நான் தமிழன் (பாகம்-2)

>> Friday, January 2, 2009

எந்தச் சமுதாய மக்களாக இருந்தாலும் உறவின்முறையோடு `அண்ணாச்சி' என்று அன்போடு அழைக்கும் நாடார் சமூகத்தார், தாங்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்று பிரகடனப் படுத்தியதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கப் புறப்பட்டுவிட்டார்கள்.

இதனால் பல்வேறு இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. நாடார்கள் ஒன்று சேர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்தது. ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு மேலே ஆடை உடுத்திக்கொண்டனர். பொது இடங்களில் தங்களது மேல் ஆடையைப் பறிக்க முயன்றவர்களை எதிர்த்துத் தாக்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஆதிக்க சாதிகள் நாடார் இனமக்களின் வீரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கத் தொடங்கினர்.

கலவரம் மேலும் மேலும் பரவி பலர் கொல்லப்படுவதைக்கண்டு சென்னை அரசே அஞ்சியது. அதனால் உடனே தலையிட்டு, 1859_ல் `நாடார் பெண்கள் மேலாடை அணியக்கூடாது' என்ற பிரகடனத்தை அரசு ரத்து செய்தது. இதன் அடிப்படையில் பெண் கல்விக்கென நாகர்கோவிலில் ஆங்கிலேயரால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் பெண் கல்விக்காக மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி இது.

தங்கள் இனம் இப்படி பல இன்னல்களுக்கு ஆட்படுவதற்குக் காரணமே, தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை நாடார் மக்கள் உணர்ந்தனர். அதன் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் `நாடார் உறவின் முறை' என்ற அமைப்பு.அனைத்து வழக்குகளிலும் போலீசைத் தலையிடவிடாமல் உறவின் முறையே விசாரித்து தீர்ப்பு கூறியது.

நாடார் மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, தங்களது பரம்பரை பழக்கவழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் மாற்றியமைக்க முற்பட்டனர். ஆண்கள் பார்ப்பனர் போன்று வேட்டி கட்டவும், பூணூல் போடவும் தொடங்கினர். பெண்கள் பாரம்பரியமான கனத்த ஆபரணங்களையும், காது வளையங்களையும் தவிர்த்தனர்.

விதவைகள் வெள்ளைச் சீலை கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். விதவைகள் மறுமணம் தடை செய்யப்பட்டது. (இப்போது மறுமணத்தை ஆதரிக்கிறார்கள்.) பெண்கள் தண்ணீரை தலையில் எடுத்துச் செல்வதைத் தடுத்து, இடுப்பில் எடுத்துவரப் பணிக்கப்பட்டனர்.

திருமண ஊர்வலங்களின்போது செல்வ செழிப்பினைக் காட்ட பல்லக்குகளைப் பயன்படுத்தினர். பெரும்பாலான நாடார்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள். சிலர் வைணவர்களாகவும் இருந்தனர். முருகக் கடவுள் நாடார் சமூகத்தின் சிறப்பு தெய்வம். பத்ரகாளி, மாரியம்மன், அய்யனார் என்று சிறுதெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு. கோயில் திருவிழாவின்போது முளைப்பாரி எடுப்பது பிரசித்தம்.

நாடார் திருமணத்தின்போது தாய்மாமனுக்கு முக்கியத்துவம் உண்டு. கன்னியாகுமரி, சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் பெண் வீட்டார் கிலோ கணக்கில் நகை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எவ்வளவு பெரிய சொந்தம் இருக்கிறது என்பதைக் காட்ட திருமணத்தின்போது நடத்தப்படும் `அலந்தரம் செய்வது' என்ற சடங்கு மிக முக்கியமானது.

கோயில்களுக்கு நன்கொடைகளை வாரி வழங்கினர். சிவன் கோயில்கள் கட்டினர். தங்களை சத்திரியர்கள் என்று அடையாளம் காணும்படி நடந்துகொண்டனர்.நாடார்குலத்தின் பொருளாதார உயர்வும், பொதுமதிப்புக்காக அவர்கள் செய்த முயற்சியும் உயர்சாதிக்காரர்களுக்கு எரிச்சலைத் தந்தது. அதனால் பிரச்னை உருவானது.

அதன் விளைவாக, 1890ஆம் ஆண்டு ஆதிக்க சாதியினருக்கும் நாடார்களுக்கும் இடையே சிவகாசியில் மிகப் பெரிய கலவரம் மூண்டது. இக்கலவரத்தை நாடார் இனமக்கள் `சிவகாசிப் போர்' என்றே அழைக்கிறார்கள்.

ஆலயத்திற்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ய தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று நாடார்கள் கேட்டதுதான் கலவரத்திற்குக் காரணம். மற்ற ஆதிக்க சாதியினர், `நாடார்கள் கோயில்களுக்கு நுழையவே கூடாது' என்று எதிர்த்ததோடு கோயிலையும் மூடிவிட்டார்கள். அன்று இரவே கோயில் கதவை உடைத்து நாடார்கள் கோயிலுக்குள் புகுந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால் கொதித்தெழுந்த ஆதிக்க சாதியினர் நாடார் வீடுகளுக்குத் தீ வைத்தனர். சிவகாசி நகரில் இருக்கும் நாடார்களை வேரோடு கருவருக்கவேண்டும் என்ற மூர்க்கத்தனத்தோடு சிவகாசி மீது தாக்குதல் நடத்தினர். சுற்று கிராமங்களைக் கொள்ளை அடித்தனர். ஆனால் இதில் நாடார் இனமக்கள் ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி எதிர்த்துப் போராடினார்கள். கலவரக்காரர்களை ஓட ஓட விரட்டியடித்தார்கள். பலர் மடிந்தார்கள். இறுதியில் நாடார்களே இந்தப் போரில் வெற்றி பெற்றார்கள்.

1899ஆம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் கலவரத்தைக் கட்டுப்படுத்தியபோது, 150 கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாயிருந்தன. சுமார் 4000 வீடுகள் அழிக்கப்பட்டன. இரு தரப்பிலும் பலர் இறந்து போனார்கள். சிவகாசியில் நடந்த சோக சம்பவத்தை இந்தியா முழுவதிலுமுள்ள பத்திரிகைகள் முதற்பக்கத்தில் வெளியிட்டு நாடார்களின் நியாயத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லின.

நிலைமைகளை நன்கு உணர்ந்த நாடார்கள் தங்களுக்குப் பாதுகாப்பு பெற அரசியல் அதிகாரத்தில் நேரடி அங்கம் பெற முயன்றனர்.
பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன், வி.வி.ராமசாமி (நீதிக்கட்சி) போன்றோர் அரசியல் கதவைத் திறந்துவிட்டனர். தலைவர் கோசல்ராம் தலைமையில் ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம் போன்ற இடங்களில் உப்பு சத்தியா கிரகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய தேசிய விடுதலைக்காக காம ராஜர் நடத்திய போராட்டங்களும் அரசியலில் அவர் காட்டிய வழிகாட்டல்களும் நாடார் சமூக மக்களை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியது.

நாடார் சமூகம் கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தையே முழுவதுமாக நம்பியிருக்கவில்லை. நெல்லை மாவட்டத்தில் கிருஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்களின் முன்னேற்றத்திற்காக மதகுருமார்கள் கல்வியின் சிறப்பினை அவர்களுக்குக் கற்பித்தனர். 19ஆம் நூற்றாண்டுகளில் `மகமை நிதி' உதவியால் ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகளைத் தென்மாவட்டங்களில் தொடங்கினர். 20ஆம் நூற்றாண்டில் பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி உள்ளிட்ட பல முக்கிய கல்லூரிகளையும் தொடங்கினர். நாடார்கள் சமூகத்தினரோடு மற்ற சமூகத்தினரும் அதனால் பலன் அடைந்தனர்.

``நாடார்கள் நாடாண்டவர்கள் என்பதை இன்று நிரூபித்துக்கொண்டு வருகிறார்கள். இடைவிடா உழைப்பினாலும் சிக்கனத்தாலும் நாடார்கள் சாதாரண மளிகைக்கடை முதல் கம்ப்யூட்டர் துறை வரை உலகளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். மற்ற சமூகத்தவரும் பயன்பெறும் வகையில் நாடார் சமூகம் உழைத்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நாடார்களின் வெற்றி ரகசியமும் அதுவே'' என்கிறார் சென்னை, நெல்லை_தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் க்ஷி.ஜி.பத்மநாபன் நாடார்.

உண்மைதான். இன்று நாடார்கள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தங்கள் செல்வாக்கினை நிலைநாட்ட ஆரம்பித்துவிட்டனர்..

படங்கள் : சித்ரம் மத்தியாஸ்
அரண்மனைசுப்பு

`தினத்தந்தி'யைத் தந்து தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாமரர்கள் எழுத்துக்கூட்டி தமிழைப் படிக்க வைத்தவர் ஆதித்தனார். நாடார் மகாஜன சங்கம் உருவாகக் காரணமாய் இருந்தவர் பொறையார் ரத்னசாமி நாடார். நம் நாட்டிற்கு `தமிழ்நாடு' என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை மறக்கமுடியாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது குலசேகரபட்டினத்தில் லோன் துரை என்ற வெள்ளைக்காரனைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற காசிராஜன், தூக்குமேடை ராஜகோபால் ஆகியோரின் வீரம் பலருக்கு எடுத்துக்காட்டு. வானம் பார்த்த சிவகாசி பூமியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளையும் பட்டாசு தொழிற்சாலைகளையும் உருவாக்கி `குட்டி ஜப்பான்' என்று சொல்ல வைத்து அனைத்து இனமக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தவர்கள் சிவகாசி பி.அய்யநாடாரும் ஏ.சண்முகநாடாரும் ஆவர்.

நீதிக்கட்சி வி.வி.ராமசாமி, விருதுநகர் சீமான் எம்.எஸ்.பி.ராஜா. வெள்ளைச்சாமி நாடார், ஏ.வி.தாமஸ், ஜெயராஜ் நாடார், டாக்டர் சந்தோஷம் என்று உழைப்பில் உயர்ந்த நாடார்களில் எண்ணற்றவர்களைக் காட்டலாம்.காவல் துறைக்கு பெருமை சேர்த்த அருள் ஐ.ஜி.யை எந்த சமூகத்தவரும் மறக்கமாட்டார்கள்.

இன்று கணினி உலகில் நுழைந்து உலகப் பணக்காரர்களுள் ஒருவராகத் திகழும் சிவ்நாடார், பழுத்த அரசியல் தலைவர் குமரிஅனந்தன், அரசியல் தலைவரும் நடிகருமான சரத்குமார் என்று பலரை இந்த சமூகத்தின் நட்சத்திரங்களாகக் காட்டலாம்.

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP