப்பு மதுரையில் கேள்விக்குறியானது. விவகாரம் அரசியலாவது புரிந்து வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டார் கருணாநிதி. அந்த சம்பவத்துக்குப் பிறகு கருணாநிதி பெயரால் போட்டி தொலைகாட்சி துவங்கப்பட்டதும், அதற்கான சீரியல் தயாரிப்பது, சினிமா ஆட்களைத் தங்கள் பக்கமாக இழுப்பது, புதிய சினிமாக்களை வாங்குவது, சுமங்கலி கேபிளுக்கு மாற்றாக அரசு கேபிள் இணைப்புத் திட்டத்தைத் தொடங்குவது, கேபிள் டி.வி. ஆபரேட்டர்களைத் தங்கள் பக்கமாக இழுப்பது... போன்ற காரியங்களில் 'கலைஞர்' தொலைக்காட்சியும் அரசுத் தரப்பும் மாறி மாறி நடத்திய ஆக்ஷன்கள் காரணமாக, முதல்வரின் பெரும்பகுதி கவனம் அதிலேயே செலவானதாக தி.மு.க-வுக்குள்ளேயே பேச்சு கிளம்பியது.

3. 'சீனியர் சபா'?!

கருணாநிதியின் அமைச்சரவையில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், சுப.தங்கவேலன் ஆகியோர் கட்சிக்காக உழைத்தவர்கள். மூத்த உறுப்பினர்கள். தங்கள் வாழ்க்கையைப் பல்லாண்டு காலம் கட்சிக்காகச் செலவு செய்தவர்கள். ஆனால், அவர்களால் அரசாங்கப் பணிகளை வேகமாகவும் விவேகமாகவும், வேண்டிய பொறுமை காட்டியும் செய்ய இயலவில்லை என்ற பேச்சு அதிகாரிகள் மத்தியில் இருப்பது முதல்வரின் காதை எந்தளவு எட்டியதோ தெரியவில்லை. மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைச் சரியாகக் கவனித்து உள்வாங்கிக்கொள்ள வீராசாமியால் முடியவில்லை. அதேபோன்றுதான் வீரபாண்டி ஆறுமுகமும் அடிக்கடி பொறுமை இழக்க ஆரம்பித்துவிட்டார். துரைமுருகனுக்கு அறுவை சிகிச்சை செய்ததால் சில மாத காலம் தனது இலாகாவை பொன்முடி வசம் ஒப்படைத்தார். மீண்டும் வந்து துறையை துரைமுருகன் பற்றிக்கொண்டாலும், ஜோக் அடித்து முதல்வரைச் சந்தோஷப்படுத்துகிற அளவுக்கு துறையின் அதிகாரிகளை வேலை வாங்க அவரால் முடியவில்லை. கோ.சி.மணியும் அவ்வாறே சிரமத்தின் உச்சத்தில்! ஆனால், இப்படிப்பட்டவர்களுக்கு அமைச்சர் பதவி தராமல் தவிர்க்க கருணாநிதியால் இயலவில்லை. ஏன், இலாகா மாற்றம் செய்யக்கூட கருணாநிதியால் இயலவில்லை.

முதலமைச்சரின் செயலாளர்களாக இருக்கும் ராஜரத்தினம், தேவராஜ், ராஜமாணிக்கம் மூவரும் ஓய்வு பெற்ற அதிகாரிகள். சண்முகநாதன், மருதநாயகம் ஆகியோரும்கூட ஓய்வு பெற்றவர்கள்தான். 'முதலமைச்சர் அலுவலகம் சீனியர் சபா மாதிரி இருக்கிறது' என்று காமென்ட் கிளம்ப... பிரபாகரன் ஐ.ஏ.எஸ்., இப்போது அவசர அவசரமாக நியமிக்கப்பட்டார். முகதாட்சண்யம், பழக்கம், ஆரம்ப காலத்தில் இருந்து உடன் இருந்தவர்கள் என்று பலருக்குப் பதவிகள் கொடுக்கும்போது அதனால் வரும் சிரமங்கள் தி.மு.க. ஆட்சியின் நிர்வாகக் குழப்பங்களாக உருவெடுக்கின்றன. தெரிந்தும் இதை முதல்வரால் தடுக்க முடியவில்லை என்றே கோட்டையில் கிசுகிசுக்கிறார்கள்.

4. காற்றில் பறந்த கொள்கைகள்

'நீங்கள் மாவட்டச் செயலாளராக யாரை வேண்டுமானாலும் நியமித்துக்கொள்ளுங்கள். அவர் பகுத்தறிவாள-ராக இருக்க வேண்டும்' என்று கட்சிப் பொதுக் குழுவில் பரமத்தி சண்முகம் சொன்னார். 'அதெல்லாம் முடியாதுய்யா'--படக்கென்று மறுத்தாராம் கருணாநிதி. கட்சியின் பொருளாதாரக் கொள்கை 'விஞ்ஞான சோஷலிசம்' என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. இன்று உலகமயமாக்கல் கொள்கையை அச்சு மாறாமல் பின்பற்றுகிறது தி.மு.க. மாநில சுயாட்சி என்ற முழக்கத்தைக் மத்திய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்கக்கூட தி.மு.க. முயற்சிக்கவில்லை. நெடுஞ்சாலை மைல் கல்லில் இந்தி எழுத்தை எழுதிவைத்தது டி.ஆர். பாலுவின் துறை.

சூரியநாராயண சாஸ்திரி என்ற சம்ஸ்கிருதப் பெயரை பரிதிமாற்கலைஞர் என்று அந்தத் தமிழறிஞர் மாற்றிக்கொண்டார். அவருக்கு வெளியிட்ட அஞ்சல் தலையில் சூரியநாராயண சாஸ்திரி என்றே அச்சடித்தவர் மத்திய அமைச்சர் ஆ.ராசா. கடந்த தி.மு.க. ஆட்சியின் தமிழ் வளர்ச்சிக்கு என தனி அமைச்சர் நியமிக்கப்பட்டார். இன்று அதுவும் இல்லை. இப்படி பகுத்தறிவு, பொருளாதாரம், அரசியல், மொழி என அனைத்து முனைகளிலும் வைத்திருந்த கொள்கைகள் காலப்போக்கில் காற்றில் பறந்ததால்... அந்தக் கொள்கை-களுக்காகவே தி.மு.க. மீது பிரியம் காட்டியவர்கள் பின்னுக்குப் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

5.வினையே பங்கு தராததால்தான்!

2004 நாடாளுமன்றத் தேர்தல், அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் வலுவான கூட்டணி தி.மு.க. தலைமையில் அமைந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் 40 தொகுதிகளையும் கைப்பற்றினார்கள். சட்டமன்றத் தேர்தலில் வைகோவைத் தன் பக்கம் அழைத்து நிறுத்தினார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் தங்கள் ஆதரவை வெளியில் இருந்து கொடுத்தன. அவர்களுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்திருந்தால் இந்த இரண்டாண்டுகளாக அவர்கள் கொடுத்த குடைச்சலும் இதனால் ஏற்பட்ட குழப்பமும் நடந்திருக்காது.

அரசாங்கத்தின் மீது அ.தி.மு.க. வைத்த குற்றச்சாட்டுகளைவிட கூட்ட-ணிக் கட்சிகளாக இருந்த பா.ம.க-வும் மார்க்சிஸ்ட்டும் வைத்த விமர்-சனங்கள்-தான் அதிகம். அவர்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்திருந்தால் சில தி.மு.க-வினர் மந்திரி ஆக முடிந்திருக்காது. ஆனால், கூட்டணியாவது கெட்டியாகியிருக்கும். சில தனி மனிதர்களைத் திருப்திப் படுத்துவதற்காக சில கட்சிகளை இழந்து, இன்று நாலு பக்கமும் இடி வாங்கும் நிலை வந்திருக்காது. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் கூட்டணி ஆட்சிக்கும் தயார் என்றுதான் தேர்தலுக்கு முன் கருணாநிதி பேட்டி தந்தார். ஆனால், வெற்றி பெற்றதும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. பகிர்ந்து கொடுத்திருந்தால் இன்று தி.மு.க. அரசுதான் அத்தனைக் குழப்பத்துக்கும் காரணம் என்று கூட இருந்தவர்களே மக்களோடு சேர்ந்து 'சிங்கிள் குற்றவாளியாக' நிறுத்தியிருக்க மாட்டார்கள்!

6. கூட்டணிக் கட்சிகளைக் காரணம் இல்லாமல் பகைத்தது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து கூட்டணியை விட்டு கம்யூனிஸ்ட்டுகள் விலகியதில் சிக்கல் ஆரம்பமானது. அப்போது காங்கிரஸை கம்யூனிஸ்ட்டுகள் விமர்சிக்க ஆரம்பித்தார்கள். இதெல்லாம் டெல்லி விவகாரம் என்று அமைதியாக இருக்காமல், விமர்சனக் களத்தில் குதித்தார் ஆற்காடு வீராசாமி. 'அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் அடுத்த தேர்தலில் காணாமல் போவார்கள்' என்று அவர் ஆரம்பித்ததும்தான் கம்யூனிஸ்ட்டுகள் பதில் தர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதை கட்டுப்படுத்தாமல் கவிதை அஸ்திரம் தொடுத்து, மார்க்சிஸ்ட் எம்.பி-யை வம்புக்கு இழுத்தார் கருணாநிதி. கம்யூனிஸ்ட்டுகள் மொத்தமாகக் கம்பி நீட்ட, இந்த இரண்டு விஷயங்கள் காரணமானது.

அதற்கு முன்னால் கழட்டிக்கொண்டவர் டாக்டர் ராமதாஸ். ராமதாஸ் தடங்கல் போட்ட திட்டங்களை-எல்லாம் தள்ளி வைத்து மக்கள் நலப் பணிகளில் பின்னுக்குப் போகவும் தயாராக இருந்த இதே தி.மு.க. அரசு, தனிநபரான காடுவெட்டி குரு விவகாரத்தில் சீறிக்கொண்டு பாய்ந்து கைது செய்தது! குருவின் குதர்க்க பேச்சையட்டிய நிகழ்வுகளால் கூட்டணி துண்டானது. இந்த உடைப்பு மக்களை எந்த வகையிலும் தி.மு.க. மீது அனுதாபத்தோடு பார்க்க வைக்கவில்லை. கடைசியாக இருந்தது காங்கிரஸ்தான். அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே மாநில மந்திரி பதவி மீது குறிவைத்து வந்தார்கள். கருணாநிதி அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தங்கபாலு குரல் கொடுத்ததைத் தொடர்ந்து... திருச்சியில் திடீரென்று 'சோனியா சொன்னால் பொதுக்குழுவைக் கூட்டி விவாதிக்கலாம்' என்று கருணாநிதி இறங்கி வருவதைப் போல காட்டிக்கொண்டதும் காங்கிரஸார் துள்ளிக் குதித்தனர். அன்றைய தினமே காட்சிகள் மாறி... டெல்லிக்கு அழைத்து தங்கபாலு கண்டிக்கப்பட்டார். சும்மா இருந்த காங்கிரஸாருக்கு இது சுரீரென்றது. காரணம் தேடிக்கொண்டே இருந்தார்கள். இலங்கைப் பிரச்னை வெடிக்கவும், 'கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ஜெயலலிதா அணுகுமுறைதான் சூப்பர்' என்று பட்டவர்த்தனமாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ்காரர்கள்.

"நெடுமாறனிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும். 'சோ' ராமசாமியும் திட்டக் கூடாது... இப்படியரு எல்லார்க்கும் இனியராக இருக்க நினைக்கிற எங்கள் தலைவரின் குணம்தான் இன்று எம்.பி-க்கள் ராஜினாமா என்று கெடு வைத்து சபதம் போடுகிற அளவுக்கு அவரைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. வைகோ தொடங்கி எத்தனை பேரை எங்கள் அரசு கைது செய்தாலும் குழப்பம் பண்ணுகிற தமிழக காங்கிரஸார் திருப்தி அடையவே மாட்டார்கள். அவர்களின் நோக்கம் 'மந்திரி சபையில் இடம் கொடுக்காமல், டெல்லியை வைத்து தண்ணி காட்டிய கருணாநிதிதானே, தவிர பிரபாகரன் அல்ல!" என்பது தி.மு.க-விலேயே நிலவும் வருத்தமான கருத்து.

7. பல்டிகள் பலவிதம்

யோசித்து முடிவுகள் எடுப்பார். எடுத்த முடிவில் கடைசி வரை உறுதி-யாகவும் இருப்பார் என்று கருணா-நிதிக்குப் பெயர் உண்டு. ஆனால்,சமீப காலமாக அவர் அடித்து வரும் பல்டி களுக்கு அளவில்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது.

600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்-படுத்துபவர்களுக்குக் கூடுதல் மின் கட்டணம் என்ற அவரது அறிவிப்பை யாரும் ஏற்கவில்லை. ஆற்காடு வீராசாமியைத் தவிர. எதிர்க்கட்சிகள் கண்டித்ததும் வாபஸ் வாங்கினார். இது கடைசியாக வந்த வாபஸ் அறிவிப்பு! அதற்கு முந்தையது பெரிய பட்டியல்!

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் பணி மூப்பு அடிப்படையில் இருக்கும் என்று முந்தைய தி.மு.க. ஆட்சியில் போடப்பட அறிவிப்பை, இந்த அரசு வந்ததும் மாற்றினார்கள். இதை எதிர்த்து வழக்குகள் பாய்ந்தது. எதிர்த்து வாதாடினார்கள். வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை போனது. கடைசியில் அப்படியே ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டார்கள். ஹெல்மெட் கட்டாயம் சட்டமும் அங்ஙனமே! 'போட்டால் நல்லது... போலீஸ் பிடிக்க வேண்டாம்' என்று பிற்பாடு குழப்பக் களஞ்சியமாக மாறியது. ஒகேனக்கல் திட்டத் துவக்க விழாவை ஊரறிய நடத்தி வெளிச்சமிட்டு, கர்நாடகத்துக் கண்களை உறுத்தி அது விவகாரமாக மாறிய பின்... டெல்லியிலிருந்து வந்த மறைமுக பிரஷரால் 'கர்நாடகாவில் புது அரசு அமைந்த பிறகு, அது பற்றி பேசலாம்' என்று பின் வாங்கினார் கருணாநிதி. பால் விலை உயர்வும்கூட மூன்று நாட்கள் திருத்தித் திருத்தி அறிவிக்கப்பட்டன.

தாம்பரம் அருகே சேட்டிலைட் சிட்டி, பொருளாதார மண்டலங்கள், பன்னாட்டு விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வது என்ற அறிவிப்புகள் ராமதாஸின் எதிர்ப்பில் முனை மழுங்கிப் போனது. இது போதாது என்று கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அவர்களே கூட்டமாக வந்து திருப்பிக் கொடுத்துவிட்டுப் போன சம்பவங்களும் நடந்தன.

இப்படி எந்த முடிவுகள் எடுத்தாலும் அதில் தீர்க்கமான முன்யோசனைகள் முதல்வருக்குப் போய்ச் சேராமல், மாற்றுக் கட்சிகளின் விமர்சனங்களைப் புறந்தள்ளக்கூடிய உறுதியும் இல்லாமல், நல்ல விஷயங்களைக்கூட காவு கொடுப்பதை தி.மு.க. அரசு தனது அடையாளமாக்கிவிட்டது!

8. ஜெயலலிதா செய்ததெல்லாம் சரி!

தனியார் ஏலம் எடுத்து நடத்தி வந்த மதுக்கடைகளை டாஸ்மாக் வசம் மாற்றி இதன் மூலம் கிடைக்கும் பணம் அரசுக்குச் சொந்தம் என்று ஜெயலலிதா அறிவித்தார். 'அரசாங்கம் சாராயம் விற்கலாமா' என்று கேட்டார் எதிர்க்கட்சியாக இருந்த கருணாநிதி. இரண்டு ஆண்டுகளாக இந்த அரசும் அதே காரியங்களைத்தான் செய்து வருகிறது. மணல் அள்ளும் காரியங்களையும் அரசு வசம் கொண்டுவந்தது அ.தி.மு.க. இது சிலர் கொள்ளை லாபம் பார்க்கவே பயன்படும் என்றது தி.மு.க! இப்போதும் மணல் அள்ளும் முறை பற்றிய மிகக் கடுமையான விமர்சனங்கள்! அரசு கேபிள் ஆரம்பிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா மசோதா தாக்கல் செய்ததும் கவர்னரைப் பார்த்துவிட்டு வந்து, மசோதா முடிவுக்கு கடும் எதிர்ப்பு காட்டினார் கருணாநிதி. இப்போது ஜெயலலிதா அரசைவிட மிகத் தீவிரம் காட்டினார் அரசு கேபிள் அமைப்பதில் (பிறகு, சொந்த காரணங்களுக்காக அதை தி.மு.க. அரசே மந்தப்படுத்தி வைத்திருப்பது தனிக் கதை!). இப்படி ஜெயலலிதா சொல்லி செயல்படுத்திய முக்கிய திட்டங்களை அப்படியே வழி மொழிந்ததன் மூலம் ஜெ. செய்தது எல்லாம் சரிதானோ என்ற எண்ணம் மக்கள் மனதில் வந்துவிட்டது.

மேலும், ஜெயலலிதா மீதும் அவரது ஆட்சியில் செய்யப்பட்ட முறைகேடுகள் என்றோ பெரிய அளவில் வழக்குகள் இந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்படவில்லை. ஏற்கெனவே போட்ட வழக்குகளிலும் அணுகுமுறை திருப்தியாக இல்லை என்று தி.மு.க-வுக்குள்ளேயே கருத்து இருக்கிறது. "ஏன் இந்த வழவழப்பு?" என்று உடன்பிறப்புகள் கேள்வியில் அதிருப்தி நிறைய தெரிகிறது.

9. கேலிக் கூத்தாகும் கட்சித் தேர்தல்

'ஜனநாயக முறைப்படி கட்சித் தேர்தல் நடத்தும் ஒரே கட்சி' என்று தி.மு.க-வினர் பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். ஆனால், இம்முறை நடந்து வரும் உள்கட்சித் தேர்தலிலோ, போட்டி போட நினைப்பவர்களுக்குத் தாக்கல் செய்ய மனு கொடுக்கவே மறுப்பதாகக் குற்றச்சாட்டு மலைமலையாய் தலைமைக் கழகத்தில் குவிந்துகொண்டு இருக்கிறது. கிளைக் கழகச் செயலாளர் தேர்தலில் போட்டியிடக் கூட மாவட்டச் செயலாளர் மனது வைத்தால்தான் முடியும். கஷ்டப்பட்டு மனு வாங்கிவிட்டால் அதற்குப் பணம் கட்டிய பில் வாங்க முடியாது. இவ்வளவையும் மீறி மாவட்டச் செயலாளரை 10 தடவை பார்த்து தலைமைக்கு 100 தடவை போன் செய்வதற்கு, போட்டியிடாமல் சும்மாவே இருக்கலாம் என்று ஒதுங்கும் தலைகளையும் பார்க்க முடிகிறது. கிளைக் கழகத் தேர்தலில் இந்த நிலைமை என்றால் நகரச் செயலாளர் பதவிக்கு மாவட்டச் செயலாளரை மீறி யாரும் போட்டி போட முடியாது. அப்படியே மீறி நடந்தாலும் வேண்டாதவர் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது என்றால், இருக்கிற மொத்த கோஷ்டியிலும் ஆளுக்கு ஒருவருக்கு சான்ஸ் அடிக்கிற மாதிரி குழு அமைத்து அறிவித்துவிட்டு அமைதியாகிவிடுகிறார்கள். மாவட்டச் செயலாளர் பதவி மொத்தமும் நியமனம்தான். 'தலைவர் சொல்லிட்டார்... தளபதி சொல்லிட்டார்...' என்று நியமனங்கள் மளமளவென்று நடந்து முடிகிறதாம். அனைத்து ஒன்றியங்களையும் நகரங்களையும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த மாவட்டச் செயலாளர்களாக ஒரு காலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி, செஞ்சி ராமச்சந்திரன், திருச்சி செல்வராஜ் ஆகியோர் வலம் வந்தார்கள். அப்படிப்பட்ட அசைக்க முடியாத தலைகள் இன்று இல்லை. தலைமை தயவால் மாவட்டச் செயலாளர் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவர்கள்தான் அதிகம். இவர்கள் தங்களுக்குக் கீழ் செல்வாக்கான நபர்கள் வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கி-றார்கள். மீறி செல்வாக்கான ஆள் வந்து விட்டால் அவரது கிளையை அ, ஆ என்று பாகம் பிரித்து பலவீனமாக்கிவிடுவதாகவும் குமுறல் இருக்கிறது. இவை அனைத்தும் தலைமைக் கழகத்தின் பார்வையிலேயே சத்தம் இல்லாமல் செய்து முடிக்கப்படுகிறது.

அத்தனையும் அருகில் நின்று பார்க்கும் அடிமட்டத் தொண்டனுக்கு, திகைப்பு தாங்கவில்லை. 'நம் கட்சியை நடத்துவது யார்?' என்ற கேள்விக்கு அவனிடம் பதிலே இல்லை!

10. காணவில்லை கட்டுப்பாடு!

'தி.மு.க. ஒன்றும் சங்கர மடமல்ல' என்பார் வாரிசு அரசியல் பற்றிப் பேச்சு வரும்போது. கலந்து பேசாமல் எடுக்கப்படும் தன்னிச்சையான முடிவுகளோ, குடும்பத்தின் தலையீடுகளோ தி.மு.க-வில் சாத்தியமே இல்லை என்ற அர்த்தமும் அதற்கு உண்டு. ஆனால், "இன்று பெரிய குடும்பத்தின் '3ஜி' (மூன்றாம் தலைமுறை) வரை சாலையில் பிரமாண்ட பேனர்களாக வந்து கட்சியில் தங்களுக்கான செல்வாக்கை நிலைநாட்டி வருகிறார்கள்" என்று எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் வைக்கின்றன.

மாறன் சகோதரர்களோடு வெடித்த மோதலின் போக்கை அடுத்தடுத்து எப்படிக் கொண்டுசெல்வது என்பதில் இருகூறாகப் பிரிந்து நின்றனர் கருணாநிதியின் குழந்தைகளான மு.க.அழகிரியும் செல்வியும்! கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அமைச்சரவையில் வைத்திருப்பது தொடர்பாக ஸ்டாலின் - அழகிரிக்குள் இருவித கருத்துக்கள். கனிமொழிக்குப் பிடித்த அண்ணன் ஸ்டாலினா, அழகிரியா என்பதிலும் சிக்கல்கள்! கட்சியிலும் இதே நிலைமைதான். ஆண்டுதோறும் ஒரு முறையாவது பொதுக்குழு கூட்டுவார்கள். ஆட்சிக்கு வந்தது முதல் ஒரு முறைதான் நடந்துள்ளது. கட்சிக்கு முக்கியமே பேச்சாளர்கள்தான். சொற்பொழி-வாளர்கள் கூட்டமே சமீபத்தில் நடக்கவில்லை. இதுபோன்ற விஷயங்களை முன்பு அளவுக்கு முழுநேரமும் கவனிக்க முடியாத அளவுக்கு குடும்ப விவகாரங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் இருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதையெல்-லாம் நன்கு புரிந்து வைத்திருக்கும் மிக முக்கிய அதிகாரிகள் சிலர், அந்தக் குடும்ப பேதங்களையே தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு... 'இங்கு தெரியாமல் அங்கும்... அங்கு தெரியாமல் இங்குமாக' தங்கள் விருப்பப்படி தயக்கமின்றி காரியங்களை நடத்திக்கொள்வதாகவும் வேதனைக் குரல்கள் கேட்கின்றன!

"எங்கள் தலைவர் நினைத்தால், அத்தனை விஷயங்களையும் தன் கட்டை விரலுக்கு அடியில் கொண்டுவந்து கட்டுப்படுத்திவிடுவார். ஆனால், அப்படி அவர் ஏன் நினைக்கவில்லை என்றுதான் புரியவில்லை" என்கிறார்கள் தி.மு.க-வின் உண்மைத் தொண்டர்கள்!

ம்... நடப்பது நடந்துதானே தீரும்!
( நன்றி: விகடன் )



--------------------------------------------------------------------------------

முரசொலி கட்டுரை
துருப்பிடித்த ஜெயலலிதாவின் கட்சிக்கு தங்கமுலாம் பூசும் விகடனின் மெகா முயற்சி!

தி. மு.கழக ஆட்சியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மீண்டும் பாப்பாத்தி அம்மாளை அமர வைக்கவேண்டும் என்று துடியாய்த் துடிக்கின்றன அக்கிரகாரத்துப் பத்திரிகைகள்.

இந்த வாரத்து ஆனந்த விகடனில் ‘தி.மு.க.வின் 10 மெகா தவறுகள்’ என்ற தலைப்பில் - தி.மு.க.வையும் கலைஞரையும் கேலி செய்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. கட்டுரையை எழுதியிருப்பவர் ப.திருமாவேலன். (இவர் பார்ப்பனரல்ல)

பார்ப்பன நிர்வாகம் - ஆசிரியர் குழு இட்ட கட்டளையையேற்று - அல்லது ஆலோசனையை ஏற்று - 10 மெகா தவறுகள் என்று பட்டியலிட்டிருக்கிறார் அவர். முதல் தவறு என்று அவர் கண்டுபிடித்திருப்பது:-

தி.மு.க.வினர் அடி மட்டத் தொண்டன் முதல் தினமும் அடிக்கடி தலைமைக் கழகம் வந்து போகும் அமைச்சர்கள் வரை அத்தனை பேருக்கும் உள்ள சந்தேகம் "யார் தங்களுக்குத் தலைமை தாங்கப் போகும் அடுத்த தலைவர்" என்பதுதான்

- என்கிறார் கட்டுரையாளர்.

தி.மு.கழகம் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட 1949ம் ஆண்டு முதல் இன்று வரையில் உள்கட்சித் தேர்தல்களை - 12 முறை நடத்தி இருக்கிறது. 13வது தேர்தல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

கிளைக்கழகத்திலிருந்து - மாவட்டக் கழகம் - பொதுக்குழு வரையில் அனைத்து மட்டங்களுக்கான தேர்தல்களும் ஜனநாயக முறைப்படி உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் நடைபெற்று வருகிறது.

அண்ணா காலம் வரையில் - அதாவது 1969 வரையில் கட்சியில் பொதுச் செயலாளர் பதவி மட்டுமே இருந்து வந்தது. 1956 வரையில் அண்ணாவே பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பு வகித்தார். 1956ல் அண்ணாவின் ஆதரவோடு நாவலர் இரா.நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ல் கட்சியில் தலைவர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. கலைஞர் தலைவர் ஆனார்; நாவலர் பொதுச் செயலாளராக நீடித்தார்.

1969க்குப் பிறகு இன்று வரையிலும் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் கழகத்தின் தலைவராக கலைஞர் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

நாவலர் - அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக இனமானப் பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டார். இன்று வரையில் - ஒவ்வொரு தேர்தலிலும் தேர்ந் தெடுக்கப்பட்டு பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஆகவே தி.மு.க.வில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியே எழ இடமில்லை.

தேர்தலில் போட்டியிட்டு - பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுபவர்களே - தலைவர் ஆகப் பொறுப்பேற்க முடியும்.

இது தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டனிலிருந்து, அமைச்சர் பெருமக்கள் வரையில் எல்லோருக்கும் தெரியும்.

ஆனந்தவிகடன் போல -

வாசன்

வாசன் மகன் பாலசுப்பிரமணியம்

பாலசுப்பிரமணியத்தின் மகன்

சீனிவாசன் என்று

எழுதத் தெரியுமோ - தெரியாதோ - ஆசிரியராக வந்து விடுவதுபோல - தி.மு.கழகத்தில் தலைவர் ஆகிவிட முடியாது.

இப்போது - ஒன்றியத் தேர்தல்கள் முடிந்து - மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முறையாக இந்தத் தேர்தல்கள் நடந்து முடிந்த பிறகு - பொதுக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மூலம் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இன்னும் ஓரிரு மாதங்கள் காத்திருந்தால் - புதிய பொதுக்குழு கூடி தி.மு.கழகத்தின் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இதுவெல்லாம் விகடனுக்குத் தெரியாதா என்றால், தெரியும்!

உட்கட்சித் தேர்தல்களையே நடத்தாது - தனது இஷ்டம் போல கிளைச் செயலாளர் - மாவட்டச் செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர் வரையில் பந்தாடுவார் ஜெயலலிதா! நேற்று இருந்தவர் இன்றில்லை என்கிற அளவுக்கு - கட்சியின் சகல மட்டங்களுக்கும் தனது விருப்பு வெறுப்புக்கேற்ப - நிர்வாகிகளை நியமனம் என்ற பேரால் திணிப்பார் அல்லது மிதிப்பார். பொதுக்குழு உறுப்பினர்கள் யார் என்று அ.தி.மு.க.வில் யாருக்குமே தெரியாது. ஜெயலலிதா இஷ்டப்பட்டு பொதுக்குழு என்று ஒன்றினைக் கூட்டுவார். அதிலே கலந்து கொள்ள அவர் யார் யாருக்கு அழைப்பு அனுப்புகிறாரோ - அவர்கள் மட்டும்தான் பொதுக்குழு உறுப்பினர்கள்.

பொதுக்குழுவுக்கு வரலாம். எதுபற்றியும் எவரும் பேச முடியாது. ஜெயலலிதா ஏழு நிமிடமோ - பத்து நிமிடமோ பேசுவார். கைதட்டலாம். வயிறு நிறைய பிரியாணி விருந்து சாப்பிடலாம்!

அ.தி.மு.க.வின் அடுத்த தலைவர்

யார் என்று கேட்கக்கூட

யாருக்கும்

தைரியம் கிடையாது.

அவர்களாவது கட்சிக்காரர்கள் - ஜெயலலிதாவைக் கண்டு நடுங்கி - ஒடுங்கிக் கிடப்பது பற்றி ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஆனால் விகடன் போன்ற

வீராதி வீர ஏடுகள்கூட,

ஜெயலலிதாவின் 10 மெகா தவறுகள் என்று விமர்சனமோ; அ.தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? ஜெயலலிதாவா? சசிகலாவா? தினகரனா? - என்று கேள்வியோ எழுதுவதில்லையே; ஏன்?

ஜெயலலிதா

அவரே மார்தட்டிக்

கொண்டதுபோல

பாப்பாத்தி.

விகடன் சீனுவாச அய்யரின் சாதியைச் சேர்ந்தவர். அதனால் - அவர் இடறி விழுந்தாலும் அடடா; என்ன அழகாக விழுந்தார் என்று எழுதுவார்கள்! கோடநாட்டில் போய் மாதக்கணக்கில் ஓய்வு என்ற பேரில் ஒளிந்து கிடந்தாலும், அடடா; எப்பேர்ப்பட்ட ஓய்வு? எப்படிப்பட்ட தூக்கம்? என்ன இனிமையான குறட்டை?

- என்று பார்ப்பன பக்திபரவசத்துடன் - உடலெல்லாம் புல்லரிக்க - புளகாங்கிதத்தோடு போற்றி எழுதுவார்கள்!

2. ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக் குடும்பத்தில் எத்தனை எத்தனையோ சண்டைகள் நடக்கும். வளர்ப்பு மகனையே கஞ்சா வழக்கில் கைது செய்வார்கள்; தினகரனா, மகாதேவனா என்று சிண்டு பிடிச் சண்டை நடக்கும்; சசிகலா வேண்டும்; சசிகலாவின் கணவர் வேண்டாதவர் என்று புழுதி மாயம் செய்யப்படும். சசிகலாவின் கணவருக்கு வேண்டியவர் என்பதாலேயே ஒரு பெண்ணை கஞ்சா வழக்கில் கைது செய்து - அவரிடமிருந்து பல லட்சம் ரூபாய்கள் பறிமுதல் செய்யப்படும்! சசிகலாவா? இளவரசியா? என்று புதிய போர் மூளும். இந்த மன்னார்குடிக் குடும்பத்து விவகாரங்களால் - ஜெயலலிதாவின் பெரும்பகுதி கவனம் அதிலேயே செலவாகிறது - என்று குற்றம் சொல்லாது விகடன் - காரணம் என்ன? ஜெயலலிதா பாப்பாத்தி ஆச்சே!

3. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மந்திரிகள் அடிக்கடி பதவி பறிக்கப்பட்டார்கள்; ஒரு மந்திரி பதவி ஏற்ற மூன்றாம் நாளே கல்தா கொடுக்கப்பட்டார். ஒரு மந்திரி கன்னத்தில் போட்டுக் கொள்வதாலேயே பதவியில் நீடித்தார். ஜெயலலிதாவுக்கு வேண்டியவர் என்பதால் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கு புதிய பதவி வீரப்பன் பேரால் உருவாக்கப்படும். ஜெயலலிதாவுக்கு வேண்டியவர் என்பதால் சட்டசபைச் செயலாளர் பதவி நீட்டிப்புச் செய்தபடியே இருக்கும். ஜெயலலிதாவுக்கு வேண்டியவர் என்பதால் தேர்தல் அதிகாரியின் பதவி ஆயுட்கால பதவியாக நீட்டிக்கப்படும் - அதையெல்லாம் சுட்டிக்காட்டி ‘சீனியர் சபா’ என்று தவறுப் பட்டியல் போடாது விகடன்!

காரணம்

ஜெயலலிதா

பாப்பாத்தி!

4. ஆரியமாயையும், கம்பரசமும், மாஜி கடவுள்களும், எழுதிய அண்ணாவின் பெயரைக் கட்சிக்கும் - அவரது உருவத்தைக் கொடியிலும் பொறித்து வைத்துக் கொண்டு - மலையாளத்து உன்னிகிருஷ்ணன் பணிக்கரின் ஆலோசனை கேட்டு யாகம் நடத்துவார்; அண்ணாவின் ஆட்சியில் நிறுவப் பெற்ற கண்ணகி சிலையை அகற்றி மியூசியத்து இருட்டறையில் தள்ளுவார்; சங்கர மடம் போய் கஜபூஜை நடத்துவார். குருவாயூர் கிருஷ்ணனுக்கு குட்டி யானை காணிக்கை செலுத்துவார். இப்படி அண்ணாவின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு - வர்ணாஸ்ரமதர்ம - மனுதர்ம ஆட்சி நடத்தினாலும் ஜெயலலிதா கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டார் என்று ஒரு பட்டியல் போடாது விகடன். காரணம் என்ன?

ஜெயலலிதா

பாப்பாத்தி!

5 - 6 ராஜீவ் படுகொலையில் மூப்பனாருக்கும் பங்குண்டு என்று குற்றஞ்சாட்டிய ஜெயலலிதா - 2001 தேர்தலில் மூப்பனாரின் வீடு தேடிச் சென்று அவரோடு கூட்டணி அமைத்துக் கொண்டார்.

2001 தேர்தலில் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பா.ம.க., இடதுசாரிகள், காங்கிரஸ் (த.மா.கா.) ஆகிய கட்சிகளை எல்லாம் கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டார். ஜெயலலிதா தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தராதது மெகா தவறு என்றோ, கூட்டணிக் கட்சிகளை காரணம் இல்லாமல் பகைத்தது மெகா தவறு என்றோ விகடன் பட்டியலிடாது. காரணம் என்ன? ஜெயலலிதா சுயஜாதியைச் சேர்ந்தவராயிற்றே!

7. பல்டிகள் பலவிதம் என்று தி.மு.கழக ஆட்சியின் மெகா தவறு என்று பேனாவை ஓட்டும் விகடன்! மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது; பின்னர் 2004 தேர்தல் தோல்வி காரணமாக வாபஸ் பெற்றது; கிராமப்புற தெய்வங்களின் ஆலயங்களில் ஆடு, கோழி பலியிட்டு படையலிடக்கூடாது என்று ஒரு உத்தரவு; 2004 தேர்தலுக்குப் பிறகு - தோல்வி தந்த பாடத்தால் - வாபஸ் பெற்றது போன்றவையெல்லாம் விகடனின் பார்வையில் பல்டிகளாகப் படாது! பொடா சிறையிலடைத்த வைகோ.வை 2006 தேர்தலில் கூட்டணி சேர்த்துக் கொண்டதுகூட விகடனுக்கு பல்டிகள் பலவிதமாகத் தோன்றாது. காரணம் என்ன? ஜெயலலிதா பாப்பாத்தி ஆச்சே!

8. ஜெயலலிதா செய்ததெல்லாம் சரி என்பது போல இன்றைய தி.மு.கழக ஆட்சி நடைபெறுகிறதாம். ஜெயலலிதா 10 ஆயிரம் சாலைப்பணியாளர்களையும், 13 ஆயிரம் மக்கள் நல ஊழியர்களையும் வேலை நீக்கம் செய்தார். தி.மு.கழக ஆட்சி அவர்களுக்கெல்லாம் மீண்டும் வேலை கொடுத்தது. ஜெயலலிதா அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஒரு சொட்டு மையில் டிஸ்மிஸ் செய்தார். தி.மு.கழக ஆட்சி அவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை எல்லாம் அறவே ரத்துச் செய்தது. 20 சதவிகித போனசைத் திருப்பித் தந்தது; எஸ்மா - டெஸ்மா சட்டங்களுக்கு முடிவு கட்டியது. இவையெல்லாம் ஜெயலலிதா செய்த தவறுகளைச் சரி செய்த நடவடிக்கைகள். ஆனால் விகடன் மெகா தவறு என்ற பெயரில் என்ன கூறுகிறது? "ஜெயலலிதா செய்ததெல்லாம் சரிதான் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் தி.மு.கழக ஆட்சி ஏற்படுத்திவிட்டது" என்கிறது. காரணம் என்ன? கலைஞர் மீதான - சாதித் துவேஷம்; ஜெயலலிதா மீதான சுயசாதி அபிமானம்!

9. விகடனின் இட்டுக்கட்டலில் ஒன்பதா வதாகக் கூறப்படும் தவறு "கேலிக் கூத்தாகும் கட்சித் தேர்தல்" என்பதாகும். தேர்தலே கிடையாது; வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்பது போலச் செயல்படும் ஜெயலலிதாவுக்குப் பல்லக்குத் தூக்கி ‘பராக்’ கூறும் விகடன் - சிற்றூர்க் கிளை முதல் - மாநகராட்சி வரையில் நடத்தப்படும் தேர்தலில் - அங்கொன்றும் - இங்கொன்றுமாகத் தென்படும் சிறுசிறு குறைகளை - துரும்பைத் தூணாக்கிக் காட்டுவது போல - பூதக் கண்ணாடி வைத்து அவைகளைப் பெரிது படுத்தப் படாதபாடு பட்டிருக்கிறது.

"நம் கட்சியை நடத்துவது யார்?" என்ற கேள்விக்கு தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டனிடம் பதிலே இல்லையாம்! தி.மு.க.வை நடத்துவது விகடன் சீனுவாச அய்யர் இல்லை என்று தி.மு.க. தொண்டர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்!

10 ‘காணவில்லை கட்டுப்பாடு’ என்று ஒரு மெகா தவறை கற்பித்திருக்கிறது விகடன்! ஒன்றியத் தேர்தல் வரை பல்லாயிரக்கணக்கான ஊர்களில் - நிர்வாகிகள் தேர்தலில் போட்டி நடந்ததையும் - வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியல்களையும் நாள் தவறாது - தி.மு.க. தலைமை நிலையம் - முரசொலியில் பக்கம் பக்கமாக வெளியிட்டபடியே இருக்கிறது! ஆனால் விகடனோ காணவில்லை கட்டுப்பாடு என்கிறது! ஆட்சிக்கு வந்த பிறகு ஒருமுறைதான் கழகப் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது என்பது ஒரு தவறாம். ஆட்சிக்கு வருவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு 3.3.2006 அன்று திருச்சியில் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. ஆட்சிக்கு வந்தபின் 2.6.2008 அன்று சென்னையில் பொதுக்குழு நடத்தப்பட்டது. சொற்பொழிவாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெறவே இல்லை என்று கூறுகிறது விகடன். 2006 மார்ச் மாதத்தில் சொற்பொழிவாளர்கள் கூட்டமும் நடந்திருக்கிறது. மெகா தவறுகள் 10 என்று விகடன் பட்டியலிட்டிருப்பவை எல்லாம் - தி.மு.க.வின் தவறுகள் என்பதைவிட - ஜெயலலிதாவின் தவறுகளை மறைத்து - அவருக்குத் தங்க முலாம் பூசி - அவரை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்கிற சுயசாதி அபிமானத்தின் வெளிப்பாடுகள் என்பதே பொருத்தமாக இருக்கும்.



* ஒரு நாட்டை ஆளும் முதலமைச்சரிடம் இவ்வளவு ஜாதி காழ்ப்புணர்வு இருந்தால் எப்படி எல்லோரையும் சமமாக பார்க்கமுடியும் ?
* பதிலுக்குக் கருணாநிதியின் ஜாதிக் பெயரை நாலு முறை விகடனும் தினமணியும், ஜெயலலிதாவும் எழுத/பேச ஆரம்பித்தால் நன்றாக இருக்குமா ?
* பார்ப்பனர்களை பேசினால் ஜாதிக்கலவரம் வராது என்ற ஒரே கரணத்துக்காக இப்படி பேசிக்கொண்டே போகலாமா ?
* அடிக்கடி நானும் ஒரு பத்திரிக்கையாளன், பத்திரிக்கை சுதந்திரம் என்று பேசுவதெல்லாம் சும்மாவா ?
* இந்த மாதிரி கேள்விகளை கேட்டுக்கொண்டே போனால் அது கன்னித்தீவை மிஞ்சிவிடும் என்பதால் நிறுத்துகிறேன்.

Read more...

விடுதலைப் புலிகளும் - விகடனும் தினமணியும், ஜெயலலிதாவும்!

விடுதலைப் புலிகளும் - விகடனும் தினமணியும், ஜெயலலிதாவும்! ( முரசொலி 4-11-08 அன்று வந்த கட்டுரை )


இலங்கைத் தமிழர்களுக்கு இன்னல் களிழைக்கப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழக மக்கள் - சிங்கள அரசின் அராஜகத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துவதும், உடனடியாக,

பார்ப்பனத் தலைவர்களும், பார்ப்பனப் பத்திரிகையாளர்களும் "இது இலங்கைத் தமிழர் களுக்கு அளிக்கும் ஆதரவல்ல; விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் முயற்சியே" என்று கூக்குரலிடுவதும் வாடிக்கையாகி இருந்து வருகிறது.


விடுதலைப் புலிகளை ஆதரித்து சீமானோ அமீரோ உணர்ச்சி வசப்பட்ட நிலையில்
பேசினால் "அவர்களை இன்னும் ஏன் கைது செய்யவில்லை?" என்று தமிழின விரோதிகள் கனைப்பார்கள்.


ஆனால் அதே சமயம் தினமணி வைத்திநாத அய்யரோ, விகடன் சீனுவாச அய்யரோ - தமிழக மக்களின் கருத்து என்ற பேரால் - கருத்துக் கணிப்பு என்ற பேரால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக - தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று எழுதினால் - எவனும்,

தினமணி வைத்திநாத அய்யரைக் கைது செய் என்றோ, விகடன் சீனுவாச அய்யரைக் கைது செய் என்றோ முனுமுனுக்கக்கூட மாட்டான்.

தினமணி கருத்துக் கணிப்பு என்ற பேரால் - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளியிட்ட புள்ளி விபரம் இது:-

"விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்று 51 சதவீத மக்கள் கருத்துத் தெரிவித்தார்கள்" என்பதோடு தினமணி நின்றுவிடவில்லை.

"புலிகள் தோற்கடிக்கப்பட்டு பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டால் - என்ற கேள்விக்கு

- தமிழ்நாட்டில் அரசியல் புகலிடம் தரப்படவேண்டும் என்று 23 சதவீதத்தினரும்

- ஐக்கிய நாடுகள் சபை தலையிடவேண்டும் என்று 25 சதவீதத்தினரும்

- அப்படி நடக்காமலிருக்க நமது ராணுவத்தை அனுப்பவேண்டும் என்று 31 சதவீதத்தினரும் கருத்துத் தெரிவித்திருக் கிறார்கள்.

புலிகள் இயக்கம் பற்றிக் கருத்து என்ன?

- என்ற கேள்விக்கு கருத்துத் தெரிவித்த மக்களில் 12 சதவீதம் பேரே ‘பயங்கரவாதிகள்’ என்ற பட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

- ஈழ விடுதலைக்காகப் போராடுகிறவர்கள் என்று 30 சதவீதத்தினரும்

- ஈழத் தமிழர் நலனுக்காகப் பாடுபடுகிறவர்கள் என்று 22 சதவீதத்தினரும்,

- ஈழத் தமிழர்களின் ஒரே, உண்மையான குரல் என்று 36 சதவீதத்தினரும்

கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழக அரசியல்வாதிகள் தலையிடுவது சரியா என்ற கேள்விக்கு,

- அங்கே இருப்பதும் தமிழர்கள் என்பதால் சரியே என்று 44 சதவீதம் பேர் பதிலளித்திருக் கிறார்கள்."

- என்பதாகப் புள்ளி விவரம் வெளியிட்டு - விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் - புலிகள் தோற்கடிக்கப்பட்டு பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டால் தமிழ்நாட்டில் அவருக்கு அரசியல் புகலிடம் தரப்படவேண்டும்; ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும், அப்படி நடக்காமலிருக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.

- விடுதலைப் புலிகள் ஈழ விடுதலைக்காகப் போராடுகிறவர்கள், ஈழத் தமிழர் நலனுக்காகப் பாடுபடுபவர்கள்,

- ஈழத் தமிழர்களின் ஒரே, உண்மையான குரல் விடுதலைப் புலிகள்தான்.

- ஈழத்தில் இருப்பவர்களும் தமிழர்கள், இங்கே இருப்பதும் தமிழர்கள் என்பதால் ஈழப் பிரச்சினை யிலே தமிழக அரசியல்வாதிகள் தலையிடுவது தவறு அல்ல;

- என்றும் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்களிடம் எவ்வளவு அபாரமான ஆதரவு இருக்கிறது என்பதை புள்ளி விபரத்துடன் அழுத்தம் திருத்தமாக வெளியிட்டிருந்தார் தினமணி வைத்தினாத அய்யர்.

தினமணியை முந்திக் கொண்டு ஆனந்த விகடன் சீனுவாச அய்யர் -

‘நிச்சயம் தமிழீழம் வேண்டும்’ என்று தலைப்பிட்டு 4195 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தி "ஈழத் தமிழர் விவகாரத்தில் இங்கே நிலவும் மனநிலை இதுதான்" - என்று அடித்துச் சொல்லும் சர்வே என்ற முகவுரையோடு - விடுதலைப் புலிகளின் ஆற்றல், ராஜதந்திரம் - அவர்களுக்கு தமிழக மக்களிடையே இருக்கும் அபரிமிதமான ஆதரவு பற்றியெல்லாம் ஓங்கியடித்து ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டிருந்தார்.

அவர் கருத்துக் கணிப்புடன் சேர்த்து வெளியிட்டிருந்த கட்டுரையின் சில பகுதிகள் வருமாறு:

"ஜூலை 25, 1983...! இலங்கையில் இன வெறிக்கான வெறுப்பு விதை அழுத்தமாக விழுந்த நாள். சிங்கள ராணுவம் முதல்முறையாக ஈழத் தமிழ்ப் பகுதிகளில் வெறிபிடித்து வேட்டையாடி, அப்பாவித் தமிழர் பிணங்களை அடுக்கிய நாள். தனித் தமிழீழப் போராட்டத்துக்கு உணர்ச்சி நெருப்பேற்றிய அந்தக் கறுப்பு ஜூலை முடிந்து 25 வருடங்களாகின்றன!

அரை நூற்றாண்டு காலமாக யுத்தத்தின் ரத்தத்தில் நனைகிறது ஈழ மண். நிலம், குடும்பம், உயிர், உடைமை என எல்லாவற்றையும் இழந்து துயரத்தின் பிள்ளைகளாக வாழ்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஈழ விடுதலைக்காக, இலங்கை அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்று வரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு, ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’!

சர்வதேசத் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் ஒன்றாக இருந்தாலும், உலகில் வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லாத கண்ணிய மரியாதை விடுதலைப்புலிகளுக்கு உண்டு. உலக நாடுகளின் துணையோடு எதிர்க்கிற இலங்கை ராணுவத்துக்கு, புலிகள் ஒவ்வொரு கணமும் சிம்ம சொப்பனம்தான்!

‘ஷெல்லடிக்கிற ராவுகளும் எங்கட பெண்டு பிள்ளைகளைக் கைபிடிச்சு இழுக்கிற ஆர்மிக்காரவுகளும் இல்லாத எங்கட மண் வேண்டும்’ என ஏங்கிக் கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான்!

ஆனால், புலிகள் அமைப்பு பலவீனமடைந்துவிட்டது. அமைப்புக்குள்ளேயும் உலக நாடுகளின் பார்வையிலும் அது பின்னடைவில் இருக்கிறது என்பது மாதிரியான தோற்றம் இப்போது ஏற்பட்டிருப்பது உண்மையா..? ஆன்டன் பாலசிங்கம், சுப.தமிழ்ச்செல்வன் போன்ற முக்கிய தளகர்த்தர் களின் மறைவு அவர்களுக்கு மறுக்க முடியாத இழப்புதான். ஆனால், "விடுதலைப் புலிகளுக்கு இழப்புகள் புதிதல்ல. திலீபன் தொடங்கி தமிழ்ச்செல்வன் வரை அவர்கள் இழப்புகளில்தான் எழுந்து முளைத்திருக்கிறார்கள். 25 வருட போராட்டக் களத்தில் புலிகள் கண்ட இழப்புகள் நிகழ்காலச் சரித்திரத்தில் எந்த போராளிக் குழுக்களும் காணாதது. அவர்களை எதுவும் தடுக்க முடியாது" என்கிறார்கள் சர்வதேசப் பார்வையாளர்கள்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பகுதிகளில் சிங்கள ராணுவம் முன்னேறி வருகிறது என இலங்கை அமைச்சகம் வெளியிடும் செய்திகளில் எத்தனை உண்மை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்தச் சூழலில் இலங்கையில் நடக்கும் சார்க் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை அடுத்து தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள் புலிகள். இந்த நேரத்தில் எல்லோருக்குள்ளும் எழுகிற கேள்விகள்... இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் நிலைப்பாடு சரிதானா? புலிகளின் போராட்டத்துக்குத் தமிழர்களிடையே ஆதரவு இருக்கிறதா..? தமிழ் ஈழம் அவசியமா? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமா?

"ஒற்றைத் துப்பாக்கி, ஐந்து வீரர்களோடு பிரபாகரன் துவக்கிய அமைப்பு, இன்று 25 ஆயிரம் வீரர்கள் கொண்ட மாபெரும் இயக்கம்! தரைப் புலிகள், கடற்புலிகள், வான் புலிகள் என சகல திசைகளிலும் கிளை பரப்பும் புலிகளின் ராணுவக் கட்டமைப்பு அசாத்தியக் கச்சிதமானது. இதுவரை புலிகள் தற்காப்பு நிலையில்தான் போரிட்டார்கள். அவர்கள் தாக்குதல் நிலையை எடுக்கும்போது சிங்கள ராணுவம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்தத் தருணத்துக்காகத்தான் புலிகள் காத்திருக்கிறார்கள்!" என்கிறார் ஈழத்துக் கவிஞர் காசிஆனந்தன் நம்பிக்கையாக!

இந்தச் சூழ்நிலையில் விடுதலைப்புலிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக் கும்? எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் இயக்கத்தைக் கட்டுக்கோப்போடு முன்னெடுத் துச் செல்வதில் தீவிரமாக இருக்கிறார் பிரபாகரன் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து.

"பிரபாகரனின் சிந்தனைதான் விடுதலைப் புலிகளின் சிந்தனை. கட்டுக்கோப்புடனும் தலைமைக்கு விசுவாசமாகவும் இருக்கும் விடுதலை இயக்கத்துக்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறது புலிகள் அமைப்பு. பிரபாகரன், திறமையான ராணுவத் திட்ட வகுப்பாளர் மட்டுமல்ல; அரசியல் நுணுக்கமும் அறிந்தவர். மாறுகின்ற உலக நடப்புகள் எப்படியெல்லாம் தமிழர்களின் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதில் தீர்க்கமான ஞானம் உள்ளவர். ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள அமெரிக்கா, இந்திய நிலைமைகள் தெரிந்த பின்பு, அடுத்த நகர்வை நோக்கிய முக்கியமான முடிவை பிரபாகரன் எடுப்பார்" - சமீபத்தில் இலங்கை இணையதளப் பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார், இந்தியப் பத்திரிகையாளர் அனிதா பிரதாப்.

சரி... தமிழக மக்கள் என்ன சொல்கிறார்கள்..? தனி ஈழம், விடுதலைப் புலிகள் விஷயத்தில் அவர்கள் மனநிலை என்ன என அறிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சர்வே ஒன்றை நடத்தியது விகடன்.

முடிவுகள், தமிழக மக்களின் மனசாட்சியை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஈழ மண்ணில் அமைதி மலர வேண்டும், விடுதலை வெளிச்சம் பரவ வேண்டும் என்பதே அது!"

- என்பது விகடன் சீனுவாச அய்யர் வெளியிட்ட கருத்துக்களும் - கருத்துக் கணிப்பும்.

விகடன் சர்வேயின் மிக முக்கியமான அம்சம் விடுதலைப் புலிகளை தி.மு.க. ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் ஆதரிக்க வேண்டும் - என்று 47.48 சதவீத மக்கள் கருத்துக் கூறிய புள்ளி விவரமாகும்.

இப்படி வைத்தினாத அய்யர், சீனுவாச அய்யர் எல்லாம் - அமீர், சீமான் போல உணர்ச்சிவசப் பட்டுப் பேசாமல் - தங்களுக்கே உரிய சாமர்த்தியத்தோடு நாங்கள் சொல்லவில்லை தமிழக மக்கள் சொல்கிறார்கள்

- என்று தமிழக மக்களின் பேரால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

விகடன் கருத்துக் கணிப்பில் இன்னும் ஒருபடி மேலே போய்

1. விடுதலைப் புலிகள் இயக்கத்தை எப்போதும் ஆதரிக்கிறேன் என்று 54.25 சதவீத மக்கள் கூறியதாகவும்,

2. இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழீழம் அமைப்பது சரியான தீர்வு என்று 55.44 சதவீதத்தினர் கூறியதாகவும்,

3. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று 47.65 சதவீதத்தினர் கூறியதாகவும்,

4. விடுதலைப் புலிகள் இயக்கத்தை வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் போன்றவர்கள் ஆதரிப்பது சரியான நிலைப்பாடுதான் என்று 49.36 சதவீத மக்கள் கூறியதாகவும்,

5. ராஜீவ் காந்தி படுகொலையில் பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டும் என்று 43.02 சதவீதத்தினரும் குற்ற மற்றவர், குற்றத்தை மன்னித்து விட்டுவிடலாம் என்று 56.97 சதவீத மக்கள் - அதாவது பெரும்பான்மையானவர்கள் கூறியதாகவும்,

6. இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்று 62.59 சதவீதத்தினர் கூறியதாகவும்,

7. தரைப்படை, கடற்படை, வான்படை என்று விடுதலைப் புலிகள் வளர்ச்சி அடைவதாக 46.24 சதவீத மக்கள் கூறியதாகவும்,

8. கொள்கை மாறுபட்ட இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்களை விடுதலைப் புலிகள் கொலை செய்வது - 56.84 சதவீத மக்கள் தவிர்க்க முடியாத அணுகுமுறை, அங்குள்ள சூழ்நிலை புரியவில்லை என்று கூறியதாகவும்

- கருத்துக் கணிப்பு வெளியிட்டு - விடுதலைப் புலிகளை தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதரிப்பதாக கணிப்பும் கட்டுரையும் வெளியிட்டிருக்கிறது!

இப்படி ஒருபுறம் கருத்துக் கணிப்பு என்ற பேரால் விடுதலைப் புலிகளுக்கு தமிழக மக்கள் ஆதரவு என்று தினமணி அய்யரும், விகடன் அய்யரும் சமத்தாக - கருத்து வெளியிடும் அதே நேரத்தில் -

பாப்பாத்தி அம்மாள் ஜெயலலிதாவோ - "விடுதலைப் புலிகளுக்கு தி.மு.க. ஆதரவு" என்றும் - "முதல்வர் திரட்டும் நிதி விடுதலைப் புலிகளையே சென்றடையும் என்று தமிழ் மக்கள் சந்தேகிப்பதாகவும்" அறிக்கை என்ற பெயரில் கயிறு திரித்திருக்கிறார்.

எது எப்படி இருப்பினும் -

அக்கிரகாரத்துப் பெரிய மனிதர்கள் எல்லோரது நோக்கமுமே - இலங்கைத் தமிழர்கள், விடுதலைப்புலிகள் பறறியதல்ல;

எதன் பேரிலாவது தி.மு.க.வுக்கு - தி.மு.கழக அரசுக்கு தொல்லை கொடுத்து - கெட்ட பெயர் உருவாக்கி - கழக அரசைக் கவிழ்த்து விட முடியுமா என்பதே அவர்களது உள்நோக்கம். அதை வேறு வேறு வடிவில் வெளியிடுகிறார்கள்; அவ்வளவுதான்!

( நன்றி: முரசொலி )
'தி.மு.க.வின் 10 மெகா தவறுகள்' என்று போன வாரம் விகடன் கவர் ஸ்டோரி வெளியிட்டது. நவம்பர் 2 முரசொலியில் 'துருப்பிடித்த ஜெயலலிதாவின் கட்சிக்கு தங்கமுலாம் பூசும் விகடனின் மெகா முயற்சி!' என்று விகடன் ஐயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. அது தொடர்கிறது.

Read more...

நெட்டில் சுட்டதடா...: சாப்பாட்டுக் கூடைக்கு ஆறு சிக்மா!

>> Sunday, October 26, 2008

உங்கள் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் மானேஜர் ரவீந்திரனை முதன் முதலில் சந்தித்த தினம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ""ஐயம் ரவீந்திரா. பளாக் பெல்ட்'' என்று பூரிப்புடன் அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனை ஏற இறங்கப் பார்த்தேன். அந்தக் கெச்சலான உடம்பையும், சதா நாய் துரத்துவது போன்ற முழியையும் பார்த்தால் சற்றும் கராத்தே சண்டையன் போலவே இல்லை. மேற்கொண்டு விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவன் கறுப்பு பெல்ட் வாங்கியிருப்பது சிக்ஸ் சிக்மாவில்!





இந்த சிக்ஸ் சிக்மா (நண்ஷ் ள்ண்ஞ்ம்ஹ) என்பது என்னவென்று சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அது மோட்டரோலா நிறுவனம் கண்டுபிடித்த ஒரு மானேஜ்மென்ட் தந்திரம். கடலை எண்ணெய்க்கு ஐ.எஸ்.ஐ முத்திரை குத்துவது போல ஒரு தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ். எந்த ஆறு சிக்மா நிறுவனமும் தயாரிக்கும் பொருட்கள் 99.999 சதவிகிதம் கியாரண்டியாக நல்ல தரத்துடன் இருக்கும். சிக்மா என்ற சொல், புள்ளியியலில் வருகிறது. சராசரியிலிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகி வசிக்கிறோம் என்பதை அளக்கும் குறியீடு அது. உதாரணமாக, நீங்கள் நட்டு போல்ட் தயாரிக்க ஒரு நிறுவனம் ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஆறு சிக்மா சான்றிதழ் கேட்கிறீர்கள். அவர்கள் முதலில் அளப்பது, உற்பத்தியாகும் பொருட்களில் எவ்வளவு சதவிகிதம் குறைபாடு இருக்கிறது என்பதைத்தான். ஒரு மாதத்தில் பத்து லட்சம் போல்ட்டு தயாரித்தால், அதில் சுமார் மூன்றரை போல்ட்டுகளுக்கு மேல் தப்பு இருந்தால் சர்டிபிகேட் கிடைக்காது! (மூன்றரை போல்ட் என்பதை ஒத்துக் கொள்ள முடியாவிட்டால், ஒரு கோடியில் முப்பது நான்கு பிழைகளுக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்).





ஆறு சிக்மா வாங்குவது அவ்வளவு சுலபமல்ல. ஜி.இ., ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கே சான்றிதழ் கிடைப்பதற்குள் தூக்குப் போட்டவன் மாதிரி நாக்குப் பிதுங்கிவிட்டது. அவர்களிடம் இல்லாத கம்ப்யூட்டரா, எம்.பி.ஏக்களா? இருந்தும் பிழைகளை நீக்கிக் கொள்வதற்கு முக்கியத் தேவை, கடமைக்கு வேலை செய்யாமல் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வேலை செய்யும் ஊழியர்கள். அப்படிப்பட்ட ஊழியர்கள் மட்டும் கிடைத்தால், எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஆறு சிக்மாவைச் சந்திக்கலாம். இதற்கு அருமையான உதாரணம், மும்பை நகரின் சாப்பாடுக் கூடைக்காரர்கள்.

புகழ் பெற்ற ஐ.ஐ.எம்.நிர்வாகவியல் பள்ளி. உச்சாணிக் கிளை எம்.பி.ஏக்களை உற்பத்தி செய்யும் நாற்றங்கால். அங்கே ஒரு நாள் மானேஜ்மென்ட் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பவர், கோட்டு சூட்டு போட்ட ஹார்வர்ட் பேராசிரியர் அல்ல; வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டி காந்தி குல்லாய் அணிந்த சர்வ சாதா கூலித் தொழிலாளி. தலை மேல் சாப்பாட்டுக் கூடைகளைச் சுமந்து சென்று வினியோகிக்கும் "டப்பாவாலா'. அவராவது, எம்.பி.ஏ. மாணவர்களுக்குப் போய் மானேஜ்மென்ட் சொல்லித் தருவதாவது? ஏனெனில் அன்று நடந்த பாடம், "தவறுகளே நடக்காமல் வேலை செய்வது எப்படி' என்பதாகும்.





மும்பைக்கு ஒரு முறை சென்று வந்த யாரும் இந்த டப்பாவாலாக்கள் என்பவர்களைக் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. மும்பை நகரம், ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் இருபதாயிரம் பேர் என்ற ரேட்டில் மக்கள் டப்பாவில் அடைக்கப்பட்ட பேரீச்சம் பழம்போல் நெரிசலாக வசிக்கும் நகரம். இத்தனை பேரும் சேவல் கோழியுடன் சேர்ந்து எழுந்து ரயில் பிடித்து எங்கோ இருக்கும் அலுவலகம் போக வேண்டும். அத்தனை பேருக்கும் மதியம் சாப்பாடு வேண்டும். காண்டீனிலோ, கண்டகண்ட எண்ணெய். இங்கேதான் உதவிக்கு வருகிறது டப்பாவாலா சர்வீஸ். இவர்கள், புற நகர் பகுதியில் இருக்கும் உங்கள் வீட்டிலிருந்து காலை ஒன்பது மணி அளவில் டிபன் காரியரை எடுத்துக் கொண்டு போனால் சரியாக லஞ்ச் நேரத்துக்கு அலுவலகத்தில் சேர்ப்பித்து விடுவார்கள். மாலையில் காலி காரியர்கள் எதிர்த் திசையில் பயணம் செய்து கண்ணன் மேய்த்த ஆநிரைகள் போல் வீட்டுக்கு வந்து சேரும். ட்ரெயின், பஸ், சைக்கிள், மனிதக் கால் என்று சகலவிதமான போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்தி ஒவ்வொரு சாப்பாட்டு மூட்டையும் சராசரியாக அறுபது கிலோ மீட்டர் பயணம் செய்கிறது; நாலு கை மாறுகிறது. இருந்தும் காரியர் மாறிவிடாமல், அவரவர் வீட்டுச் சாப்பாடு அவரவருக்குப் போய்ச் சேருவதுதான் ஆச்சரியம்.

டப்பாவாலாக்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. டிபன் பாக்ஸ்களில் கோடு, புள்ளி, ஸ்வஸ்திக் என்று தங்களுக்கே உரிய எளிய குறியீடுகளைப் பயன்படுத்தி அதனதன் இலக்கைத் தெரிவிக்கிறார்கள். ஒரு ஏரியாவிலிருந்து சேகரித்த டப்பாக்கள் தபால் பிரிப்பு அலுவலகம் போன்ற ஒரு மரத்தடிக்கு வந்து நாலு திசைகளிலும் பிரித்து அனுப்பப்படுகிறது. ஐயாயிரம் ஊழியர்கள் தினம்தினம் இரண்டு லட்சம் சாப்பாடுகளை டெலிவரி செய்கிறார்கள். மழையோ புயலோ வெயிலோ, க்வார்ட்ஸ் கடிகாரம் மாதிரி எல்லாம் சீராக, நேரம் தவறாமல் இயங்குகிறது. டெலிவரியில் தப்பு நடப்பது மிகமிகமிக அபூர்வம்!

இந்தத் தொழிலை மட்டும் நம்ம லட்ச ரூபாய் எம்.பி.ஏக்களிடம் விட்டிருந்தால், ஒவ்வொரு டிபன் காரியருக்கும் ஆர்.எஃப் பட்டி, கூடைக்குப் பார் கோட், சுமப்பவர் ஒவ்வொருவருக்கும் ஜி.பி.எஸ் என்று டெக்னாலஜியில் புகுந்து விளையாடி, வரிசை வரிசையாக டெல் கம்ப்யூட்டர்கள் வைத்துக்கொண்டு கண்காணித்து, கடைசியில் அல்போன்ஸ் வீட்டு மீன் குழம்பை அனந்தாச்சாரிக்குக் கொண்டு போய்க் கொடுத்துவிடுவார்கள்.





மாபெரும் மானேஜ்மென்ட் பள்ளிகளும் டப்பாவாலாக்களைப் பக்கத்தில் சென்று கவனித்து ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள். ஃபோர்ப்ஸ் என்னும் புகழ் பெற்ற பிசினஸ் இதழ் அவர்கள் ஆறு சிக்மா உலகத் தரத்தை எட்டிவிட்டார்கள் என்று வியக்கிறது. நியூயார்க் டைம்ஸ் அவர்களைப் பற்றிக் கட்டுரை எழுதுகிறது, பி.பி.சியில் டாக்குமென்டரி படம் காட்டுகிறார்கள். இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வந்தபோது டப்பாவாலாக்களைச் சந்தித்து அவர்களுடன் பெருமிதமாக போட்டோ எடுத்துக் கொள்கிறார். கலிபோர்னியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் இதைப் பின்பற்றி "அன்னதாதா' என்று சாப்பாட்டு கேரியர் சர்வீஸ் ஆரம்பிக்கிறார்கள்.

செய்வதைத் திருந்தச் செய்வது என்பது பல்லாயிரம் ஆண்டு பழமையான கருத்து. எகிப்திய பிரமிடின் நாலு பக்கங்களையும் இப்போது அளந்து பார்த்தால் தொண்ணூறு டிகிரிக்கு ஆச்சரியகரமாகக் கிட்டத்தில் அமைத்திருக்கிறார்கள். ஒரு டிகிரியில் ஆயிரத்தில் ஒரு பகுதிதான் வித்தியாசம் கண்டுபிடிக்க முடிந்தது! குவாலிட்டி கண்ட்ரோல் என்ற நவீன வார்த்தை உலகப் போரின்போது உருவானது. தொழிற்சாலை அசெம்பிளி லைன்களில் கார் முதல் குண்டூசி வரை பெரிய அளவில் அடித்துத் தள்ள ஆரம்பித்தார்கள். ஊழியர்களை "வேகம், வேகம்' என்று துரத்தியதில் தரம் வீழ்ந்துவிட்டது; கஸ்டமர்கள் கதறினார்கள். எனவே, 1924-வாக்கில் புள்ளியியல் அடிப்படையில் தரக் கட்டுப்பாடு சோதனை செய்யும் வழக்கம் கொண்டுவரப்பட்டது. வால்டர் ஷேவார்ட் என்பவர் அன்றைக்கு எழுதிய புகழ்பெற்ற ஒரு பக்க டாக்குமென்ட்தான், பின்னால் வந்த அத்தனை ஜிலுஜிலு பவர் பாயின்ட்களுக்கும் முன்னோடி. சீக்கிரமே தரக் கட்டுப்பாடு என்பது தாரக மந்திரமாகி (தாரக என்றால் என்ன?), டி.க்யூ.எம், சி.எம்.எம், ஐ.எஸ்.ஓ, ஜப்பானில் கைஸன் என்று கிளைகிளையாகப் புறப்பட்டது. முழு நேர குவாலிட்டி டிப்பார்ட்மென்ட்கள் உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் நாற்காலியைத் தேய்க்க ஆரம்பித்தார்கள்.

இன்றைக்கு ஆறு சிக்மா, ஏழு சிக்மா என்றெல்லாம் அவர்கள் சீசனுக்கு சீசன் ஒரு புதிய மானேஜ்மென்ட் ஃபாஷன் ஏற்படுத்தி அப்பாவி முதலாளிமார் தலையில் மிளகாய் அரைத்தாலும், தரத்தை உறுதி செய்வதற்கு பிரமிட் காலத்திலிருந்தே ஒரே ஒரு எளிய விதிதான் இருந்து வந்திருக்கிறது: டப்பாவாலாக்கள் போன்ற தொழில் பக்தி மிகுந்த ஊழியர்கள்! சார்லஸ் இளவரசர் வந்த அன்றைக்குக்கூட, ""எங்கள் வேலை பாதிக்கக் கூடாது; டியூட்டி நேரம் முடிந்த பிறகு வாங்க'' என்று சொல்லி அனுப்பினார்கள். கடந்த நூற்று இருபது வருடங்களாக நடப்பது டப்பாவாலா சர்வீஸ். இருந்தும் ஒரு முறை கூட ஸ்ட்ரைக், ஊர்வலம் என்று நடந்ததே இல்லை. வேலைக்கு வருபவர்களின் பின்னணியைத் தீர விசாரித்துவிட்டுத்தான் கிட்டேயே சேர்க்கிறார்கள். ரிட்டையர்மெண்ட் வயது என்று எதுவும் கிடையாது. அவரவர்கள் உடம்பில் தெம்பு உள்ள வரை வேலை செய்யலாம். அநாவசியமாக லீவு எடுத்தாலோ, காந்திக் குல்லாய் யூனிஃபார்ம் இல்லாமல் காணப்பட்டாலோ கடும் அபராதம் உண்டு! இந்தப் படிப்பில்லாத மக்களிடமிருந்து நமக்கு நிறையப் படிப்பினை இருக்கிறது.

சிக்ஸ் சிக்மா கறுப்பு பெல்ட் நண்பர்கள் மூன்று பேர் புலி வேட்டையாடப் புறப்பட்டார்கள். தூரத்தில் புலியைப் பார்த்துவிட்டு முதலாமவர் சுட்டார்; குண்டு குறி தவறி, புலியின் இடது பக்கமாகப் பத்தடி தூரத்தில் கடந்தது. இரண்டாமவர் சுட்டார்; குண்டு வலது பக்கமாகப் பத்தடி தூரத்தில் சென்றது.

மூன்றாமவர் கால்குலேட்டரில் எண்களை அழுத்திப் பார்த்துவிட்டு உற்சாகத்துடன் கூவினார்: ""ப்ளஸ் பத்து, மைனஸ், பத்து. சராசரியாகப் பார்த்தால், நாம் புலியை வீழ்த்திவிட்டோம்!''

Read more...

மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம்

இன்றைக்கு நடக்கும் மதக் கலவரங்கள், இனக் கலவரங்களால் மரத்துப் போனவர்களாய் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கற்காலத்திலிருந்து நாகரிக மனிதனாய் மாறிய பின், மீண்டும் பழைய நிலைக்கே மனிதனின் மனோபாவம் மாறிக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

ஒருபுறம் உலக அளவில் சரிவை ஏற்படுத்திவரும் பொருளாதாரப் பிரச்னை. மறுபுறம் பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற போர்வையில் மனிதனை மனிதனே கூறுபோட்டு சாய்க்கும் அவலம்.

மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான நிலையை அடைந்த இந்தியாவில், இன்றைக்கும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய முடியாத நிலை. மதத்தின் பெயரால் அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகள். அதில் பலியாகும் ஏராளமான உயிர்கள்.

ஏன் இந்த நிலை?

இருநூறாண்டுகளுக்கு முன்பே, இதற்குத் தீர்வு கண்டுள்ளனர் இரு குறுநில மன்னர்கள். கி.பி. 1780-1801 (சுமார் 20 ஆண்டுகள்) காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது சகோதரர்களின் ஆட்சி வரலாற்றில் தடம் பதித்துள்ளது.

இம் மன்னர்களைப் பற்றிய மற்றொரு சிறப்பும் உண்டு.

சுதந்திர இந்தியாவை ஏற்படுத்துவதற்காக அன்னியர்களை அப்புறப்படுத்த, அனைத்து மதத்தினரையும் ஒன்று திரட்டி முதல் போர்ப் பிரகடனம் அறிவித்த மகா வீரர்கள் அவர்கள்.

அவர்களது ஆட்சியில் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் ஏராளமாக அமைக்கப்பட்டன. மத வேறுபாடுகளைக் கடந்து, சகோதரத்துவத்தை அவர்கள் வளர்த்ததற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும் கட்டி உள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயம், குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி ஆட்சி புரிந்தனர்.

மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கமே, வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிவை அவர்களுக்குத் தந்தது.

சின்ன மருதும், பெரிய மருதும் தங்களது படை வலிமையினாலும், தந்திரத்தாலும், வீரத்தினாலும் கும்பினிப் படைகளை கதிகலங்கி ஓடச் செய்தனர்.

பிராமணர்கள், இஸ்லாமியர்கள், சத்திரியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர்கள் ஆகியோரை இணைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட, மருது சகோதரர்கள் அறைகூவல் விடுத்தனர்.

கன்னடத்தைச் சேர்ந்த நேதாஜி வாக், மலபாரைச் சேர்ந்த வர்மா, கன்னடத்தின் கிருஷ்ணப்ப நாயக்கர், கோயம்புத்தூரைச் சேர்ந்த கான்-இ-கான், திண்டுக்கல் கோபால் நாயக்கர் போன்ற புரட்சியாளர்களை ஓரணியில் சேர்த்து, வெள்ளையரை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்று எழுதிக் கையொப்பமிட்டு, திருச்சி கோட்டை வாசலில் அதை ஒட்டினர்.

இதைப் படிப்பவர்கள், ஏராளமான பிரதிகள் எடுத்து இச் செய்தியை எங்கும் பரவிடச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள், காராம் பசுவைக் கொன்றதற்குச் சமமாகக் கருதப்படுவர் எனப் பிரகடனப்படுத்தினர். ஆங்கிலேயர்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அவர்களது சூழ்ச்சியால் மாமன்னர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.

கர்னல் அக்னியூ தலைமையில், 1801, அக்டோபர் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

திருப்பத்தூரில் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அரசு நினைவு மண்டபம் கட்டியுள்ளது.

அங்கே, அவர்களது முழு உருவச் சிலைகள் எழுப்பப்பட்டு, வெள்ளையனுக்கு எதிராக முதலில் வாள் சுழற்றியதற்கு மெüன சாட்சியாக அவை நிற்கின்றன.

மத நல்லிணக்கம் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பது, அறிவியல் வளர்ச்சிபெறாத காலத்திலேயே மருது சகோதரர்களின் எண்ணத்தில் உதித்தது மனிதம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.

(இன்று மருதுபாண்டியர்கள்

தூக்கிலிடப்பட்ட 207-வது நினைவு தினம்.)

Read more...

ஜெயலலிதாவும் கருணாநிதியும்!_இலங்கையும்

இலங்கை ராணுவத்தின் இனப் படுகொலைக்கு ஆளாகி இருக்கும் அப்பாவி ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்கிற பெயரில், தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளின் பேச்சும், செயல்பாடும் கடும் கண்டனத்துக்கு உரியதாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ம.தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேசுகின்ற பேச்சுகள், இலங்கை ராணுவத்தால் வேட்டையாடப்படும் அப்பாவித் தமிழர்கள் மீது இருக்கும் அனுதாபத்தைக் குலைப்பதாக அமைந்திருக்கின்றன என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.

""தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடும் விரைவில் மலரும்'' என்று ம.தி.மு.க. அவைத் தலைவர் மு. கண்ணப்பன் சமீபத்தில் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் அந்தக் கருத்தை நியாயப்படுத்துவது போல பேசி இருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டத்தில் எழுப்பிய கோஷங்கள் பிரிவினையைத் தூண்டும் விதத்திலும், தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தும் விதத்திலும் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மதுரையில் ரயில் மறியல் என்ற பெயரில் அவர்கள்தான் இரண்டு ரயில் பெட்டிகளைத் தீக்கிரையாக்கியதாகவும், ஆனால் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் காவல்துறையினர் அவர்களை அதில் சம்பந்தப்படுத்தாமல் காப்பாற்றுவதாகவும் மதுரை மாநகரில் பரவலாகப் பேசப்படுகிறது.

""இந்திய இறையாண்மைக்கு எதிரான, தேச விரோதக் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள்மீது கருணாநிதி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?'' என்று எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா எழுப்பி இருக்கும் நியாயமான கேள்விக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லக் கடமைப்பட்டவை.

இலங்கை விஷயத்தில், சுதந்திரத்துக்கு முற்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒரு மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டது. சுதந்திரத்துக்கு முன்னால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநாடுகளுக்கு இலங்கை காங்கிரஸ் கமிட்டியின் சார்பிலும் பிரதிநிதிகள் வருவது வழக்கம். அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இருப்பதுபோல, இலங்கை காங்கிரஸ் கமிட்டி ஒன்று இருந்தது.

சுதந்திரப் பேச்சு வார்த்தையின்போது, பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதித்த கையோடு இலங்கையை இந்தியாவில் இணைத்து, சிங்களப் பிரதேசம், ஈழநாடு என்று இந்தியாவின் இரண்டு மாநிலங்களாக்கி இருக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களையும், காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்கப் போராடியதுபோல, இதை அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் செய்யத் தவறிவிட்டனர். அப்படி நிகழ்ந்திருந்தால், சிங்களவர்கள் தனிநாடு கேட்டுப் போராடி இருப்பார்களே தவிர, நம்மவர்கள் தாக்குதலுக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.

இலங்கையில் அல்லல்படும் அப்பாவித் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதற்குப் பதிலாக, இந்தியாவில் பிரிவினைவாதம் பேசுவதும், தனித் தமிழ்நாடு என்று பேசுவதும் பிரச்னையைத் திசைதிருப்பி, இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாமல் இருப்பதற்குத்தான் உதவும்.

ம.தி.மு.க. தனது தோழமைக் கட்சி என்று தெரிந்தும், தான் தவறு என்று கருதுவதை தைரியமாகவும், கடுமையாகவும் கண்டிக்க முற்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பாராட்டத்தான் வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கையும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரித் தலைவர்களின் கடுமையான விமர்சனமும், முதல்வர் கருணாநிதியை உடனடியாகச் செயல்பட வைத்தன என்றாலும், தான் வகிக்கும் பதவிக்கு உரித்தான கடமை உணர்வுடன் அவர் செயல்பட்டிருப்பதும் பாராட்டுக்குரிய விஷயம். தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில திமுக ஆதரவு திரைப்படத் துறையினர் விஷயத்திலும் அவர் இதே அணுகுமுறையைக் கையாள வேண்டும்.

இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைத்தான் நாம் எதிர்க்கலாமே தவிர அதற்காக இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பதை ஆதரிக்க முடியாது.

Read more...

பரந்த மனப்பான்மையே ஹிந்துத்துவம்!

பரந்த மனப்பான்மையே ஹிந்துத்துவம்!

இல. கணேசன்

உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை; ஆனால் இன்றும் வாழ்ந்து வருகிற இந்த நாட்டுத்தன்மை எந்த நாடும் பின்பற்றத்தக்க சிறப்பான தன்மை. அது ஹிந்துஸ்தானத்துத் தன்மை - அதாவது ஹிந்துத் தன்மை - அதாவது ஹிந்துத்துவம்.

இதன் சிறப்புகள் பல; ஆண் - பெண் உறவில் புனிதம், விருந்தோம்பல், குடும்ப முறை, அன்னை, பிதா, ஆசிரியன் ஆகியோரை ஆண்டவனுக்குச் சமமாகக் கருதல் போன்ற பலவற்றையும் சொல்லலாம்.

ஒரு கூட்டத்தில் என்னைப் பேச அழைத்து மனிதநேயம் குறித்து பேசச் சொன்னார்கள். ஒருக்கால் "குறுகிய' ஹிந்துத்துவா குறித்து பேசிவிடுவேனோ என அஞ்சி பரந்த கருத்துடைய மனிதநேயம் குறித்து பேசட்டும் என நினைத்திருக்கலாம்.

""எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்'' எனப் பாடியவர் நமது தாயுமானவ சுவாமிகள். "சர்வே ஜனா சுகினோ பவந்து' எனச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் குரல் கொடுத்தால் உலகமே ஒரு குடும்பம் அதாவது வசுதைவ குடும்பகம் என மறு குரல் வந்ததும் இந்த நாட்டில்தான். இவைகள் எல்லாம் இந்த நாட்டின் பண்பின் பிரதிபலிப்பாக உதிர்ந்த வார்த்தைகள்.

இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை. நான் எழுதியது பிடிக்கவில்லை; ஆனாலும் எதையும் படித்துத்தொலைப்பது என்கின்ற பழக்கதோஷத்தால் இதையும் சகித்துக்கொண்டு படித்துத் தொலைக்கிறீர்கள். இது சகிப்புத்தன்மை. இந்த தேசத்தின் தன்மை அதுவல்ல, ""கட்டுரை நன்றாக இருக்கிறது; தொடர்ந்து எழுதுங்கள்'' என சொல்பவர்களது தன்மை சகிப்புத்தன்மை அல்ல; ரசிப்புத்தன்மை; எதையும் வரவேற்கும் தன்மை. காரணம் உயர்ந்த கருத்துகள் எல்லா திசையிலிருந்தும் நம்மை வந்து அடையட்டும் என்கின்ற கருத்து ரிக் வேதத்திலேயே உள்ளது.

ஆகாயத்திலிருந்து பொழியும் நீர், நதிகள் வழியாகப் பாய்ந்தோடி கடலில் கலப்பதுபோல எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றினாலும் அது ஒரே பரம்பொருளையே அடைகிறது என உபநிஷத்துகள் சொல்கின்றன.

எம்மதமும் சம்மதம் எனச் சொன்னவனே ஹிந்துதான். நமது பிரார்த்தனை எல்லாம் "லோகா சமஸ்தா சுகினோ பவந்து' (உலகம் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழக்கடவது!) என உலகம் வாழவே பிரார்த்தனை.

இத்தனை உயர்ந்த கருத்துகளை, பரந்த கருத்துகளை உலகின் எந்த நாட்டு அறிஞராவது சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே! எனவே மனிதனிடத்தில் அன்பு செலுத்து என்பதே மனித நேயம் என்றால் அதைத்தானே இந்த நாட்டின் பண்பாடும் சொல்கிறது. இந்த நாட்டின் தன்மையே அதுதான்.

எனவே ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை.

ஒரு புறாவுக்காக இரங்கி தனது சதையையே அறுத்துத் தந்த சிபி சக்ரவர்த்திக்கு சமமான மன்னன் உலகில் எங்கேனும் உண்டா? ஒரு பசுவுக்காகத் தனது உயிரையே தர முனைந்த திலீபன் போல எங்கேனும் உண்டா? ஒரு பசு தன் கன்றை இழந்த சோகத்தை உணர்ந்து தனது மகனை தேர்க்காலில் இட முனைந்தது எந்த நாட்டில்? பாம்புக்கு கூட பால் வார்க்கும் சமுதாயம் இந்நாட்டு சமுதாயம்தானே? எறும்புக்கும் உணவு இட வேண்டும் என்பதற்காகவே கோலமிடத் தொடங்கிய மக்கள் நம் மக்கள்தானே? ஒரு கொடி படர தனது தேரையே தந்த பாரி போல வேறு யார் உண்டு வெளி உலகில்? பசுமையான புல்வெளி மீது காளை பாய்ந்து சென்றபோது தானே மிதிபடுவதுபோல் உணர்ந்து அலறிய சிறீராமகிருஷ்ணர் வாழ்ந்தது எந்த நாட்டில்?

அமெரிக்க நாட்டிலிருந்து வந்து நம் நாட்டை ஆராய்வதற்கு வந்த சிலரிடம் ""எங்கள் நாட்டில் உங்களை எது வியக்க வைத்தது?'' எனக் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இதுதான்.

நாற்சந்தியில் வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்திருந்தன. பச்சை விளக்கு எரிந்தும் வாகனங்கள் நகரவில்லை. காரணம் நாய்க்குட்டி ஒன்று அப்போதுதான் சாலையைக் கடந்தது.

""அது கடந்து போவதற்காகவா இத்தனை வாகனங்கள் பொறுமை காத்தன. அமெரிக்க நாட்டில் நசுக்கிவிட்டு போய்விடுவார்கள்'' என்றனர் அவர்கள்.

பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தவர்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கும். வேகமாக வண்டி ஓட்டும்போது சடக்கென வண்டியை நிறுத்த ஓட்டுநர் எத்தனித்தபோது வண்டி குலுங்கும். காரணம் இருட்டில் சாலையில் திடீரென ஒரு கீரியோ, பாம்போ குறுக்கே ஓடும். இதைப் பார்த்து ஓட்டுநர் நிறுத்த முனைந்தது அனிச்சைச் செயல். அதாவது ரத்தத்தோடு கலந்துவிட்ட உணர்வு. அதற்குப் பெயர்தான் இந்தியப் பண்பாடு!

எனவே எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தும் பண்பு இந்த நாட்டின் பண்பு. மனித நேயம் என்பது மனிதனிடத்து அன்பு செலுத்துவது. மாறாக விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்திடமும் அன்பு செலுத்தும் இந்த நாட்டின் பண்பாடோடு மனித நேயத்தை ஒப்பிட்டால் மனிதநேயம் என்பதே குறுகிய மனப்பான்மை!

இந்த நாட்டின் தனித்தன்மை-பண்பாடு-மண்வாசனை-ஆன்மநேயம் என்கின்ற உயர்ந்த கருத்து. எனவே இந்த நாட்டு மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற தன்மை குறித்தும், பரந்த மனப்பான்மை குறித்தும் உபதேசம் செய்ய முயல்வது நெல் விளைவிக்கும் விவசாயிக்கே அரிசி விற்பதற்குச் சமமாகும்.

இந்த நாட்டில் வாழ்ந்த மக்களுக்கு இந்தத் தன்மை இருந்ததால்தான் புதிதாக வெளியிலிருந்து ஒரு மதம் வந்தபோது அதை வரவேற்றார்கள். தங்க இடம் தந்தார்கள். வழிபடுவதற்கு, அவர்கள் மதத்து ஆலயம் அமைக்க நிலமும் தந்தார்கள். கட்டுவதற்கு பொருள் உதவியும் தந்தார்கள்.

நமது பரந்த மனப்பான்மையே நமக்குப் பலவீனமாக ஆனது. நம்மவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஆட்சியாளர்கள் துணையுடன் வேகமாகப் பரப்பப்பட்டது. அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் நடைபெற்றது.

மதம் மாறினால் என்ன? ஹிந்துப் பண்பாடுதான் எம்மதமும் சம்மதம் எனச் சொல்கிறதே எனக் கேட்கலாம். உண்மையில் மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றம் என்றால் அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை.

ஓர் உதாரணம் குறிப்பிடுகிறேன் - மார்கழி மாதம் வந்துவிட்டால் தெருவின் இருபுறமும் உள்ள வீடுகளின் முன்பு மகளிர் மகிழ்ச்சியுடன் கோலமிடுவார்கள். அந்தத் தெருவிலேயே சிறப்பாகக் கோலமிடும் பெண்மணி மங்களம்தான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

ஆனால் அந்த ஆண்டு மங்களம் டீச்சர் மார்கழி மாதம் கோலமிடவேயில்லை. சில நாள்களாகவே அவர் வீட்டு வாசலில் கோலமிடப்படுவதில்லை. இதுகுறித்து பக்கத்து வீட்டு அம்மையார் காரணம் கேட்டார். மங்களம் சொன்ன பதில் - ""இனிமேல் நான் வீட்டு வாசலில் கோலமே இடமாட்டேன். காரணம் நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டேன். என் பெயரும் மங்களம் இல்லை''.

அடுத்த வீட்டு அம்மையாருக்கு அதிர்ச்சி - ""மதம் மாறிப் போனா கோலம் போடக்கூடாதென்று எவடீ சொன்னா?'' என்றாரே பார்க்கலாம்.

அடுத்த வீட்டு அம்மையாருக்கு பண்பாடு என்றால் என்ன என்பது புரிந்துவிட்டது. மதம் மாறிய மங்களத்துக்கு அது மரத்துவிட்டது. கோலம் இடுவது இந்த நாட்டின் பண்பாடு. அது எல்லா மதத்துக்கும் பொது.

கோலம் இடுவது மட்டுமல்ல; வளையல் அணிவது; திலகம் இடுவது; மருதாணி வைப்பது; வாயிலிலே வாழைமரம், குருத்தோலை தோரணம், குத்து விளக்கு என பண்பாட்டின் சின்னங்களாக பல உள்ளன. இவை போய்விடுகின்றன. பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் எவரும் மத மாற்றத்தை எதிர்க்கவே செய்வார்கள்.

திருச்சியிலே ஒரு வீடு. உச்சிப்பிள்ளையாரே குலதெய்வம். வீட்டின் பூஜை அறையில் பிரதானமாக விநாயகர் படம் பெரிதாக அலங்கரிக்கும். அந்த வீட்டின் மூத்த மகன் அய்யப்பன் கோயிலுக்கு மாலை அணிந்தான். ஒரு அய்யப்பன் படத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தான். மலர் இடும்போது விநாயகருக்கும் ஒரு மாலை, அய்யப்பனுக்கும் மாலை. சரணம் விளிக்கும்போது கன்னி மூல மகா கணபதிக்கும் சரணம். அய்யப்ப சாஸ்தாவுக்கும் சரணம். இரு படங்களுக்கும் தீபாராதனை.

அடுத்தவன் ஆதிபராசக்தி வழிபாட்டுக்கு மாறினான். செவ்வாடை அணிந்தான். சக்தியை அம்மா பங்காரு அடிகள் பூஜிப்பதுபோல ஒரு படத்தை மாட்டினான். மாலையில் 3 படங்களுக்கும் மாலை. சக்தி கணேசா, சக்தி அய்யப்பா, சக்தி அம்மா என மூவருக்கும் வழிபாடு. மூன்று படத்துக்கும் தீபாராதனை.

மூன்றாமவன் இளையவன். நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் ஒரு கான்வென்டில் சேர்த்தனர். நல்ல படிப்பு எனறால் ஆங்கிலத்தில் பேசுகின்றபடி படிக்க வேண்டும் என்கின்ற கற்பனை. வீட்டில் தங்கிப் படித்தால் கெட்டுவிடுவான் (தமிழ் பேசி கெட்டுவிடுவான்) என்பதற்காக விடுதியில் தங்கிப் படிப்பு.

படித்து முடித்து அவன் வீடு திரும்பும்போது கழுத்திலே சிலுவை. கையிலே ஏசுநாதர் படம். தனது அறையிலேயே வைத்து தனி வழிபாடு. பெயரும் ஏதோ அன்னிய நாட்டுப் பெயராக மாற்றிக்கொண்டு விட்டான்.

மதமாற்றம் என்பது வழிபாடு மாற்றம் என்றால் பெயர் மாறுவானேன்? பெற்றோர்களும் முன்னோர்களும் வழிபட்ட தெய்வத்தை மதிக்கின்ற பரந்த மனப்பான்மை மறந்து போனதேன்? இந்த தேசத்தின் பண்பாட்டின் அடிப்படையே பரந்த மனப்பான்மை என்றால் அது மதம் மாறியவருக்கு மறந்து போவதேன்?

எனவே பண்பாட்டைக் காக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் மதமாற்றத்தை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

Read more...

அமெரிக்காவின் திவால்!

ப்பொழுது இருக்கும் உலக பொருளாதார நிலையில் இதைப் பற்றி விவாதிப்பது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை.



அமெரிக்கா திவாலாகி விட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சை அமெரிக்காவின் நிலைமை நினைவூட்டுகின்றது என்கிறார் ஒரு பத்திரிகையாளர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள். அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.
லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆலைகள், ஐ.டி துறைகளிலும் திடீரென்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றார்கள்.


கடனை அடைக்க முடியாததால் வெளியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான மக்களின் வீடுகள் அமெரிக்காவில் வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கின்றன. ஐ.டி. தொழிலின் மையமான கலிபோர்னியா மாநிலமே திவால் மாநிலமாகி விட்டது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் நிதி ஆலோசகரான கார்த்திக் ராஜாராம் என்ற என்.ஆர்.ஐ இந்தியர், தனது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் அனைவரையும் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில் அவர் குவித்த கோடிகள் ஒரே நாளில் காணாமல் போயின.


தவணை கட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 50 இலட்சம் என்று அறிவித்திருக்கின்றார் அமெரிக்க நிதியமைச்சர் பால்சன். அதாவது, அரசின் கணக்குப்படியே சுமார் 3 கோடி மக்கள், அமெரிக்க மக்கள் தொகையில் 10% பேர் புதிதாக வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கும் வீடுகள் சூறையாடப்படுகின்றன.


ஆட்டோமொபைல் தொழிலில் உலகின் தலைநகரம் என்றழைக்கப்பட்ட டெட்ராய்ட், அமெரிக்காவின் திவால் நகரமாகி விட்டது. அங்கே வீட்டின் விலை உசிலம்பட்டியைக் காட்டிலும் மலிந்து விட்டது. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை ரூ. 75,000.
அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நிலநடுக்கம், உலகெங்கும் பரவுகின்றது. ஒரு ஊழியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்று அலறுகிறார் பிரெஞ்சுப் பிரதமர்.


எந்த நாட்டில் எந்த வங்கி எப்போது திவாலாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. வங்கிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். “ஐரோப்பிய வங்கிகள் திவாலானால் 50,000 யூரோக்கள் வரையிலான டெபாசிட் தொகையைக் கொடுக்க ஐரோப்பிய அரசுகள் பொறுப்பேற்பதாக” ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது. இந்தியா உள்ளிட்டு உலகெங்கும் பங்குச்சந்தைகள் கவிழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.


உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி என்றும், உலக முதலாளித்துவத்தின் காவலன் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய முதலாளி வர்க்கத்தின் முகத்தில் உலகமே காறி உமிழ்கின்றது.
“பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு” என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் ‘மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்’ என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது.


திவால்கள் இத்துடன் முடியப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. முதலாளிவர்க்கத்தைக் கைதூக்கி விடுவதற்காக 70,000 கோடி டாலர் (35 இலட்சம் கோடி ரூபாய்) பணத்தை அரசு வழங்க வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் தீர்மானத்தை அமெரிக்காவின் ‘மக்கள் பிரதிநிதிகள்’ ஒருமனதாக நிறைவேற்றி விட்டார்கள்.
அமெரிக்க மக்களோ ஆத்திரத்தில் வெடிக்கிறார்கள். உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறையான வால் ஸ்ட்ரீட் எங்கும் மக்கள் கூட்டம். “தே.. பசங்களா, குதிச்சுச் சாவுங்கடா..” என்று வங்கிகளை அண்ணாந்து பார்த்துத் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள் மக்கள். “குப்பைக் காகித்தை வாங்கிக் கொண்டு முதலாளிகளுக்குப் பணம் கொடுக்கும் அரசே, இந்தா என் வீட்டுக் குப்பை. எனக்கும் பணம் கொடு!” என்று ஆர்ப்பாட்டம் நடத்துகின் றார்கள்.


இத்துனை அமெரிக்க வங்கிகளை ஒரே நேரத்தில் திவாலாக்கி, உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலைய வைத்திருக்கும் இந்த நிதி நெருக்கடியைத் தோற்றுவித்தது யார்? அமெரிக்காவின் ஏழைகள்! அவர்கள்தான் உலகத்தைக் கவிழ்த்து விட்டார்களாம். பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள இந்த பிரம்மாண்டமான கேள்விக்கு, இரண்டே சொற்களில் பதிலளித்துவிட்டன முதலாளித்துவப் பத்திரிகைகள். “கடன் பெறவே தகுதியில்லாதவர்கள், திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் என்று வந்தவர் போனவருக்கெல்லாம் வங்கிகள் கடன் கொடுத்தன. வீடுகட்டக் கடன் கொடுத்ததில் தவறில்லை. ஆனால், அது சரியான ஆட்களுக்குக் கொடுக்காததுதான் இந்த நிலைக்குக் காரணம்.


எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு! இதே உண்மையைத்தான் எல்லா பொருளாதாரக் கொலம்பஸ்களும் வேறு வேறு வார்த்தைகளில் கூறுயிருக்கின்றனர். முதலாளி வர்க்கத்தை இவ்வளவு எளிதாக ஏழைகளால் ஏமாற்ற முடியுமா? நண்பர்களுக்கு 50, 100 கடன் கொடுப்பதென்றால் கூட நாமே யோசிக்கின்றோமே, வந்தவன் போனவனுக்கெல்லாம் இலட்சக்கணக்கில் வாரிக்கொடுத்திருக்கும் அமெரிக்க முதலாளிகளை வள்ளல்கள் என்பதா, முட்டாள்கள் என்பதா? இரண்டுமே இல்லை. அவர்கள் கிரிமினல்கள்.


அமெரிக்காவின் உழைக்கும் மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் மட்டுமல்ல, பல்வேறு நாட்டு மக்கள், சிறு முதலீட்டாளர்கள், வங்கிகள் .. அனைத்துக்கும் மேலாக சக நிதிமூலதனச் சூதாடிகள் எல்லோரையும் ஏமாற்றிச் சூறையாடியிருக்கும் இந்த மோசடியை என்ன பெயரிட்டு அழைப்பது? ஆயிரம், இரண்டாயிரம் போயிருந்தால் அது திருட்டு. இலட்சக் கணக்கில் போயிருந்தால் கொள்ளை என்று கூறலாம். பறிபோயிருப்பது பல இலட்சம் கோடி. அதனால்தான் மிகவும் கவுரவமாக இதனை ‘நெருக்கடி’ என்று கூறுகின்றது முதலாளித்துவம்.
வந்தவன் போனவனுக்கெல்லாம் வாரிக் கொடுத்ததனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் ‘அமெரிக்காவின் சப் பிரைம் நெருக்கடி’ தோன்றிய கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.


தயக்கமில்லாமல் கடன் வாங்குவதற்கும், நுகர்பொருட்களை வாங்குவதற்கு அந்தப் பணத்தைச் செலவிடுவதற்கும் மக்களை நெடுங்காலமாகவே பயிற்றுவித்து பொம்மைகளைப் போல அவர்களை ஆட்டிப்படைத்து வருகின்றது அமெரிக்க முதலாளி வர்க்கம். சராசரியாக ஒரு அமெரிக்கனிடம் 10 கடன் அட்டைகள் இருக்கும் என்பது மிகக் குறைந்த மதிப்பீடு. அங்கே வட்டி விகிதத்துக்கு உச்சவரம்பு இல்லை என்பதால் கடன் அட்டைக்கு 800% வட்டி கூட உண்டு. சராசரியாக ஒரு அமெரிக்கன் தனது மாதச்சம்பளத்தில் 40% தொகையைக் கடன் அடைக்க ஒதுக்குகின்றான். ஒரு கல்லூரி மாணவனின் சராசரி கல்விக்கடன் 10 இலட்சம் ரூபாய். இதற்கு மேலும் கடன் வாங்கிச் செலவு செய்யும் சக்தி அவர்களுக்கு இல்லாமல் போனதால், நுகர்பொருள் முதல் ரியல் எஸ்டேட் வரை எல்லாத் தொழில்களிலும் சந்தை தேங்கியது. கடன் வாங்க ஆளில்லாததால் வட்டி வருவாய் இல்லாமல், வங்கித் தொழிலும் தேங்கியது. கடனுக்கான வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்தன. இந்தத் தருணத்தில்தான் தங்கள் லாபப் பசிக்கு புதிதாக ஒரு இரையைக் கண்டுபிடித்தார்கள் வங்கி முதலாளிகள்.


“வேலை இல்லாத, வருமானமும் இல்லாத ஏழைகளிடம் அடகு வைக்க எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நேர்மையாகக் கடனை அடைப்பார்கள். அடைத்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு வேறு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே வட்டியை உயர்த்தினாலும் அவர்களுக்கு வேறு வழி இல்லை. இவர்களைக் குறி வைப்போம்” என்று முடிவு செய்தார்கள்.
ஒருவேளை பணம் வரவில்லையென்றால்? அந்த அபாயத்திலிருந்து (risk) தப்பிப்பதற்கு வால் ஸ்ட்ரீட்டின் நிதி மூலதனச் சூதாட்டக் கும்பல் வழி சொல்லிக் கொடுத்தது. 10 இலட்சம் ரூபாய் வீட்டுக் கடன், அந்தக் கடன் ஈட்டக் கூடிய வட்டித் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சம் என்று வைத்துக் கொள்வோம். கடன் கொடுக்கும் வங்கி, கடன் வாங்குபவருடைய அடமானப் பத்திரத்தை உடனே நிதிச் சந்தையில் 10.5 இலட்சத்துக்கு விற்றுவிடும். இப்படியாக கொடுத்த கடன்தொகை உடனே கைக்கு வந்து விடுவதால், பத்திரத்தை விற்க விற்க கடன் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். கொடுத்தார்கள்.


நிதிக் கம்பெனிகளும், இன்சூரன்சு நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் (FIRE) கூட்டணி அமைத்து ரியல் எஸ்டேட் சந்தையைச் சுறுசுறுப்பாக்கி விலைகளை இருமடங்கு, மும்மடங்காக ஏற்றினார்கள். ‘ஒரு டாலர் கூடக் கொடுக்க வேண்டாம். வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள். தயங்கியவர்களிடம், ‘10 ஆண்டுகளில் நீங்கள் கட்டப்போகும் தொகை இவ்வளவுதான். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின் உங்களது வீட்டின் விலை 10 மடங்கு கூட உயர்ந்திருக்கும்’ என்று ஆசை காட்டினார்கள். ‘வட்டியை மட்டும் கட்டுங்கள். அசலை அப்புறம் பார்த்துக் கொள்வோம்’ என்று வலையில் வீழ்த்தினார்கள். ‘அதுவும் கஷ்டம்’ என்று மறுத்தால், ‘பாதி வட்டி மட்டும் கட்டுங்கள். மற்றதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்’ என்றார்கள். வீழ்த்தப்பட்டவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் கறுப்பின மக்கள் மற்றும் லத்தீன் அமெரிக்க வம்சாவளியினர். மற்றவர்கள் வெள்ளையர்கள்.


இந்த மக்கள் யாரும் வீடு வாங்கக் கடன் கேட்டு வங்கிக்கு செல்லவில்லை என்பது மிகவும் முக்கியமானது. நம் ஊரில் ‘கடன் வேண்டுமா?’ என்று தொலைபேசியில் கேட்டு நச்சரிப்பதைப் போல ‘வீடு வேண்டுமா?’ என்று நச்சரித்தார்கள். 2006 ஆம் ஆண்டு வீட்டுக்கடன் வாங்கிய 64% பேரைத் தரகர்கள்தான் வலைவீசிப் பிடித்து வந்தனர். 20% பேர் சில்லறை வணிகக் கடைகளின் மூலம் மடக்கப்பட்டனர். இவர்கள் வாங்கும் வீடுகளின் சந்தை விலையை மதிப்பிடும் நிறுவனங்கள் (appraisers) வேண்டுமென்றே வீட்டின் மதிப்பை ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டி மதிப்பிட்டுக் கடன் தொகையை அதிகமாக்கினர். வீடு வாங்கச் செலவு செய்யும் பணத்துக்கு வரிவிலக்கு அறிவித்து ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்கப்படுத்தியது அரசு.


ரியல் எஸ்டேட் விலைகள் மேலும் ஏறத் தொடங்கின. 2004 இல் பத்து இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீட்டின் சந்தை மதிப்பு, 2005 இல் 20 இலட்சம் ரூபாய் என்று உயர்ந்தவுடன், இன்றைய சந்தை மதிப்பை அடிப்படயாகக் கொண்டு மேலும் 7,8 இலட்சம் கடன் அவர்கள் சட்டைப் பைக்குள் திணிக்கப்பட்டது. ‘விலைகள் ஏறியபடியேதான் இருக்கும்’ என்று மக்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.


ஆனால் வாங்கிய கடனைக் கட்டவேண்டியவர்கள் மக்களல்லவா? வட்டியோ மீட்டர் வட்டி! அமெரிக்காவிலோ வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. உணவு, பெட்ரோல் விலை உயர்வு வேறு. மாதம் 1000 டாலர் கொடுத்து வாடகை வீட்டில் இருந்தவர்கள் இப்போது சொந்த வீட்டுக்கு 3000 டாலர் தவணை கட்ட வேண்டியிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு 10, 20 மாதங்கள் கட்டிப் பார்த்தார்கள். முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகள், குடும்பச் சண்டைகள், மணவிலக்குகள்.. என குடும்பங்கள் சித்திரவதைப் பட்டன. ‘ஜப்திக்கு எப்போது ஆள் வருமோ’ என்று நடுங்கினார்கள். போலீசு வரும்வரை காத்திருக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டார்கள். சென்ற ஆண்டில் மட்டும் 22 இலட்சம் வீடுகள் இப்படிக் காலியாகின.
விளைவு ரியல் எஸ்டேட் சூதாடிகள் ஊதி உருவாக்கிய பலூன் வெடித்து விட்டது. 5 இலட்சம் டாலருக்கு வாங்கிய வீடு ஒரு இலட்சத்துக்கு விழுந்து விட்டது. எனினும் 5 இலட்சத்துக்கு உரிய தவணையைத்தான் கட்டவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டதால், தவணை கட்டிக் கொண்டிருந்தவர்களும் ‘வீடு வேண்டாம்’ என்று முடிவு செய்து வெளியேறத் தொடங்கினார்கள். சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்தது.


இந்தக் கொடுக்கல் வாங்கலில், மக்கள் யாரை ஏமாற்றினார்கள்? அவர்கள் மாதத்தவணை கட்டியிருக்கின்றார்கள். முடியாத போது வீட்டைத் திருடிக் கொண்டு ஓடவில்லை. திருப்பி ஒப்படைத்து விட்டார்கள். வீடு இருக்கின்றது. ஆனால் மதிப்பு இல்லாமல் போய்விட்டது. அதற்கு மக்கள் என்ன செய்ய முடியும்? ரியல் எஸ்டேட்டின் சந்தை விலையை அவர்களா நிர்ணயித்தார்கள்? சந்தை எழுந்ததற்கும் வீழ்ந்ததற்கும் அவர்களா பொறுப்பு?


ஒரு வீட்டின் உண்மையான மதிப்பை எப்படி நிர்ணயிப்பது? அந்த வீடு எந்தப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றதோ, அந்தப் பொருட்களை உருவாக்குவதற்கும், அப்பொருட்களை இணைத்து அந்த வீட்டை உருவாக்குவதற்கும் செலவிடப்பட்ட உழைப்புச் சக்தியின் மதிப்புதான் அந்த வீட்டின் மதிப்பு என்கிறார் மார்க்ஸ். ஒரு மாபெரும் முதலாளித்துவ மோசடியில் வாங்கிய அடி, மார்க்சியத்தின் வாயிற்கதவுக்கு அமெரிக்க மக்களை இழுத்து வந்திருக்கின்றது.


எனினும் முதலாளித்துவச் சந்தையின் விதி இதை ஒப்புக்கொள்வதில்லையே! 10 இலட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கி, ஒரு இலட்சம் தவணை கட்டி விட்டு, மீதியைக் கட்ட முடியாமல் வீட்டை வங்கியிடம் ஒப்படைத்தால் (foreclosure), வங்கி அந்த வீட்டை ஏலம் விடும். தற்போது வீடு 2 இலட்சத்துக்கு ஏலம் போகின்றது என்று வைத்துக் கொண்டால், மீதி 7 இலட்சம் பாக்கியை கடன் வாங்கியவன் கட்டியாகவேண்டும். அதாவது இல்லாத வீட்டுக்கு தவணை கட்டவேண்டும். இதுதான் முதலாளித்துவ சந்தை வழங்கும் நீதி. அது மட்டுமல்ல, இவ்வாறு தவணை கட்டத் தவறுபவர்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் எந்த இடத்திலும் கடன் வாங்கவோ கடன் அட்டையைப் பயன்படுத்தவோ முடியாது. சுருங்கக் கூறின் வாழவே முடியாது. இதுதான் அமெரிக்கச் சட்டம். “இந்தச் சட்டத்தைத் தளர்த்தி நிவாரணம் வழங்கு” என்று கோருகின்றார்கள் மக்கள்.
திவாலான மக்களுக்கு நிவாரணம் தர மறுக்கும் அமெரிக்க அரசு மதிப்பிழந்து போன குப்பைப் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து விலை கொடுத்து வாங்க 35 இலட்சம் கோடி ரூபாய் வழங்குகின்றது.
ஏன், மக்களுடைய அந்த வரிப்பணத்தை மக்களுக்கே நிவாரணமாகக் கொடுத்தால்? அப்படிக் கொடுத்தால், உலக முதலாளித்துவமே வெடித்துச் சிதறிவிடும். ஏனென்றால் அந்த வீட்டு அடமானக் கடன் பத்திரங்களில் பெரும்பகுதி இப்போது உலகத்தின் தலை மீது இறங்கிவிட்டது.
பொதுவாக, கடன் என்பது ‘கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையிலான ஒப்பந்தம்’ மட்டுமே. ஆனால் நிதி மூலதனத்தின் உலகமயமாக்கல் இந்தக் கடன் பத்திரங்களையும் உலகமயமாக்கியிருக்கின்றது.


இத்தகைய கடன் பத்திரங்களின் நம்பகத்தன்மைக்கு சான்றிதழ் கொடுக்கும் பிரபல நிறுவனங்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு, இந்த வாராக் கடன்களுக்கு ‘மிக நம்பகமான கடன்கள்’ என்று பொய் சர்டிபிகேட் கொடுத்தன. இந்த பொய் சர்டிபிகேட்டைக் காட்டி 11.8 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் என்பது இலட்சம் கோடி) மதிப்புள்ள ஒரு கோடி கடன் பத்திரங்களை அமெரிக்கச் சூதாடிகள் உலக நிதிச்சந்தையில் விற்று விட்டார்கள்.


பிறகு அந்தப் பத்திரங்களின் மீதும் சூதாட்டம் தொடங்கியது! ‘இந்தக் கடன் வசூலாகாவிட்டால் இழப்பீடு தருவதாக’ச் சொன்ன இன்சூரன்சு கம்பெனிகளின் காப்பீட்டுப் பத்திரங்கள், ‘ஒவ்வொரு கடனும் வருமா, வராதா என்று அவற்றின் மீது பந்தயம் கட்டிச் சூதாடிய’ டெரிவேட்டிவ்கள்.. என தலையைச் சுற்றும் அளவுக்கு விதம் விதமான சூதாட்ட உத்திகளை உருவாக்கி, ஒரு கோடி கடன்பத்திரங்களின் மீது 1000 கோடி பரிவர்த்தனைகளை (transactions) நடத்திவிட்டார்கள் வால்ஸ்ட்ரீட் சூதாடிகள்!


பறவைக் காய்ச்சலை விடவும் பரவலாக, பருவக்காற்றை விடவும் வேகமாக உலகெங்கும் பரவி யார் யார் தலையிலோ இறங்கி விட்டது இந்தக் கடன். இவற்றை முதலீடுகளாகக் கருதி வாங்கிய பிறநாட்டு வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பென்சன் ஃபண்டுகள் அனைத்தும் மரணத்தின் விளிம்பில் நிற்கின்றன. முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது அமெரிக்காவின் திவால்!


நாட்டாமையின் டவுசர் கிழிந்து விட்டது! உலக முதலாளித்துவத்தின் காவலன், சந்தைப் பொருளாதாரத்தின் மேன்மையை உலகுக்கே கற்றுக்கொடுத்த பேராசிரியன், ஐ.எம்.எஃப்., உலக வங்கி முதலான நிறுவனங்களின் மூலம் ஏழை நாடுகளின் மீது ஒழுங்கை நிலைநாட்டிய வாத்தியார், ஒரு மூணுசீட்டுக்காரனை விடவும் இழிந்த போர்ஜரிப் பேர்வழி என்ற உண்மை ‘டர்ர்ர்’ என்று கிழிந்து விட்டது. ஆயினும் இது உலக முதலாளித்துவம் சேர்ந்து நடத்திய ஒரு கூட்டுக் களவாணித்தனம் என்பதால் கிழிசலை கோட்டுக்குள் மறைக்க முயல்கின்றது உலக முதலாளி வர்க்கம்.


35 இலட்சம் கோடி ‘மொய்’ப் பணத்தை முதலாளிகளுக்கு வாரிக்கொடுக்கும் இந்த ‘சூதாடிகள் நல்வாழ்வுத் திட்டத்’துக்குப் பெயர், பிரச்சினைக்குரிய சொத்துக்கள் மீட்புத் திட்டடுமாம்! (Troubled Assets Recovery Programme). ஓ ‘அமெரிக்க ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கக் காசில்லை’ என்று கூறிய புஷ், சூதாட்டத்துக்கு காப்பீடு வழங்கியிருக்கின்றார்.


அமெரிக்க நிதி நிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்ட செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, ‘சோசலிச ரசியாவாக மாறுகின்றது அமெரிக்கா!’ என்று அச்செய்திக்கு விசமத்தனமாகத் தலைப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் நடந்திருப்பது என்ன? முதலாளிகளின் கடன்கள் அரசுடைமையாக்கப்பட்டிருக்கின்றன. பொதுச்சொத்தான மக்களுடைய வரிப்பணமோ தனியார்மயமாக்கப் பட்டிருக்கின்றது. இல்லாத வீட்டுக்கு அமெரிக்க மக்கள் கடன் கட்டவேண்டும். அது நேரடிக் கொள்ளை. அப்படிக் கொள்ளையடித்தவனுக்கு அரசு கொடுக்கும் 70,000 கோடி டாலரையும் மக்கள் இனி வரியாகக் கட்டவேண்டும். இது மறைமுகக் கொள்ளை! இதைவிடப் பட்டவர்த்தனமான ஒரு பகற்கொள்ளையை யாரேனும் நடத்த முடியுமா?


‘கல்வி, மருத்துவம், போன்ற எதையும் அரசாங்கம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கக்கூடாது’ என்ற கொள்கையை அமெரிக்காவில் அமல்படுத்தி வரும் அமெரிக்க அரசு, எழுபதாயிரம் கோடி டாலரை அமெரிக்க முதலாளிகளின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கின்றதே, இது மார்க்ஸின் கூற்றுக்கு நிரூபணமே அன்றி வேறென்ன?
“தொழில், வணிகம், நிதித்துறைகளில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருந்தால், நாங்கள் அப்படியே அறுத்துக் கத்தை கட்டிவிடுவோம்” என்று பேசிவந்த முதலாளி வர்க்கம், இதோ வெட்கம் மானமின்றி மக்கள் சொத்தைக் கேட்டுப் பகிரங்கமாகப் பிச்சையெடுக்கின்றது. முதலாளித்துவப் பத்திரிகைகள் எனும் நாலுகால் பிராணிகள், “அரசாங்கம் தலையிட்டு மக்களது வரிப்பணத்தைக் கொடுத்து இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்” என்று சூடு சொரணையில்லாமல் எழுதுகின்றன.
யாருடைய தயவில் யார் வாழ்கின்றார்கள்? முதலாளி வர்க்கத்தின் தயவில் உழைக்கும் வர்க்கம் வாழ்ந்து வருவதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமை உங்களது கண் முன்னே நொறுங்குவது தெரியவில்லையா? தெருக்கூட்டுபவர்கள், குப்பை அள்ளுபவர்கள், மேசை துடைப்பவர்கள் என்று கடையரிலும் கடையராய்த் தள்ளப்பட்ட அமெரிக்கத் தொழிலாளிகள், தமது வியர்வைக் காசில் வீசியெறிந்த வரிப்பணத்தைப் பொறுக்குவதற்கு முண்டியடிப்பவர்கள் யார் என்று அடையாளம் தெரிகின்றதா? அட! இவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் உலகப் பணக்காரர்கள் அல்லவா?

தாங்கள் அதிமேதாவிகள் என்றும், நிதிச் சந்தையின் அபாயகரமான வளைவுகளில் நிறுவனத்தைச் செலுத்தும் வல்லமை பெற்ற திறமைசாலிகள் என்றும் அதனால்தான் தாங்கள் ஆண்டுக்கு 400 கோடி, 500 கோடி சம்பளம் வாங்குவதாகவும் பீற்றிக் கொண்டிருந்தார்கள் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள். இந்த வெள்ளைக்காலர் கண்ணியவான்கள், ‘போர்ஜரி வேலை கள்ளக் கணக்கு பொய் சர்டிபிகேட் தயாரிக்கும் தொழிலில்’ ஈடுபட்டிருந்த நாலாந்தரக் கிரிமினல்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியவில்லையா?
பணம், பணத்தைக் குட்டி போடுவது போலவும், அப்படித்தான் இவர்கள் உலகக் கோடீசுவரர்கள் ஆகி, உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதாகவும் இவர்கள் உலகத்துக்குச் சொல்லி வந்தார்கள். அமெரிக்க மக்களையும் அவ்வாறே நம்ப வைத்தார்கள். “ரியல் எஸ்டேட்டில் பணம் போடு, ஒன்று போட்டால் நூறு ஆகும். பங்குச் சந்தையில் பணம் போடு, நூறு போட்டால் ஆயிரம்” என்று போதையூட்டினார்கள். “எல்லோரும் உட்கார்ந்து தின்றால் உழைப்பது யார், எல்லாரும் வட்டியில் வாழ வேண்டுமென்றால், வட்டி கட்டுவது யார்?” என்ற எளிய கேள்வி கூட அந்தப் போதை மயக்கத்தில் அமெரிக்க மக்களுக்கு உறைக்கவில்லை. இன்று? இல்லாத வீட்டுக்குத் தவணை கட்டும் ஏமாளிகளாக, தனது ஆயுட்கால உழைப்பு முழுவதையும் அடகு வைத்துச் சூதாடிய தருமனாகத் தெருவில் நிற்கின்றார்கள் அமெரிக்க மக்கள்.
உற்பத்தி மென்மேலும் சமூகமயமாகி வருகின்றது, உலகமயமாகி வருகின்றது. ஒரு காரின் பல்வேறு பாகங்கள் பத்து நாடுகளில் தயாரிக்கப்பட்டு, ஒரு இடத்தில் பூட்டப்படுகின்றன. ஒரு ஆயத்த ஆடையை ஒரு தையல்காரர் தைப்பதில்லை. அதுகூட 50 கைகள் மாறுகின்றது. இந்த உற்பத்தியினால் கிடைக்கும் ஆதாயமோ, ஒரு சிலர் கையில் மட்டும் குவிகின்றது. உழைப்பாளிகளின் கையில் காசில்லை.


அவர்களுடைய நிகழ்கால உழைப்பை ஒட்டச் சுரண்டிவிட்டதால், கட்டப்பட்ட வீடுகளை, உற்பத்தியான பொருட்களைத் விற்பதற்காக மக்களின் எதிர்கால உழைப்பையும் இன்றைக்கே சுரண்டிவிடத் திட்டம் தீட்டி கடன் தவணை என்ற வலையில் அவர்களை வீழ்த்துகின்றது முதலாளித்துவம். ரோமானிய அடிமைகள் ஒரு ஆண்டைக்கு மட்டுமே வாழ்நாள் அடிமையாக இருந்தார்கள். அமெரிக்க மக்களோ முதலாளி வர்க்கத்துக்கே வாழ்நாள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
புதிய வீடுகளைக் கட்டினால் வாங்க ஆள் கிடையாதென்பதால் பழைய வீடுகளின் ‘மதிப்பை’ ஒன்றுக்குப் பத்தாக உயர்த்துவதன் மூலம், இரும்புப் பெட்டியில் தூங்கும் பணத்தை (மூலதனத்தை) வட்டிக்கு விட்டு சம்பாதிக்க முனைந்தார்கள் அமெரிக்க முதலாளிகள். இதுதான் உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் ‘பொருளாதார வளர்ச்சி’. இது வளர்ச்சி என்றால் லாட்டரிக் குலுக்கலும், மூணு சீட்டும், நாடா குத்துவதும் கூடப் பொருளாதார வளர்ச்சிதான். இதுதான் பங்குச்சந்தை! இந்த சர்வதேச சூதாட்டக் கிளப்புக்குப் பெயர்தான் நிதிச்சந்தை!


“இந்த நிதிச்சந்தைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையெல்லாம் அகற்றி இந்திய வங்கிகளையும், காப்பீட்டுக் கழகத்தையும், நிதி நிறுவனங்களையும் சுதந்திரமாகச் சூதாட அனுமதிக்க வேண்டும். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உட்பட இந்திய மக்கள் அனைவரின் தாலியையும் அறுத்து, அடகு வைத்து சூதாடும் சுதந்திரம் முதலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்” என்ற கொள்கையைத்தான் நமது ஹார்வர்டு நிதி அமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!


எந்தச் சூதாட்டத்திலும் எல்லோரும் வெற்றிபெற முடியாது. சூதாட்டத்தின் ஒழுக்கவிதிகளை மீறுவதிலிருந்து சூதாடிகளைத் தடுக்கவும் முடியாது. போலிப் பத்திரங்களைத் தயாரித்து சக சூதாடிகளுக்கே அல்வா கொடுத்து விட்டார்கள் அமெரிக்கச் சூதாடிகள். ‘உலக சூதாடிகள் மனமகிழ் மன்றத்தையே’ மூடும் நிலை வந்துவிடுமோ என்று அஞ்சித்தான் உலகநாடுகளின் அதிபர்கள் தவிக்கின்றார்கள். “வங்கிகள் திவாலானால் அரசாங்கம் பணம் தரும்” என்று அவசரம் அவசரமாக ஆஜராகின்றார்கள்.


புதிதாக எதையும் உற்பத்தி செய்யாமல், உற்பத்தி செய்தவனின் பொருள் மீது சூதாடி, சூதாடி உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் இந்த ‘அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி’யின் உண்மையான பொருள் என்ன? இது உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்பவனின் உடலில் வளரும் கொழுப்பு! அந்த வகையில் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு இப்போது வந்திருப்பது மாரடைப்பு!


அமெரிக்காவுக்கு மாரடைப்பு என்றவுடன் அகில உலகத்துக்கும் வேர்க்கின்றது. உலக முதலாளித்துவத்தின் இதயமல்லவா? இந்த இதயம் இயங்குவதற்குத் தேவையான இரத்தமாகத் தமது நிதி மூலதனத்தை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் எல்லா நாடுகளும் நடுங்குகின்றன. செப்டம்பர் 7 ஆம் தேதியன்று அமெரிக்க அரசால் அரசுடைமை ஆக்கப்பட்ட ஃபான்னி, ஃபிரெட்டி ஆகிய இரு நிறுவனங்களில் மட்டும் சீனா, ஜப்பான், ரசியா, பெல்ஜியம், பிரிட்டன், மற்றும் வளைகுடா நாட்டு முதலாளிகள் போட்டிருக்கும் தொகை 1,50,000 கோடி டாலர்.

அமெரிக்க நிறுவனங்களில் பிற நாடுகள் பெருமளவில் முதலீடு செய்திருப்பது மட்டுமல்ல, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை நம்பி சீனா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் இயங்கி வருவதால், ‘பெரியண்ணன் சாய்ந்தால் உலகப் பொருளாதாரமே சீட்டுக்கட்டு போலச் சரிந்து விடும்’ என்று கலங்குகின்றது உலகம்.
‘புலியாக மாற வேண்டுமானால், புலிவாலைப் பிடிக்க வேண்டும்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், அமெரிக்காவின் வாலைப் பிடித்து வல்லரசாகி விடக் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கத்துக்கும் கை கால்கள் நடுங்குகின்றன.

மும்பை பங்குச் சந்தை பாதாளத்தை நோக்கிப் பாய்கின்றது. திவாலான அமெரிக்க இன்சூரன்சு கம்பெனியுடன் கூட்டணி அமைத்திருக்கின்றது டாடாவின் இன்சூரன்சு நிறுவனம். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியோ, கவிழ்ந்து விடாமல் இருக்க சர்க்கஸ் வேலை செய்கின்றது. திருப்பூரின் பனியன் ஜட்டி ஏற்றுமதியாளர்கள் முதல், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற அமெரிக்க அவுட்சோர்சிங் வேலைகளின் இறக்குமதியாளர்கள் வரை அனைவரும் அமெரிக்கா நலம்பெற ஆண்டவனுக்கு நெய்விளக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

‘அமெரிக்க நெருக்கடிகள் இந்தியாவில் பிரதிபலிக்காது என்று எண்ணுவது முட்டாள்தனம்’ என்கிறார் பொருளாதார அறிஞர் அலுவாலியா. ‘உலகப் பொருளாதாரமே ஒரு இழையில் பின்னப்பட்டிருப்பதால், அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவும் தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும்’ என்று சர்வதேசிய உணர்வுடன் பேசுகின்றார் மன்மோகன் சிங்.

அமெரிக்க வீழ்ச்சியின் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையும் சரியத் தொடங்கியவுடனே, ‘அரசாங்கம் முட்டுக் கொடுத்து நிறுத்தும்’ என்று அறிவித்தார் ப. சிதம்பரம். அமெரிக்கக் கடன் பத்திரங்களை வாங்கி இந்திய முதலாளிகள் நட்டமடைந்திருந்தாலோ, இந்திய வங்கிகள் கவிழ்ந்தாலோ நம்முடைய வரிப்பணத்திலிருந்து நிதியமைச்சர் அதனை ஈடுகட்டுவாராம்! அமெரிக்க முதலாளிகளின் உண்டியலில் இந்திய மக்களின் வரிப்பணமும் காணிக்கையாகச் செலுத்தப்படுமாம்!


தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையால் அர்ஜென்டினா, மெக்சிகோ, இந்தோனேசியா, தென் கொரியா போன்ற பல நாடுகள் திவாலாக்கப் பட்டிருக்கின்றன.
__________________
அன்புடன்
சக்தி




அமெரிக்கப் பொருளாதார நிலையை மிகச் சுருக்கமாகச் சொல்லலாம்... it is due to disintegration of family. இதே கருத்தை நான் சில வருடங்கள் முன்பு நம் தளத்தில் கூறி "டின்" வாங்கிக் கட்டியுள்ளேன்.. ஆனால் நான் அன்று சொன்னதெல்லாம் இன்று உண்மையாகிவிட்டது.

பல ஆசிய நாடுகளின் வாழ்க்கை முறைக்கும் (குறிப்பாக, இந்தியாத் துணைக் கண்டம், சீனா, சீனக்குடும்பங்கள் அதிகமாக வாழும், மலேசியா/சிங்கை போன்ற நாடுகள்) ஆங்கிலோ-சாக்சன் வாழ்க்கை முறைக்கும் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு தான் இந்த அமெரிக்கப் பொருளாதாராத்தின் சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணம்.

ஆசிய வாழ்க்கை முறை என்பது ஒரு குடும்பத்தை/ ஒரு சமுதாயத்தைச் சார்ந்தது. ஆனால் ஆங்கிலோ சாக்சன் முறை என்பது ஒரு தனி மனிதனைச் சார்ந்து வந்தது.

ஆசியாவில் (குறிப்பாக இந்தியாவில்) குடும்பம் என்பது தான் basic unit of society. ஒருவன் செய்யும் செயல்கள் எல்லாமே குடும்ப நலத்தைச் சார்ந்தவையாக அமையவேண்டும் என்று இந்தியச் சமுதாயம் எதிர்பார்க்கின்றது. ஒரு வீடு வாங்குவது என்றால் அது குடும்பத்திற்காக'; ஒரு திருமணம் செய்யவேண்டும் என்றால் குடும்பங்கள் இணைவதற்காக; ஒரு கார் வாங்குவதென்றால் ஒரு குடும்பத்தில் எல்லோரின் பயனுக்காக; ஒரு கடன் வாங்குவது கூட குடும்பத்தின் முழு பொறுப்பு. தனிவாழ்வின் நல்லது தீயவைகளை ஒரு குடும்பமே பார்த்துக்கொள்ளும். ஒரு மனிதன் தன் குடும்பத்தைப் புறக்கணித்தால் சமுதாயம் அவனைத் தாழ்வாகப் பார்க்கும். குடும்பம் மற்றும் சமுதாயத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் வாழ்க்கையில் பொருளாதாரமும் குடும்பத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். வியாபாரமும் குடும்பத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். இது social economic pattern. வயோதிகர்களை, குடும்பம், வாரிசுகள், உறவினர்கள், மற்றும் சமுதாயம் பார்த்துப் பாதுகாக்கும். அரசிற்கோ அல்லது இன்சூரன்ஸ் கம்பெனிக்கோ அந்தத் தலைவலி தேவையில்லை. குடும்பத்து வாரிசு அதைக் கவனித்துக்கொள்வார்.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் அப்படியல்ல. எப்போது மகனுக்கோ மகளுக்கோ 15-16 வயது ஆகிவிடுகின்றதோ... அவன்/அவள் குடும்பத்தில் இல்லை. குழந்தைகளுக்காக சேமிக்கவேண்டும் என்ற தேவையில்லை. தாய்தந்தையரை பராமரிப்பதற்காக சேமிக்கவேண்டுமே என்ற எண்ணம் இல்லை. இவ்வளவு ஏன்? மனைவிக்கோ/கணவனுக்காகவோ சேமிக்கவேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை. ஏனென்றால், இன்று கணவன் - மனைவி... நாளை யாரோ? அல்லது பந்தமில்லாமலேயே சேர்ந்து வாழலாம். பிரிந்தால்.. பிரிந்து செல்லலாம். நாளை என்பது என்ன? என்று நினைத்துப் பார்க்கத் தேவையே இல்லை. இன்று வாழவேண்டும், கூத்தாடவேண்டும், கொண்டாடவேண்டும் அவ்வளவுதான்.

இந்தியாவில் தன் மகன் மருத்துவக் கல்லூரி செல்லவேண்டும் என்பதற்காக குழந்தை ஒரு வயது இருக்கும் காலத்திலிருந்து தந்தை சேமித்துக் காப்பாற்றுவார். ஆனால் அமெரிக்காவில் அப்படி ஒரே ஒரு உதாரணம் காட்ட இயலுமா? உனக்கு வேண்டுமென்றால், நீயே 14 வயதிலிருந்து வேலை செய்து பொருள் ஈட்டி.. வேண்டும் என்று நினைத்தால் படி.. ஸ்காலர்ஷிப் கிடைத்தால் சரி.. இல்லையென்றால் என்னவோ செய்.. இப்போதைக்கு எனக்கு இருப்பதை நான் செலவு செய்து வெகுவாகக் கொண்டாடுகின்றேன்.. இது தான் ஒரு சராசரி அமெரிக்க (எல்லா ஆங்கிலோசாக்சன்) குடிமகனின் நினைப்பு.

சீனா, தாய்வான், தாய்லாந்து, சிங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குடும்ப சேமிப்பு என்பது வருமானத்தில் 20-30%. ஆனால் அமெரிக்காவில்?? மைனஸ் 3%. அதாவது இந்த வருட வருமானத்தை முழுமையாக செலவழித்துவிட்டு, அடுத்த வருடத்தின் வருமானத்தை அடமானம் வைத்து 3% கடன் வாங்கி செலவு செய்வது அமெரிக்க வாழ்க்கை முறை. குடும்பம் என்பது சமுதாயத்தின் ஆதாரமான unit ஆக இருந்தால் குடும்பத்தின் வருங்காலத்திற்காக சேமிப்பார்களே?? அது இல்லை.... பொருளாதாரம் லேசாக ஆட்டம் கண்டால் போதும்.. everything will fall like a pack of cards.

ஆசிய மக்கள் சேமிப்பார்கள்; சேமிப்பை அமெரிக்க வங்கியில் சென்று கொட்டுவார்கள். அமெரிக்கர்கள் அந்த சேமிப்பைஎல்லாம் கடனாக எடுத்து செலவு செய்து.. ஹவாயிலும் அலாஸ்காவிலும் விடுமுறை கொண்டாடி தூபம் விட்டுவிடுவார்கள். மேலும் மேலும் கடன் வாங்குவார்கள். அமெரிக்காவின் செலவினங்கள் எல்லாம் ஆசிய நாடுகளின் வருமானம்; ஆசியாவின் சேமிப்பெல்லாம் அமெரிக்காவின் கடனாக மாறும்... இது தான் நிலை. இந்த நிலைக்கு முழு முதற்காரணம் வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் முழுவதும் தனிமனிதனின் சுகத்தைச் சார்ந்து உள்ளது. சமுதாயத்திற்காகவோ, குடும்பத்திற்காகவோ சேமிக்கத் தேவையே இல்லை.

உலகில் மூன்று முக்கியமான பொருளாதார முறைகள் நடைமுறையில் வந்துள்ளன.

- பொதுவுடமை மற்றும் கம்யூனிஸம்

- முழுக்க முழுக்க சந்தைப் பொருளாதாரம் - அதாவது தனி மனிதனின் தேவைகளை உடனடியாக நிறைவு செய்யும் "செலவுப் பொருளாதாரம்" - crass capitalism

- சமுதாயம் மற்றும் குடும்ப நலனைச் சார்ந்த சேமிப்புப் பொருளாதாரம்.

முதலாவது totally impractical. அதனால் விரைவிலேயே பல்லிளித்துவிடும்.
இரண்டாம் முறை வெறும் வீக்கத்தைத் தான் ஏற்படுத்தும். பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும் ஆனால் படாரென்று வெடித்துவிடும் நீர்க்குமிழி
மூன்றாவது முறை (ஆசிய மற்றும் இந்திய முறை)தான் நீண்ட நாட்கள் வாழும், வாழவைக்கும் முறை.

வெள்ளைக்காரன் நமக்கெல்லாம் போதனை செய்வான். வங்கிகளில் basel 1, basel 2 எல்லாம் கையாளவேண்டும் என்று. ஆனால் அவன் ஒன்றும் செய்யமாட்டான். லேமன் ப்ரதர்ஸின் capital adequacy பற்றி படித்திருக்கின்றீர்களா? Basel 1 எனப்படும் பன்னாட்டு வங்கிகளின் நியமப்படி Capital adequacy அதாவது வழங்கியிருக்கும் மொத்தக் கடன்களில் வங்கி முதலாளிகளின் சொந்தப்பண இருப்பு - குறைந்தது 8% இருக்கவேண்டும். அதாவது மொத்தக் கடன்கள் 100 ரூபாய் என்றால் அதில் குறைந்தது 8 ரூபாய் சொந்தப் பணமாக இருக்கவேண்டும், 92 ரூபாயை வெளியிலிருந்து கடன் வாங்கலாம் (அதாவது டெபாஸிட்). இந்தியாவின் பாரம்பரிய ஆனால் சிறிய வங்கிகளான OBC, Andhra Bank, KVB, TMB போன்றவையில் CAR 13-14%க்கும் அதிகம். பெரிய வங்கிகளான SBI, Canara போன்றவை 10% இருப்பு உள்ளன. அமெரிக்கச் சந்தைப் பொருளாதாரத்தை வேதவாக்காகக் கருதி வரும் ICICIஇலும் 8%க்கு சற்று குறைவான CAR ஆனால் லேமன் ப்ரதர்ஸில் எப்படி என்று தெரியுமா? 0.3%க்கும் குறைவு. சொந்தப் பணம் 1 டாலர் என்றால், கடன் மற்றும் டெபாஸிட்டுகள் 372 டாலர். இந்த லட்சணத்தில் இந்தியாவின் வங்கிகள் Basel 2 norms பின்பற்றவில்லை அதனால் அவற்றினை வெளியேற்றுவோம் என்று கொக்கரித்தது federal reserve வங்கி. 372 கடன்காரர்களில் ஒரு ஆள் அம்பேல் ஆனாலும் வங்கியே அம்பேல் ஆகிவிடும் மிக அபாயகரமான நிலமை இருந்து வந்தது. அதை ஒரு தணிக்கையாளரும் கவனிக்கவில்லையா? வெறும் பிதற்றல். கடன் பிஸினஸில் நூற்றில் ஒன்று வராக்கடனாக இருப்பது மிகவும் சாதாரணமான நிலமை. இதில் 372 மடங்கு கடன் என்றால்? நிலமை என்னவாகும். இத்தகைய fake கடன்களை இன்சூர் செய்து வேறு வருகின்றனர். நல்ல வேளையாக இது போன்ற அபாயகரமான இன்சூரன்ஸ் வசதிகள் நம் நாட்டில் இல்லை.

அமெரிக்காக்காரன் செய்வது எப்போதுமே அப்படித் தான். இந்தியா போன்ற வலுவாக வளர்ந்து வரும் நாடுகளைக் கிண்டல் செய்வதில் ஒன்று குறைவில்லை. தன் நாட்டில் இருக்கும் ஓட்டைகள் கண்களூக்குத் தெரியாது.

எண்ணை விலையை எடுத்துக்கொள்ளுங்கள். எந்தப் படுபாவி இது போன்று commodity derivatives trading அறிமுகப் படுத்தினானோ தெரியவில்லை? எண்ணை உற்பத்தியாளர்கள்; எண்ணை வியாபார நிறுவனங்கள்; எண்ணை பயன்பாட்டாளர்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பேரல் எண்ணை வியாபரம் செய்தால், அதே நேரத்தில் 528 பேரல் வியாபாரத்தை வெறும் காகிதத்தில் (derivative) வியாபாரம் செய்திவிடுவார்கள் அமெரிக்க வங்கிகள் மற்றும் wall street வியாபாரிகள். 528 பேரல் வாங்கி விற்பவர்களுக்கு எண்ணை என்றால் எந்த நிறத்தில் இருக்கும் என்றே தெரியாது... வெறும் "எண்ணை..... இத்தனை ஆயிரம் பேரல்" என்று காகிதத்தில் எழுதி, அக்காகிதத்தை trading செய்பவர்கள். இவர்கள் அடித்த கூத்து தான் கடந்த சில மாதங்களாக எண்ணை விலை கிடுகிடுவென்று உயர்ந்து, பல உலக நாடுகளை ransomஇல் நிறுத்தி வைத்தார்கள் இந்த போலி அமெரிக்க வியாபார முறையினால். இப்போது வாங்குகின்றார்கள்.. அடி மேல் அடி... வாங்குவார்கள்.

இந்தியப் பொருளாதாரத்தில் இதனால் ஒரு சில பாதிப்புகள் ஏற்படலாம்.. ஏனென்றால், கடந்த சில வருடங்களாக நம்மவர்களும் பைத்தியக்காரத்தனமாக தங்கள் பொருளாதாரத்தை முழுமையாக அமெரிக்காவை நோக்கித் திருப்பியுள்ளார்கள். ICICI போன்ற சில பைத்தியக்கார வங்கிகள் அமெரிக்க முறையைப் பின்பற்றி paper tradingஇல் இறங்கி கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்கள் சுட்டுக்கொண்டாகிவிட்டது. அத்துடன் சில பெரிய மென்பொருள் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குறையலாம். புது ரக வங்கிகள் கண்ட கண்ட கடன்களைக் கண்டகண்டவர்களுக்குக் கூவிக் கூவி விற்கும் அபாயகரமான கலாச்சாரம் அடிபடுவதால், அதில் ஈடுபட்டிருக்கும் சில ஆயிரம் ஊழியர்களுக்க்கு வேலை போகலாம். ஆனால் பொருளாதாரத்தில் அடிப்படை மிக ஸ்திரமாக இருப்பதால், ஆட்டம் காணாது. அமெரிக்கப் பைத்திய அரசாங்கம் செய்வது போல் 780 பில்லியன் write off செய்யும் கண்மூடித்தனமான பைத்தியச் செயல்கள் நம் நாட்டில் நடைபெறும் கேவலம் நடக்காது.

இனி நம் மூளையைப் பயன்படுத்துவோம். அந்நியன் சொல்வதை கண்மூடி நம்பவேண்டாம். நம்முடைய சமுதாய அமைப்புத் தான் உலகில் சிறந்தது. அதைக் கைவிடவேண்டாம். அமெரிக்க மாயைக்கு மயங்கி ஆசியர்களின் குடும்பப் பொருளாதாரத்தைச் சிதைக்க வேண்டாம்.

Read more...

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP