உலக இசையின் நாயகன் "அல்லா ரக்கா ரஹ்மான்"
>> Tuesday, February 24, 2009
சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் என்ற இரண்டு விருதுகளைப் பெற்றுக் கொண்டு "எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசியபடி அனைவரது புருவத்தையும் உயரச் செய்தார் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
நாட்டு மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த பாராட்டுக்கும் சொந்தக்காரராகியுள்ள ரஹ்மான், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவரானாலும், இன்று சாதனையாளராக மலர்ந்து, இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
சென்னையில் 1966-ம் ஆண்டு, ஜனவரி 6-ம் தேதி பிறந்த இவருக்கு, தந்தை ஆர்.கே. சேகர் சூட்டிய பெயர் திலீப்குமார்.
சேகர் மலையாளப் பட இசை அமைப்பாளர். 22 படங்களுக்கும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களுக்கும் இசை அமைத்தவர்.
9- வது வயதில் தனது தந்தையைப் பறிகொடுத்தார் திலீப்குமார். அன்று முதல் திரைப்படத் துறையில் இருந்து சற்று விலகியே இருந்தது அவரது குடும்பம்.
10-ம் வகுப்பை பாதியில் நிறுத்திய திலீப்குமார், சிலரது வழிகாட்டுதலின்பேரில் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் சில ஆண்டுகள் படித்தார்.
தொடக்கத்தில் "கீ போர்டு' வாசிப்பாளராக இசை உலகுக்குத் தெரிந்த அவர், படிப்படியாக தன்னை பட்டைதீட்டிக் கொண்டார்.
அயராத உழைப்பாலும், இசை ஆர்வத்தாலும் பிரபல இசையமைப்பாளர்களிடம் நற்பெயரைப் பெற்ற திலீப்குமார், 1989-ம் ஆண்டு அல்லா ரக்கா ரஹ்மான் என்கிற ஏ.ஆர். ரஹ்மானாக மாறினார்.
சில விளம்பரப் படங்களுக்கு இசை அமைத்தவர் என்ற தகுதியோடு, இயக்குநர் மணிரத்னம் கண்ணில் பட்ட ரஹ்மான், 1992-ம் ஆண்டு "ரோஜா' படம் மூலம் இசை அமைப்பாளராக தமிழ் திரைப்படத் துறைக்கு தனது 26- வது வயதில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர் "சின்ன சின்ன ஆசை' பாடல் மூலம் 1993-ம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்று இந்திய அளவில் பிரபலமடைந்தார். இந்தப் படத்துக்காக அவருக்கு குவிந்த விருதுகள் கணக்கிலடங்காதவை.
தொடர்ந்து அவர் இசையமைத்த அனைத்துப் படங்களும் வெற்றி பெறத் தொடங்கின. 1995-ல் "ரங்கீலா' படம் மூலம் "பாலிவுட்' என அழைக்கப்படும் ஹிந்தி திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். முன்னேற்றப்பாதையில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் அவர், இதுவரை நான்கு முறை தேசிய விருதுகள், 11 முறை பிலிம்பேர் விருதுகள், 6 முறை மாநில விருதுகள், 2000-ம் ஆண்டு பத்மசிறீ விருது பெற்று தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.
"பாம்பே ட்ரீம்ஸ்' மூலம் சர்வதேச இசை அரங்குக்கு அறிமுகமாகியிருந்த ரஹ்மானுக்கு 2009-ம் ஆண்டு வாழ்வில் மறக்கமுடியாத ஆண்டு என்றே கூறலாம்.
இந்தியப் பின்னணியில் அமைந்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் இவரது இசையைக் கேட்டு பாராட்டாதவர்களே கிடையாது.
இந்தப் படத்துக்காக கடந்த ஜனவரி 11-ம் தேதி அமெரிக்காவில் "கோல்டன் குளோப்' விருதை பெற்றதன் மூலமும், பிப்ரவரி 8-ம் தேதி இங்கிலாந்தில் பாஃப்டா விருது பெற்றதன் மூலமும் சர்வதேசப் பார்வையை தன்பக்கமும், இந்தியாவை நோக்கியும் திரும்பச் செய்தார்.
வசீகர இசையினால் கோடிக்கணக்கான ரசிகர்களை வருடிவிட்ட நவீன இசைக்குச் சொந்தக்காரர் இவர். இசை வெளியீட்டு நிறுவனங்களால் எப்போதும் "வெற்றியின் தொழிற்சாலை' என்றே வர்ணிக்கப்படுகிறார்.
தேர்ந்த உலகத் திரைப்பட அறிவு, இசைக் கருவிகளையும், இசை வல்லுநர்களையும் நன்கு கையாளத் தெரிந்த ஆளுமை இவையே இந்த சர்வதேச இசை நாயகனின் வெற்றியின் ரகசியம்.
தமிழ் இசை, இந்திய இசை என்ற எல்லைக்குள் தன்னை அடக்கிக்கொள்ளாமல், உலக அரங்கில் தனக்கென ஒரு கொடியை பறக்கவிட்டுள்ள ரஹ்மானின் வெற்றி ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான விஷயமே!.
பல்வேறு இசைப் பாணிகளைக் கலந்து சோதனை செய்வது, எளிமையான மற்றும் இனிமையான மெட்டுகள், கச்சிதமான ஒலி நேர்த்திக்கான தேடல், புதிய இசையொலிக்கான ஆர்வம், புதிதுபுதிதாக குரல்களை அறிமுகம் செய்தல் என்பதில் எப்போதுமே தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் கவனமாக இருந்து வருகிறார் ரஹ்மான்.
கர்நாடக இசை, மேற்கத்திய சாஸ்திரிய இசை, ஹிந்துஸ்தானி, சூஃபி, ஜாஸ், இந்திய பாப் இசை என எதையுமே விட்டுவைக்காமல் தேவைக்கேற்ப தனது பாடல்களில் பயன்படுத்துவதில் இவருக்கு நிகர் இவரே!.
மேலும், பாரம்பரிய இசைக் கருவிகளில் இருந்து உருவாகும் இசையை புதிய மின்னணுக் கருவியின் இசையோடு சேர்ப்பதில் இவரிடம் எப்போதுமே முக்கியத்துவம் உண்டு.
43 வயதாகும் ரஹ்மானுக்கு ஷாயிரா பானு என்ற மனைவியும், கதிஜா, ரஹிமா என்ற மகள்களும், அமன் என்ற மகனும் உள்ளனர்.
இந்திய இசைக் கலைஞர்கள் யாருமே இதுவரை தொட்டுப் பார்க்காத "ஆஸ்கர்' விருதை இரண்டு பிரிவுகளில் பெற்றதன் மூலம் தன்னை "முதல்வனாக' நிரூபித்துள்ள ரஹ்மானுக்கு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் வெற்றி.
0 comments:
Post a Comment