ஸ்காண்டிநேவியன் கன்ட்ரீஸ்
>> Sunday, May 24, 2009
நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் ஐரோப்பிய கண்டத்தில்
அடுத்தடுத்து உள்ள நாடுகள். இவற்றை, "ஸ்காண்டிநேவியன் கன்ட்ரீஸ்'
என்றும் அழைப்பர். இந்த நாடுகளில் குளிர்காலம் அதிகம்... குளிர்
என்றால் பனி பொழியும் குளிர். குளிர் நேரத்தில் வெளியே செல்ல
வேண்டுமென்றால், குறைந்த பட்சம் 12 கிலோ எடையுள்ள ஆடைகள் அணிந்து
தான் செல்ல முடியும். தமிழ்நாட்டை விட இரண்டரை மடங்கு
பரப்பளவுள்ள நார்வே நாட்டின் ஜனத் தொகை 4 கோடியே 50 லட்சம் தான்;
தமிழ்நாட்டின் ஜனத்தொகை 6 கோடியே 25 லட்சம். இந்த நாட்டின் தனி
நபர் சராசரி வருமானம் ஆண்டுக்கு 15 லட்சம்; நம்ம ஊர் சராசரி
வருமானம் தான் உங்களுக்குத் தெரியுமே!
இப்படி ஒரு செல்வம் கொழிக்கும் நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுவது
மிக, மிக சுலபமாக இருந்தது. இதை நன்கு பயன்படுத்திக் கொண்டனர்
இலங்கைத் தமிழர்கள். இலங்கையில் பிரச்னைகள் ஆரம்பித்த பிறகு,
சாரி, சாரியாக இந்நாட்டில் தஞ்சம் புக ஆரம்பித்தனர்.
அகதிகளாக வரும் ஒவ்வொரு தனி நபருக்கும் உதவித் தொகையாக மாதம் 40
ஆயிரமும், குடியிருக்க வீடும் கொடுத்து விடும் அந்நாட்டு அரசு.
ஒரே ஒரு கண்டிஷன்... அந்நாட்டு மொழியை கண் டிப்பாக படிக்க
வேண்டும். இதற்காக பள்ளிகளுக்குச் சென்று ஒப்புக்கு படித்து
வருகின்றனர் இலங்கை தமிழர்கள். அந்த நாட்டில் வேலை கிடைத்து
சென்றார் அந்துமணி வாசகி ஒருவர். அவ்வப்போது ஈ-மெயில் அனுப்பிக்
கொண்டிருப்பார். வேலைக்குச் சென்ற ஆறாவது மாதத்தில்
திடுதிப்பென்று வேலையை விட்டு விட்டு தமிழகம் வந்து சேர்ந்து
விட்டார். என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திக்க நேரம்
கேட்டார். சந்தித்தோம்!
"சார்... மாதம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் சம்பளம் கொடுத்தனர்...
இருந்தும் நம்ம ராமராஜன் பாடியது போல, "நம்மூரப் போலாகுமா?'
என்னால் அங்கே குப்பை கொட்ட முடியலே! குளிர்... குளிர்...
குளிர்தான்! அங்கே குடும்ப வாழ்க்கை என்ற, "கான்செப்டே' இல்லை.
கிழவன், கிழவி என தனித் தனியே வாழ்கின்றனர்.
"திருமணம் செய்து கொள் ளாமல் சில காலம் சேர்ந்து வாழ்ந்து
குழந்தைப் பெற்றுக் கொள்கின்றனர்; பின் பிரிந்து சென்று
விடுகின்றனர். குழந்தை கள் வளர்ந்த பிறகு யாருடன் வாழ்கிறதோ,
அவரைப் பிரிந்து சென்று விடுகின்றன. ஓரினச் சேர்க்கை மிக அதிகம்;
இதை அரசாங்கமே அங்கீகரித்துள்ளது.
"அதே போல ஊசி மூலம் ஏற்றிக் கொள்ளும் போதை பழக்கமும் அதிகம்.
இதில் கொடுமை என்னவென்றால் பலரும் ஒரே ஊசியைப் பயன்படுத்தி
எய்ட்ஸ் பரவி விடக் கூடாது என்பதால், நகரின் முக்கியப்
பகுதிகளில் வேன்களில் வந்து அரசே சிரஞ்சுகளை சப்ளை செய்வது தான்.
"அதைப்போல வயதுக்கு வந்த 15, 16 வயதுடைய சிறுவர்களோ, சிறுமியோ
மாலை நேரத்தில் வெளியே சென்றால், "காண்டம் இல்லாமல் செயல்பட
வேண்டாம்...' என மகனிடமும், "காண்டம் இல்லாமல் அனுமதிக்காதே...'
என மகளிடமும் தாயோ, தந்தையோ கூறி அனுப்பும் அவலம் நடக்கிறது.
"இங்கு குழந்தை பிறப்பு மிகக் குறைவு. குழந்தை பெற்றுக்
கொண்டால், அதை வளர்ப்பதற்கு அரசே பணம் தருகிறது. பிறப்பு விகிதம்
குறைவு என்பதால், இங்கு முதி யோர் எண்ணிக்கை மிக அதிகம்.
முதியோருக்கு, "சோஷியல் செக்யூரிட்டி' என்ற பெயரில் பென்ஷன் போல
ஒரு பெரிய தொகையை அரசாங்கமே கொடுக்கிறது. இது போக 58 வயதை
தாண்டியவர்கள் தமக்கு உதவியாளர் ஒருவரை பணியமர்த்திக் கொள்ளலாம்.
அவரது சம்பளத்தையும் அரசே கொடுத்து விடும்.
"இப்படி கிடைக்கும் பணத்தை செலவு செய்யத் தெரியாமல் சேர்த்து
வைத்து, நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மிகக் கொடுமையான குளிர்
மாதங்களில் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளுக்கு வந்து, அங்குள்ள
விலை மாதர்களிடம் கொட்டிக் கொடுத்து விட்டுச் செல்கின்றனர்.
"அரசின் மொத்த வருமானத்தில் 65 சதவீதத்திற்கும் மேல் இதுபோல
முதியவர்களுக்கும், அகதிகளுக்கும் செலவிட நேர்வதால், அகதிகளை
வெளியேற்றி பெரும் பணத்தை மிச்சம் பிடிக்க நார்வே அரசு
முயல்கிறது. இதற்காகவே இலங்கை அரசையும், புலிகளையும் பேச வைத்து
சமரச முயற்சியில் ஈடுபட்டது நார்வே அரசு.
"நார்வேயில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்த சமரச உடன்பாட்டில்
சிறிதும் உடன்பாடில்லை. காரணம், சமரசம் ஏற்பட்டு விட்டால்,
மேற்கொண்டு அவர்கள் அகதிகள் ஸ்டேட்டஸில் தொடர்ந்து நார்வேயில்
வசிக்க முடியாது; அவர்களை அங்கிருந்து நார்வே அரசாங்கம்
வெளியேற்றி விடும்.
"இப்படிப்பட்ட இறுக்கமான சூழலில் சொந்த பந்தம், நண்பர்கள், நமது
உணவு, நமது சூழல் ஆகியவற்றை விட்டு வாழ எனக்குப்
பிடிக்கவில்லை... லட்சத்திற்கு மேல் சம்பளம் கிடைத்தும்...இதோ
நான் இன்று ஒரு அன்எம்ப்ளாய்ட் போஸ்ட் கிராஜுவேட். என் மதம்
சார்ந்த கல்லூரி ஒன்றில் வேலை கிடைக்கும் நம்பிக்கையுள்ளது...'
என்று முடித்தார்.
0 comments:
Post a Comment