நெட்டில் சுட்டதடா...: சாப்பாட்டுக் கூடைக்கு ஆறு சிக்மா!

>> Sunday, October 26, 2008

உங்கள் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் மானேஜர் ரவீந்திரனை முதன் முதலில் சந்தித்த தினம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ""ஐயம் ரவீந்திரா. பளாக் பெல்ட்'' என்று பூரிப்புடன் அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனை ஏற இறங்கப் பார்த்தேன். அந்தக் கெச்சலான உடம்பையும், சதா நாய் துரத்துவது போன்ற முழியையும் பார்த்தால் சற்றும் கராத்தே சண்டையன் போலவே இல்லை. மேற்கொண்டு விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவன் கறுப்பு பெல்ட் வாங்கியிருப்பது சிக்ஸ் சிக்மாவில்!





இந்த சிக்ஸ் சிக்மா (நண்ஷ் ள்ண்ஞ்ம்ஹ) என்பது என்னவென்று சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அது மோட்டரோலா நிறுவனம் கண்டுபிடித்த ஒரு மானேஜ்மென்ட் தந்திரம். கடலை எண்ணெய்க்கு ஐ.எஸ்.ஐ முத்திரை குத்துவது போல ஒரு தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ். எந்த ஆறு சிக்மா நிறுவனமும் தயாரிக்கும் பொருட்கள் 99.999 சதவிகிதம் கியாரண்டியாக நல்ல தரத்துடன் இருக்கும். சிக்மா என்ற சொல், புள்ளியியலில் வருகிறது. சராசரியிலிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகி வசிக்கிறோம் என்பதை அளக்கும் குறியீடு அது. உதாரணமாக, நீங்கள் நட்டு போல்ட் தயாரிக்க ஒரு நிறுவனம் ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஆறு சிக்மா சான்றிதழ் கேட்கிறீர்கள். அவர்கள் முதலில் அளப்பது, உற்பத்தியாகும் பொருட்களில் எவ்வளவு சதவிகிதம் குறைபாடு இருக்கிறது என்பதைத்தான். ஒரு மாதத்தில் பத்து லட்சம் போல்ட்டு தயாரித்தால், அதில் சுமார் மூன்றரை போல்ட்டுகளுக்கு மேல் தப்பு இருந்தால் சர்டிபிகேட் கிடைக்காது! (மூன்றரை போல்ட் என்பதை ஒத்துக் கொள்ள முடியாவிட்டால், ஒரு கோடியில் முப்பது நான்கு பிழைகளுக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்).





ஆறு சிக்மா வாங்குவது அவ்வளவு சுலபமல்ல. ஜி.இ., ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கே சான்றிதழ் கிடைப்பதற்குள் தூக்குப் போட்டவன் மாதிரி நாக்குப் பிதுங்கிவிட்டது. அவர்களிடம் இல்லாத கம்ப்யூட்டரா, எம்.பி.ஏக்களா? இருந்தும் பிழைகளை நீக்கிக் கொள்வதற்கு முக்கியத் தேவை, கடமைக்கு வேலை செய்யாமல் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வேலை செய்யும் ஊழியர்கள். அப்படிப்பட்ட ஊழியர்கள் மட்டும் கிடைத்தால், எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஆறு சிக்மாவைச் சந்திக்கலாம். இதற்கு அருமையான உதாரணம், மும்பை நகரின் சாப்பாடுக் கூடைக்காரர்கள்.

புகழ் பெற்ற ஐ.ஐ.எம்.நிர்வாகவியல் பள்ளி. உச்சாணிக் கிளை எம்.பி.ஏக்களை உற்பத்தி செய்யும் நாற்றங்கால். அங்கே ஒரு நாள் மானேஜ்மென்ட் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பவர், கோட்டு சூட்டு போட்ட ஹார்வர்ட் பேராசிரியர் அல்ல; வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டி காந்தி குல்லாய் அணிந்த சர்வ சாதா கூலித் தொழிலாளி. தலை மேல் சாப்பாட்டுக் கூடைகளைச் சுமந்து சென்று வினியோகிக்கும் "டப்பாவாலா'. அவராவது, எம்.பி.ஏ. மாணவர்களுக்குப் போய் மானேஜ்மென்ட் சொல்லித் தருவதாவது? ஏனெனில் அன்று நடந்த பாடம், "தவறுகளே நடக்காமல் வேலை செய்வது எப்படி' என்பதாகும்.





மும்பைக்கு ஒரு முறை சென்று வந்த யாரும் இந்த டப்பாவாலாக்கள் என்பவர்களைக் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. மும்பை நகரம், ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் இருபதாயிரம் பேர் என்ற ரேட்டில் மக்கள் டப்பாவில் அடைக்கப்பட்ட பேரீச்சம் பழம்போல் நெரிசலாக வசிக்கும் நகரம். இத்தனை பேரும் சேவல் கோழியுடன் சேர்ந்து எழுந்து ரயில் பிடித்து எங்கோ இருக்கும் அலுவலகம் போக வேண்டும். அத்தனை பேருக்கும் மதியம் சாப்பாடு வேண்டும். காண்டீனிலோ, கண்டகண்ட எண்ணெய். இங்கேதான் உதவிக்கு வருகிறது டப்பாவாலா சர்வீஸ். இவர்கள், புற நகர் பகுதியில் இருக்கும் உங்கள் வீட்டிலிருந்து காலை ஒன்பது மணி அளவில் டிபன் காரியரை எடுத்துக் கொண்டு போனால் சரியாக லஞ்ச் நேரத்துக்கு அலுவலகத்தில் சேர்ப்பித்து விடுவார்கள். மாலையில் காலி காரியர்கள் எதிர்த் திசையில் பயணம் செய்து கண்ணன் மேய்த்த ஆநிரைகள் போல் வீட்டுக்கு வந்து சேரும். ட்ரெயின், பஸ், சைக்கிள், மனிதக் கால் என்று சகலவிதமான போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்தி ஒவ்வொரு சாப்பாட்டு மூட்டையும் சராசரியாக அறுபது கிலோ மீட்டர் பயணம் செய்கிறது; நாலு கை மாறுகிறது. இருந்தும் காரியர் மாறிவிடாமல், அவரவர் வீட்டுச் சாப்பாடு அவரவருக்குப் போய்ச் சேருவதுதான் ஆச்சரியம்.

டப்பாவாலாக்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. டிபன் பாக்ஸ்களில் கோடு, புள்ளி, ஸ்வஸ்திக் என்று தங்களுக்கே உரிய எளிய குறியீடுகளைப் பயன்படுத்தி அதனதன் இலக்கைத் தெரிவிக்கிறார்கள். ஒரு ஏரியாவிலிருந்து சேகரித்த டப்பாக்கள் தபால் பிரிப்பு அலுவலகம் போன்ற ஒரு மரத்தடிக்கு வந்து நாலு திசைகளிலும் பிரித்து அனுப்பப்படுகிறது. ஐயாயிரம் ஊழியர்கள் தினம்தினம் இரண்டு லட்சம் சாப்பாடுகளை டெலிவரி செய்கிறார்கள். மழையோ புயலோ வெயிலோ, க்வார்ட்ஸ் கடிகாரம் மாதிரி எல்லாம் சீராக, நேரம் தவறாமல் இயங்குகிறது. டெலிவரியில் தப்பு நடப்பது மிகமிகமிக அபூர்வம்!

இந்தத் தொழிலை மட்டும் நம்ம லட்ச ரூபாய் எம்.பி.ஏக்களிடம் விட்டிருந்தால், ஒவ்வொரு டிபன் காரியருக்கும் ஆர்.எஃப் பட்டி, கூடைக்குப் பார் கோட், சுமப்பவர் ஒவ்வொருவருக்கும் ஜி.பி.எஸ் என்று டெக்னாலஜியில் புகுந்து விளையாடி, வரிசை வரிசையாக டெல் கம்ப்யூட்டர்கள் வைத்துக்கொண்டு கண்காணித்து, கடைசியில் அல்போன்ஸ் வீட்டு மீன் குழம்பை அனந்தாச்சாரிக்குக் கொண்டு போய்க் கொடுத்துவிடுவார்கள்.





மாபெரும் மானேஜ்மென்ட் பள்ளிகளும் டப்பாவாலாக்களைப் பக்கத்தில் சென்று கவனித்து ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள். ஃபோர்ப்ஸ் என்னும் புகழ் பெற்ற பிசினஸ் இதழ் அவர்கள் ஆறு சிக்மா உலகத் தரத்தை எட்டிவிட்டார்கள் என்று வியக்கிறது. நியூயார்க் டைம்ஸ் அவர்களைப் பற்றிக் கட்டுரை எழுதுகிறது, பி.பி.சியில் டாக்குமென்டரி படம் காட்டுகிறார்கள். இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வந்தபோது டப்பாவாலாக்களைச் சந்தித்து அவர்களுடன் பெருமிதமாக போட்டோ எடுத்துக் கொள்கிறார். கலிபோர்னியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் இதைப் பின்பற்றி "அன்னதாதா' என்று சாப்பாட்டு கேரியர் சர்வீஸ் ஆரம்பிக்கிறார்கள்.

செய்வதைத் திருந்தச் செய்வது என்பது பல்லாயிரம் ஆண்டு பழமையான கருத்து. எகிப்திய பிரமிடின் நாலு பக்கங்களையும் இப்போது அளந்து பார்த்தால் தொண்ணூறு டிகிரிக்கு ஆச்சரியகரமாகக் கிட்டத்தில் அமைத்திருக்கிறார்கள். ஒரு டிகிரியில் ஆயிரத்தில் ஒரு பகுதிதான் வித்தியாசம் கண்டுபிடிக்க முடிந்தது! குவாலிட்டி கண்ட்ரோல் என்ற நவீன வார்த்தை உலகப் போரின்போது உருவானது. தொழிற்சாலை அசெம்பிளி லைன்களில் கார் முதல் குண்டூசி வரை பெரிய அளவில் அடித்துத் தள்ள ஆரம்பித்தார்கள். ஊழியர்களை "வேகம், வேகம்' என்று துரத்தியதில் தரம் வீழ்ந்துவிட்டது; கஸ்டமர்கள் கதறினார்கள். எனவே, 1924-வாக்கில் புள்ளியியல் அடிப்படையில் தரக் கட்டுப்பாடு சோதனை செய்யும் வழக்கம் கொண்டுவரப்பட்டது. வால்டர் ஷேவார்ட் என்பவர் அன்றைக்கு எழுதிய புகழ்பெற்ற ஒரு பக்க டாக்குமென்ட்தான், பின்னால் வந்த அத்தனை ஜிலுஜிலு பவர் பாயின்ட்களுக்கும் முன்னோடி. சீக்கிரமே தரக் கட்டுப்பாடு என்பது தாரக மந்திரமாகி (தாரக என்றால் என்ன?), டி.க்யூ.எம், சி.எம்.எம், ஐ.எஸ்.ஓ, ஜப்பானில் கைஸன் என்று கிளைகிளையாகப் புறப்பட்டது. முழு நேர குவாலிட்டி டிப்பார்ட்மென்ட்கள் உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் நாற்காலியைத் தேய்க்க ஆரம்பித்தார்கள்.

இன்றைக்கு ஆறு சிக்மா, ஏழு சிக்மா என்றெல்லாம் அவர்கள் சீசனுக்கு சீசன் ஒரு புதிய மானேஜ்மென்ட் ஃபாஷன் ஏற்படுத்தி அப்பாவி முதலாளிமார் தலையில் மிளகாய் அரைத்தாலும், தரத்தை உறுதி செய்வதற்கு பிரமிட் காலத்திலிருந்தே ஒரே ஒரு எளிய விதிதான் இருந்து வந்திருக்கிறது: டப்பாவாலாக்கள் போன்ற தொழில் பக்தி மிகுந்த ஊழியர்கள்! சார்லஸ் இளவரசர் வந்த அன்றைக்குக்கூட, ""எங்கள் வேலை பாதிக்கக் கூடாது; டியூட்டி நேரம் முடிந்த பிறகு வாங்க'' என்று சொல்லி அனுப்பினார்கள். கடந்த நூற்று இருபது வருடங்களாக நடப்பது டப்பாவாலா சர்வீஸ். இருந்தும் ஒரு முறை கூட ஸ்ட்ரைக், ஊர்வலம் என்று நடந்ததே இல்லை. வேலைக்கு வருபவர்களின் பின்னணியைத் தீர விசாரித்துவிட்டுத்தான் கிட்டேயே சேர்க்கிறார்கள். ரிட்டையர்மெண்ட் வயது என்று எதுவும் கிடையாது. அவரவர்கள் உடம்பில் தெம்பு உள்ள வரை வேலை செய்யலாம். அநாவசியமாக லீவு எடுத்தாலோ, காந்திக் குல்லாய் யூனிஃபார்ம் இல்லாமல் காணப்பட்டாலோ கடும் அபராதம் உண்டு! இந்தப் படிப்பில்லாத மக்களிடமிருந்து நமக்கு நிறையப் படிப்பினை இருக்கிறது.

சிக்ஸ் சிக்மா கறுப்பு பெல்ட் நண்பர்கள் மூன்று பேர் புலி வேட்டையாடப் புறப்பட்டார்கள். தூரத்தில் புலியைப் பார்த்துவிட்டு முதலாமவர் சுட்டார்; குண்டு குறி தவறி, புலியின் இடது பக்கமாகப் பத்தடி தூரத்தில் கடந்தது. இரண்டாமவர் சுட்டார்; குண்டு வலது பக்கமாகப் பத்தடி தூரத்தில் சென்றது.

மூன்றாமவர் கால்குலேட்டரில் எண்களை அழுத்திப் பார்த்துவிட்டு உற்சாகத்துடன் கூவினார்: ""ப்ளஸ் பத்து, மைனஸ், பத்து. சராசரியாகப் பார்த்தால், நாம் புலியை வீழ்த்திவிட்டோம்!''

Read more...

மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம்

இன்றைக்கு நடக்கும் மதக் கலவரங்கள், இனக் கலவரங்களால் மரத்துப் போனவர்களாய் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கற்காலத்திலிருந்து நாகரிக மனிதனாய் மாறிய பின், மீண்டும் பழைய நிலைக்கே மனிதனின் மனோபாவம் மாறிக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

ஒருபுறம் உலக அளவில் சரிவை ஏற்படுத்திவரும் பொருளாதாரப் பிரச்னை. மறுபுறம் பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற போர்வையில் மனிதனை மனிதனே கூறுபோட்டு சாய்க்கும் அவலம்.

மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான நிலையை அடைந்த இந்தியாவில், இன்றைக்கும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய முடியாத நிலை. மதத்தின் பெயரால் அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகள். அதில் பலியாகும் ஏராளமான உயிர்கள்.

ஏன் இந்த நிலை?

இருநூறாண்டுகளுக்கு முன்பே, இதற்குத் தீர்வு கண்டுள்ளனர் இரு குறுநில மன்னர்கள். கி.பி. 1780-1801 (சுமார் 20 ஆண்டுகள்) காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது சகோதரர்களின் ஆட்சி வரலாற்றில் தடம் பதித்துள்ளது.

இம் மன்னர்களைப் பற்றிய மற்றொரு சிறப்பும் உண்டு.

சுதந்திர இந்தியாவை ஏற்படுத்துவதற்காக அன்னியர்களை அப்புறப்படுத்த, அனைத்து மதத்தினரையும் ஒன்று திரட்டி முதல் போர்ப் பிரகடனம் அறிவித்த மகா வீரர்கள் அவர்கள்.

அவர்களது ஆட்சியில் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் ஏராளமாக அமைக்கப்பட்டன. மத வேறுபாடுகளைக் கடந்து, சகோதரத்துவத்தை அவர்கள் வளர்த்ததற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும் கட்டி உள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயம், குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி ஆட்சி புரிந்தனர்.

மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கமே, வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிவை அவர்களுக்குத் தந்தது.

சின்ன மருதும், பெரிய மருதும் தங்களது படை வலிமையினாலும், தந்திரத்தாலும், வீரத்தினாலும் கும்பினிப் படைகளை கதிகலங்கி ஓடச் செய்தனர்.

பிராமணர்கள், இஸ்லாமியர்கள், சத்திரியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர்கள் ஆகியோரை இணைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட, மருது சகோதரர்கள் அறைகூவல் விடுத்தனர்.

கன்னடத்தைச் சேர்ந்த நேதாஜி வாக், மலபாரைச் சேர்ந்த வர்மா, கன்னடத்தின் கிருஷ்ணப்ப நாயக்கர், கோயம்புத்தூரைச் சேர்ந்த கான்-இ-கான், திண்டுக்கல் கோபால் நாயக்கர் போன்ற புரட்சியாளர்களை ஓரணியில் சேர்த்து, வெள்ளையரை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்று எழுதிக் கையொப்பமிட்டு, திருச்சி கோட்டை வாசலில் அதை ஒட்டினர்.

இதைப் படிப்பவர்கள், ஏராளமான பிரதிகள் எடுத்து இச் செய்தியை எங்கும் பரவிடச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள், காராம் பசுவைக் கொன்றதற்குச் சமமாகக் கருதப்படுவர் எனப் பிரகடனப்படுத்தினர். ஆங்கிலேயர்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அவர்களது சூழ்ச்சியால் மாமன்னர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.

கர்னல் அக்னியூ தலைமையில், 1801, அக்டோபர் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

திருப்பத்தூரில் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அரசு நினைவு மண்டபம் கட்டியுள்ளது.

அங்கே, அவர்களது முழு உருவச் சிலைகள் எழுப்பப்பட்டு, வெள்ளையனுக்கு எதிராக முதலில் வாள் சுழற்றியதற்கு மெüன சாட்சியாக அவை நிற்கின்றன.

மத நல்லிணக்கம் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பது, அறிவியல் வளர்ச்சிபெறாத காலத்திலேயே மருது சகோதரர்களின் எண்ணத்தில் உதித்தது மனிதம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.

(இன்று மருதுபாண்டியர்கள்

தூக்கிலிடப்பட்ட 207-வது நினைவு தினம்.)

Read more...

ஜெயலலிதாவும் கருணாநிதியும்!_இலங்கையும்

இலங்கை ராணுவத்தின் இனப் படுகொலைக்கு ஆளாகி இருக்கும் அப்பாவி ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்கிற பெயரில், தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளின் பேச்சும், செயல்பாடும் கடும் கண்டனத்துக்கு உரியதாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ம.தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேசுகின்ற பேச்சுகள், இலங்கை ராணுவத்தால் வேட்டையாடப்படும் அப்பாவித் தமிழர்கள் மீது இருக்கும் அனுதாபத்தைக் குலைப்பதாக அமைந்திருக்கின்றன என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.

""தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடும் விரைவில் மலரும்'' என்று ம.தி.மு.க. அவைத் தலைவர் மு. கண்ணப்பன் சமீபத்தில் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் அந்தக் கருத்தை நியாயப்படுத்துவது போல பேசி இருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டத்தில் எழுப்பிய கோஷங்கள் பிரிவினையைத் தூண்டும் விதத்திலும், தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தும் விதத்திலும் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மதுரையில் ரயில் மறியல் என்ற பெயரில் அவர்கள்தான் இரண்டு ரயில் பெட்டிகளைத் தீக்கிரையாக்கியதாகவும், ஆனால் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் காவல்துறையினர் அவர்களை அதில் சம்பந்தப்படுத்தாமல் காப்பாற்றுவதாகவும் மதுரை மாநகரில் பரவலாகப் பேசப்படுகிறது.

""இந்திய இறையாண்மைக்கு எதிரான, தேச விரோதக் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள்மீது கருணாநிதி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?'' என்று எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா எழுப்பி இருக்கும் நியாயமான கேள்விக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லக் கடமைப்பட்டவை.

இலங்கை விஷயத்தில், சுதந்திரத்துக்கு முற்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒரு மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டது. சுதந்திரத்துக்கு முன்னால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநாடுகளுக்கு இலங்கை காங்கிரஸ் கமிட்டியின் சார்பிலும் பிரதிநிதிகள் வருவது வழக்கம். அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இருப்பதுபோல, இலங்கை காங்கிரஸ் கமிட்டி ஒன்று இருந்தது.

சுதந்திரப் பேச்சு வார்த்தையின்போது, பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதித்த கையோடு இலங்கையை இந்தியாவில் இணைத்து, சிங்களப் பிரதேசம், ஈழநாடு என்று இந்தியாவின் இரண்டு மாநிலங்களாக்கி இருக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களையும், காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்கப் போராடியதுபோல, இதை அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் செய்யத் தவறிவிட்டனர். அப்படி நிகழ்ந்திருந்தால், சிங்களவர்கள் தனிநாடு கேட்டுப் போராடி இருப்பார்களே தவிர, நம்மவர்கள் தாக்குதலுக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.

இலங்கையில் அல்லல்படும் அப்பாவித் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதற்குப் பதிலாக, இந்தியாவில் பிரிவினைவாதம் பேசுவதும், தனித் தமிழ்நாடு என்று பேசுவதும் பிரச்னையைத் திசைதிருப்பி, இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாமல் இருப்பதற்குத்தான் உதவும்.

ம.தி.மு.க. தனது தோழமைக் கட்சி என்று தெரிந்தும், தான் தவறு என்று கருதுவதை தைரியமாகவும், கடுமையாகவும் கண்டிக்க முற்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பாராட்டத்தான் வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கையும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரித் தலைவர்களின் கடுமையான விமர்சனமும், முதல்வர் கருணாநிதியை உடனடியாகச் செயல்பட வைத்தன என்றாலும், தான் வகிக்கும் பதவிக்கு உரித்தான கடமை உணர்வுடன் அவர் செயல்பட்டிருப்பதும் பாராட்டுக்குரிய விஷயம். தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில திமுக ஆதரவு திரைப்படத் துறையினர் விஷயத்திலும் அவர் இதே அணுகுமுறையைக் கையாள வேண்டும்.

இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைத்தான் நாம் எதிர்க்கலாமே தவிர அதற்காக இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பதை ஆதரிக்க முடியாது.

Read more...

பரந்த மனப்பான்மையே ஹிந்துத்துவம்!

பரந்த மனப்பான்மையே ஹிந்துத்துவம்!

இல. கணேசன்

உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை; ஆனால் இன்றும் வாழ்ந்து வருகிற இந்த நாட்டுத்தன்மை எந்த நாடும் பின்பற்றத்தக்க சிறப்பான தன்மை. அது ஹிந்துஸ்தானத்துத் தன்மை - அதாவது ஹிந்துத் தன்மை - அதாவது ஹிந்துத்துவம்.

இதன் சிறப்புகள் பல; ஆண் - பெண் உறவில் புனிதம், விருந்தோம்பல், குடும்ப முறை, அன்னை, பிதா, ஆசிரியன் ஆகியோரை ஆண்டவனுக்குச் சமமாகக் கருதல் போன்ற பலவற்றையும் சொல்லலாம்.

ஒரு கூட்டத்தில் என்னைப் பேச அழைத்து மனிதநேயம் குறித்து பேசச் சொன்னார்கள். ஒருக்கால் "குறுகிய' ஹிந்துத்துவா குறித்து பேசிவிடுவேனோ என அஞ்சி பரந்த கருத்துடைய மனிதநேயம் குறித்து பேசட்டும் என நினைத்திருக்கலாம்.

""எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்'' எனப் பாடியவர் நமது தாயுமானவ சுவாமிகள். "சர்வே ஜனா சுகினோ பவந்து' எனச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் குரல் கொடுத்தால் உலகமே ஒரு குடும்பம் அதாவது வசுதைவ குடும்பகம் என மறு குரல் வந்ததும் இந்த நாட்டில்தான். இவைகள் எல்லாம் இந்த நாட்டின் பண்பின் பிரதிபலிப்பாக உதிர்ந்த வார்த்தைகள்.

இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை. நான் எழுதியது பிடிக்கவில்லை; ஆனாலும் எதையும் படித்துத்தொலைப்பது என்கின்ற பழக்கதோஷத்தால் இதையும் சகித்துக்கொண்டு படித்துத் தொலைக்கிறீர்கள். இது சகிப்புத்தன்மை. இந்த தேசத்தின் தன்மை அதுவல்ல, ""கட்டுரை நன்றாக இருக்கிறது; தொடர்ந்து எழுதுங்கள்'' என சொல்பவர்களது தன்மை சகிப்புத்தன்மை அல்ல; ரசிப்புத்தன்மை; எதையும் வரவேற்கும் தன்மை. காரணம் உயர்ந்த கருத்துகள் எல்லா திசையிலிருந்தும் நம்மை வந்து அடையட்டும் என்கின்ற கருத்து ரிக் வேதத்திலேயே உள்ளது.

ஆகாயத்திலிருந்து பொழியும் நீர், நதிகள் வழியாகப் பாய்ந்தோடி கடலில் கலப்பதுபோல எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றினாலும் அது ஒரே பரம்பொருளையே அடைகிறது என உபநிஷத்துகள் சொல்கின்றன.

எம்மதமும் சம்மதம் எனச் சொன்னவனே ஹிந்துதான். நமது பிரார்த்தனை எல்லாம் "லோகா சமஸ்தா சுகினோ பவந்து' (உலகம் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழக்கடவது!) என உலகம் வாழவே பிரார்த்தனை.

இத்தனை உயர்ந்த கருத்துகளை, பரந்த கருத்துகளை உலகின் எந்த நாட்டு அறிஞராவது சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே! எனவே மனிதனிடத்தில் அன்பு செலுத்து என்பதே மனித நேயம் என்றால் அதைத்தானே இந்த நாட்டின் பண்பாடும் சொல்கிறது. இந்த நாட்டின் தன்மையே அதுதான்.

எனவே ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை.

ஒரு புறாவுக்காக இரங்கி தனது சதையையே அறுத்துத் தந்த சிபி சக்ரவர்த்திக்கு சமமான மன்னன் உலகில் எங்கேனும் உண்டா? ஒரு பசுவுக்காகத் தனது உயிரையே தர முனைந்த திலீபன் போல எங்கேனும் உண்டா? ஒரு பசு தன் கன்றை இழந்த சோகத்தை உணர்ந்து தனது மகனை தேர்க்காலில் இட முனைந்தது எந்த நாட்டில்? பாம்புக்கு கூட பால் வார்க்கும் சமுதாயம் இந்நாட்டு சமுதாயம்தானே? எறும்புக்கும் உணவு இட வேண்டும் என்பதற்காகவே கோலமிடத் தொடங்கிய மக்கள் நம் மக்கள்தானே? ஒரு கொடி படர தனது தேரையே தந்த பாரி போல வேறு யார் உண்டு வெளி உலகில்? பசுமையான புல்வெளி மீது காளை பாய்ந்து சென்றபோது தானே மிதிபடுவதுபோல் உணர்ந்து அலறிய சிறீராமகிருஷ்ணர் வாழ்ந்தது எந்த நாட்டில்?

அமெரிக்க நாட்டிலிருந்து வந்து நம் நாட்டை ஆராய்வதற்கு வந்த சிலரிடம் ""எங்கள் நாட்டில் உங்களை எது வியக்க வைத்தது?'' எனக் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இதுதான்.

நாற்சந்தியில் வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்திருந்தன. பச்சை விளக்கு எரிந்தும் வாகனங்கள் நகரவில்லை. காரணம் நாய்க்குட்டி ஒன்று அப்போதுதான் சாலையைக் கடந்தது.

""அது கடந்து போவதற்காகவா இத்தனை வாகனங்கள் பொறுமை காத்தன. அமெரிக்க நாட்டில் நசுக்கிவிட்டு போய்விடுவார்கள்'' என்றனர் அவர்கள்.

பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தவர்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கும். வேகமாக வண்டி ஓட்டும்போது சடக்கென வண்டியை நிறுத்த ஓட்டுநர் எத்தனித்தபோது வண்டி குலுங்கும். காரணம் இருட்டில் சாலையில் திடீரென ஒரு கீரியோ, பாம்போ குறுக்கே ஓடும். இதைப் பார்த்து ஓட்டுநர் நிறுத்த முனைந்தது அனிச்சைச் செயல். அதாவது ரத்தத்தோடு கலந்துவிட்ட உணர்வு. அதற்குப் பெயர்தான் இந்தியப் பண்பாடு!

எனவே எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தும் பண்பு இந்த நாட்டின் பண்பு. மனித நேயம் என்பது மனிதனிடத்து அன்பு செலுத்துவது. மாறாக விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்திடமும் அன்பு செலுத்தும் இந்த நாட்டின் பண்பாடோடு மனித நேயத்தை ஒப்பிட்டால் மனிதநேயம் என்பதே குறுகிய மனப்பான்மை!

இந்த நாட்டின் தனித்தன்மை-பண்பாடு-மண்வாசனை-ஆன்மநேயம் என்கின்ற உயர்ந்த கருத்து. எனவே இந்த நாட்டு மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற தன்மை குறித்தும், பரந்த மனப்பான்மை குறித்தும் உபதேசம் செய்ய முயல்வது நெல் விளைவிக்கும் விவசாயிக்கே அரிசி விற்பதற்குச் சமமாகும்.

இந்த நாட்டில் வாழ்ந்த மக்களுக்கு இந்தத் தன்மை இருந்ததால்தான் புதிதாக வெளியிலிருந்து ஒரு மதம் வந்தபோது அதை வரவேற்றார்கள். தங்க இடம் தந்தார்கள். வழிபடுவதற்கு, அவர்கள் மதத்து ஆலயம் அமைக்க நிலமும் தந்தார்கள். கட்டுவதற்கு பொருள் உதவியும் தந்தார்கள்.

நமது பரந்த மனப்பான்மையே நமக்குப் பலவீனமாக ஆனது. நம்மவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஆட்சியாளர்கள் துணையுடன் வேகமாகப் பரப்பப்பட்டது. அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் நடைபெற்றது.

மதம் மாறினால் என்ன? ஹிந்துப் பண்பாடுதான் எம்மதமும் சம்மதம் எனச் சொல்கிறதே எனக் கேட்கலாம். உண்மையில் மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றம் என்றால் அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை.

ஓர் உதாரணம் குறிப்பிடுகிறேன் - மார்கழி மாதம் வந்துவிட்டால் தெருவின் இருபுறமும் உள்ள வீடுகளின் முன்பு மகளிர் மகிழ்ச்சியுடன் கோலமிடுவார்கள். அந்தத் தெருவிலேயே சிறப்பாகக் கோலமிடும் பெண்மணி மங்களம்தான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

ஆனால் அந்த ஆண்டு மங்களம் டீச்சர் மார்கழி மாதம் கோலமிடவேயில்லை. சில நாள்களாகவே அவர் வீட்டு வாசலில் கோலமிடப்படுவதில்லை. இதுகுறித்து பக்கத்து வீட்டு அம்மையார் காரணம் கேட்டார். மங்களம் சொன்ன பதில் - ""இனிமேல் நான் வீட்டு வாசலில் கோலமே இடமாட்டேன். காரணம் நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டேன். என் பெயரும் மங்களம் இல்லை''.

அடுத்த வீட்டு அம்மையாருக்கு அதிர்ச்சி - ""மதம் மாறிப் போனா கோலம் போடக்கூடாதென்று எவடீ சொன்னா?'' என்றாரே பார்க்கலாம்.

அடுத்த வீட்டு அம்மையாருக்கு பண்பாடு என்றால் என்ன என்பது புரிந்துவிட்டது. மதம் மாறிய மங்களத்துக்கு அது மரத்துவிட்டது. கோலம் இடுவது இந்த நாட்டின் பண்பாடு. அது எல்லா மதத்துக்கும் பொது.

கோலம் இடுவது மட்டுமல்ல; வளையல் அணிவது; திலகம் இடுவது; மருதாணி வைப்பது; வாயிலிலே வாழைமரம், குருத்தோலை தோரணம், குத்து விளக்கு என பண்பாட்டின் சின்னங்களாக பல உள்ளன. இவை போய்விடுகின்றன. பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் எவரும் மத மாற்றத்தை எதிர்க்கவே செய்வார்கள்.

திருச்சியிலே ஒரு வீடு. உச்சிப்பிள்ளையாரே குலதெய்வம். வீட்டின் பூஜை அறையில் பிரதானமாக விநாயகர் படம் பெரிதாக அலங்கரிக்கும். அந்த வீட்டின் மூத்த மகன் அய்யப்பன் கோயிலுக்கு மாலை அணிந்தான். ஒரு அய்யப்பன் படத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தான். மலர் இடும்போது விநாயகருக்கும் ஒரு மாலை, அய்யப்பனுக்கும் மாலை. சரணம் விளிக்கும்போது கன்னி மூல மகா கணபதிக்கும் சரணம். அய்யப்ப சாஸ்தாவுக்கும் சரணம். இரு படங்களுக்கும் தீபாராதனை.

அடுத்தவன் ஆதிபராசக்தி வழிபாட்டுக்கு மாறினான். செவ்வாடை அணிந்தான். சக்தியை அம்மா பங்காரு அடிகள் பூஜிப்பதுபோல ஒரு படத்தை மாட்டினான். மாலையில் 3 படங்களுக்கும் மாலை. சக்தி கணேசா, சக்தி அய்யப்பா, சக்தி அம்மா என மூவருக்கும் வழிபாடு. மூன்று படத்துக்கும் தீபாராதனை.

மூன்றாமவன் இளையவன். நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் ஒரு கான்வென்டில் சேர்த்தனர். நல்ல படிப்பு எனறால் ஆங்கிலத்தில் பேசுகின்றபடி படிக்க வேண்டும் என்கின்ற கற்பனை. வீட்டில் தங்கிப் படித்தால் கெட்டுவிடுவான் (தமிழ் பேசி கெட்டுவிடுவான்) என்பதற்காக விடுதியில் தங்கிப் படிப்பு.

படித்து முடித்து அவன் வீடு திரும்பும்போது கழுத்திலே சிலுவை. கையிலே ஏசுநாதர் படம். தனது அறையிலேயே வைத்து தனி வழிபாடு. பெயரும் ஏதோ அன்னிய நாட்டுப் பெயராக மாற்றிக்கொண்டு விட்டான்.

மதமாற்றம் என்பது வழிபாடு மாற்றம் என்றால் பெயர் மாறுவானேன்? பெற்றோர்களும் முன்னோர்களும் வழிபட்ட தெய்வத்தை மதிக்கின்ற பரந்த மனப்பான்மை மறந்து போனதேன்? இந்த தேசத்தின் பண்பாட்டின் அடிப்படையே பரந்த மனப்பான்மை என்றால் அது மதம் மாறியவருக்கு மறந்து போவதேன்?

எனவே பண்பாட்டைக் காக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் மதமாற்றத்தை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

Read more...

அமெரிக்காவின் திவால்!

ப்பொழுது இருக்கும் உலக பொருளாதார நிலையில் இதைப் பற்றி விவாதிப்பது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை.



அமெரிக்கா திவாலாகி விட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சை அமெரிக்காவின் நிலைமை நினைவூட்டுகின்றது என்கிறார் ஒரு பத்திரிகையாளர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள். அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.
லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆலைகள், ஐ.டி துறைகளிலும் திடீரென்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றார்கள்.


கடனை அடைக்க முடியாததால் வெளியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான மக்களின் வீடுகள் அமெரிக்காவில் வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கின்றன. ஐ.டி. தொழிலின் மையமான கலிபோர்னியா மாநிலமே திவால் மாநிலமாகி விட்டது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் நிதி ஆலோசகரான கார்த்திக் ராஜாராம் என்ற என்.ஆர்.ஐ இந்தியர், தனது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் அனைவரையும் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில் அவர் குவித்த கோடிகள் ஒரே நாளில் காணாமல் போயின.


தவணை கட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 50 இலட்சம் என்று அறிவித்திருக்கின்றார் அமெரிக்க நிதியமைச்சர் பால்சன். அதாவது, அரசின் கணக்குப்படியே சுமார் 3 கோடி மக்கள், அமெரிக்க மக்கள் தொகையில் 10% பேர் புதிதாக வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கும் வீடுகள் சூறையாடப்படுகின்றன.


ஆட்டோமொபைல் தொழிலில் உலகின் தலைநகரம் என்றழைக்கப்பட்ட டெட்ராய்ட், அமெரிக்காவின் திவால் நகரமாகி விட்டது. அங்கே வீட்டின் விலை உசிலம்பட்டியைக் காட்டிலும் மலிந்து விட்டது. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை ரூ. 75,000.
அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நிலநடுக்கம், உலகெங்கும் பரவுகின்றது. ஒரு ஊழியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்று அலறுகிறார் பிரெஞ்சுப் பிரதமர்.


எந்த நாட்டில் எந்த வங்கி எப்போது திவாலாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. வங்கிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். “ஐரோப்பிய வங்கிகள் திவாலானால் 50,000 யூரோக்கள் வரையிலான டெபாசிட் தொகையைக் கொடுக்க ஐரோப்பிய அரசுகள் பொறுப்பேற்பதாக” ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது. இந்தியா உள்ளிட்டு உலகெங்கும் பங்குச்சந்தைகள் கவிழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.


உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி என்றும், உலக முதலாளித்துவத்தின் காவலன் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய முதலாளி வர்க்கத்தின் முகத்தில் உலகமே காறி உமிழ்கின்றது.
“பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு” என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் ‘மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்’ என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது.


திவால்கள் இத்துடன் முடியப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. முதலாளிவர்க்கத்தைக் கைதூக்கி விடுவதற்காக 70,000 கோடி டாலர் (35 இலட்சம் கோடி ரூபாய்) பணத்தை அரசு வழங்க வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் தீர்மானத்தை அமெரிக்காவின் ‘மக்கள் பிரதிநிதிகள்’ ஒருமனதாக நிறைவேற்றி விட்டார்கள்.
அமெரிக்க மக்களோ ஆத்திரத்தில் வெடிக்கிறார்கள். உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறையான வால் ஸ்ட்ரீட் எங்கும் மக்கள் கூட்டம். “தே.. பசங்களா, குதிச்சுச் சாவுங்கடா..” என்று வங்கிகளை அண்ணாந்து பார்த்துத் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள் மக்கள். “குப்பைக் காகித்தை வாங்கிக் கொண்டு முதலாளிகளுக்குப் பணம் கொடுக்கும் அரசே, இந்தா என் வீட்டுக் குப்பை. எனக்கும் பணம் கொடு!” என்று ஆர்ப்பாட்டம் நடத்துகின் றார்கள்.


இத்துனை அமெரிக்க வங்கிகளை ஒரே நேரத்தில் திவாலாக்கி, உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலைய வைத்திருக்கும் இந்த நிதி நெருக்கடியைத் தோற்றுவித்தது யார்? அமெரிக்காவின் ஏழைகள்! அவர்கள்தான் உலகத்தைக் கவிழ்த்து விட்டார்களாம். பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள இந்த பிரம்மாண்டமான கேள்விக்கு, இரண்டே சொற்களில் பதிலளித்துவிட்டன முதலாளித்துவப் பத்திரிகைகள். “கடன் பெறவே தகுதியில்லாதவர்கள், திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் என்று வந்தவர் போனவருக்கெல்லாம் வங்கிகள் கடன் கொடுத்தன. வீடுகட்டக் கடன் கொடுத்ததில் தவறில்லை. ஆனால், அது சரியான ஆட்களுக்குக் கொடுக்காததுதான் இந்த நிலைக்குக் காரணம்.


எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு! இதே உண்மையைத்தான் எல்லா பொருளாதாரக் கொலம்பஸ்களும் வேறு வேறு வார்த்தைகளில் கூறுயிருக்கின்றனர். முதலாளி வர்க்கத்தை இவ்வளவு எளிதாக ஏழைகளால் ஏமாற்ற முடியுமா? நண்பர்களுக்கு 50, 100 கடன் கொடுப்பதென்றால் கூட நாமே யோசிக்கின்றோமே, வந்தவன் போனவனுக்கெல்லாம் இலட்சக்கணக்கில் வாரிக்கொடுத்திருக்கும் அமெரிக்க முதலாளிகளை வள்ளல்கள் என்பதா, முட்டாள்கள் என்பதா? இரண்டுமே இல்லை. அவர்கள் கிரிமினல்கள்.


அமெரிக்காவின் உழைக்கும் மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் மட்டுமல்ல, பல்வேறு நாட்டு மக்கள், சிறு முதலீட்டாளர்கள், வங்கிகள் .. அனைத்துக்கும் மேலாக சக நிதிமூலதனச் சூதாடிகள் எல்லோரையும் ஏமாற்றிச் சூறையாடியிருக்கும் இந்த மோசடியை என்ன பெயரிட்டு அழைப்பது? ஆயிரம், இரண்டாயிரம் போயிருந்தால் அது திருட்டு. இலட்சக் கணக்கில் போயிருந்தால் கொள்ளை என்று கூறலாம். பறிபோயிருப்பது பல இலட்சம் கோடி. அதனால்தான் மிகவும் கவுரவமாக இதனை ‘நெருக்கடி’ என்று கூறுகின்றது முதலாளித்துவம்.
வந்தவன் போனவனுக்கெல்லாம் வாரிக் கொடுத்ததனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் ‘அமெரிக்காவின் சப் பிரைம் நெருக்கடி’ தோன்றிய கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.


தயக்கமில்லாமல் கடன் வாங்குவதற்கும், நுகர்பொருட்களை வாங்குவதற்கு அந்தப் பணத்தைச் செலவிடுவதற்கும் மக்களை நெடுங்காலமாகவே பயிற்றுவித்து பொம்மைகளைப் போல அவர்களை ஆட்டிப்படைத்து வருகின்றது அமெரிக்க முதலாளி வர்க்கம். சராசரியாக ஒரு அமெரிக்கனிடம் 10 கடன் அட்டைகள் இருக்கும் என்பது மிகக் குறைந்த மதிப்பீடு. அங்கே வட்டி விகிதத்துக்கு உச்சவரம்பு இல்லை என்பதால் கடன் அட்டைக்கு 800% வட்டி கூட உண்டு. சராசரியாக ஒரு அமெரிக்கன் தனது மாதச்சம்பளத்தில் 40% தொகையைக் கடன் அடைக்க ஒதுக்குகின்றான். ஒரு கல்லூரி மாணவனின் சராசரி கல்விக்கடன் 10 இலட்சம் ரூபாய். இதற்கு மேலும் கடன் வாங்கிச் செலவு செய்யும் சக்தி அவர்களுக்கு இல்லாமல் போனதால், நுகர்பொருள் முதல் ரியல் எஸ்டேட் வரை எல்லாத் தொழில்களிலும் சந்தை தேங்கியது. கடன் வாங்க ஆளில்லாததால் வட்டி வருவாய் இல்லாமல், வங்கித் தொழிலும் தேங்கியது. கடனுக்கான வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்தன. இந்தத் தருணத்தில்தான் தங்கள் லாபப் பசிக்கு புதிதாக ஒரு இரையைக் கண்டுபிடித்தார்கள் வங்கி முதலாளிகள்.


“வேலை இல்லாத, வருமானமும் இல்லாத ஏழைகளிடம் அடகு வைக்க எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நேர்மையாகக் கடனை அடைப்பார்கள். அடைத்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு வேறு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே வட்டியை உயர்த்தினாலும் அவர்களுக்கு வேறு வழி இல்லை. இவர்களைக் குறி வைப்போம்” என்று முடிவு செய்தார்கள்.
ஒருவேளை பணம் வரவில்லையென்றால்? அந்த அபாயத்திலிருந்து (risk) தப்பிப்பதற்கு வால் ஸ்ட்ரீட்டின் நிதி மூலதனச் சூதாட்டக் கும்பல் வழி சொல்லிக் கொடுத்தது. 10 இலட்சம் ரூபாய் வீட்டுக் கடன், அந்தக் கடன் ஈட்டக் கூடிய வட்டித் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சம் என்று வைத்துக் கொள்வோம். கடன் கொடுக்கும் வங்கி, கடன் வாங்குபவருடைய அடமானப் பத்திரத்தை உடனே நிதிச் சந்தையில் 10.5 இலட்சத்துக்கு விற்றுவிடும். இப்படியாக கொடுத்த கடன்தொகை உடனே கைக்கு வந்து விடுவதால், பத்திரத்தை விற்க விற்க கடன் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். கொடுத்தார்கள்.


நிதிக் கம்பெனிகளும், இன்சூரன்சு நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் (FIRE) கூட்டணி அமைத்து ரியல் எஸ்டேட் சந்தையைச் சுறுசுறுப்பாக்கி விலைகளை இருமடங்கு, மும்மடங்காக ஏற்றினார்கள். ‘ஒரு டாலர் கூடக் கொடுக்க வேண்டாம். வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள். தயங்கியவர்களிடம், ‘10 ஆண்டுகளில் நீங்கள் கட்டப்போகும் தொகை இவ்வளவுதான். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின் உங்களது வீட்டின் விலை 10 மடங்கு கூட உயர்ந்திருக்கும்’ என்று ஆசை காட்டினார்கள். ‘வட்டியை மட்டும் கட்டுங்கள். அசலை அப்புறம் பார்த்துக் கொள்வோம்’ என்று வலையில் வீழ்த்தினார்கள். ‘அதுவும் கஷ்டம்’ என்று மறுத்தால், ‘பாதி வட்டி மட்டும் கட்டுங்கள். மற்றதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்’ என்றார்கள். வீழ்த்தப்பட்டவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் கறுப்பின மக்கள் மற்றும் லத்தீன் அமெரிக்க வம்சாவளியினர். மற்றவர்கள் வெள்ளையர்கள்.


இந்த மக்கள் யாரும் வீடு வாங்கக் கடன் கேட்டு வங்கிக்கு செல்லவில்லை என்பது மிகவும் முக்கியமானது. நம் ஊரில் ‘கடன் வேண்டுமா?’ என்று தொலைபேசியில் கேட்டு நச்சரிப்பதைப் போல ‘வீடு வேண்டுமா?’ என்று நச்சரித்தார்கள். 2006 ஆம் ஆண்டு வீட்டுக்கடன் வாங்கிய 64% பேரைத் தரகர்கள்தான் வலைவீசிப் பிடித்து வந்தனர். 20% பேர் சில்லறை வணிகக் கடைகளின் மூலம் மடக்கப்பட்டனர். இவர்கள் வாங்கும் வீடுகளின் சந்தை விலையை மதிப்பிடும் நிறுவனங்கள் (appraisers) வேண்டுமென்றே வீட்டின் மதிப்பை ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டி மதிப்பிட்டுக் கடன் தொகையை அதிகமாக்கினர். வீடு வாங்கச் செலவு செய்யும் பணத்துக்கு வரிவிலக்கு அறிவித்து ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்கப்படுத்தியது அரசு.


ரியல் எஸ்டேட் விலைகள் மேலும் ஏறத் தொடங்கின. 2004 இல் பத்து இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீட்டின் சந்தை மதிப்பு, 2005 இல் 20 இலட்சம் ரூபாய் என்று உயர்ந்தவுடன், இன்றைய சந்தை மதிப்பை அடிப்படயாகக் கொண்டு மேலும் 7,8 இலட்சம் கடன் அவர்கள் சட்டைப் பைக்குள் திணிக்கப்பட்டது. ‘விலைகள் ஏறியபடியேதான் இருக்கும்’ என்று மக்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.


ஆனால் வாங்கிய கடனைக் கட்டவேண்டியவர்கள் மக்களல்லவா? வட்டியோ மீட்டர் வட்டி! அமெரிக்காவிலோ வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. உணவு, பெட்ரோல் விலை உயர்வு வேறு. மாதம் 1000 டாலர் கொடுத்து வாடகை வீட்டில் இருந்தவர்கள் இப்போது சொந்த வீட்டுக்கு 3000 டாலர் தவணை கட்ட வேண்டியிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு 10, 20 மாதங்கள் கட்டிப் பார்த்தார்கள். முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகள், குடும்பச் சண்டைகள், மணவிலக்குகள்.. என குடும்பங்கள் சித்திரவதைப் பட்டன. ‘ஜப்திக்கு எப்போது ஆள் வருமோ’ என்று நடுங்கினார்கள். போலீசு வரும்வரை காத்திருக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டார்கள். சென்ற ஆண்டில் மட்டும் 22 இலட்சம் வீடுகள் இப்படிக் காலியாகின.
விளைவு ரியல் எஸ்டேட் சூதாடிகள் ஊதி உருவாக்கிய பலூன் வெடித்து விட்டது. 5 இலட்சம் டாலருக்கு வாங்கிய வீடு ஒரு இலட்சத்துக்கு விழுந்து விட்டது. எனினும் 5 இலட்சத்துக்கு உரிய தவணையைத்தான் கட்டவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டதால், தவணை கட்டிக் கொண்டிருந்தவர்களும் ‘வீடு வேண்டாம்’ என்று முடிவு செய்து வெளியேறத் தொடங்கினார்கள். சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்தது.


இந்தக் கொடுக்கல் வாங்கலில், மக்கள் யாரை ஏமாற்றினார்கள்? அவர்கள் மாதத்தவணை கட்டியிருக்கின்றார்கள். முடியாத போது வீட்டைத் திருடிக் கொண்டு ஓடவில்லை. திருப்பி ஒப்படைத்து விட்டார்கள். வீடு இருக்கின்றது. ஆனால் மதிப்பு இல்லாமல் போய்விட்டது. அதற்கு மக்கள் என்ன செய்ய முடியும்? ரியல் எஸ்டேட்டின் சந்தை விலையை அவர்களா நிர்ணயித்தார்கள்? சந்தை எழுந்ததற்கும் வீழ்ந்ததற்கும் அவர்களா பொறுப்பு?


ஒரு வீட்டின் உண்மையான மதிப்பை எப்படி நிர்ணயிப்பது? அந்த வீடு எந்தப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றதோ, அந்தப் பொருட்களை உருவாக்குவதற்கும், அப்பொருட்களை இணைத்து அந்த வீட்டை உருவாக்குவதற்கும் செலவிடப்பட்ட உழைப்புச் சக்தியின் மதிப்புதான் அந்த வீட்டின் மதிப்பு என்கிறார் மார்க்ஸ். ஒரு மாபெரும் முதலாளித்துவ மோசடியில் வாங்கிய அடி, மார்க்சியத்தின் வாயிற்கதவுக்கு அமெரிக்க மக்களை இழுத்து வந்திருக்கின்றது.


எனினும் முதலாளித்துவச் சந்தையின் விதி இதை ஒப்புக்கொள்வதில்லையே! 10 இலட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கி, ஒரு இலட்சம் தவணை கட்டி விட்டு, மீதியைக் கட்ட முடியாமல் வீட்டை வங்கியிடம் ஒப்படைத்தால் (foreclosure), வங்கி அந்த வீட்டை ஏலம் விடும். தற்போது வீடு 2 இலட்சத்துக்கு ஏலம் போகின்றது என்று வைத்துக் கொண்டால், மீதி 7 இலட்சம் பாக்கியை கடன் வாங்கியவன் கட்டியாகவேண்டும். அதாவது இல்லாத வீட்டுக்கு தவணை கட்டவேண்டும். இதுதான் முதலாளித்துவ சந்தை வழங்கும் நீதி. அது மட்டுமல்ல, இவ்வாறு தவணை கட்டத் தவறுபவர்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் எந்த இடத்திலும் கடன் வாங்கவோ கடன் அட்டையைப் பயன்படுத்தவோ முடியாது. சுருங்கக் கூறின் வாழவே முடியாது. இதுதான் அமெரிக்கச் சட்டம். “இந்தச் சட்டத்தைத் தளர்த்தி நிவாரணம் வழங்கு” என்று கோருகின்றார்கள் மக்கள்.
திவாலான மக்களுக்கு நிவாரணம் தர மறுக்கும் அமெரிக்க அரசு மதிப்பிழந்து போன குப்பைப் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து விலை கொடுத்து வாங்க 35 இலட்சம் கோடி ரூபாய் வழங்குகின்றது.
ஏன், மக்களுடைய அந்த வரிப்பணத்தை மக்களுக்கே நிவாரணமாகக் கொடுத்தால்? அப்படிக் கொடுத்தால், உலக முதலாளித்துவமே வெடித்துச் சிதறிவிடும். ஏனென்றால் அந்த வீட்டு அடமானக் கடன் பத்திரங்களில் பெரும்பகுதி இப்போது உலகத்தின் தலை மீது இறங்கிவிட்டது.
பொதுவாக, கடன் என்பது ‘கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையிலான ஒப்பந்தம்’ மட்டுமே. ஆனால் நிதி மூலதனத்தின் உலகமயமாக்கல் இந்தக் கடன் பத்திரங்களையும் உலகமயமாக்கியிருக்கின்றது.


இத்தகைய கடன் பத்திரங்களின் நம்பகத்தன்மைக்கு சான்றிதழ் கொடுக்கும் பிரபல நிறுவனங்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு, இந்த வாராக் கடன்களுக்கு ‘மிக நம்பகமான கடன்கள்’ என்று பொய் சர்டிபிகேட் கொடுத்தன. இந்த பொய் சர்டிபிகேட்டைக் காட்டி 11.8 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் என்பது இலட்சம் கோடி) மதிப்புள்ள ஒரு கோடி கடன் பத்திரங்களை அமெரிக்கச் சூதாடிகள் உலக நிதிச்சந்தையில் விற்று விட்டார்கள்.


பிறகு அந்தப் பத்திரங்களின் மீதும் சூதாட்டம் தொடங்கியது! ‘இந்தக் கடன் வசூலாகாவிட்டால் இழப்பீடு தருவதாக’ச் சொன்ன இன்சூரன்சு கம்பெனிகளின் காப்பீட்டுப் பத்திரங்கள், ‘ஒவ்வொரு கடனும் வருமா, வராதா என்று அவற்றின் மீது பந்தயம் கட்டிச் சூதாடிய’ டெரிவேட்டிவ்கள்.. என தலையைச் சுற்றும் அளவுக்கு விதம் விதமான சூதாட்ட உத்திகளை உருவாக்கி, ஒரு கோடி கடன்பத்திரங்களின் மீது 1000 கோடி பரிவர்த்தனைகளை (transactions) நடத்திவிட்டார்கள் வால்ஸ்ட்ரீட் சூதாடிகள்!


பறவைக் காய்ச்சலை விடவும் பரவலாக, பருவக்காற்றை விடவும் வேகமாக உலகெங்கும் பரவி யார் யார் தலையிலோ இறங்கி விட்டது இந்தக் கடன். இவற்றை முதலீடுகளாகக் கருதி வாங்கிய பிறநாட்டு வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பென்சன் ஃபண்டுகள் அனைத்தும் மரணத்தின் விளிம்பில் நிற்கின்றன. முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது அமெரிக்காவின் திவால்!


நாட்டாமையின் டவுசர் கிழிந்து விட்டது! உலக முதலாளித்துவத்தின் காவலன், சந்தைப் பொருளாதாரத்தின் மேன்மையை உலகுக்கே கற்றுக்கொடுத்த பேராசிரியன், ஐ.எம்.எஃப்., உலக வங்கி முதலான நிறுவனங்களின் மூலம் ஏழை நாடுகளின் மீது ஒழுங்கை நிலைநாட்டிய வாத்தியார், ஒரு மூணுசீட்டுக்காரனை விடவும் இழிந்த போர்ஜரிப் பேர்வழி என்ற உண்மை ‘டர்ர்ர்’ என்று கிழிந்து விட்டது. ஆயினும் இது உலக முதலாளித்துவம் சேர்ந்து நடத்திய ஒரு கூட்டுக் களவாணித்தனம் என்பதால் கிழிசலை கோட்டுக்குள் மறைக்க முயல்கின்றது உலக முதலாளி வர்க்கம்.


35 இலட்சம் கோடி ‘மொய்’ப் பணத்தை முதலாளிகளுக்கு வாரிக்கொடுக்கும் இந்த ‘சூதாடிகள் நல்வாழ்வுத் திட்டத்’துக்குப் பெயர், பிரச்சினைக்குரிய சொத்துக்கள் மீட்புத் திட்டடுமாம்! (Troubled Assets Recovery Programme). ஓ ‘அமெரிக்க ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கக் காசில்லை’ என்று கூறிய புஷ், சூதாட்டத்துக்கு காப்பீடு வழங்கியிருக்கின்றார்.


அமெரிக்க நிதி நிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்ட செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, ‘சோசலிச ரசியாவாக மாறுகின்றது அமெரிக்கா!’ என்று அச்செய்திக்கு விசமத்தனமாகத் தலைப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் நடந்திருப்பது என்ன? முதலாளிகளின் கடன்கள் அரசுடைமையாக்கப்பட்டிருக்கின்றன. பொதுச்சொத்தான மக்களுடைய வரிப்பணமோ தனியார்மயமாக்கப் பட்டிருக்கின்றது. இல்லாத வீட்டுக்கு அமெரிக்க மக்கள் கடன் கட்டவேண்டும். அது நேரடிக் கொள்ளை. அப்படிக் கொள்ளையடித்தவனுக்கு அரசு கொடுக்கும் 70,000 கோடி டாலரையும் மக்கள் இனி வரியாகக் கட்டவேண்டும். இது மறைமுகக் கொள்ளை! இதைவிடப் பட்டவர்த்தனமான ஒரு பகற்கொள்ளையை யாரேனும் நடத்த முடியுமா?


‘கல்வி, மருத்துவம், போன்ற எதையும் அரசாங்கம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கக்கூடாது’ என்ற கொள்கையை அமெரிக்காவில் அமல்படுத்தி வரும் அமெரிக்க அரசு, எழுபதாயிரம் கோடி டாலரை அமெரிக்க முதலாளிகளின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கின்றதே, இது மார்க்ஸின் கூற்றுக்கு நிரூபணமே அன்றி வேறென்ன?
“தொழில், வணிகம், நிதித்துறைகளில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருந்தால், நாங்கள் அப்படியே அறுத்துக் கத்தை கட்டிவிடுவோம்” என்று பேசிவந்த முதலாளி வர்க்கம், இதோ வெட்கம் மானமின்றி மக்கள் சொத்தைக் கேட்டுப் பகிரங்கமாகப் பிச்சையெடுக்கின்றது. முதலாளித்துவப் பத்திரிகைகள் எனும் நாலுகால் பிராணிகள், “அரசாங்கம் தலையிட்டு மக்களது வரிப்பணத்தைக் கொடுத்து இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்” என்று சூடு சொரணையில்லாமல் எழுதுகின்றன.
யாருடைய தயவில் யார் வாழ்கின்றார்கள்? முதலாளி வர்க்கத்தின் தயவில் உழைக்கும் வர்க்கம் வாழ்ந்து வருவதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமை உங்களது கண் முன்னே நொறுங்குவது தெரியவில்லையா? தெருக்கூட்டுபவர்கள், குப்பை அள்ளுபவர்கள், மேசை துடைப்பவர்கள் என்று கடையரிலும் கடையராய்த் தள்ளப்பட்ட அமெரிக்கத் தொழிலாளிகள், தமது வியர்வைக் காசில் வீசியெறிந்த வரிப்பணத்தைப் பொறுக்குவதற்கு முண்டியடிப்பவர்கள் யார் என்று அடையாளம் தெரிகின்றதா? அட! இவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் உலகப் பணக்காரர்கள் அல்லவா?

தாங்கள் அதிமேதாவிகள் என்றும், நிதிச் சந்தையின் அபாயகரமான வளைவுகளில் நிறுவனத்தைச் செலுத்தும் வல்லமை பெற்ற திறமைசாலிகள் என்றும் அதனால்தான் தாங்கள் ஆண்டுக்கு 400 கோடி, 500 கோடி சம்பளம் வாங்குவதாகவும் பீற்றிக் கொண்டிருந்தார்கள் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள். இந்த வெள்ளைக்காலர் கண்ணியவான்கள், ‘போர்ஜரி வேலை கள்ளக் கணக்கு பொய் சர்டிபிகேட் தயாரிக்கும் தொழிலில்’ ஈடுபட்டிருந்த நாலாந்தரக் கிரிமினல்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியவில்லையா?
பணம், பணத்தைக் குட்டி போடுவது போலவும், அப்படித்தான் இவர்கள் உலகக் கோடீசுவரர்கள் ஆகி, உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதாகவும் இவர்கள் உலகத்துக்குச் சொல்லி வந்தார்கள். அமெரிக்க மக்களையும் அவ்வாறே நம்ப வைத்தார்கள். “ரியல் எஸ்டேட்டில் பணம் போடு, ஒன்று போட்டால் நூறு ஆகும். பங்குச் சந்தையில் பணம் போடு, நூறு போட்டால் ஆயிரம்” என்று போதையூட்டினார்கள். “எல்லோரும் உட்கார்ந்து தின்றால் உழைப்பது யார், எல்லாரும் வட்டியில் வாழ வேண்டுமென்றால், வட்டி கட்டுவது யார்?” என்ற எளிய கேள்வி கூட அந்தப் போதை மயக்கத்தில் அமெரிக்க மக்களுக்கு உறைக்கவில்லை. இன்று? இல்லாத வீட்டுக்குத் தவணை கட்டும் ஏமாளிகளாக, தனது ஆயுட்கால உழைப்பு முழுவதையும் அடகு வைத்துச் சூதாடிய தருமனாகத் தெருவில் நிற்கின்றார்கள் அமெரிக்க மக்கள்.
உற்பத்தி மென்மேலும் சமூகமயமாகி வருகின்றது, உலகமயமாகி வருகின்றது. ஒரு காரின் பல்வேறு பாகங்கள் பத்து நாடுகளில் தயாரிக்கப்பட்டு, ஒரு இடத்தில் பூட்டப்படுகின்றன. ஒரு ஆயத்த ஆடையை ஒரு தையல்காரர் தைப்பதில்லை. அதுகூட 50 கைகள் மாறுகின்றது. இந்த உற்பத்தியினால் கிடைக்கும் ஆதாயமோ, ஒரு சிலர் கையில் மட்டும் குவிகின்றது. உழைப்பாளிகளின் கையில் காசில்லை.


அவர்களுடைய நிகழ்கால உழைப்பை ஒட்டச் சுரண்டிவிட்டதால், கட்டப்பட்ட வீடுகளை, உற்பத்தியான பொருட்களைத் விற்பதற்காக மக்களின் எதிர்கால உழைப்பையும் இன்றைக்கே சுரண்டிவிடத் திட்டம் தீட்டி கடன் தவணை என்ற வலையில் அவர்களை வீழ்த்துகின்றது முதலாளித்துவம். ரோமானிய அடிமைகள் ஒரு ஆண்டைக்கு மட்டுமே வாழ்நாள் அடிமையாக இருந்தார்கள். அமெரிக்க மக்களோ முதலாளி வர்க்கத்துக்கே வாழ்நாள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
புதிய வீடுகளைக் கட்டினால் வாங்க ஆள் கிடையாதென்பதால் பழைய வீடுகளின் ‘மதிப்பை’ ஒன்றுக்குப் பத்தாக உயர்த்துவதன் மூலம், இரும்புப் பெட்டியில் தூங்கும் பணத்தை (மூலதனத்தை) வட்டிக்கு விட்டு சம்பாதிக்க முனைந்தார்கள் அமெரிக்க முதலாளிகள். இதுதான் உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் ‘பொருளாதார வளர்ச்சி’. இது வளர்ச்சி என்றால் லாட்டரிக் குலுக்கலும், மூணு சீட்டும், நாடா குத்துவதும் கூடப் பொருளாதார வளர்ச்சிதான். இதுதான் பங்குச்சந்தை! இந்த சர்வதேச சூதாட்டக் கிளப்புக்குப் பெயர்தான் நிதிச்சந்தை!


“இந்த நிதிச்சந்தைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையெல்லாம் அகற்றி இந்திய வங்கிகளையும், காப்பீட்டுக் கழகத்தையும், நிதி நிறுவனங்களையும் சுதந்திரமாகச் சூதாட அனுமதிக்க வேண்டும். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உட்பட இந்திய மக்கள் அனைவரின் தாலியையும் அறுத்து, அடகு வைத்து சூதாடும் சுதந்திரம் முதலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்” என்ற கொள்கையைத்தான் நமது ஹார்வர்டு நிதி அமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!


எந்தச் சூதாட்டத்திலும் எல்லோரும் வெற்றிபெற முடியாது. சூதாட்டத்தின் ஒழுக்கவிதிகளை மீறுவதிலிருந்து சூதாடிகளைத் தடுக்கவும் முடியாது. போலிப் பத்திரங்களைத் தயாரித்து சக சூதாடிகளுக்கே அல்வா கொடுத்து விட்டார்கள் அமெரிக்கச் சூதாடிகள். ‘உலக சூதாடிகள் மனமகிழ் மன்றத்தையே’ மூடும் நிலை வந்துவிடுமோ என்று அஞ்சித்தான் உலகநாடுகளின் அதிபர்கள் தவிக்கின்றார்கள். “வங்கிகள் திவாலானால் அரசாங்கம் பணம் தரும்” என்று அவசரம் அவசரமாக ஆஜராகின்றார்கள்.


புதிதாக எதையும் உற்பத்தி செய்யாமல், உற்பத்தி செய்தவனின் பொருள் மீது சூதாடி, சூதாடி உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் இந்த ‘அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி’யின் உண்மையான பொருள் என்ன? இது உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்பவனின் உடலில் வளரும் கொழுப்பு! அந்த வகையில் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு இப்போது வந்திருப்பது மாரடைப்பு!


அமெரிக்காவுக்கு மாரடைப்பு என்றவுடன் அகில உலகத்துக்கும் வேர்க்கின்றது. உலக முதலாளித்துவத்தின் இதயமல்லவா? இந்த இதயம் இயங்குவதற்குத் தேவையான இரத்தமாகத் தமது நிதி மூலதனத்தை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் எல்லா நாடுகளும் நடுங்குகின்றன. செப்டம்பர் 7 ஆம் தேதியன்று அமெரிக்க அரசால் அரசுடைமை ஆக்கப்பட்ட ஃபான்னி, ஃபிரெட்டி ஆகிய இரு நிறுவனங்களில் மட்டும் சீனா, ஜப்பான், ரசியா, பெல்ஜியம், பிரிட்டன், மற்றும் வளைகுடா நாட்டு முதலாளிகள் போட்டிருக்கும் தொகை 1,50,000 கோடி டாலர்.

அமெரிக்க நிறுவனங்களில் பிற நாடுகள் பெருமளவில் முதலீடு செய்திருப்பது மட்டுமல்ல, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை நம்பி சீனா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் இயங்கி வருவதால், ‘பெரியண்ணன் சாய்ந்தால் உலகப் பொருளாதாரமே சீட்டுக்கட்டு போலச் சரிந்து விடும்’ என்று கலங்குகின்றது உலகம்.
‘புலியாக மாற வேண்டுமானால், புலிவாலைப் பிடிக்க வேண்டும்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், அமெரிக்காவின் வாலைப் பிடித்து வல்லரசாகி விடக் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கத்துக்கும் கை கால்கள் நடுங்குகின்றன.

மும்பை பங்குச் சந்தை பாதாளத்தை நோக்கிப் பாய்கின்றது. திவாலான அமெரிக்க இன்சூரன்சு கம்பெனியுடன் கூட்டணி அமைத்திருக்கின்றது டாடாவின் இன்சூரன்சு நிறுவனம். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியோ, கவிழ்ந்து விடாமல் இருக்க சர்க்கஸ் வேலை செய்கின்றது. திருப்பூரின் பனியன் ஜட்டி ஏற்றுமதியாளர்கள் முதல், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற அமெரிக்க அவுட்சோர்சிங் வேலைகளின் இறக்குமதியாளர்கள் வரை அனைவரும் அமெரிக்கா நலம்பெற ஆண்டவனுக்கு நெய்விளக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

‘அமெரிக்க நெருக்கடிகள் இந்தியாவில் பிரதிபலிக்காது என்று எண்ணுவது முட்டாள்தனம்’ என்கிறார் பொருளாதார அறிஞர் அலுவாலியா. ‘உலகப் பொருளாதாரமே ஒரு இழையில் பின்னப்பட்டிருப்பதால், அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவும் தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும்’ என்று சர்வதேசிய உணர்வுடன் பேசுகின்றார் மன்மோகன் சிங்.

அமெரிக்க வீழ்ச்சியின் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையும் சரியத் தொடங்கியவுடனே, ‘அரசாங்கம் முட்டுக் கொடுத்து நிறுத்தும்’ என்று அறிவித்தார் ப. சிதம்பரம். அமெரிக்கக் கடன் பத்திரங்களை வாங்கி இந்திய முதலாளிகள் நட்டமடைந்திருந்தாலோ, இந்திய வங்கிகள் கவிழ்ந்தாலோ நம்முடைய வரிப்பணத்திலிருந்து நிதியமைச்சர் அதனை ஈடுகட்டுவாராம்! அமெரிக்க முதலாளிகளின் உண்டியலில் இந்திய மக்களின் வரிப்பணமும் காணிக்கையாகச் செலுத்தப்படுமாம்!


தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையால் அர்ஜென்டினா, மெக்சிகோ, இந்தோனேசியா, தென் கொரியா போன்ற பல நாடுகள் திவாலாக்கப் பட்டிருக்கின்றன.
__________________
அன்புடன்
சக்தி




அமெரிக்கப் பொருளாதார நிலையை மிகச் சுருக்கமாகச் சொல்லலாம்... it is due to disintegration of family. இதே கருத்தை நான் சில வருடங்கள் முன்பு நம் தளத்தில் கூறி "டின்" வாங்கிக் கட்டியுள்ளேன்.. ஆனால் நான் அன்று சொன்னதெல்லாம் இன்று உண்மையாகிவிட்டது.

பல ஆசிய நாடுகளின் வாழ்க்கை முறைக்கும் (குறிப்பாக, இந்தியாத் துணைக் கண்டம், சீனா, சீனக்குடும்பங்கள் அதிகமாக வாழும், மலேசியா/சிங்கை போன்ற நாடுகள்) ஆங்கிலோ-சாக்சன் வாழ்க்கை முறைக்கும் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு தான் இந்த அமெரிக்கப் பொருளாதாராத்தின் சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணம்.

ஆசிய வாழ்க்கை முறை என்பது ஒரு குடும்பத்தை/ ஒரு சமுதாயத்தைச் சார்ந்தது. ஆனால் ஆங்கிலோ சாக்சன் முறை என்பது ஒரு தனி மனிதனைச் சார்ந்து வந்தது.

ஆசியாவில் (குறிப்பாக இந்தியாவில்) குடும்பம் என்பது தான் basic unit of society. ஒருவன் செய்யும் செயல்கள் எல்லாமே குடும்ப நலத்தைச் சார்ந்தவையாக அமையவேண்டும் என்று இந்தியச் சமுதாயம் எதிர்பார்க்கின்றது. ஒரு வீடு வாங்குவது என்றால் அது குடும்பத்திற்காக'; ஒரு திருமணம் செய்யவேண்டும் என்றால் குடும்பங்கள் இணைவதற்காக; ஒரு கார் வாங்குவதென்றால் ஒரு குடும்பத்தில் எல்லோரின் பயனுக்காக; ஒரு கடன் வாங்குவது கூட குடும்பத்தின் முழு பொறுப்பு. தனிவாழ்வின் நல்லது தீயவைகளை ஒரு குடும்பமே பார்த்துக்கொள்ளும். ஒரு மனிதன் தன் குடும்பத்தைப் புறக்கணித்தால் சமுதாயம் அவனைத் தாழ்வாகப் பார்க்கும். குடும்பம் மற்றும் சமுதாயத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் வாழ்க்கையில் பொருளாதாரமும் குடும்பத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். வியாபாரமும் குடும்பத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். இது social economic pattern. வயோதிகர்களை, குடும்பம், வாரிசுகள், உறவினர்கள், மற்றும் சமுதாயம் பார்த்துப் பாதுகாக்கும். அரசிற்கோ அல்லது இன்சூரன்ஸ் கம்பெனிக்கோ அந்தத் தலைவலி தேவையில்லை. குடும்பத்து வாரிசு அதைக் கவனித்துக்கொள்வார்.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் அப்படியல்ல. எப்போது மகனுக்கோ மகளுக்கோ 15-16 வயது ஆகிவிடுகின்றதோ... அவன்/அவள் குடும்பத்தில் இல்லை. குழந்தைகளுக்காக சேமிக்கவேண்டும் என்ற தேவையில்லை. தாய்தந்தையரை பராமரிப்பதற்காக சேமிக்கவேண்டுமே என்ற எண்ணம் இல்லை. இவ்வளவு ஏன்? மனைவிக்கோ/கணவனுக்காகவோ சேமிக்கவேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை. ஏனென்றால், இன்று கணவன் - மனைவி... நாளை யாரோ? அல்லது பந்தமில்லாமலேயே சேர்ந்து வாழலாம். பிரிந்தால்.. பிரிந்து செல்லலாம். நாளை என்பது என்ன? என்று நினைத்துப் பார்க்கத் தேவையே இல்லை. இன்று வாழவேண்டும், கூத்தாடவேண்டும், கொண்டாடவேண்டும் அவ்வளவுதான்.

இந்தியாவில் தன் மகன் மருத்துவக் கல்லூரி செல்லவேண்டும் என்பதற்காக குழந்தை ஒரு வயது இருக்கும் காலத்திலிருந்து தந்தை சேமித்துக் காப்பாற்றுவார். ஆனால் அமெரிக்காவில் அப்படி ஒரே ஒரு உதாரணம் காட்ட இயலுமா? உனக்கு வேண்டுமென்றால், நீயே 14 வயதிலிருந்து வேலை செய்து பொருள் ஈட்டி.. வேண்டும் என்று நினைத்தால் படி.. ஸ்காலர்ஷிப் கிடைத்தால் சரி.. இல்லையென்றால் என்னவோ செய்.. இப்போதைக்கு எனக்கு இருப்பதை நான் செலவு செய்து வெகுவாகக் கொண்டாடுகின்றேன்.. இது தான் ஒரு சராசரி அமெரிக்க (எல்லா ஆங்கிலோசாக்சன்) குடிமகனின் நினைப்பு.

சீனா, தாய்வான், தாய்லாந்து, சிங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குடும்ப சேமிப்பு என்பது வருமானத்தில் 20-30%. ஆனால் அமெரிக்காவில்?? மைனஸ் 3%. அதாவது இந்த வருட வருமானத்தை முழுமையாக செலவழித்துவிட்டு, அடுத்த வருடத்தின் வருமானத்தை அடமானம் வைத்து 3% கடன் வாங்கி செலவு செய்வது அமெரிக்க வாழ்க்கை முறை. குடும்பம் என்பது சமுதாயத்தின் ஆதாரமான unit ஆக இருந்தால் குடும்பத்தின் வருங்காலத்திற்காக சேமிப்பார்களே?? அது இல்லை.... பொருளாதாரம் லேசாக ஆட்டம் கண்டால் போதும்.. everything will fall like a pack of cards.

ஆசிய மக்கள் சேமிப்பார்கள்; சேமிப்பை அமெரிக்க வங்கியில் சென்று கொட்டுவார்கள். அமெரிக்கர்கள் அந்த சேமிப்பைஎல்லாம் கடனாக எடுத்து செலவு செய்து.. ஹவாயிலும் அலாஸ்காவிலும் விடுமுறை கொண்டாடி தூபம் விட்டுவிடுவார்கள். மேலும் மேலும் கடன் வாங்குவார்கள். அமெரிக்காவின் செலவினங்கள் எல்லாம் ஆசிய நாடுகளின் வருமானம்; ஆசியாவின் சேமிப்பெல்லாம் அமெரிக்காவின் கடனாக மாறும்... இது தான் நிலை. இந்த நிலைக்கு முழு முதற்காரணம் வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் முழுவதும் தனிமனிதனின் சுகத்தைச் சார்ந்து உள்ளது. சமுதாயத்திற்காகவோ, குடும்பத்திற்காகவோ சேமிக்கத் தேவையே இல்லை.

உலகில் மூன்று முக்கியமான பொருளாதார முறைகள் நடைமுறையில் வந்துள்ளன.

- பொதுவுடமை மற்றும் கம்யூனிஸம்

- முழுக்க முழுக்க சந்தைப் பொருளாதாரம் - அதாவது தனி மனிதனின் தேவைகளை உடனடியாக நிறைவு செய்யும் "செலவுப் பொருளாதாரம்" - crass capitalism

- சமுதாயம் மற்றும் குடும்ப நலனைச் சார்ந்த சேமிப்புப் பொருளாதாரம்.

முதலாவது totally impractical. அதனால் விரைவிலேயே பல்லிளித்துவிடும்.
இரண்டாம் முறை வெறும் வீக்கத்தைத் தான் ஏற்படுத்தும். பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும் ஆனால் படாரென்று வெடித்துவிடும் நீர்க்குமிழி
மூன்றாவது முறை (ஆசிய மற்றும் இந்திய முறை)தான் நீண்ட நாட்கள் வாழும், வாழவைக்கும் முறை.

வெள்ளைக்காரன் நமக்கெல்லாம் போதனை செய்வான். வங்கிகளில் basel 1, basel 2 எல்லாம் கையாளவேண்டும் என்று. ஆனால் அவன் ஒன்றும் செய்யமாட்டான். லேமன் ப்ரதர்ஸின் capital adequacy பற்றி படித்திருக்கின்றீர்களா? Basel 1 எனப்படும் பன்னாட்டு வங்கிகளின் நியமப்படி Capital adequacy அதாவது வழங்கியிருக்கும் மொத்தக் கடன்களில் வங்கி முதலாளிகளின் சொந்தப்பண இருப்பு - குறைந்தது 8% இருக்கவேண்டும். அதாவது மொத்தக் கடன்கள் 100 ரூபாய் என்றால் அதில் குறைந்தது 8 ரூபாய் சொந்தப் பணமாக இருக்கவேண்டும், 92 ரூபாயை வெளியிலிருந்து கடன் வாங்கலாம் (அதாவது டெபாஸிட்). இந்தியாவின் பாரம்பரிய ஆனால் சிறிய வங்கிகளான OBC, Andhra Bank, KVB, TMB போன்றவையில் CAR 13-14%க்கும் அதிகம். பெரிய வங்கிகளான SBI, Canara போன்றவை 10% இருப்பு உள்ளன. அமெரிக்கச் சந்தைப் பொருளாதாரத்தை வேதவாக்காகக் கருதி வரும் ICICIஇலும் 8%க்கு சற்று குறைவான CAR ஆனால் லேமன் ப்ரதர்ஸில் எப்படி என்று தெரியுமா? 0.3%க்கும் குறைவு. சொந்தப் பணம் 1 டாலர் என்றால், கடன் மற்றும் டெபாஸிட்டுகள் 372 டாலர். இந்த லட்சணத்தில் இந்தியாவின் வங்கிகள் Basel 2 norms பின்பற்றவில்லை அதனால் அவற்றினை வெளியேற்றுவோம் என்று கொக்கரித்தது federal reserve வங்கி. 372 கடன்காரர்களில் ஒரு ஆள் அம்பேல் ஆனாலும் வங்கியே அம்பேல் ஆகிவிடும் மிக அபாயகரமான நிலமை இருந்து வந்தது. அதை ஒரு தணிக்கையாளரும் கவனிக்கவில்லையா? வெறும் பிதற்றல். கடன் பிஸினஸில் நூற்றில் ஒன்று வராக்கடனாக இருப்பது மிகவும் சாதாரணமான நிலமை. இதில் 372 மடங்கு கடன் என்றால்? நிலமை என்னவாகும். இத்தகைய fake கடன்களை இன்சூர் செய்து வேறு வருகின்றனர். நல்ல வேளையாக இது போன்ற அபாயகரமான இன்சூரன்ஸ் வசதிகள் நம் நாட்டில் இல்லை.

அமெரிக்காக்காரன் செய்வது எப்போதுமே அப்படித் தான். இந்தியா போன்ற வலுவாக வளர்ந்து வரும் நாடுகளைக் கிண்டல் செய்வதில் ஒன்று குறைவில்லை. தன் நாட்டில் இருக்கும் ஓட்டைகள் கண்களூக்குத் தெரியாது.

எண்ணை விலையை எடுத்துக்கொள்ளுங்கள். எந்தப் படுபாவி இது போன்று commodity derivatives trading அறிமுகப் படுத்தினானோ தெரியவில்லை? எண்ணை உற்பத்தியாளர்கள்; எண்ணை வியாபார நிறுவனங்கள்; எண்ணை பயன்பாட்டாளர்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பேரல் எண்ணை வியாபரம் செய்தால், அதே நேரத்தில் 528 பேரல் வியாபாரத்தை வெறும் காகிதத்தில் (derivative) வியாபாரம் செய்திவிடுவார்கள் அமெரிக்க வங்கிகள் மற்றும் wall street வியாபாரிகள். 528 பேரல் வாங்கி விற்பவர்களுக்கு எண்ணை என்றால் எந்த நிறத்தில் இருக்கும் என்றே தெரியாது... வெறும் "எண்ணை..... இத்தனை ஆயிரம் பேரல்" என்று காகிதத்தில் எழுதி, அக்காகிதத்தை trading செய்பவர்கள். இவர்கள் அடித்த கூத்து தான் கடந்த சில மாதங்களாக எண்ணை விலை கிடுகிடுவென்று உயர்ந்து, பல உலக நாடுகளை ransomஇல் நிறுத்தி வைத்தார்கள் இந்த போலி அமெரிக்க வியாபார முறையினால். இப்போது வாங்குகின்றார்கள்.. அடி மேல் அடி... வாங்குவார்கள்.

இந்தியப் பொருளாதாரத்தில் இதனால் ஒரு சில பாதிப்புகள் ஏற்படலாம்.. ஏனென்றால், கடந்த சில வருடங்களாக நம்மவர்களும் பைத்தியக்காரத்தனமாக தங்கள் பொருளாதாரத்தை முழுமையாக அமெரிக்காவை நோக்கித் திருப்பியுள்ளார்கள். ICICI போன்ற சில பைத்தியக்கார வங்கிகள் அமெரிக்க முறையைப் பின்பற்றி paper tradingஇல் இறங்கி கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்கள் சுட்டுக்கொண்டாகிவிட்டது. அத்துடன் சில பெரிய மென்பொருள் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குறையலாம். புது ரக வங்கிகள் கண்ட கண்ட கடன்களைக் கண்டகண்டவர்களுக்குக் கூவிக் கூவி விற்கும் அபாயகரமான கலாச்சாரம் அடிபடுவதால், அதில் ஈடுபட்டிருக்கும் சில ஆயிரம் ஊழியர்களுக்க்கு வேலை போகலாம். ஆனால் பொருளாதாரத்தில் அடிப்படை மிக ஸ்திரமாக இருப்பதால், ஆட்டம் காணாது. அமெரிக்கப் பைத்திய அரசாங்கம் செய்வது போல் 780 பில்லியன் write off செய்யும் கண்மூடித்தனமான பைத்தியச் செயல்கள் நம் நாட்டில் நடைபெறும் கேவலம் நடக்காது.

இனி நம் மூளையைப் பயன்படுத்துவோம். அந்நியன் சொல்வதை கண்மூடி நம்பவேண்டாம். நம்முடைய சமுதாய அமைப்புத் தான் உலகில் சிறந்தது. அதைக் கைவிடவேண்டாம். அமெரிக்க மாயைக்கு மயங்கி ஆசியர்களின் குடும்பப் பொருளாதாரத்தைச் சிதைக்க வேண்டாம்.

Read more...

ஏழரைப்பக்க நாளேடு!

>> Tuesday, October 21, 2008

ஏழரைப்பக்க நாளேடு!

லக்கிலுக்



2007 முடிந்த நேரத்தில் அரசியல் போர்மேகங்கள் சூழ்ந்து தமிழக மக்களுக்கு ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் எது நடந்தாலும் அதை தாங்கிக் கொள்ள கூடிய மனப்பக்குவத்தை எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் தமிழர்களுக்கு அளிக்க வேணுமாய் பிரார்த்திக்கிறோம். எது நடக்கப்போகிறதோ அது நல்லதுக்கு அல்ல என்ற அடிப்படையில் நாளைய செய்திகளை இன்றே வழங்கும் புதிய பத்திரிகையான ஏழைரைபக்க நாளேடை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.


ஏழரைபக்க நாளேடு!

கும்மியடித்தாலும் சரி, கும்மாளம் போட்டாலும் சரி.. உங்கள் டவுசர் நிச்சயம் கிழிக்கப்படும்!!



--------------------------------------------------------------------------------



சிறுபான்மையினரின் காவலர் நரேந்திரமோடி!!

- கருணாநிதி புகழாரம்!!


சிறுபான்மை மக்களை காக்கக்கூடிய காவலராக, காயிதேமில்லத்தின் மறு உருவமாக நரேந்திர மோடியை காணுகிறேன் என்றார் தமிழக முதல்வர் கருணாநிதி. நேற்று மாலை நரேந்திரமோடி அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரை மரியாதைநிமித்தம் சந்தித்தபின் இவ்வாறாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.


மேலும் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் அந்நியசக்திகளின் ஊடுருவலை முறியடித்து பாரதத்தை காக்கும் கட்சியோடு திமுக கூட்டணி வைக்குமா என்பதை திமுகவின் பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். பேட்டியின் போது அமைச்சர் ஆற்காடு வீராஸ்வாமி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேராயர் எஸ்றா சற்குணம், திமுகவின் கீழக்கரை கிளை தலைவர் ஜலாலுதீன், பாஜக பொதுச்செயலாளர் இல.கணேசன், திருநாவுக்கரசர் ஆகியோரும் உடனிருந்தனர். காஞ்சி சங்கரமடத்திலிருந்து காமாட்சியம்மன் கோயில் பிரசாதம் கருணாநிதிக்கு பிரத்யேகமாக பூஜை செய்து அனுப்பப்பட்டிருந்தது.



--------------------------------------------------------------------------------





30வது அணி! ஜெ. அதிரடி!!


போயஸ் கார்டனில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேற்று மாலை கம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்டு) பொலிட்பீரோ தலைவர் பிரகாஷ் கரத், கம்யூனிஸ்டு (வலது) தலைவர் ராஜா ஆகியோர் சந்தித்ததை அடுத்து தேசிய அளவிலான அரசியலில் சுனாமி அடிக்கத் தொடங்கியிருக்கிறது. இச்சந்திப்பைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு ஜெ. பேட்டியளித்தார். கம்யூனிஸ்டு தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்க்கும் பொருட்டாக கார்டனின் பின்வாசல் வழியாக வெளியேறி சுவர் ஏறி குதித்து தப்பினார்கள். ஜெ. அளித்த பேட்டி பின்வருமாறு :


”சென்ற ஆண்டு சந்திரபாபு நாயுடு, முலாயம் போன்ற மண்குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்கி மூன்றாவது அணி அமைத்து மூளியாகிப் போனேன். இம்முறை அவ்வாறாக இல்லாமல் அதிமுகவில் இருந்து ஒருவரை பிரதமராக ஏற்றுக் கொள்ளக்கூடிய கூட்டணியை அமைக்க முடிவு செய்திருக்கிறேன். இடையில் கண்ட கபோதிகளும் ஒவ்வொரு அணி உருவாக்கி இருக்கிறபடியால் எங்களது அணி 30வது அணியாக ஆகிவிட்டது. இது 30வது அணியாக இருந்தாலும் முதல் அணி (செங்கோட்டையன், ஓபிஎஸ் விசிலடித்து கைத்தட்டுகிறார்கள்) 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து செங்கோட்டையில் அதிமுகவின் கொடியை ஏற்றுவோம். அயல்நாட்டு அண்டோமேனியா, நரமாமிச நரேந்திரமோடி, கயவன் கருணாநிதி கும்பலை நாட்டை விட்டே துரத்துவோம்” என்றார்.


“புத்ததேவ் பட்டாச்சார்யா புதியதாக வலம் வரும் லெக்சஸ் சொகுசு கார் அம்மா வாங்கிக் கொடுத்தது அல்ல” என்று அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன் அப்போது பத்திரிகையாளர்களிடம் ரகசியமாக கிசுகிசுத்தார்.




மாமனிதர் கருணாநிதி! - சோ தலையங்கம்


கருணாநிதி ஒரு மாமனிதர். அவர் நாட்டுக்கு வழிகாட்டுவார் என்று சமீபத்தில் 1976லேயே நான் எழுதியிருக்கிறேன் என்று சோ தனது துக்ளக் தலையங்கத்தில் எழுதியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் எழுதியிருப்பதாவது :


இன்றைய நிலையில் தேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாமனிதர் கருணாநிதி விளங்குகிறார். இவர் இதுபோல நாட்டுக்கே வழிகாட்டுவார் என்று சமீபத்தில் 1976ல் மிசா சட்டம் பத்திரிகைகளின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தபோதே நான் எழுதியிருக்கிறேன். 1976 செப்டம்பர் 23 துக்ளக் இதழில் வெளிவந்த கேள்வி-பதில் :


கேள்வி : எதிர்காலத்தில் கருணாநிதி என்ன ஆவார்? - நரசிம்மன் ராகவன் அய்யங்கார், சென்னை-61


சோ பதில் : எதிர்காலத்தில் அவர் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்து கருணாநிதி ஜெயில் கைதியாகவும் ஆகலாம். இல்லையென்றால் ஏதோ ஒரு அதிசயம் நடந்து அவர் நாட்டுக்கே வழிகாட்டவும் காட்டலாம். என்ன ஆனாலும் அது அவரது குடும்பத்துக்கு நல்லது. நாட்டுக்கு நல்லதா என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.


76ல் நான் எழுதியது 2008க்கும் பொருந்துகிறது அல்லவா? கருணாநிதி, சுப்பிரமணியசாமி, இல.கணேசன் போன்றவர்கள் கூட்டணி அமைத்து தமிழகத்தில் நாற்பது சீட்டுகளையும் வென்று மத்தியில் நரேந்திரமோடியை ஆட்சிக்கு வரவைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இது நடந்தால் நாட்டுக்கு நல்லது.





கனவால் அமைந்த கூட்டணி!

- நமது சிறப்பு நிருபர் பரபரப்புத் தகவல்!


திமுக-பாஜக கூட்டணி அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு அமைவது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த கூட்டணியை அமைத்தவர் அமரர் அண்ணா என்ற புதுத்தகவல் வெளியாகியிருக்கிறது. அத்வானியை சந்திக்க நேற்று மாலை தமிழக முதல்வர் கருணாநிதி சென்றபோது இத்தகவலை துரைமுருகன் தெரிவித்தார்.


கருணாநிதி கனவில் தோன்றிய பேரறிஞர் அண்ணா ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும் தம்பி. என் நண்பர் வாஜ்பாய் வீற்றிருக்கும் பாஜக எனும் சுவரில் ஆட்சி என்னும் சித்திரத்தை வரை' என்று சொன்னாராம். அதே இரவில் வாஜ்பாய் கனவிலும் தோன்றிய அண்ணா ‘என் தம்பியை அரவணைத்து ஆட்சியமைத்து நாட்டை மோடி மூலமாக காப்பாற்றுங்கள் தோழர்' என்றும் சொன்னாராம்.


இத்தகவலை கேள்விப்பட்டதிலிருந்து தமிழகமெங்கும் இருக்கும் திமுக உடன்பிறப்புகள் உடல்சிலிர்த்துப் போயிருக்கிறார்கள்.




தேமுதிகவால் புரட்சி ஏற்படும்! - விஜயகாந்த் சூசகத் தகவல்!


விஜயகாந்தின் பண்ணைவீட்டில் இருந்த மாட்டுக்கொட்டகையை வாய்க்கால் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் இடித்துவிட்டது. அதைக் கண்டித்து மதுரை மாட்டுத் தாவணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது :


“நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த கட்சி காங்கிரஸ் கட்சி. நல்லவர் மூப்பனார் அந்த கட்சியில் இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக கருணாநிதி காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியாவையும் அவமானப்படுத்துகிறார். என் தந்தை பாரம்பரிய காங்கிரஸ்காரர் என்பதால் இன்று என் வீட்டில் இருந்த மாட்டுக் கொட்டகையை ஆள்வைத்து மு.க.ஸ்டாலின் இடித்திருக்கிறார். இதற்கெல்லாம் கருணாநிதி பதில் சொல்லவேண்டிய காலம் வரும்.


என்னைப் பார்த்து முலாயம்சிங் யாதவ் பயப்படுகிறார், சந்திரபாபு நாயுடு பயப்படுகிறார். ஜார்ஜ் புஷ் பயப்படுகிறார். பிடல்காஸ்ட்ரோ பயப்படுகிறார்” இவ்வாறாக விஜயகாந்த் பேசினார்.


‘காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்தாலும் சேர்வோம்' என்று பண்ரூட்டி ராமச்சந்திரன் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தபோது பேசியது நமது நிருபரின் காதில் விழுந்தது.




பாமக நிலை பரிதாபம்!


திமுக, அதிமுக கூட்டணிகள் உறுதியாகிவிட்ட நிலையில் இரு கூட்டணிகளுமே பாமகவை கழட்டிவிடும் முடிவில் இருக்கின்றன. இருந்தாலும் கிடைக்கிற கேப்பில் கடாவெட்டும் நோக்கத்தில் கோபாலபுரம் பக்கமாக காலையில் வாக்கிங்கும், மாலையில் போயஸ் கார்டன் வாசலில் அங்கப்பிரதட்சணமும் செய்துவருகிறார் டாக்டர் ராமதாஸ். டெல்லிக்கு சென்றபோது சோனியா வீட்டு வாட்ச்மேன் தனக்கு சல்யூட் வைக்கவில்லையென்று அவசர அவசரமாக மத்திய அரசை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் சென்றமாதம் அறிக்கை விட்டிருந்ததால் காங்கிரஸ் வட்டாரமும் பாமக மீது கோபமாக இருக்கிறது. இந்நிலையில் திருமாவளவனும் திமுகவோடே ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்பதால் தனித்து நின்றால் ஒரு தொகுதியிலாவது டெபாசிட் வாங்கமுடியுமா என்று ஜி.கே.மணியுடன் விவாதித்து வருகிறார் டாக்டர் ராமதாஸ்.




சமூகநீதி காத்த வீராங்கனை - வீரமணி பரவசம்


பெரியார் திடலில் முந்தாநாள் நடந்த சமூக இழிவுநிலை மாற்றம், மூடநம்பிக்கை ஒழிப்பு மற்றும் புரட்சிகர விழிப்புணர்ச்சி மாநாட்டில் இறுதியுரையாற்றிய வீரமணி ஜெயலலிதா தான் சமூகநீதி காத்த வீராங்கனை. தந்தை பெரியார் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரே திராவிடத் தலைவர் அவர் தான். தந்தை பெரியார் பெயரை கெடுக்கவே தன்னை பெரியாரின் சீடர் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார் என்று காட்டமாகப் பேசினார். முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் சத்யராஜ், இயக்குனர் சீமான் ஆகியோர் ஆவேசமாகப் பேசினர்.




எங்கே போகும் இந்தப் பாதை - வைகோ ஒப்பாரி


நேற்று வேளச்சேரியில் நடந்த எழுச்சிநாள் பொதுக்கூட்டத்தில் ‘என்னை கைது செய்துபார்' என்று கருணாநிதிக்கு சவால் விட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஆவேசமாக மூன்றரை மணிநேரம் பேசிய வைகோ சுயபச்சாதாப கழிவிரக்கத்தின் உச்சியில் சேது படத்தில் இடம்பெற்ற “எங்கே செல்லும் இந்தப் பாதை” பாடலை உருக்கமாகப் பாடினார். கூட்டத்தில் இருந்தவர்கள் சோகமாக கண்ணீர் சிந்த, தொண்டர்களை உற்சாகப்படுத்த அந்தப் பாடலுக்கு சம்பந்தமேயில்லாமல் குத்தாட்டம் போட்டார் நாஞ்சில் சம்பத். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த வேளச்சேரி மணிமாறன் குட்டிக்கரணம் போட்டு சோகத்தை மறைக்க முயன்றார்.


திமுக பாஜகவோடு கூட்டு வைப்பதும், அதிமுக இடதுசாரிகளோடு கூட்டு வைப்பதும் உறுதியாகிய நிலையில் மம்தா பானர்ஜியோடாவது கூட்டு வைக்கலாமா என்று வைகோ செய்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் மதிமுகவினர் சோர்ந்துப் போயிருக்கிறார்கள். வைகோவுடன் கூட்டணி பேசவந்த புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மதிமுகவுக்கு மூன்று சீட்டு தான் கொடுக்கமுடியும் என்று கறாராகப் பேசிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



பிச்சையெடுத்தாவது திமுக-பாஜக கூட்டணியை வெற்றிபெற வைப்பேன்! - சு.சாமி சபதம்!


ஒவ்வொரு வாக்களரின் காலில் விழுந்து பிச்சையெடுத்தாவது திமுக-பாஜக கூட்டணியை வெற்றிபெற வைப்பேன். இதற்காக கலைஞர் எனக்கு செய்யவேண்டியது ஒன்றே ஒன்று. மத்தியசென்னையில் சந்திரலேகாவை நிற்கவைத்து வெற்றி பெறவைக்கவேண்டும் என்று சுப்பிரமணிய சாமி கூறினார். மேலும் மன்மோகன்சிங் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பஞ்சுமிட்டாய் தயாரிப்பதில் ஊழல் செய்திருப்பதாகவும், உலக நீதிமன்றத்தில் அவர் மீதும் சோனியா மீதும் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சுப்பிரமணியசாமி இப்போது புதியதாக ஒரு சீட்டு கேட்டிருப்பதால் அறிவாலய வட்டாரம் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. ஏற்கனவே ஆர்.எம்.வீரப்பனுக்கு பல ஆண்டுகளாக இதயத்தில் மட்டுமே சீட்டு கொடுத்து அல்வா கொடுத்துக் கொண்டிருப்பதால் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் அதிமுகவுக்கு தூது விட்டு வருவதாக வரும் செய்திகளால் கருணாநிதி கலங்கிப் போயிருக்கிறார்.

Read more...

இது பகடி செய்யும் காலம்

ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருந்த கட்டுரைகள் ஆனந்த விகடன் புண்ணியத்தில் ஊரெங்கும் விளம்பரமாயிருக்கின்றன. யாரோ சும்பன், குசும்பனெல்லாம் இக்கட்டுரைகளைப் பற்றிய ஆனந்த விகடனின் விமர்சனத்தின் பின்னணியில் இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் எரிந்ததென்னவோ ஆனந்த விகடன் பிரதிகள்தான். 'கொஞ்சம் பேர் மட்டும் படித்துக் கொண்டிருந்த கட்டுரைகளை இப்படி ஊருக்கெல்லாம் சொன்னது விகடன்தான்' என்று எரித்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைத்தாண்டி வன்முறையாய் எதுவும் நடக்கவில்லை என்பது மிக ஆறுதலான விஷயம்.



தமிழர்களின் நடிகர்கள், தலைவர்கள் மீதான 'கடவுள்' வழிபாடு தமிழர்கள் அல்லாத எல்லோராலும் கேலி செய்யப்படும் ஒன்று. சென்னை வடபழனியில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த ஒரு நடிகருக்கு கட்-அவுட் வைத்து, மாலை போட்டு, பாலபிஷேகம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் அந்த இரண்டு திரைப்படங்களில் ஒன்று மட்டுமே ஹிட், இன்னொன்று மகா ஃப்ளாப். மூன்றாவது படமும் விழுந்தால் அதற்கப்புறம் நடிப்பாரா என்பதே சந்தேகம். அதற்குள்ளாகவே, குமரன் நகர், மூன்றாவது தெருவைக் கிளையாகக் கொண்டு ஒரு ரசிகர் மன்றம்; பாலபிஷேகம்.



சென்ற வருடம் இரண்டு புரட்சி நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே மோதல் வந்து கத்திக்குத்து வாங்கி ஒரு புரட்சி நடிகரின் ரசிகர் செத்துப் போனார். பொதுவாக என் தமிழரல்லாத நண்பர்கள் 'உங்க ஆளுங்களைக் கொல்லனும்னா, உங்க தலைவனைப் பற்றித் தப்பாப் பேசினா போதும்... உடனே தீக்குளிச்சிடுவீங்க, இல்லை?' என்று கேட்கும்போது புன்னகைப்பதைத் தவிர வேறு வழி இருப்பதில்லை எனக்கு. சிலை வழிபாட்டைக் கேலி செய்யும், ‘சிலை உடைப்புகளில்’ நம்பிக்கை வைத்திருக்கும் பகுத்தறிவு ‘நம்பிக்கை’யாளர்கள் சிலைகளை உடைத்துப் பழகியபின் தங்களுக்கென்று சிலைகளைவிடக் கடினமான உடைக்க முடியாததொரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். விரலைச் சுற்றி கண்ணைக் குத்துவது, கண்ணைச் சின்னதாக்கி புருவத்தை உயர்த்தி முறைத்துப் பார்ப்பது, பளாரென்று அறைவது போல் (பார்ப்பவர்களைத்தான்) பஞ்ச் டயலாக் பேசுவது என்று முந்தாநேற்று நடிப்பதற்கு அட்வான்ஸ் வாங்கிய நடிகர்கள் கூட இந்த ‘பிம்ப’ கட்டமைப்பில் டிப்ளொமா வாங்கியிருக்கிறார்கள். நடிகர்கள், தலைவர்களை மனிதர்களாக இல்லாமல் கடவுள்களாகப் பார்க்கும் போக்கு, பாசாங்கு இது போன்ற பகடிச் சித்திரங்களிலாவது அழிந்து போகாதா என்று ஒரு நப்பாசை இருக்கிறது எனக்கு.



***


அபத்தங்களை எதிர்கொள்ள நகைச்சுவையை விட வேறு சிறந்த ஆயுதம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஆனந்த விகடன் செய்ய நினைத்த வேலையை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் செய்திருக்கிறார்கள். (ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு அத்தனை அதிகாரம் இல்லை, அவ்வளவே!) கொள்கைச் சாயம் வெளுக்காமலிருக்க ரேடியோ, திரைப்படம், பத்திரிகை இப்படி அத்தனை வாசல்களையும் மூடி எங்கெங்கும் கம்யூனிஸப் புகழ் மட்டுமே பரவி வந்தது. யதார்த்தத்துக்கும், வாழ்பனுபவத்துக்கும் சற்றும் ஒத்து வராத விஷயங்கள் மேல் ஏளனம் ஏற்படும். ஆனால் யதார்த்தமே தங்கள் கொள்கைகளின் அடிப்படை என்று கூறிக்கொண்ட கம்யூனிஸ்டுகளுக்கு இந்த விஷயம் புரியாமல் போனது ஆச்சரியமான விஷயம். ஏளனத்தையும், நையாண்டியையும் புரிந்து கொள்ளவும் கொஞ்சம் கற்பனா சக்தி வேண்டும். மக்களின் கற்பனா சக்திதான் தங்கள் அதிகாரத்துக்கு முதல் எதிரி என்று கம்யூனிஸ்டுகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அந்த கற்பனா சக்திக்கான வாசல்களைத்தான் அவர்கள் அடைத்து வைத்திருந்தார்கள்.


மக்கள் தங்களுக்கிடையே கூட கிண்டலாகக் கம்யூனிஸ்டுகளைப் பற்றி எதுவும் சொல்லிவிட முடியாது. ('1984' என்ற புத்தகத்தில் ஜார்ஜ் ஆர்வெல் இந்த விஷயத்தை மிகச்சிறப்பாக எழுதியிருப்பார்). நோபல் பரிசு பெற்ற அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸின் (Alexander Solzhenitsyn) தன் நண்பர்களிடம் சோவியத் அரசாங்கம் பற்றிப் பேசியதையும், அவரெழுதியக் கட்டுரையையும் காரணமாகக் காட்டி எட்டு வருடங்களை சிறையில் கழிக்க நேரிட்டது. ஆனால் அப்போது அவருக்குக் கிடைத்த அனுபவங்களை “இவான் டெனிஸவிச்சின் வாழ்வில் ஒரு நாள்” (One day in the life of Ivan Denisovich) என்ற புத்தகமாக எழுதியதுதான் அவருக்கு உலகப்புகழையும், நோபல் பரிசையும் வாங்கித்தந்தது.



கம்யூனிஸக் கொடுமைகள் கண்ணில் பட்டாலும் வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பொய் சொல்ல வேண்டும் என்றுதான் அன்றைய ரஷ்ய மக்களின் நிலை இருந்திருக்கிறது. அதைப் பற்றி கூட ஒரு ஜோக் இருக்கிறது.



இரண்டு ஐரோப்பிய கம்யூனிஸ்டுகளுக்கு இலவசமாக ரஷ்யாவைச் சுற்றிப் பார்த்து வர வாய்ப்புக் கிடைத்ததாம். ஆனால் ரஷ்யாவுக்குப் போன இருவரில் ஒருவன் தான் திரும்பி வந்தான். திரும்பிவந்த அவனிடம் அவன் நண்பன் கேட்கிறான்.


“சோவியத் யூனியனில் வாழும் சூழ்நிலை எப்படி இருக்கிறது?”

“பிரமாதம். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.”

“வீடுகள் எப்படி இருக்கின்றன? சாப்பாட்டு விஷயம் எப்படி?”

“மிக அருமை. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.”

“ஆனால் உன்னுடன் சென்ற உன் நண்பனுக்கு என்ன ஆயிற்று?”

“அவன் இப்போது சைபீரியச் சிறையில் இருக்கிறான் - அவன் கண்களை அவன் நம்பியதால் வந்த வினை!”



ராய் மெத்வதேவ் (Roy Medvedev) என்ற வரலாற்று ஆய்வாளர் கே.ஜி.பி(K.G.B)-யின் ஆவணங்களை ஆராய்ந்ததில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேர் ஸ்டாலின் காலத்தில் ஜோக்கடித்தற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. அப்போதும் மக்களுக்கிடையே ரகசியமாகப் பல்வேறு ஜோக்குகள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. இந்த ஜோக்குகளால் கம்யூனிஸம் சரிந்து விடவில்லை. ஆனால் அடக்குமுறையில் அமிழ்ந்து கிடந்த மக்களுக்கு இப்படி தங்களுக்கிடையே நகைச்சுவையாகப் பேசிக்கொள்வது, ஒரு மிகப்பெரிய சுதந்திர உணர்வைத் தந்திருக்கிறது.



ஆனால் இந்த அடக்குமுறை நிலை ஸ்டாலினின் மறைவுக்குப் பிறகிலிருந்தே கொஞ்ச கொஞ்சமாக மாறத்தொடங்கியது. அதிலும் கடைசிக்கால கட்டங்களில் வந்த கம்யூனிஸ அதிபர்கள் பத்திரிகைகளில் வெகுவாக விமர்சிக்கப்பட்டார்கள். கம்யூனிஸ அரசாங்கத்தோடு அதன் தலைவர்கள் அத்தனை பேரும் மலையேறி விட்டபடியால் சமீப காலங்களில் நிறைய விமர்சனங்களும், புத்தகங்களும் ரஷ்ய கம்யூனிஸ்டுகளைப் பற்றி எழுதப்பட்டு வருகிறது. (நான் இங்கே குறிப்பிடுவது உண்மையான நடுநிலை விமர்சனங்கள் மட்டுமே.) அந்த வரிசையில், “சிறு புரட்சிகள்” (Tiny Revolutions) என்ற பெயரில் ரஷ்ய அரசியல் நகைச்சுவைத் துணுக்குகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக ப்ரூஸ் ஆடம்ஸ் (Bruce Adams) என்பவர் வெளியிட்டிருக்கிறார்.[சுட்டி1] (நகைச்சுவைத் துணுக்கை சிறு புரட்சி என்று முதன் முதலில் அழைத்தவர் ஜார்ஜ் ஆர்வெல்).


ரஷ்யத் தலைவர்களைப் பற்றி பெரும்பாலும் ரஷ்ய மக்களே பேசி வந்த நகைச்சுவைத் துணுக்குகளும், சம்பவங்களும் “சிறு புரட்சிகள்” புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. புத்தகம் அரசியல் காலக்கிரமப்படி தொகுக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் மொத்தம் ஆறு பகுதிகள். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தலைவரைப் பற்றிய ஜோக்குகள் அடங்கியிருக்கின்றன. லெனின், ஸ்டாலின், க்ருஷ்சாவ் (Khrushchev), ப்ரெஷ்னெவ் ஆகியோருக்குத் தனித்தனிப் பகுதிகளும் - ஆந்த்ரபோவ், செர்ன்யென்கோ ஆகியோர் ஒரு பகுதியிலும் இதர பிற்கால சோவியத் தலைவர்கள் கடைசிப் பகுதியிலும் வருமாறு புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் பற்றிய ஜோக்குகளும் பிற்காலத் தலைவர்கள் பற்றிய ஜோக்குகளும் மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றன.


“ரஷ்ய அதிபர் ப்ரெஷ்னெவ் 1980 ஒலிம்பிக் பந்தயத்தைத் தொடங்கி வைத்துத் தன்னுடைய உரையைப் படிக்கத் தொடங்குகிறார்.

‘ஓ... !ஓ... !ஓ... !’

உடனே அவருடைய உதவியாளர் அவர் காதுகளில் கிசுகிசுக்கிறார்.

‘அது ஒலிம்பிக் சின்னம். உரை அதற்குக் கீழே தொடங்குகிறது!”


மேலும் ஒவ்வொரு பகுதிக்கு முன்னரும் தேவைப்பட்ட முன்னுரையும், விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. ‘கம்யூனிஸத்தின் கீழ் பொதுமக்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள இப்புத்தகம் பேருதவியாக இருக்கிறது’ என்று விமர்சித்திருக்கிறது “காண்டெம்பரரி ரீவ்யூ” (Contemporary Review) என்னும் பிரிட்டிஷ் பத்திரிக்கை. மேலும் பிற நாடுகள் அதிலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, சோவியத் அரசாங்கத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள், சோவியத் அரசாங்கம் மற்றும் அமைச்சரவை செயல்பட்டவிதம் ஆகியவற்றைப் பற்றி புரிந்துகொள்ளவும் இத்துணுக்குகள் உதவியாக இருக்கின்றன.


புத்தகத்திலிருந்து ஒரு ஜோக்:

“பி.பி.சி (BBC) செய்தி நிறுவனம் ரஷ்ய அரசியல் ரகசியங்களை எப்படியோ உடனுக்குடன் தெரிந்துகொண்டு வந்தது ரஷ்ய அரசாங்கத்தை மிகவும் எரிச்சலூட்டியது. அதனால் அடுத்த அமைச்சரவை சந்திப்பை யாருக்கும் சொல்லாமல் மூடப்பட்ட அறையில் நடத்தினார் ப்ரஷ்னெவ். கூட்டம் முடியும் வரை யாரும் வெளியில் செல்லக்கூடாது என்று உத்தரவும் போடப்பட்டிருந்தது.


கூட்டத்தின் நடுவில் பிரதமர் கஸீகினுக்கு (Kosygin) வயிற்றைக் கலக்க ஆரம்பித்து விட்டது. நெளிந்துகொண்டே வெளியில் செல்ல அனுமதி கேட்டார். அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.


சில நிமிடங்களில் கதவை யாரோ தட்டினார்கள். திறந்து பார்த்தால் துப்புரவுப்பணி செய்யும் வேலைக்காரி கையில் ஒரு பெரிய வாளியுடன் நின்று கொண்டிருந்தாள்.


‘கஸீகின் ‘டூ பாத்ரூம்’ போய்விட்டார் என்று பி.பி.சி-யில் சொன்னார்கள் அதுதான் சுத்தம் செய்வதற்காக வந்தேன்!’



***


பென் லூயி(Ben Lewis) இயக்கிய ஆவணப் படமான "சுத்தியலும், நகைச்சுவையும்" ('Hammer and Sickle' - ஐ நக்கலடித்து தலைப்பிடப்பட்ட Hammer and Tickle) சோவியத் ரஷ்யா மட்டுமில்லாமல் பல்வேறு ஐரோப்பிய கம்யூனிஸ்டுகளின் ஜோக்குகளையும், நகைச்சுவைத் துணுக்குகள் சமூக, அரசியல் ரீதியாக எவ்விதமான தாக்கங்களை ஏற்படுத்தின என்பதைக் கூறுகிறது.



இத்திரைப்படத்தைக் குறித்து 'ப்ராஸ்பெக்ட்' (Prospect) என்ற இதழில் இவரெழுதிய கட்டுரை[சுட்டி2] மிகச்சுவையான ஒன்று.



அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:



"ரொமேனியாவில் கொஸாக்கோவைப் (Ceausescu) பற்றித் திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது முதன்முறையாக கம்யூனிஸ்டு ஜோக்குகளைப் பற்றிய வரலாற்றுப் பாரம்பரியத்தைத் தெரிந்து கொண்டேன். என்ற புகாரஸ்ட் போக்குவரத்துத் துறையில் எழுத்தராக வேலை செய்த கேலின் பாக்தன் ஸ்டெஃபானெஸ்கோ (Calin Bogdan Stefanescu), கொஸாக்கோவின் ஆட்சியின் கடைசி பத்து வருடங்கள் அரசியல் ஜோக்குகளை சேகரித்து வந்திருக்கிறார். தான் எந்த ஜோக்கை, எப்போது கேட்டோம், என்று குறிப்பெடுத்து கிட்டத்தட்ட 900 ஜோக்குகளை புள்ளியியல் ரீதியாக ஆய்வு செய்திருக்கிறார். ஒரு அரசியல் நிகழ்வுக்கும், அந்த நிகழ்வு மீதான ஜோக்குக்கும் இடைப்பட்ட கால இடைவெளியை வரைபடமாக்கி (graph) ரொமேனிய கம்யூனிஸ ஜோக்குகளின் வேகத்தை ஆய்வு செய்திருக்கிறார். கொஸாக்கோவின் கடைசி மூன்று வருட ஆட்சிக்காலத்தில் ஜோக்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கானதால் இந்த ஜோக்குகளுக்கும் கொஸாக்கோவின் வீழ்ச்சிக்கும் தொடர்பு இருந்ததாகக் கூட அவர் முடிவு செய்திருக்கிறார். ஜோக்குகளின் புள்ளியிலாளரான ஸ்டெஃபானெஸ்கோவின் கதை, அவர் ஆய்வு செய்த ஜோக்குகளை விட நகைச்சுவையாக இருந்தது ஒரு நரண்முகை. அது ஒரு கம்யூனிஸ்ட் உலகை எதிர்த்துப் போராடிய ஒரு சாதாரண மனிதரின் உண்மைநிலையைக் காட்டியது போலிருந்தது.”


“... எனக்குத் தெரிந்தவரை ஜோக் சொல்வதில் யாரும் சலிப்படையவே இல்லை. ஆனால் ஜோக் சொன்னதற்காக அவர்கள் ஜெயிலுக்குப் போவது வழக்கமாக இருந்தது. ஹங்கேரியின் ரகசிய போலிஸின் ஆவணக் கோப்புகள் சேகரிப்பில் ஏராளமான ஆவணங்கள் ஜோக்குகள் சொன்னதற்காகக் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றியே இருந்தது. அரசு அலுவலர்கள் நாள் தோறும் இது போன்று ஜோக் சொன்னவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, சில வழக்குகளில் ஜோக் சொன்னதற்கான ஆதாரங்களைக் காட்டி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்”.


“கம்யூனிஸம் ஒரு நகைச்சுவை உற்பத்தி செய்யும் இயந்திரமாக இருந்தது. அதன் பொருளாதாரக் கோட்பாடுகளும், அடக்குமுறை இயக்கமும் நகைச்சுவைக்கான சூழ்நிலைகளை இயல்பாகவே உருவாக்கின. ஃபாஸிஸ ஆட்சி, நாஜி ஆட்சி இதிலெல்லாமும் நகைச்சுவைத் துணுக்குகள் இருந்தன. ஆனால் கம்யூனிஸம் போல ஒவ்வொரு நிமிடமும் ஜோக் சொல்வதற்கான அபத்தத்தை அவை கொண்டிருக்கவில்லை.


கம்யூனிஸ ஜோக்குகள், அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான ஒரு விஷயமாக மட்டுமில்லாமல், மக்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றம் நடக்க உதவும் ஒரு ரகசிய மொழியைப் போலவும் இருந்தது.”


ரஷ்யப் புரட்சியைப் பற்றிய ஜோக்குகள் அக்டோபர் 1917-இலேயே ஆரம்பித்துவிட்டன.

ஆரம்பகால ஜோக் ஒன்று:

ஒரு மூதாட்டி மாஸ்கோ மிருகக்காட்சி சாலைக்கு சென்று முதல் முறையாக ஒரு ஒட்டகத்தைப் பார்த்துவிட்டு வியந்துபோய் சொன்னாள். “போல்ஷெவிக்குகள் ஒரு குதிரையை எப்படி மாற்றி விட்டார்கள்!”


கார்பசேவும் நிறைய அரசியல் ஜோக்குகளைத் தெரிந்து வைத்திருந்தார். தனக்கு முன்பு அதிகாரத்திலிருந்தவர்கள் போலவே அவற்றைப் பிறரிடம் பகிர்ந்தும் கொண்டார். ஸ்டாலினோ, க்ருஷ்சாவோ தங்களுடைய செல்வாக்கின் வீழ்ச்சியைப் பற்றி ஜோக்கடித்துக் கொள்வது உங்களால் கற்பனை கூட செய்ய முடியாத காரியம். ஆனால் கார்பசேவ் அதைச் செய்தார். 1996-இல் கிளைவ் ஆண்டர்சன் வழங்கிய பிரிட்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கார்பசேவ் கலந்து கொண்டார். அப்போது அவர் சொன்ன ஒரு ஜோக்.


மாஸ்கோவில் ஒருவர் உணவுப்பொருட்களுக்கான க்யூவில் நின்று கொண்டிருந்தார். க்யூ மிக நீண்டதாக இருந்ததால் பொறுமையிழந்த அவர், “இவ்வளவுதான்.. இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது. இப்போதே போய் கார்பசேவைக் கொல்லப் போகிறேன்” என்று அருகிலிருந்த மனிதரிடம் சொல்லிவிட்டுச் சென்றார். சற்று நேரம் கழித்து கொலை செய்யப் போனவர் திரும்பி வந்து விட்டார். அருகிலிருந்த மனிதர் “என்ன கொலை செய்யவில்லையா?” என்று கேட்க, “அங்கே இதை விட நீளமான க்யூ இருந்தது. அதற்கு இதுவே பரவாயில்லை என்று திரும்பிவந்துவிட்டேன்” என்றார்.


‘அரசியல் ஜோக்குகள் நம்மைக் காப்பாற்றுபவையாக இருந்தன’ என்று ஏமாற்றத்திலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும் விடுபட ஜோக்குகள் காரணமாக இருந்ததைக் காட்டி 1989 - இல் கார்பவேவ் ஒரு தொழிலாளர் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.


கவனித்தால் ஒன்று புரியும் - மொத்த கம்யூனிஸ்ட் புள்ளிகளிலேயே கார்பசேவ் ஓரளவு சுதந்திர சமுதாயத்தை ஆதரித்தவர். அவருக்கு நகைச்சுவை உணர்வும் அதை வெளிப்படுத்துவதில் தைரியமும் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. நகைச்சுவை உணர்வில்லாதவர்களுக்கு அரசியல் அதிகாரம் தரக்கூடாது என்று கூட ஒரு சட்டத்தைக் கொண்டு வரலாம் போலிருக்கிறது.


***

“ஒருவேளை கம்யூனிஸம் ஒழிந்துவிட்டால் நாங்கள் பேசிக்கொள்வதற்கு நகைச்சுவையான விஷயமே இருக்காதோ என்றெல்லாம் நாங்கள் வேடிக்கையாகக் கவலைப்பட்டிருக்கிறோம்” என்று பென் லூயியிடம் சொல்லி இருக்கிறார் ஒரு ஹங்கேரியர்.


ஆனால் ரஷ்யர்கள் அப்படியில்லை. விளாதிமிர் புதின் தாண்டி இப்போது வந்திருக்கும் திமித்ரி மெத்வதேவையும் விட்டு வவக்காமல் வாரு, வாரென்று வாருகிறார்கள் [சுட்டி3].


திமித்ரி மெத்வதேவ், விளாதிமிர் புதினால் ஆட்டி வைக்கப்படும் ஒரு பொம்மை என்பது ஊரெங்கும் தெரிந்த ரகசியம். அதை வைத்துதான் இப்போது அங்கே காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள்.


உதாரணத்துக்கு ஒன்று:

மெத்வதேவ் பதவியேற்பு உரை நிகழ்த்தவிருக்கிறார். அப்போது அவருடைய உதவியாளர் ஒருவர் மெத்வதேவின் கோட்டிலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நூல்களைப் பார்த்துவிட்டு அகற்றப்போகிறார்.


அவரிடம் புதின் சொல்கிறார். “அவற்றை நீக்காதே. அவை என்னுடையவை!”


பாவம் மெத்வதேவ். “ஆரம்பத்துலயே ஆரம்பிச்சுட்டாய்ங்களா!” என்று கவலைப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.


****


இரண்டு வருடங்களுக்கு முன்னால் தமிழ் நாட்டில் ஒரு மிகப்பெரிய நகைச்சுவை அலை கிளம்பியது. ஒரு டிவி சேனலில் வந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடைய எந்த சேனலைத் திருப்பினாலும் ஒரே நகைச்சுவை மழை! இந்த நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்பவர்களிடம் நிச்சயமாக ஒரு எம்.ஜி.ஆர், ஒரு சிவாஜி மீதான ‘ஐட்டம்’ கண்டிப்பாக இருக்கும். எம்.ஜி.ஆர் என்றால் அவர் குரலையோ, சிவாஜி என்றால் அவர் மிகை நடிப்பையோ கிண்டல் செய்யாமல் நகைச்சுவையே இருக்காது! இங்கே உடைபட்ட பிம்பங்கள் எழுத்தானபோதுதான் ஆனந்த விகடனுக்குக் கோவம் வந்துவிட்டது.


ஆரம்பத்தில் நன்றாக இருந்த இந்நிகழ்ச்சிகள் போகப்போக சலிப்பூட்ட ஆரம்பித்துவிட்டன. புளித்துப்போன மிமிக்ரி, சலித்துப் போன ஜோக்குகள், அபத்தமான கிண்டல்கள். இப்போதெல்லாம் ஏதாவது மிரட்டுவதற்காக நாக்கை மடித்தால் கூட, ஆறே வயதான என் அக்கா மகன் “விஜய்காந்த் மாதிரி பண்ணாதீங்க மாமா..” என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறான். இத்தனைக்கும் அவன் வாழ்நாளில் பார்த்தது இரண்டே தமிழ்த் திரைப்படங்கள்தான் (ஒன்று சண்ட்ரமுகி, இன்னொன்று சிவாஜி). மற்றதெல்லாம் இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளின் உபயம்தான்.


இந்த நிகழ்ச்சிக்கு வருகை தரும் விருந்தினர்கள் எப்படிப்பட்ட மட்டமான ஜோக்குக்கும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். (இந்தக் கலையில் விற்பன்னர், ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடிய நவ்ஜோத்சிங் சித்து. இவர் சிரிக்கும்போது தட்டித் தட்டியே நிறைய மேஜைகளை உடைத்திருக்கிறார் என்று ஒரு வதந்தி நிலவுகிறது).


ஒரு மாதம் முன்பு நான் பார்க்க நேர்ந்த மகா அபத்தமான காமெடி நிகழ்ச்சியில் ஒரு ‘வளர்ந்துவரும்’ நடிகர் நடுவராக வந்திருந்தார். எந்த ஜோக்குக்கும் சிரிக்காமல் ‘உர்ர்ரென்றே’ இருந்தார். பரவாயில்லையே.. திராபை ஜோக்குக்கெல்லாம் சிரிக்காமல் இயல்பானவராக இருக்கிறாரே என்று நினைத்தேன். நினைப்பில் விழுந்தது ஆற்றில் திருடிய ஒரு லாரி மணல்.


நிகழ்ச்சியில் கமலஹாசனைப் பற்றி ஏதோ கிண்டலாகச் சொல்லப்போக கோவம் வந்ததே பார்க்கவேண்டும் நம் விருந்தினருக்கு. “ஒரு உலக மகா கலைஞனை இப்படியெல்லாம் பேசலாமா? அதிலும் சினிமாவிலேயே இருக்கும் நாமே அதைக் கேட்டுக்கொண்டும் இருக்கலாமா? அவர் நம்முடன் இருப்பதே நமக்குப் பெருமை இல்லையா?” என்றெல்லாம் எகிற ஆரம்பித்து விட்டார். ‘கமலஹாச அஷ்டோத்ர நாமாவளி’ ஏதாவது எடுத்து வந்திருக்கிறாரா என்று பார்த்தேன். நல்லவேளையாக அப்படி எதுவும் இல்லை.


நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சினிமா நடிகருக்கோ ஒரே தர்மசங்கடம். “ஹி... ஹி... இதெல்லாம் சும்மா காமெடிக்குதானே... ஹி... ஹி... கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர்தான்.. ஹி.. ஹி.. இருந்தாலும் இந்த நிகழ்ச்சியே ஒரு காமெடி நிகழ்ச்சிதானே...” என்றெல்லாம் வழிந்த அந்த நடிகர்... அட.. ஜெயமோகனை தொலைபேசியில் கூப்பிட்டு “செந்தமிழில்” திட்டிய அதே நடிகர்! கம்யூனிஸ நாட்டில் மட்டுமில்லை நம் நாட்டிலும் நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை போங்கள்!



***

ஒரு பின்குறிப்பு:


கம்யூனிஸ ஜோக்குகளைப் பற்றிய புத்தக, திரைப்பட மேற்கோள்கள் தற்செயல் நிகழ்வுகள் மட்டுமே. இதை வைத்து நான் கம்யூனிஸ அரசியலையும், தமிழ்நாட்டின் திராவிட அரசியலையும் ஒப்பிடுவதாக வீணாக முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டாம். சும்ப, நிசும்பர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி எனக்கு விளம்பரமெல்லாம் தர மாட்டார்கள். என்னையே அடித்து ஒட்டுவார்கள். அதனால் இந்த desclaimer மிக முக்கியமான ஒன்று.


****

Read more...

உடம்பு இளைப்பது எப்படி?

முன்பு எழுதியதைப் போல இப்பொழுதெல்லாம் சுதந்திரமாக எழுத முடியவில்லை. பயமாக இருக்கிறது. எழுவாய் இருக்கிறதா? பயனிலை இருக்கிறதா? என்று பார்த்து பார்த்து எழுத வேண்டியிருக்கிறது. வடமொழி சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் தவிர்ப்பதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறது.


மக்கள் தொலைக்காட்சியில் ‘தமிழ்ப்பண்ணை’ நிகழ்ச்சியில் எங்கே பேராசிரியர் நன்னன் அவர்கள் என்னுடைய வாக்கியத்தை எடுத்து வைத்துக் கொண்டு அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்து நம்மை நாற அடித்து விடுவாரோ என்ற ‘கிலி’ ஆட்கொண்டு ஆட்டிப் படைக்கிறது.


உயர்திணைக்கும், அஃறினைக்கும் வேறுபாடு தெரியாத இவர்களெல்லாம் ஏன் எழுத வருகிறார்கள் என்று கேட்டு நம் மானத்தை வாங்கி விடுவார்.


அவர் நம்மை “பண்ணையாளர்களே!” என்று அழைப்பது கேட்க காதுக்கு குளுமையாக இருக்கும். விவசாயத்திற்கு ஒரு ‘குழி’ நிலம் இல்லாத போதிலும் நம்மைப் பார்த்து ‘பண்ணையாளர்களாகிய நீங்கள்தான் யோசித்து இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும்’ என்று சொல்லி விட்டு ‘என்ன நான் சொல்வது சரிதானே?” என்று கேட்டு உறுதி படுத்திக் கொள்வார். என்னை நானே ஜிப்பா அணிந்த மிராசுதாராக கற்பனை செய்து மகிழ்ந்துக் கொள்வேன். முடிக்கும் போது “இனி நாம் அடுத்த விழாவில் கூ..டுவோமே?” என்று சொல்வது அழகாக இருக்கும்.


எது எப்படியோ, துணிந்து நான் பட்ட அவஸ்தையை (மறுபடியும் ஒரு வடமொழிச் சொல் வந்து விழுத்து விட்டது) ஏதோ ஒரு மொழியில் அல்லது பாஷையில் வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வது என முடிவு செய்து விட்டேன்.


இந்த அத்னான் சாமியை நினைத்தாலே எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. அடிக்கடி தொலைக்காட்சி வழியே புகுந்து எங்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணி போய் விடுகிறார்.


“எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டார் பாத்தீங்களா? நீங்களும்தான் இருக்கீங்களே?” கொஞ்ச நாட்களாகவே என் மனைவியின் உபத்திரவம் தாங்க முடியாமல் போய்விட்டது.


அந்த சாமியைப் போல் நானும் இளைத்து தொலைக்க வேண்டுமாம். என் மனைவி பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள். நம்மை ஜாலியாகவே இருக்க விட மாட்டர்கள் போலிருக்கிறதே. “Marriage is not a word. It’s a sentence” என்று மொழிந்த வாய்க்கு சர்க்கரையை அள்ளிப் போட வேண்டும்.


என்னை என் மனைவி டாக்டரிடம் ‘தர தர’ வென்று இழுத்துக் கொண்டுப் போக, வேண்டா வெறுப்பாக கிளீனிக்குக்குள் நுழைந்தேன். என்னை சோதித்துப் பார்த்தது ஒரு பெண் டாக்டர். வெறுப்பு கொஞ்சம் குறைந்தது போலிருந்தது. வழக்கப்படி ‘ஹி.. ஹி..’ என்று அசடு வழிய தைரியம் வரவில்லை; கூடவே என் மனைவி இருந்ததால்.


ஸ்டெதாஸ்கோப்பை (தமிழில் இதற்குப் பெயர் மார்பாய்வியாம். பெயர் ஒரு மாதிரியாக இருந்ததால், இதனை நான் பயன் படுத்தவில்லை. தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்) முதுகில் வைத்து நன்றாக மூச்சை இழுத்து இழுத்து விடச் சொன்னார். “உ..ம் இன்னும் நன்றாக இழுத்து விடுங்க” என்று அன்பாணை விடுத்தார். “இதுக்கு மேல் மூச்சை விட்டால் நான் பரலோகத்திற்குச் சென்று விடுவேன்” என்றேன். சிரித்துக் கொண்டார். பரவாயில்லையே.. டாக்டர்கள்கூட அழகாக சிரிக்கிறார்களே?


“யுவர் மெயின் ப்ராப்ளம் இஸ் ஓபிசிட்டி” என்றார். பப்ளிசிட்டி, எலக்ட்ரிசிட்டி, மெட்ராஸ் சிட்டி - இவைகள் தெரியும். ஏன் ஏ.பி.சி.டி. கூட நன்றாகத் தெரியும். இது என்ன ஓபிசிட்டி (Obesity)? புரியாமல் போனதும் நல்லதற்கே. டாக்டரே அவருடைய கொஞ்சும் தமிழில் சற்று விளக்கமாக புரிய வைத்தார். கேட்பதற்கு மனதுக்கு இதமாக இருந்தது.


“தெனிக்கும் 2 கிலோ மீட்டராவது வெறும் வவுத்திலே நீங்கோ நடக்கணும்” என்றார் டாக்டர். “யார் வயித்திலே டாக்டர்?” என்று கேட்க வேண்டும் போலிருந்தது. சீரியஸான இடத்தில் தமாஷ் பண்ணக் கூடாது என்று என்னை நானே கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டேன்.


தினமும் 2 கிலோமீட்டர் என்ற கணக்கில் நடந்து வீட்டிற்கு திரும்ப வராமல் அப்படியே காசிபக்கம் போகாலாமா என்று கூட நினைத்தேன். அந்த அளவுக்கு “உடம்பை குறை, உடம்பைக் குறை” என்று ஒரு டார்ச்சர்.


உண்மைதான். படிமீது ஏறும்போதெல்லாம் மூச்சிரைக்கத்தான் செய்கிறது. கண்ணாடியில் என் மேனியை பார்த்தபோது ‘மடிப்பு அம்சா’ போன்று வயிற்றில் எக்ஸ்ட்ரா சுருக்கங்களும் தெரிந்தன.


இதில் வேடிக்கை என்னவென்றால் உடம்பு இளைப்பதற்காக நான் ஏற்கனவே Tread Mill (கால் மிதியாலை) வாங்கிப் போட்டிருந்தேன். அது ஒரு மூலையில் ‘கைப்படாத ரோஜாவாக’ காட்சியளித்தது.


சில வணிக வளாகத்தில் “இன்று கடன் கிடையாது” என்று எழுதி வைத்திருப்பார்கள். இன்றுதானே கிடையாது என்று அடுத்த நாள் வந்து பார்த்தோமானால் அப்பொழுதும் அதே வாசகம் கண்ணில் படும்.


ஒவ்வொரு முறையும் என் மனைவி வற்புறுத்தும்போதும் “நாளை முதல் நான் நடக்கிறேனே?” என்று கெஞ்சிக் கூத்தாடி சமாளித்து விடுவேன். Tread Mill-ல் நடப்பதற்கு பதிலாக அந்த நேரத்தில் கணினி முன் அமர்ந்து “Thread” போடலாமே என்றுதான். வேறென்ன?


இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்று எண்ணி அன்று முதல் நடந்தே தீருவது என்று முடிவு செய்து விட்டேன். அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு, ஜாகிங் ஷூவை அணிந்துக் கொண்டுதான் நடக்க வேண்டுமாம். இதென்ன பெரிய வம்பாக போய்விட்டது என்று நினைத்துக் கொண்டேன்.


உபகரணங்களை அணித்துக் கொண்டு கண்ணாடி முன் நின்று மீண்டும் ஒரு பார்வை பார்த்தேன், கண்றாவியாக இருந்தது. பாலச்சந்தர் படத்தில் வரும் அனுமந்துவைப் போலிருந்தது. கையில் ஒரு லாலிபாப்பையும் (அதுதாங்க குச்சிமுட்டாய்) கொடுத்து விட்டால் சுத்தம்… போங்க.


மிதியாலையில் ஏறி லேசாக ஓட ஆரம்பித்தேன். சிவாஜி பேசிய வசனம்தான் நினைவில் வந்தது. ‘ஓடினேன்; ஓடினேன், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்’. கலைஞரும் மிதியாலையில் நடந்துக் கொண்டேதான் இந்த வசனத்தை எழுதியிருப்பாரோ?


கலைஞர் தினமும் காலையில் எழுந்து ‘வாக்கிங்’ போவதாக கேள்வி. ஒரு மேடையில் பேசும்போது விவேக் கூட இதனை அழகான பாணியில் சொன்னார். “ஒரு சூரியன் எழுந்திருக்கும் முன்பே இன்னொரு சூரியன் எழுந்து நடை பழக போகின்றது” என்று.


“ச்சே.. எழுந்து நடப்பதற்கு அலுப்பு பட்டுக் கொண்டு இப்படி ஒரு வாழைப்பழ சோம்பேறியாக இருக்கின்றோமே” என்று என்னை நானே நொந்துக் கொண்டேன். கலைஞர் மீது பொறாமைகூட வந்தது.


பரிட்சை ஹாலில் மாணவர்கள் காப்பியடிக்கிறார்களா என்று பார்வையிடுவதற்காக கண்காணிப்பாளர்கள் இருப்பார்களே அதுபோல என் மனைவி பக்கத்திலேயே காவல் புரிந்தாள். என்ன ஒன்று. கையில் பிரம்பு மிஸ்ஸிங். அவ்வளவுதான். ‘ஹா.. ஹா.. ஹா..’ லேசாக இளைத்தது.


“ஏம்பா! இந்த நிலைமை உனக்குத் தேவைதானா? என்று என் மனசாட்சியே என்னை கிண்டலடித்தது. இனி Junk Food சாப்பிடுவாயா? KFC பக்கம் போவாயா? என்று யாரோ பின்னாலிருந்து அதட்டுவது போலிருந்தது.


நாளையிலிந்து சாண்ட்விச்சில் எனக்கு Cheese-ம் கிடையாதாம். இல்லத்தரசி நினைத்து நினைத்து புதிய சட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். “ஏ சீஸ் படிஹே மஸ்த் மஸ்த்” என்று cheese-ன் மகிமையை மனதுக்குள் பாடிக் கொண்டேன். இன்னும் என்னென்ன சுவையான அயிட்டங்கள் போகப்போக நம் மெனுவிலிருந்து கட் ஆகுமோ தெரியாது.


“ஹா,, ஹா.. ஹா..” திருச்சி கல்லூரியில் படித்த காலத்தில் வெங்கடேஸ்வரா கொட்டகையில் இரண்டாம் ஆட்டம் பார்த்து விட்ட வந்த சமயத்தில் நாய் ஒன்று துரத்திய போது இப்படிதான் எனக்கு வேர்த்து விறுவிறுத்தது.


மிதியாலையிலிருந்து இறங்கலாம் என்று ஆயத்தமாகையில் அதெல்லாம் கிடையாது வெறும் அரை கிலோ மீட்டர்தான் ஆகியிருக்கிறது என்று சட்டாம் பிள்ளை போல் பேசினாள். 200 கலோரியாவது எரிக்க வேண்டும் என்றாள். கண்ணகி மதுரையை எரிப்பது போலிருந்தது அவள் பார்வை.


நடக்கும்போதும் கவிதைதான் என் நினைவில் நிழாலாடிக் கொண்டிருந்தது. முந்தைய தினம் உணவகத்தில் சிக்கன் டிக்கா சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலும் இதேபோன்றுதான் ஒரு கவிதை பிறந்தது.


“இங்கு வளைகுடா நாட்டில்

தினந்தோறும் தைப்பூசம் திருவிழாதான்

அலகு குத்திக் கொள்ளும் சிக்கன் டிக்கா”


என்று ‘பண்புடன்’ குழுமத்தில் ஒரு கவிதை வடித்திருந்தேன். “உக்காந்துதான் யோசிப்பீங்களோ?” என்று ஒரு நண்பரும், “இது ‘அய்யோ..கூ’ ரகமா என்று வேறொரு நண்பரும் கலாய்த்திருந்தார்கள்.


கவிதை சிந்தனையை கலைந்து விட்டு ‘கருமமே கண்ணாக’ வேக வேகமாக நடந்து கொண்டிருந்தேன். இந்த பாழாய்ப் போன சிந்தனை எங்கு போனாலும் நம்மை விட மாட்டேன் என்கிறதே. என்ன பண்ணுவது?


கவிஞர் வைரமுத்துவின் மேல் கூட எனக்கு தீராத கோபம். “ஊசி போன்று உடம்பிருந்தால் தேவையில்லை பார்மஸி” என்று திருவாய் மலர்ந்தருளியவர் அவர்தானே? ‘ஊசி’ போன்று இருந்தால்தான் ‘தையல்’ விரும்புவாள் போல் தெரிகிறது. அப்படிப் பார்த்தால் தயிர்வடை தேசிகருக்குத்தான் அதிக அளவில் ‘கேர்ள் பிரண்ட்ஸ்’ இருந்திருக்க வேண்டும்.


கவிஞர் வைரமுத்துவின் கூற்றில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பார்மஸிக்கு வருபவர்களை நோட்டம் விட்டால் குண்டாக இருப்பவர்களை விட வத்தலும் சொத்தலுமாக இருப்பவர்கள்தான் அதிகமாக மருந்து வாங்க வருகிறார்கள்.


ஒருவன் குண்டாக இருந்தால் இவர்களுக்கு எவ்வளவு இளக்காரம் பாருங்கள். அடாவடித்தனம் புரியும் போக்கிரிகள் ஒல்லியாக இருந்தால் கூட அவர்களுக்கு இந்த பத்திரிக்கைக்காரர்கள் வைத்திருக்கும் பெயர் ‘குண்டர்கள்’. இது என்ன நியாயம்?


ஆட்களை காலி பண்ணுவதற்கு அமெரிக்காகாரன் ஒரு ஆயுதத்தை கண்டு பிடித்து வைத்திருந்தாலும் அதற்குப் பெயர் ‘குண்டு’. ‘குண்டர்கள் சட்டம்’ என்ற ஒரு ஒரு சட்டத்தை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டாலும் அதற்குப் பெயர் குண்டு. ஹிரோஷிமா மீது போட்டாலும் அதற்குப் பெயர் குண்டு.


வாயில்லா ஜீவன்களுக்காகக் கூட ஜீவகாருண்யச் சங்கம் இருக்கின்றது. கொஞ்சம் சதை போட்ட மனிதர்களுக்காக வேண்டி எந்த ஒரு சங்கமும் இல்லாதது வருத்தத்திற்குரிய விஷயம்தான்.


அண்மையில் துபாய் சென்றிருந்தபோது எழுத்தாளர் ஆபிதீனைச் சந்தித்தேன். “தொப்பையை கொஞ்சம் குறையுங்கள்” என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். “வளைகுடாவிற்கு வந்த பிறகு அறிவைத்தான் வளர்க்க முடியவில்லை. இதையாவது வளர்க்கிறேனே?” என்று சொன்னேன். அவர் முகம் அஷ்ட கோணலாய் மாறியது. “போயும் போயும் இந்த மனுஷனுக்கு போய் அட்வைஸ் பண்ணினேனே.. எம்புத்தியை .. ..” என்று நினைத்திருப்பார் போலும்.


ஒருபிடி சதை அதிகமாக ஆனதும் அவரவர் கூறும் ஆலோசனைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. இப்படி ஆகும் என்று முன்னமே தெரிந்திருந்தால் நான் ஒல்லியாகவே இருந்து தொலைந்திருப்பேன்.


“எதுக்கும் ஒரு தடவை கொலஸ்ட்ரால் செக் பண்ணிக்குங்க. இப்படித்தான் என் நண்பர் ஒருவர் கவனிக்காம விட்டுப்புட்டார். கடைசியிலே என்ன ஆச்சு தெரியுமா?” என் நண்பர் ஒருவர் சொல்லி முடிப்பதற்கு முன்பே அந்த இடத்தை நான் காலி பண்ணி விட்டேன். இது மாதிரி நம்மை பயமுறுத்த வேண்டும் என்பதற்காகவே பிறவி எடுத்து வந்த பிரகஸ்பதிகள் ஊரில் பல பேர் இருக்கிறார்கள்.


ஹைதராபாத் போயிருந்தபோது என் மனைவி எனக்குத் தெரியாமலேயே ஒரு DVD வாங்கி வைத்திருந்திருக்கிறாள். பாபா ராம் தேவ் நடத்தும் யோகா பயிற்சி அது. ஜாலியாக திருவள்ளுவர் மாதிரி சம்மணம் கொட்டி அமர்ந்துக் கொண்டு வேகமாக இருமுவது போல் வாயிலிருந்து மூச்சை “உ..ய்…ங்..” என்று வேகமாக விடவேண்டும். வாக்கிங் போவதைக் காட்டிலும் இது சுலபமாகத்தான் இருந்தது. உட்கார்ந்துக் கொண்டே ஏதாவது வேலை பாருங்கள் என்று சொன்னால் அது நமக்கு வசதிதானே? கையைக் காலை தூக்குவதை தவிர மற்ற எதுவாக இருந்தாலும் உடனே நான் செய்து விடுவேன்.


“இந்த பயிற்சிக்கு பேரு என்ன தெரியுமா?” என்று மனைவி கேட்டாள். “தெரியாது” என்று உதட்டை பிதுக்கினேன். “கபால் பாரதி” என்று விளக்கினாள். “எனக்கு கபால் பாரதியைத் தெரியாது. சுப்பிரமணிய பாரதியைத்தான் தெரியும்” என்றேன். கோபக்கனல் தெரித்தது. அதே கண்ணகி பார்வை. “உங்களையெல்லாம் திருத்தவே முடியாது” என்று சொல்லிவிட்டு விருட்டென்று சென்று விட்டாள்.


அரபி நண்பர் ஒருவர் அட்வைஸ் கொடுத்தார். சூரியகாந்தி விதையைச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை எல்லாம் அது உறிஞ்சி விடுமாம். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது நினைவில் வந்தது. இனிமேல் “சூரியகாந்தி” என்று சொல்லக் கூடாதாம். அது வடமொழிச் சொல்லாம். “கதிர் வணங்கி” என்றுதான் சொல்ல வேண்டுமாம்.


இப்படித்தான் ஒருமுறை நண்பர் சரவணன் “இனிமேல் நீங்கள் சுத்தத் தமிழில்தான் பேச வேண்டும்” என்று வரையறுத்தார். “சுத்தத்தமிழ் என்று சொல்வதே தவறு. தூயதமிழ் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள். பிறகு என்னைத் திருத்தலாம்” என்று கடுப்படித்து அனுப்பினேன்.


தமிழில் பேசிப் பழகுவதில் தப்பே இல்லை. எதார்த்தமாக இருப்பதிலே எத்தனை சங்கடங்களை சந்திக்க நேருகிறது பாருங்கள்.


“யாமறிந்த மொழிகளிலோ தமிழ்மொழிபோல்

இனிதாவ தெங்கும் காணோம்

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்”


என்று பாடிய பாட்டுக்கோர் புலவன் மகாகவி பாரதியின் கொள்ளுப்பேத்திக்குத் தமிழ் மொழி தெரியாதாம். அண்மையில்தான் படித்தேன். பாரதியின் சந்ததிக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து கண்ணீர் வடித்தேன்.


குண்டாக இருப்பவர்களைக் கண்டால் என்னையறியாமலேயே ஒரு நட்புணர்வு ஏற்படுகிறது. ஏன் என்று தெரியவில்லை. அவர்களுக்கு இயற்கையிலேயே ஒரு நகைச்சுவை உணர்வு பொதிந்திருப்பதை நாம் காண முடிகிறது. எப்பொழுதும் சிரித்த முகமாகவே இருப்பார்கள்.


வின்ஸ்டன் சர்ச்சில் மீது அவருடைய நகைச்சுவை உணர்வுக்காகவே அவர் மீது எனக்கு ஒரு ஈடுபாடு. அவரும் பிந்துகோஷ் கேஸ்தான்.


இன்னொரு நண்பர் “எதற்கும் நீங்க பத்மாசனம் ட்ரை பண்ணி பாருங்க” என்று அறிவுரை சொன்னார். “யாரு? பத்மா சுப்பிரமணியமா?” என்று கேட்டேன். அன்றிலிருந்து எனக்கு அட்வைஸ் பண்ணவே அவருக்கு பயம்.


இப்படி ஆளாளுக்கு அறிவுரை பண்ணத் தொடங்கியதிலிருந்து எனக்கு ஒரு நல்லது நடக்க ஆரம்பித்து விட்டது. எப்படியும் இளைத்தே தீர வேண்டும் என்ற கவலை வந்து விட்டது.


“என்ன! தினமும் நடக்க ஆரம்பித்து விட்டீர்களா?” என்று கேட்காதீர்கள். இளைக்க வேண்டுமே என்ற கவலை பட்டே நான் இளைக்கத் தொடங்கி விட்டேன்.


அதிகமாக கவலைப் பட்டால் உடம்பு இளைத்து விடும் என்பது சரிதான் போலும்.

Read more...

பெயரிலி!

பெயரிலி!

லக்கிலுக்




வைணவ - சைவ கலப்பு குடும்பத்தில் பிறந்து தொலைத்ததால் எந்த பாரம்பரிய பெயர் வைப்பது என்ற குழப்பம் நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் பார்த்தவரை “மோ”வில் தொடங்கும் பெயர் வைத்தால் மட்டுமே இந்தப் பயல் ஜீவிதம் செய்ய முடியும் என்ற உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது. 'பையனுக்கு தண்ணியிலே கண்டம்', ‘ரெண்டு பொண்டாட்டி' போன்ற விவரங்களையும் கூட ஜாதகம் மூலமே அறிந்திருக்கிறார்கள். அம்மாவுக்கு அவர்கள் அம்மா வீட்டில் பிரசவம் ஆனதால் பெயர்சூட்டு விழாவும் அங்கேயே நடக்க இருந்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தாத்தா லபக்கென ‘மோகன சுந்தரம்' என்ற மொக்கை டைட்டிலை தேர்வு செய்துவிட்டிருக்கிறார்.


முருகபக்தரான அப்பாவோ முருகன் பெயரை சூட்டவேண்டும் என்ற கொலைவெறியில் இருந்திருக்கிறார். எனவே ”குமரன்” என்ற பெயரை சூட்டியே தீரவேண்டும் என்று ஒற்றைக்காலில் தவம் நின்றிருக்கிறார். பெரியப்பா அப்போது மடிப்பாக்கத்தில் கிருஷ்ணனுக்கு ஒரு பஜனைக்கோயில் கட்டியிருந்தார். எனவே கிருஷ்ணன் பெயரை தான் தன் தம்பி மகனுக்கு சூட்டவேண்டும் என்ற தீராத தாகத்தில் இருந்தார்.


மூன்றுத் தரப்பும் பெயர் சூட்டும் விழா அன்று முட்டிக்கொள்ள, யாரோ ஒரு நாட்டாமை பஞ்சாயத்து செய்து, கூப்பிட்டால் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அளவில் “மோகன கிருஷ்ண குமார்” என்று நாமகரணம் செய்துவிட்டிருக்கிறார். பட்டுத்துணி போர்த்தி என்னை அலங்கரிக்கப்பட்ட கூடையில் கிடத்தி 'காஞ்சிபுரம் சிறுணை மோகனகிருஷ்ணகுமார்' என்று பெற்றோர் மூன்று முறை அழைக்க வேண்டும். தான் வலியுறுத்திய பெயரோடு இன்னும் இரண்டும் பெயர் எக்ஸ்ட்ராவாக சேர்ந்துக் கொண்ட கோபத்தில் இருந்த அப்பா “குமரா, குமரா, குமரா” என்று தான் சூட்ட விரும்பிய பெயரை மட்டும் சுருக்கமாக அழைத்திருக்கிறார். பாவம் அம்மா தான் வினோதமான என் பெயரை மூன்று முறை கஷ்டப்பட்டு சொல்லி அழைத்தாராம்.


* - * - * - * - * - * - * - *


எல்.கே.ஜி. சேர்க்கும்போது எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது. பள்ளியில் சேர்ந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அட்டெண்டனன்ஸில் பெயர் எழுதும்போது தான் முழுப்பெயரையும் எழுதமுடியாமல் மிஸ் அவதிப்பட்டார்.


”உன் பெயரை சுருக்கமா சொல்லு!”


சுருக்கம் என்ற வார்த்தைக்கு அப்போது பொருள் தெரியாத நான், “எல். மோக்கன க்ரிஸ்ண க்கும்மார்!” என்றேன்.


“அது புல் நேம். சுருக்கமா சொல்லு!”


மறுபடியும், “எல். மோக்கன க்ரிஸ்ண க்கும்மார்!”


எரிச்சலாகி, “சரி நானே சுருக்கிடறேன். இனிமே உன் பெயர் எல்.கிருஷ்ணகுமார்”


இந்த பெயர் எனக்கு கொஞ்சம் திருப்தியாகவே இருந்தது.


* - * - * - * - * - * - * - *


கிருஷ்ணகுமார் என்று பள்ளியில் அறியப்பட்டாலும் கூட வீட்டிலும், தெருவிலும் அவரவர் வாய்க்கு வந்த பெயரை சொல்லி தான் அழைத்தார்கள். பள்ளியில் கூட ஆசிரியர்கள் தவிர்த்து கூட படிக்கும் மாணவ, மாணவிகள் ‘கிருஷ்ணா' என்று சொல்லியே அழைத்தார்கள். எனக்கு ‘கிருஷ்ணர்' அப்போது இஷ்டதெய்வம் என்பதால் ‘கிருஷ்ணா' பிடித்திருந்தது.


அப்பா மட்டும் கடைசி வரை ‘குமரா' என்றே அழைத்து வந்தார். அம்மாவும் சில நேரங்களில் ‘குமரா' என்றும் பல நேரங்களில் 'நைனீ' என்றும் அழைப்பார். ‘நைனீ' என்பதற்கு என்ன பொருள் என்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை :-(


* - * - * - * - * - * - * - *


ரஜினி - கமல் உச்சத்தில் இருந்த நேரம் அது. தீவிர கமல் ரசிகன் என்பதால் ரஜினி ரசிகர்களோடு வாய்ச்சண்டையோடு, மல்யுத்தமும் போட்டிருக்கிறேன். சில நேரங்களில் முரட்டுத்தனமாக அடித்துக் கொண்டு சில்மூக்கு உடைந்து ரத்தமும் வந்ததுண்டு. துரதிருஷ்டவசமாக கூட படித்தவர்களில், தெருப்பசங்களில் எல்லோருமே ரஜினி ரசிகர்கள்.


ரஜினி நன்றாக சண்டை போடுவதால் ரஜினியை அவர்களுக்கு பிடித்திருந்தது. கமல் அட்டகாசமாக காதலித்ததால் கமலை எனக்கு பிடித்திருந்தது. ”கமல் கெட்டவன். பொம்பளைங்களை எல்லாம் கட்டிப் புடிக்கிறான். ரஜினி நல்லவன். அதனாலே தான் கெட்டவங்க கிட்டே சண்டையெல்லாம் போடுறான்” என்று பக்கத்து வீட்டு கோவாலு விளக்கம் அளித்தான். ”சண்டை போட்டதுக்கப்புறமா ரஜினி கூட பூர்ணிமாவை கட்டி புடிச்சிருக்காரே?” என்று கேட்டால் அவனுக்கு பதில் சொல்ல தெரியாது.


ரஜினி ஆண்மையின் அடையாளமாக என் சக பசங்களுக்கு தெரிந்திருக்கிறது, எனக்கு மட்டுமே கமலை ஹீரோவாக பார்க்கமுடிந்தது ஏனென்று தெரியவில்லை. கமல் ரசிகன் என்பதால் என்னை ரஜினி வெறியர்கள் “கமலா” என்று கூப்பிட்டு வெறுப்பேற்றத் தொடங்கினார்கள். “கமல்” என்று கூப்பிட்டிருந்தால் கூட பெருமையாக இருந்திருக்கும் “லா” சேர்த்து பெண்பாலில் கூப்பிட்டதால் கடுப்பாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு எனக்கு இந்த பட்டப்பெயர் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு கோடைவிடுமுறையில் அம்மம்மா வீட்டுக்கு போய் வந்ததற்கு பிறகு பசங்களுக்கு இந்த பட்டப்பெயர் மறந்து தொலைத்ததால் தப்பித்தேன்.


* - * - * - * - * - * - * - *


கிருஷ்ணகுமார் என்ற பெயரில் கடைசியில் இருக்கும் ‘குமார்' என்ற பெயரை விளித்து கூட நிறையப் பேர் கூப்பிடுவார்கள். ஆரம்பத்தில் ஓக்கே என்றிருந்தாலும் ‘குமார்' குமாரு ஆகி காலச்சக்கரம் சுழன்று ”கொமாரு” ஆகியபோது வாழ்க்கையே வெறுத்துவிட்டது.


* - * - * - * - * - * - * - *


கல்யாணராமன் தான் என்னை “கிச்சா” என்று முதலில் அழைத்ததாக நினைவிருக்கிறது. அவன் அண்ணன் பெயர் கிருஷ்ணமூர்த்தி. அவர்கள் ஆத்தில் கிருஷ்ணமூர்த்தியை சுருக்கி “கிச்சா” என்று தான் அழைப்பார்களாம். அதனாலேயே கிருஷ்ணகுமாரையும் “கிச்சா” ஆக்கிவிட்டான் கல்யாணம்.


கல்யாணத்தை தொடர்ந்து நிறைய பேர் ”கிச்சா”வென்று அழைக்க ஒரு மாதிரியாக உணர்ந்தேன். இன்றுவரை பலரும் என்னை ”கிச்சா” என்றுதான் அழைக்கிறார்கள். கிரேஸி மோகன் ஆனந்தவிகடனில் “கிச்சா” என்றொரு கோமாளி கேரக்டரை வைத்து சில காமெடிக்கதைகள் எழுத அந்தப் பெயர் ஏனோ சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது. நான் பணிபுரியும் நிறுவனங்களில் மேலதிகாரிகள் கூட ”கிச்சா” என்று கூப்பிட்டிருக்கிறார்கள். எனக்கு ரொம்பவும் பிடித்த ”கிருஷ்ணா” என்ற பெயரை புதியதாக அறிமுகமாகுபவர்கள் தான் அழைக்கிறார்கள். சில சந்திப்புகளுக்கு பின்னர் அவர்களும் “கிச்சா” என்று கூப்பிட தொடங்கிவிடுகிறார்கள்.


* - * - * - * - * - * - * - *


எட்டாவது வகுப்பு வரை எல்.கிருஷ்ணகுமார் என்று அழைக்கப்பட்ட எனக்கு ஒன்பதாவது வகுப்பில் தமிழய்யா ரூபத்தில் சோதனை வந்தது. தனித்தமிழில் பெருத்த ஆர்வம் கொண்ட தமிழய்யா தான் வகுப்பாசிரியர். அட்டெண்டன்ஸ் அவரது பொறுப்பில் வந்தபோது வடமொழி சொற்களை நீக்கி தூயத்தமிழில் எல்லோரது பெயரையும் எழுதினார். அஷோக் “அசோகன்” ஆனான். சுரேஷ்குமார் “சுரேசுகுமார்” ஆனான். எல். கிருஷ்ணகுமாராகிய நான் “இல.கிருட்டிணகுமார்” ஆகி தொலைத்தேன்.


“இல.கிருட்டிணகுமார்” என்று ஆசிரியர் அழைக்கும்போது வேறு யாரையோ அழைக்கிறார் என்று பல நேரங்களில் சும்மா இருந்து கொட்டு வாங்கியது உண்டு. என் அட்டெண்டன்ஸ் பெயரை லேடீஸ் செக்‌ஷனிலும் (லேடிஸ் எல்லாம் ”பி” செக்‌ஷன், நாங்கள் “ஏ” செக்‌ஷன்) சரவணனோ யாரோ பரப்பிவிட, என்னை காதலிக்க திட்டமிட்டிருந்த குமுதா என் தமிழ்ப்பெயரை கேள்விப்பட்டு என்னை வெறுக்கத் தொடங்கினாள்.


* - * - * - * - * - * - * - *


ஒன்பதாவது படிக்கும்போது சந்தானகிருட்டிணன் தான் என்னை ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தான். அவர்களது ஊர் பக்கத்தில் பெயரின் முதல் எழுத்தை மட்டும் சொல்லி ”சீன்னா”, ”கான்னா” என்றெல்லாம் அழைப்பார்களாம். அதுபோலவே கிருஷ்ணகுமார் என்று அழைக்க சோம்பேறித்தனப்பட்டு ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தான். அடுத்த இரு ஆண்டுகளுக்கு நண்பர்கள் மட்டுமல்லாமல் சில நேரங்களில் ஆசிரியர்களும் ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தார்கள். காமோசோமாவாக இருந்ததால் எனக்கு கொஞ்சமும் பிடிக்காத பெயர் அது.


* - * - * - * - * - * - * - *


பத்தாவது படித்தபோது பாடப்புத்தகங்களை சுமந்ததை விட காமிக்ஸ்களை சுமந்தது அதிகம். ஆர்.டி.முருகன், சுந்தரவேலு, சேதுராமன், ஏ.சுரேஷ்குமார் (கிளாஸில் மொத்தம் 4 சுரேசு) என்று என்னோடு நிறைய காமிக்ஸ் ஆர்வலர்கள் இருந்தார்கள். எக்சேஞ்ச் செய்துகொள்வது, யாரிடமாவது இருக்கும் காமிக்ஸை நான் வாங்கி ஜெராக்ஸ் செய்துகொள்வது என்று காமிக்ஸ் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் நிறைய லஞ்ச் நேரத்தில் நடக்கும். புத்தகப் பையில் எப்போதும் பத்து காமிக்ஸ்களாவது இருந்த காலக்கட்டம் அது.


கொஞ்சம் ஒல்லியாக இருந்ததால் நம்மை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு அப்போது இருந்தது. இந்த ‘ஒல்லி' குறைப்பாடை சரிசெய்ய எதையுமே கொஞ்சம் வேகமாகவும், ஸ்டைலாகவும் வேண்டுமென்றே செய்ய ஆரம்பித்தேன். படிக்கட்டு ஏறும்போது ரெண்டு படிக்கட்டு தாண்டி, தாண்டி குரங்கு மாதிரி வேகமாக ஓடுவேன். நண்பர்களோடு சேர்ந்து நடக்கவே மாட்டேன், ஓட்டம் தான். எல்லாருக்கும் முன்பு ஓடிப்போய் நின்றுகொண்டு அவர்கள் வரும்வரை காத்திருப்பேன். சைக்கிளை வேகமாக கட்டு கொடுத்து, கட்டு கொடுத்து ஓட்டுவேன்.


கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்ததாலோ என்னவோ என் காமிக்ஸ் நண்பர்கள் என்னை “லக்கிலுக்” என்று அழைக்கத் தொடங்கினார்கள். “லக்கிலுக்” என்பது ஒரு அமெரிக்க கார்ட்டூன் கவுபாய் ஹீரோ. தன் நிழல் செயல்படும் வேகத்தை விட வேகமாக செயல்படும் வீரன். கோமாளி ஹீரோ என்றாலும் ஒல்லியாக, கொஞ்சம் நீளமுகவாட்டில் பார்க்க என்னைப் போல இருந்ததால் அந்தப் பெயரை மனமுவந்து ஏற்றுக் கொண்டேன். லக்கிலுக் என்பது சில நாட்களில் சுருங்கி “லக்கி” ஆகிவிட்டது.


* - * - * - * - * - * - * - *


மறக்கப்பட்ட இன்னும் நிறைய பெயர்கள் உண்டு. பல பெயர்களில் அழைக்கப்பட்டு விட்டதால் இந்தப் பெயர்களில் ஏதேனும் ஒன்று பொது இடங்களில் உச்சரிக்கப்படும் போதெல்லாம் என்னை தான் அழைக்கிறார்களோ என்று ஒருகணம் திரும்பி ஏமாந்து விடுவேன். பலமுறை ஏமாந்தப் பின்னர் இப்போதெல்லாம் என்னையே யாராவது கூப்பிட்டால் கூட “வேற யாரையோ கூப்பிடறாங்க” என்று நினைத்து விடுகிறேன். அக்கப்போர் செய்து பெருசுகள் எனக்கு வைத்த நீளமான பெயரால் எந்த பிரயோசனமும் இல்லை. அந்தப் பெயரை வைத்து யாரும் அழைத்ததுமில்லை. உண்மையில் அந்தப் பெயரால் அஞ்சு காசுக்கும் பிரயோசனமில்லை என்பதே நிதர்சனம்.


”பேர் எடுக்கணும், பேர் எடுக்கணும்” என்பார்கள். எவ்வளவோ பேர் எடுத்துவிட்டேன். இன்னமும் எவ்வளவு பேர் தான் எடுப்பேனோ தெரியவில்லை. இத்தனை பேர் இருப்பதால் உனக்கு என்ன தொல்லை என்று கேட்கிறீர்களா? சில நேரங்களில் யாராவது ”உங்கள் பெயர் என்ன?” என்று கேட்கும்போது சட்டென்று விடை சொல்லத் தெரியாமல் முழிக்கும்போது நான் படும் அவமானம் உங்களுக்கெல்லாம் பட்டால் தான் தெரியும்!

Read more...

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP